வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 15

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

அறுவடை காலம் தொடங்கிவிட்டது. கடன்கொடுத்த வெளங்கொண்டாரும் ஊருக்குள்ளே வந்து உட்கார்ந்துட்டாரு, வெற்றுச்சாக்குக்கட்டுகளோடு ரெடிமேடு கடைவிரித்து வேலாயி கெழவியும் கண்ணுல வெளக்கெண்ணெய ஊத்திக்கிட்டு யார்வீட்ல அறுவடை நடக்கும், எப்ப குத்தரிசிவைச்சி சக்கரைப் பொங்கல் சாப்பிடாலாம்னு நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாள். சாமிஅய்யா கதிர் அறுக்கப்போறாருன்னு தெரிஞ்சிக்கிட்ட வெளங்கொண்டார், கான்வென்ட்ல படிக்க அவன் மகனுக்கும் பணம் தேவைன்னும் புரிஞ்சிக்கிட்டு வலியசென்று கடன் கொடுத்துருக்கிறார். சாமிஅய்யாவும் தன் மகனுக்கு புதுசட்டை, புதுபேண்ட், பேக் எல்லாம் வாங்கிக்கிட்டு பட்டினத்துக்கு படிக்க, தன்மகன் செல்லப்பாவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். அவன் எடுத்துச் செல்லப்போகும் தகரப்பெட்டியில் தீபாவளிக்கு சுட்ட முறுக்கும் சீடையும், கெட்டி உருண்டைகளும், நல்லெண்ணெயும், வெளக்கெண்ணெயும், எழுமிச்சை ஊறுகாயுடன் அடமாங்காயும் சேர்த்து நிரம்பிக்கொண்டுஇருக்கிறாள் சாரதா. அவனோ தான் அன்புடன் பழகிய மச்சக்காளையின் தாடையை தடவிக்கொடுக்க, அதுவும் அவனை அன்போடு தன்நாக்கால் நக்கிக்கொடுக்க, அவனோ அதனிடமிருந்து விடைபெறும்போது அதன் மச்சத்தைத் தொட முயற்சிக்க, அதை உணர்ந்த மச்சக்காளை அவனை திடீரென சீற செல்லப்பா அங்கிருந்து ஒட்டம் பிடித்தான்.

செல்லப்பாவின் பெட்டி படிக்கையை தன்சைக்கிளில் பின்னால் கட்டிக்கிட்டு, அவனையும் முன்னால் உட்காரவைத்து சைக்கிளை சாமிஅய்யா நகர்த்தப்போக, சாரதா ஒடிவந்து “என்னங்க ஒங்களத்தான் ஒருநாலி (நாழிகை) இருங்க...” என்று சொல்லிவிட்டு தன்முகத்தையும், கைகால்களையும் கழுவித் துடைச்சிக்கிட்டு, நெத்தி நெறைய குங்குமபொட்டு வச்சி, சேலையை சரிசெய்துகிட்டு, வழிபாதைக்கு வந்து சுற்றும்முற்றும் பார்க்கிறாள். பிறகு பாதையை தன்பார்வைக்கு எட்டியதூரம்வரை பார்க்கிறாள. யாரும் இல்லாததைக்கண்ட அவள் எதிர்திசையில் நடக்க சாமிஅய்யாவிடம் “ம்... சரி இப்ப குழந்தைய அழைச்சிக்கிட்டு வாங்க...” என்று கூற சாமிஅய்யாவும் சைக்கிளில் செல்லப்பாவை முன்னால் உட்காரவைத்து ஒட்ட, சாரதா மங்களகரமாக சிரித்த முகத்தோடு எதிரே நடந்துவர, சாமிஅய்யாவும் செல்லப்பாவும் அவளை கடந்து சென்றனர்.

இந்த தடவ மொதல்ல கதிர் அறுத்தது விஜயதேவர்தான். களத்துமேட்டில உரலில் நெல்லைக் குத்திக்கொண்டிருக்கிறாள் வேலாயி கெழவி. கூடியிருந்த எல்லோரும் கும்மியடிக்கின்றனர்.

“வானம் பாத்த பூமியிலே
மேட்டூரு தண்ணியால வெளஞ்சதடா
விஜதேவர் வெதச்சநெல்லு
மாவுக்கு பத்துமூட்ட...பத்துமூட்ட வெளஞ்சாலும்
உழவுக்கும் உழுதவனுக்கும்
உழைப்புக்கும் கடனுக்கும்
கணக்குப்பாத்தா ஒண்ணுமே மிச்சமில்லே...
கஷ்டத்த கணக்குப் பாத்தா
வாழும் நாள் பூரா கஷ்டமடா
சந்தோஷத்த நெனச்சம்னா
சாகும்வர சொகம்தானடா
குத்துங்கடி குத்துங்கடி
குச்ச சம்பா நெல்லுச்சோறு...”

என சந்தோஷமாய் கும்மியடித்து பாடிக்கொண்டிருக்கிறாள் வேலாயி கெழவி...

பிறகு புதுச்சோறு பொங்கி, சூரியனுக்குப் படைத்து, உழுதமாட்டுக்கு மொதல்ல ஊட்டிவிட்டு, ஊரு சனங்களுக்கும் கொடுக்கிறார் விஜயதேவர். அப்போது அவ்வழியாகச் சென்ற சாமிஅய்யாவும், செல்லப்பாவும் வேலாயி கெழவி பாடும் கும்மிப்பாட்ட ரசித்தபடி செல்கின்றனர்.

அப்போது சைக்கிளில் செல்லும் செல்லப்பாவையும், சாமிஅய்யாவையும் பார்த்த விஜயதேவர் “ஏய் செல்லப்பா இங்க வா... இந்தா பொங்கல ஒருவா சாப்பிடு... சாமிஅய்யா நீயும் சாப்பிடு...” அவர்கள் இருவரும் சாப்பிட, அவர் செல்லப்பாவிடம் “ உங்க அய்யா அல்லும் பகலும் ஒடா உழைக்கிறான். அவன் இந்த நெலத்துல சிந்தறது வேர்வை இல்ல ரத்தம். அத உறிஞ்சிதான் நீ பட்டனத்துக்கு படிக்கப்போற... நீ சம்பாதிச்சி அய்யா அம்மாவ காப்பாத்த வேணாம் (சாமிஅய்யாவை பார்த்து) எங்களுக்கு இந்த பூமாதேவியும், அந்தவாணத்தில இருந்து ஊத்துற வர்ணபகவானும் இருக்கிறாங்க... நாங்க பொழச்சிக்குவோம். உங்க வாழ்க்கய மட்டும் நீங்க பாத்துக்கிட்டா போதும்... என்ன நான் சொல்றது சரிதானே சாமிஅய்யா?”... நீங்க சொன்னா அது சரியாதான் இருக்கும் தேவரே” எனச் சொல்லிவிட்டு சாமிஅய்யா தன்மகனை அழைத்துக்கொண்டு புறப்படுகிறார்.

இப்போது அவர்களிருவரும் கரையோடு உறவாடிக்கொண்டுருக்கும் தண்ணீர் நிரம்பிய தாமரை ஏரிக்கு வந்துவிட்டார்கள். “ அய்யா ஒருநிமிஷம் இதோ வந்துடறேன்” என்று சொல்லிக்கொண்டே ஏரியில் இறங்கி தாமரை இலைகளை விலக்கி தன் கால்களை கழுவிக்கொண்டு தன்னுடைய ஊரை ஏக்கத்தோடு பார்க்க, கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேலென பசுமை படர்ந்துக்கிடக்கிற கொள்ளையழகை ரசித்தவனாய் தாமரை ஏரிக்கரையைக் கடக்கும்போது கரைமீதுள்ள கருவேலமரத்தடியில் அமர்ந்திருந்த பரதேசிகளை கவனித்த சாமிஅய்யா செல்லப்பாவிடம், “அவர்களிடம்போய் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்...போ” எனச் சொல்ல, அவன் தயங்க, சாமிஅய்யா “அவர்கள் வெறும் பிச்சைக்காரர்கள் அல்ல... திருவோடேந்திய தேவர்மார்கள். எதையும் எதிர்ப்பார்க்காத அன்றாட வாழ்வை அறிந்தவர்கள். நாம் இடும் பிச்சையை உதாசீனப்படுத்தாமல் தேவாமிர்தமாக ஏற்றுக்கொள்பவர்கள். திருவோடேந்திய பரதேசிகள் அல்ல, முற்றும் துறந்த முனிவர்கள், சாஸ்திரங்கள் யாவுமறிந்த மகான்கள். இன்று இந்த ஊரு, நாளை வேறு ஊர் என தன்னிலை உணர்ந்த நல்ல மாமனிதர்கள்....” என்று சொல்ல, அவனோ அவர்கள் காலில் விழுந்து ஆசிபெற, பரதேசிகள் வாழ்த்த, அங்கு பெரும் வழிபாடு முடிந்து அவன் கிராமத்தை திரும்பிப் பார்த்துவிட்டு மனமுறிவுடன் கிராமத்தைவிட்டு அவன் பயணம் தொடர்கிறது...

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</