வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


புதுமைப் பித்தன்


கிருஷ்ணன் வெங்கடாசலம்  

இயற்பெயர் சொ. விருத்தாசலம். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் திருநெல்வேலி. ஆனால் இவர் பிறந்தது கடலூர் அருகே உள்ள திருப்பாதிரிப்புலியூர் எனும் ஊர். இவரது தந்தை அப்போது இந்த ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து வந்தார்.

ஆரம்பக் கல்வியை திண்டிவனம், செஞ்சி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கற்றார். 1918-ல் தகப்பனார் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்கள். படிப்பைத் தொடர்ந்தவர் 1931-ல் திருநெல்வெலி இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அதே ஆண்டு (1931) இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி கமலா திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர்.

புதுமைப்பித்தனின் ஆரம்பப் படைப்புகள் டி.எஸ். சொக்கலிங்கம் நடத்திய 'காந்தி' பத்திரிகையில் வெளிவந்தது. மொத்தம் மூன்று கட்டுரைகள். அதன் பின்னர் தான் 1934-ல் 'மணிக்கொடி' இலக்கிய இதழில் "ஆற்றங்கரைப் பிள்ளையார்" என்கிற சிறுகதை முதன்முதல் பிரசுரம் கண்டது. தமிழ்ச் சிறுகதை மன்னனும் தோன்றினான்.

இக்கால கட்டத்தில் பி.எஸ். ராமையாவின் நட்பு கிடைத்தது. கதைகள் எழுத ஆரம்பித்த 1934-ல் மாத்திரம் 43 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்தை இலக்கியத்தில் இவர் தீவிரமாகப் பணியாற்றிய காலம் எனலாம்.

இவைகள் யாவும் மணிக்கொடி, காந்தி, சுதந்திரச் சங்கு, ஊழியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும், மணிக்கொடி இதழில்தான் பெருவாரியான கதைகள் வெளிவந்தன.

இவற்றின் முக்கியமான கதைகளாக பொன்னகரம், இது மிஷின்யுகம், சங்குத் தேவனின் தர்மம், சணப்பன் கோழி போன்ற கதைகளைக் கூறலாம். 1934-35ல் 'ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

1935ல் எழுதிய மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 14, இதில் கலியாண், துன்பக்கேணி, சிற்பியின் நரகம் போன்றவை நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்தவை. இளம் தலைமுறையினர் தவறாமல் இக்கதைகளைப் படிக்க வேண்டும்.

1936ல் இரண்டே கதைகள் தான் எழுதியிருக்கிறார். இதில் 'பிரம்மராக்ஷஸ்' கதை மிகவும் முக்கியமான கதை. 1936க்கும் பிறகு 1937லிருந்து 1948 வரையிலும் இவர் எழுதியுள்ள 388 சிறு கதைகளில் ஒருநாள் கழிந்தது. மனிதயந்திரம், நாசகாரக் கும்பல், மனக்குகை ஓவியங்கள், மகாமசானம், காஞ்சனை, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றாடி போன்ற கதைகள் தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு இட்டுச் சென்றன.

தமிழில் இதுவரை எழுதப்பட்ட காதல் கதைகளில் இருந்து 'செல்லம்மா' என்கிற கதைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என சுந்தரராமசாமி பதிவு பண்ணியிருக்கிறார். இந்தக் கூற்றில் எள்ளளவும் தவறில்லை என்பதை இக்கதையைக் படிக்கும் தீவிர வாசகர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

1936 முதல் 1943 வரை 'தினமணி'யில் உதவி ஆசிரியர் வேலை. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பை 1940-ல் நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது.

'தினமணி'யிலிருந்து விலகிய புதுமைப்பித்தன் 1944-ல் டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த 'தினசரி' பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.

1950க்குப் பிறகு தோன்றிய தமிழின் மிகச் சிறந்த பல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனின் பாதிப்பிலேயே எழுதியிருக்கிறார்கள் என்கிற கருத்து இலக்கிய உலகில் உண்டு.

இவரது பார்வை சினிமா உலகம் பக்கமும் சென்றிருக்கிறது. அதற்கு பொருளாதாரத் தேவையே மிகவும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஜெமினியின் ஔவையார் படத்திற்கான பூர்வாங்க ஏற்பாட்டில் இவர் பணி இருந்திருக்கிறது. 1948-ல் வெளிவந்த 'காமவல்லி' என்கிற திரைப்படத்தின் கதை - வசனம் புதுமைப்பித்தன். இப்படத்தில் நாகர்கோவில் மகாதேவன் - எஸ். வரலட்சுமி ஜோடி நடித்திருந்தனர்.

சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த எம்.கே. தியாகராஜபாகவதர் 'ராஜ முக்தி' என்கிற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதன் படப்பிடிப்பு புனேயில் நடைபெற்றது. அங்கு குழுவினரோடு தங்கி அப்படத்தை எடுத்தார்கள். இப்படத்தின் கதை - வசன கர்த்தா என்கிற வகையில் புதுமைப்பித்தனும் புனே சென்றிருந்தார். அங்கிருக்கும்போது அவரது உடல்நிலை குன்றியது. காசநோய் தாக்கி அவதியுற்றார். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

இவரது அனைத்துச் சிறுகதைகளையும் உள்ளடக்கிய சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு/நாகர்கோவில் பதிப்பகத்தார் சிறந்த முறையில் 2000 ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பிரயாசையுடனும், பொறுப்புடனும் இதைத் தொகுத்த ஆ.இரா. வெங்கடாசலபதி பாராட்டுதல்களுக்குரியவர்.

இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் எழுதிய சிறு நாவல் 'சிற்றன்னை', மற்றும் பூர்த்தியாகாத புதினம் 'அன்னையிட்ட தீ' சேர்க்கப்பட்டிருக்கிறது.

'சிற்றன்னை' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், மகேந்திரன் இயக்கத்தில் உருவான "உதிரிப்பூக்கள்".

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் அதற்கு முன்பே பலர் இருந்தாலும், புதுமைப்பித்தனின் இடத்தை எவரும் நிரப்ப முடியாது.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</