வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ் - 4

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

4. பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் முயற்சியை கைவிட்டுவிட்ட பிறகும் அயராமல் தொடர்வதால் ஒருவனுக்கு கிடைப்பதாகும் - WILLIAM FEATHER.

ஒரு மொழியில் ஒரு வார்த்தை கூட எழதப் படிக்கத் தெரியாத ஒரு பெண் – அந்த மொழியின் பொருள் உணர்ந்து உச்சரிப்பு கெடாமல் உணர்வு பூர்வமாகப் பாட முடியுமா?
முடியும். கண்டிப்பாக முடியும்..

ஆனால் அதைச் செய்ய உள்ளார்ந்த ஈடுபாடும், அந்த மொழியின்மீது ஒரு பயபக்தியும், அதனைச் சிதைக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும், எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையான மனதோடு கூடிய கடின உழைப்பும் கண்டிப்பாக வேண்டும்.

இவை எல்லாமே அன்று எஸ். ஜானகி அவர்களிடம் இருந்தன. அதனால் தான் அவரால் தனக்கு சுத்தமாகத் தெரியாத தமிழ் மொழியில் அமைந்த பாடல்களை அட்சர சுத்தமாக, உணர்வு பூர்வமாக காகிதப் பிரதி கூட வைத்துக்கொள்ளாமல் பாடி பாடல் பதிவில் அனைவரையும் அசர வைக்க முடிந்தது.

ஆனால் எஸ். ஜானகியோ, அவரது இந்த வெற்றிக்கு காரணம் இசை அமைப்பாளர் சலபதிராவ் அவர்கள் கொடுத்த தைரியமும் ஊட்டிய தன்னம்பிக்கையும், கொடுத்த ஆதரவுமே காரணங்கள் என்று தான் நம்பினார்.
இதை அவரே பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் கூட இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"என்னோட இத்தனை வளர்ச்சிக்கும் காரணமே அன்று இசை அமைப்பாளர் தாதநேனி சலபதிராவ் அவர்கள் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும், பேராதரவும் தான். அவர் தான் என்னை வளர்த்துவிட்டவர். அவர் மட்டும் இல்லைன்னா நான் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கவே முடியாது." - தாதநேனி சலபதிராவைப் பற்றி ஜானகியின் நன்றியில் ஊறிய கருத்துக்கள் இவை.

ஆனால்.. விதியின் விளையாட்டோ என்னவோ..

"விதியின் விளையாட்டு" படம் .. பாடல் பதிவோடு முடங்கிப் போனது. ஆகவே . எஸ். ஜானகி அவர்கள் கடினமாக உழைத்துப்பாடிய முதல் பாடல்கள் நமக்கு கேட்கக் கிடைக்காமல் போய்விட்டன.

பின்னாளில் பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ். பாலையா அவர்கள் சொந்தமாகத் தயாரித்த "மகதல நாட்டு மேரி" என்ற படத்தின் மூலம் எஸ். ஜானகி தமிழ்த் திரை உலகில் ஒரு பின்னணிப் பாடகியாக நுழைந்தது தனிக்கதை.

"விதியின் விளையாட்டு" படம் முடங்கிப் போனதால் சலபதிராவ் ஒன்றும் சோர்ந்து போய்விடவில்லை. அவருக்கான வாய்ப்போடு அவரது சகோதரர் டி. பிரகாஷ்ராவ் அவர்கள் இயக்கிய தெலுங்குப் படம் காத்திருந்தது. என்.டி. ராமராவ், ஏ.என். நாகேஸ்வரரவ், நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர் நடிப்பில் "பரிவர்த்தனா" என்ற தெலுங்குப் படம் சலபதிராவ் இசையில் வெளிவந்தது. படமும் பாடல்களும் பெருவெற்றி பெற்றன.

அப்போதெல்லாம் மதராஸ் வானொலி நிலையத்தில் தமிழ்ப் படப் பாடல்கள் மட்டும் அல்ல, ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படப் பாடல்களையும் ஒலிபரப்புவது வழக்கமாக இருந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் பிறமொழிப் படப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுவந்தன.
முஹம்மது ரபி, கண்டசாலா ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானது இப்படித்தான்.
பின்னாளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த அறுபதுகளின் பிற்பகுதி வரை இந்த நிலைமை நீடித்து வந்தது.

அது மட்டும் அல்ல. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது "ஆந்திரகேசரி" பிரகாசம் அவர்கள் "மதராஸ் மனதே" (மதராஸ் எங்களுடையதே) என்று சென்னையை ஆந்திரத்துடன் இனைக்கக் கோரி போராட்டங்கள் நடத்தியதில் இருந்தே தெலுங்கு பேசும் மக்கள் சென்னையில் கணிசமான அளவுக்கு இருந்துவந்தனர் என்று உணரமுடிகிறதல்லவா?

எதற்காக இதை எல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால் தெலுங்கு திரைப்படங்களும், பாடல்களும் சென்னையில் கணிசமான வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்றும் தமிழ் நாட்டில் நிலவி இருந்தது என்பதை நாம் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதற்காகத்தான். ஆதலால் "பரிவர்த்தனா" படத்தின் பாடல்கள் தமிழ் நாட்டின் தலை நகரிலும் ஒலிக்க ஆரம்பித்தன.

“பரிவர்த்தனா” படம் தமிழ் திரை உலக தயாரிப்பாளர்களையும் கவர்ந்து
விட்டிருக்கவேண்டும். அதன் விளைவாக இயக்குனர் டி. பிரகாஷ்ராவ் அவர்களுக்கு தமிழ்ப் படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பும் கூடிவந்தது.

பின்னாளைய பிரபல இயக்குனர் ஸ்ரீதர் - ஒரு கதை வசனகர்த்தாவாக பல படங்களுக்கு எழுதிக்கொண்டிருந்த நேரம்.

தனது நண்பர்கள் சிலரோடு பாகஸ்தராக இணைந்து படத்தயாரிப்பில் அவர் ஈடுபட தொடங்கினார். - வீனஸ் பிக்சர்ஸ் என்ற வெற்றிப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் பட்டிருந்த நேரம்.

அந்த நிறுவனத்தின் தயாரிப்பான "உத்தம புத்திரன்" படம் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதரின் கதைவசனத்தில் தனது அடுத்த படமான "அமர தீபம்" படத்தை தொடங்கியது.

உத்தம புத்திரன் படத்தை இயக்கிய டி.பிரகாஷ்ராவ் அவர்களே அமர தீபம் படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படத்துக்கு இசை அமைக்க அப்போது வளர்ந்து கொண்டிருந்த இசை அமைப்பாளரான டி. சலபதிராவ் அவர்களை தேர்ந்தெடுத்தனர். சலபதியும் வெகு உற்சாகமாக இசை அமைக்க தொடங்கினார்.

ஆனால். என்ன காரணத்தினாலோ .. அந்தப் படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களை இன்னும் இருவர் இசை அமைத்துக் கொடுத்தனர். "நாடோடிக் கூட்டம் நாங்க" என்ற பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்களும், "எங்கு மறைந்தனையோ" என்ற உச்ச கட்ட காட்சிக்கான பாடலை பிரபல கர்நாடக இசை இளவரசர் திரு. ஜி.என். பாலசுபரமனியம் அவர்களும் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால்.. மற்ற பாடல்கள்,. பின்னணி இசை அமைப்பு என்று அனைத்துமே சலபதிராவ் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன.

தமிழ்த் திரை உலகில் தனது பாடல்களால் புது முத்திரை பதிக்க வந்தார் டி. சலபதிராவ்.

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</