வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 14


இயக்குனர் அகத்தியன் 27-06-2011, 09:50 PM

பட்டு வணிகச் சாலை (Silk Route) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும் ஒரு வழிப் போக்குத் தடம் அன்றைய நாட்களில் வியாபாரத்துக்குப் பயன்பட்டது. அது மத்திய சீனாவில் ஆரம்பித்து அன்றைய இந்தியா வழியாக இன்றைய ஆப்கானிஸ்தான் கடந்து ஈரான்.. ஈராக் என்று போய் மத்திய தரைக்கடல் நாடுகளில் முடிந்தது. சிறிய நீர் வழிப்பாதையாக மாறிப் பின் தரைவழியாக வடக்கு ஆப்ரிக்காவையும், ஐரோப்பாவையும் இணைத்துக் கொண்டது.

இயேசுவுக்கு புத்தரின் தாக்கம் இந்தச் சாலைகளில் வணிகம் செய்தவர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களினால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஓர் அனுமானம் ஒரு காலத்தில் நிலவியது. இறையியலாளர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் இன்றைய தினம் அந்த அனுமானம் தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இயேசுவின் சிலுவை மரணம் - இயேசு சிலுவையில் இறந்து போனாரா? உயிர்த்தெழுந்தார் என்பது பூமிப்படி அல்லது மதக் கோட்பாட்டாளர்களின் தேவைப்படி உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை வேறு விதமாகத்தான் இருக்கிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கியது சில மணி நேரங்களே . சிலுவையில் இருந்து இறக்கிக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். கல்லறை என்பது நமது பழக்கத்தில் உள்ள கல்லறை அல்ல. ஒரு மலையைக் குடைந்த விசாலமான ஓர் அறை. அங்கிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுகிறார். வல்லமை பொருந்திய உடலுடன் வெளியேறுகிறார். மேரி மக்தலீனுக்கு காட்சி தருகிறார். சீடர்களைச் சந்திக்கிறார். உணவு உண்ணுகிறார். காயங்களைக் காட்டுகிறார். விண்ணேற்றம் அடைகிறார்.
உயிர்த்தெழுந்த பின் வல்லமையோடு கூடிய உடல் பெற்று விடுகிறார். பின் எப்படி பசிக்கும்?

காயங்களைக் காட்டுகிறார். தோமாவை காயத்தைத் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார். இறப்புக்கு பின் தேவ உடல் எடுத்தால் எங்கிருந்து காயம் வரும்?

எப்படி பூமி உடலுடன் வானகம் செல்ல முடியும்?

நிறைய கேள்விகள். உள்ளே நுழைய வேண்டாம். இயேசு சிலுவையில் மரணம் அடையவில்லை அதுபோதும் நமக்கு. மக்கள் முன் தோன்றி தன்னை சிலுவையில் அறைந்த அதிகார வர்க்கத்தைச் சாடாமல், மக்களுக்கு தன் வல்லமையை நிரூபிக்காமல் ரகசியமாகச் சீடர்களைச் சந்தித்துவிட்டு சில நாட்களுக்குப் பிறகு மறைந்து விடுகிறார்.

எங்கே போனார் என்பது பற்றி எல்லாம் நிறைய ஆராய்சிகள், நிறையப் புத்தகங்கள் வந்துவிட்டன. எல்லாம் ஒரே குரலில் கூறும் ஒருமித்த கருத்து இந்தியா வந்தார் என்பது தான்.

இயேசுவின் சீடர்கள் யாரும் படித்ததில்லை. மிகப்பெரிய புத்திசாலிகளாக, அறிவாளிகளாக பைபிளில் இல்லை. காட்டிக் கொடுப்பதும், மறுதலிப்பதும், சந்தேகப்படுவதும் அவர்களின் குணங்களாக பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது தோமாவுக்கு 2000 வருடங்களுக்கு முன் எப்படி இந்தியா என்ற நாட்டைப்பற்றித் தெரியும்?

அப்படியே தோமா இந்தியா பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அதன் தென்கோடிக்கு, சென்னைக்கு வந்து மயிலாப்பூரில் வசித்து இறந்து போக வேண்டிய அவசியம் என்ன?

இயேசுவின் கருத்துக்களைப் பரப்ப தோமா இந்தியா அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இந்தியாவைப் பற்றித் தெரிந்த ஒருவரால்.

யாருக்கு இந்தியா தெரியும்? காஷ்மீருக்கு வந்த இயேசுவுக்கு தெரியும். இயேசுவுக்கு எப்படித் தெரியும்? அதுதான் 18 வருடம் இங்கே வாழ்ந்திருக்கிறாரே...

சற்று குழப்பமாக இருக்கும்.

இயேசு நீரின் மேல் நடந்தார். அற்புதங்கள் செய்தார். பைத்தியம் பிடித்தவர்களையும், நோயாளிகளையும் குணமாக்கினார். அன்றைய தினம் தொழுநோயாளிகள் நிறைந்த இடம் பாலஸ்தீனம். தொழுநோயாளிகளைத் தொட்டுக் குணமாக்கினார்.

இதெல்லாம் சாத்தியமா? பைபிள் சொல்வது போல தொட்டவுடன் குணமாக்குவது சாத்தியமில்லை. தொட்டுக் குணமாக்குவது சாத்தியம்.

அன்றைய நாட்களில் சீனாவிலும் இந்தியாவிலும் மிகச் சிறந்த வைத்திய முறைகள் இருந்தன. இன்றைக்கும் அக்குப்பஞ்சர், அக்குப்பிரசர் என்ற சீன வைத்திய முறைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஊசியால் உடம்பில் குத்தி நோய் நீக்கும் வைத்திய முறைகள். உலகில் முதலில் மனிதனை அறுத்துப் பார்த்தவர்கள் சீனர்கள். இயேசு எல்லாவற்றையும் கற்ற மிகச்சிறந்த மருத்துவராய் இருந்தார்.

இயேசு உடல் அளவிலும் மிகுந்த வலிமை உடையவராக இருந்தார். ஆலயத்தில் வியாபாரம் செய்பவர்களைத் தான் ஒருவராக சவுக்கு எடுத்து அடித்துத் துரத்தியிருக்கிறார். அவருக்கு நிறைய தற்காப்புக் கலை தெரிந்திருந்தால்தான் ஆலயத்தில் அத்தனை பேரையும் அடித்திருக்க முடியும். ஒருவன் கூடவா திருப்பித் தாக்க முயலாமல் இருந்திருப்பான். அந்த வலிமை, வல்லமை அவர் இந்தியாவிலும், திபெத்திலும் கற்றுக்கொண்டது.

புத்த மதம் போதிக்கும் அகிம்சையோடு இன்றைய திரைப்படங்களில் பார்க்கும் பௌத்தமத குருக்களின் விதவிதமான தற்காப்புக் கலைகளை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

வைத்தியம், தற்காப்புக் கலை எல்லாம் சரி... அந்த அற்புதங்கள். கானான் திருமணத்தில் ஜாடிகளில் இருந்த நீரை ஒயின் ஆக்கியது.. நீரில் நடந்தது..

அதுவும் இந்தியாவில் கற்றது தான். இன்றும் அலகாபாத் கும்பமேளாவில் திரளும் சாதுக்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோம். உடலை வருத்தி யோகத்திலும், தியானத்திலும், உணவு, உடை, இருப்பிடம் மூன்றின் தேவையற்ற மனிதர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள் அவர்கள். நாம் பார்க்கும் சராசரி லௌகீக வாழ்க்கைச் சாமியார்கள் இல்லை அவர்கள். ஆசிரமும் சீடர்களும் அந்தரங்கங்களும்  அவர்களுக்குக் கிடையாது. நீரில் நடப்பதும், வெறும் வாயிலிருந்து நெருப்பு வரவைப்பதும், ஆசையற்ற அற்புதங்களைச் செய்பவர்கள் அவர்கள். கொஞ்சம் சந்தேகம் கொண்டு சிரிப்பவர்கள் சுவாமி ராமாவின் வாழ்க்கையான LIVING WITH THE HIMALAYAN MASTERS படித்துப் பாருங்கள் போதும்.

ஆக இயேசு யோகமும் தியானமும் அற்புதங்கள் செய்ய அறிந்து கொண்டதும் இந்தியாவில் தான்.

இயேசு சிலுவையை விட்டு இறங்கி இந்தியா வந்தார் என்ற கருத்து ஆராய்ச்சியாளர்களால் நிறுவப்பட்டுவிட்டது. அது என் நோக்கமல்ல..

சிலுவையில் இருந்து மீண்ட இயேசு ஏன் இந்தியா வரவேண்டும்? எப்படி இயேசுவுக்கு இந்தியா தெரியும்! இந்த இரண்டு கேள்விக்கும் விடை அந்த 18 வருடங்கள் இயேசு இந்தியாவில் காஷ்மீரில், திபெத்தில் தான் கழித்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் ஆலயத்தில் 12 வயதுச் சிறுவனாக நின்ற இயேசு பின் 30 வயது மனிதனாக மீண்டும் பணி செய்ய பாலஸ்தீனம் வந்த இடைப்பட்ட காலம் இந்தியாவில் தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார் என்றால் அவரைப் 12 வயதில் யார் இந்தியா அழைத்து வந்திருக்க முடியும்.

அந்த பட்டுவழிச் சாலையில் பயணித்து ஒரு நட்சத்திரம் வழிக்காட்ட 3 பேர் இயேசுவை பிறப்பின் போது பார்க்க வந்தார்களே, கீழ்த்திசை ஞானிகள் என்று விவிலியம் சொல்கிறதே... அந்த மூவராகத்தானே இருக்க வேண்டும்.

எங்கோ ஜெருசலேமில் இயேசு பிறக்கப்போகிறார் என்று புத்தன் பிறந்த பூமியில் இருந்தவர்களுக்கு எப்படித் தெரியும்?

அதுசரி.. ஏரோது மன்னன் அந்த மூவரையும் விசாரித்துவிட்டு இரண்டு வருடங்களுக்கு உட்பட்ட குழந்தைகளைக் கொல்லச் சொன்னானே.. பிறந்த குழந்தையை கொல்ல ஏன் இரண்டு வருடக் குழந்தைகள் வரை கொல்ல வேண்டும்?

அந்த மூவரும் பயணித்த காலமாக இருக்கலாம். குழந்தை அவர்கள் கிளம்பியபோது பிறந்ததா.. சேர்ந்தபோது பிறந்ததா என்ற குழப்பம்..

விவிலியப்படி அந்த குழந்தை அவர்கள் போய்ச் சேர்ந்த போது தான் பிறந்தது.

அப்படியென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஏன் சம்பந்தம் இல்லாத புத்த பூமியில் உள்ள மூன்றுபேருக்கு சம்பந்தமே இல்லாத இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட வேண்டும்?

எதற்காக இயேசுவை அவர்கள் 12 வயதில் இந்தியா அழைத்துவந்து எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும்?

புத்தரைப் போலவே ஏசுவும் அன்பையும் அகிம்சையும் போதிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினார்களா ?

கடவுளைப்பற்றிப் பேசாத புத்தருக்கும் சொல்லுக்குச் சொல் என் பிதா என்ற இயேசுவுக்கும் என்ன தொடர்பு?

என்னவோ ஒன்று இருக்கிறது..

புத்தரின் நோக்கம் மக்களின் ஆன்ம விடுதலை. இயேசுவின் நோக்கமும் அது தான்.

இயேசு பிறந்தது யூத இனம் அடிமைப்பட்டுக் கிடந்த நேரம். எகிப்திலிருந்து புறப்பட்டு அலைந்து திரிந்து அரசியலமைப்பு, ஆட்சியமைப்பு கண்டு சவுல், டேவிட், சாலமோன் என்ற அரசர்களைக் கண்டு, தம் இனத்துக்குள்ளே பிளவுபட்டு அடிமைப்பட்டு இறுதியில் ரோமானிய ஆட்சியின் கீழ் அது அடிமைப்பட்டு கிடந்த நேரம். ஆங்காங்கே இன்றைய தினம் போல் தீவிரவாதக் குழுக்கள் அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

குழந்தை இயேசுவை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு போ என்று தேவதூதன் அறிவிக்கிறான்.. ஏரோது மன்னன் இறந்த பிறகு அதே தேவதூதன் கட்டளை இட்டு திரும்பி வரச் சொல்கிறான். யோசேப்பும் அன்னை மரியாலும் 3 வயது பாலகனுடன் ஜெருசலேம் திரும்பி பெத்லகேமில் தங்காமல் நாசரேத் வந்ததன் காரணம் என்ன?

விவிலியம் வேறு காரணம் சொன்னாலும் ஏரோது மன்னன் இறந்த பிறகு ஆட்சிக்கெதிரான தீவிரவாதக் குழுக்களின் போராட்டம் தொடங்கி நாடு அடக்கு முறையைச் சந்தித்திருந்த நேரம். போராடியவர்கள் கொல்லப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு ஊரெங்கும் அமைதியின்மை. எனவே பாதுகாப்பாக வாழ அவர்கள் தேர்ந்தெடுத்தது நாசரேத்.

எங்கேயோ சுற்றி எல்லாவற்றையும் கற்று வந்த இயேசு, அடக்கு முறையைச் சந்தித்த மக்களைக் காப்பாற்ற ஆட்சியாளர்களை ஏன் எதிர்க்கவில்லை? மதத்தை, அதன் கண்மூடித்தனத்தை, மதகுருமார்களைத் தானே எதிர்த்தார்.

இறுதியாக இயேசு கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறார். அரசுக்கு எதிராக பேசியது, மந்திர தந்திரங்கள் செய்து மக்களை மயக்கியது, கடவுளை அவதூறு செய்தது என அவர் மீது குற்றங்கள் சுமத்தப்படுகிறது. மதகுருமார்களின் விசாரணைக்குப் பிறகு ரோமானிய கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பபடுகிறார்.

பிலாத்து, "நீ கடவுளின் குமாரனா?" என்று கேட்கிறார். இயேசு, "நீங்களே அதைச் சொல்லிவிட்டீர்கள்" என்கிறார்.

தன் அரசு "மண்ணரசல்ல. விண்ணரசு" என்கிறார். பிலாத்துவால் இயேசு மேல் அரசுக்கு எதிரானவர் என்று குற்றம் சுமத்த இயலவில்லை.

மதவாதிகளோ இயேசுவுக்கு எதிரியாக இருந்தனர். இயேசு மதத்தின் பேரால் மக்களை அடிமைப்படுத்துவதை விடுவிக்கவே போராடினார் என்பதை விவிலியம் தெளிவாகச் சொல்கிறது. அந்த புரட்சிக்காரன் கடவுளாக்கப்பட்டு அவரின் பெயராலேயே ஒரு மதம் வந்து மக்களை அடிமைப் படுத்தியது காலத்தின் வினோதம்.

ஆக இயேசுவின் நோக்கம் மக்களின் ஆன்ம விடுதலை. அன்றைய தினம் எத்தனையோ தீவிரவாதக் குழுக்கள் இருந்தன. இயேசுவுக்காக யாரும் குரல் கொடுக்க வில்லை. பண்டிகையை முன்னிட்டு யாராவது ஒருவரை விடுதலை செய்ய பிலாத்து கேட்டபோது அந்த மக்கள் மந்தை இயேசுவைச் சிலுவையில் அறையச் சொன்னது. இயேசு தனி மனிதனாகத்தான் போராடி இருக்கிறார். பகுத்தறிவு பேசி இருக்கிறார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு
உன்னைப்போல் அயலானை நேசி
எழுநூறு முறை மன்னித்து விடு
தவறு செய்யாதவன் முதல் கல்லை எரியட்டும்

என்பதெல்லாம் ஒரு தீவிரவாதியின் சிந்தனை அல்ல.

ஆன்ம விடுதலைக்கான தேவை.

ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்கிறீர்களே? என்று வேதபாரகர்களும் பரிசேயர்களும் கேட்டபோது,

"ஓய்வுநாளில் உன் ஆடுகளில் ஒன்று கிணற்றில் விழுந்தால் தூக்காமல் இருப்பாயா?" என்று ப்ராக்டிகலாக கேட்டவர்.

ஆட்டின் பாலை காம்புக்குள் செலுத்திவிட்டு வா என்று சொன்ன அதே புத்தரின் ப்ராக்டிகல்.

"உயர்த்தப்பட்டவன் எவனோ அவன் தாழ்த்தப்படுகிறான்.
தாழ்த்தப்பட்டவன் எவனோ அவன் உயர்த்தப்படுகிறான்"

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

"நானே உலகின் ஒளி. என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்"

எல்லாமே மக்களில் ஆன்ம விடுதலைக்கான போதனைகள்.

இயேசு பல இடங்களில் அடிக்கடி பயன் படுத்தியது ஒரு வார்த்தை. மலைப் பிரசங்கத்தில் ஆரம்பித்து செல்லும் இடங்களில் எல்லாம் அவரால் சொல்லப்பட்டு சிலுவை மரணத்தில் கூட இறுதியில் அவர் சொன்னதும் அந்த வார்த்தை தான். பரலோக ராஜ்ஜியம்.

"குழந்தைகளே என்னிடம் வாருங்கள்
பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது"

பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது விழிப்புடன் எச்சரிக்கையாய் இருங்கள்"

"நீ எனக்குச் செய்யும் ஒவ்வொன்றும் பரலோக ராஜ்ஜியத்தில் இருக்கும் என் பிதாவுக்குச் செய்வது"

"நீ என்னோடு பரலோக ராஜ்ஜியத்தில் என் பிதாவோடு வீற்றிருப்பாய்"

"விசுவாசம் உள்ளவன் பாக்கியவான். பரலோக ராஜ்ஜியம் அவனுக்குரியது"

அவருடைய ஜெபத்தின் முதல் உச்சரிப்பு "பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே"

அது என்ன பரலோக ராஜ்ஜியம்? பரலோக ராஜ்ஜியம் என்று அவர் சொன்னதைத் தானே மதத்தலைவர்கள் சொர்கத்தையும், பயன் கொடாத மரங்கள் வெட்டுண்டு தீயில் பொசுக்கப்படும் என்று சொன்னதையும் பிடித்துக்கொண்டு நரகத்தையும் உருவாக்கி விட்டார்கள்.

இறப்புக்குப்பின் உடல் இங்கேயே மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும்போது நரகத்தில் எந்த உடலை பொசுக்க இயலும்? பொசுக்குவதற்கு ரெடிமேடாக ஒரு உடல் தயாராக இருக்குமா? அது சாத்தியம் தானா?

நரகம் என்பது அவனவன் காரியத்துக்கு ஏற்பப் பூமியிலேயே கிடைக்கிறதே. மகான் சொன்னது இதைத்தானா? அல்லது நரகம் என்ற ஒன்றை பிதா உருவாக்கி வைத்துக் கொண்டு பாவிகளைப் பொசுக்கித் தண்டனை வழங்குவாரா?

சரி எது பாவம்? யார் பாவி? திருடுவது பாவம், திருடியவன் பாவி என்றால் 100 ரூபாய் திருடி இந்த பூமியிலேயே கிடைக்கும் ஒரு உணவை வாங்கி இருக்க வேண்டும. புசித்திருக்க வேண்டும். அவனுக்குண்டானதை அந்தப் பிதா கொடுக்காததால் கொலை செய்திருக்க வேண்டும். கொலையானவன் கொலை செய்தவனை ஆயுதம் தூக்கும் அளவுக்குக் கோபப்படுத்தி இருக்க வேண்டும்.

ஒன்று கோபப்படாமையையோ அல்லது சகிப்புத்தன்மையையோ பிதா கொடுத்திருக்க வேண்டும்.

நான் நாத்திகம் பேசவில்லை. 100 ரூபாய் திருடியவன் இறப்புக்குப் பின் அந்த அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மேலே சென்றான் என்றால் அவனுக்கு மேலே தண்டனை கொடுப்பது ஒருவகையில் நியாயம்.

மனிதன் உருவானபோதே உணவிற்கும், பெண்ணிற்கும், இருப்பிடத்துக்கும் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டான். இவ்வுலகில் உள்ள அத்தனை விலங்குகளிலும் கள்ளம், கபடம், வன்முறை. சூது அனைத்தும் நிறைந்தது மனிதப் படைப்பு.. அவர்களில் பாவி யார்? புண்ணியவான் யார்?

இதனால்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். அன்புகாட்டு, அயலானை நேசி, 700 முறை மன்னிப்புக் கொடு என்றார் இயேசு.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

என்றார் அதே காலகட்டத்தில் வாழ்ந்த திருவள்ளுவர்.

ஒழுங்காக வாழ்ந்தால் பரலோகம் என்றார் இயேசு.

"உப்பு சாரமற்றுப் போனால் அதனால் என்ன பயன்?"

உப்பு சாரமற்றுப் போனால் அதனால் என்ன பயன் என்பது தமிழாக்கத்தில் சற்று விறைப்பாக இருக்கிறது. அவர் எப்படி சொல்லி இருக்ககூடும்.

"என் மகன் பாவத்துக்கு மேல பாவம் பண்றான்க"

"அதனால என்ன... உப்பு இருக்குதே... நமத்துப் போய் சுவை கெட்டுப்போச்சுனா என்ன ஆகும்... தூக்கித் தூரத்தான் போட முடியும்."

இதை ஹீப்ரு மொழியில் பேச்சு வழக்கில் சொல்லி இருக்க வேண்டும்.

பரிசேயர்களும் வேத பாரகர்களும் உங்களைச் சபிக்கிறார்களே... கொலை செய்யத் துரத்துகிறார்களே...

அதற்கும் ஓர் உதாரணம் சொல்லி இருக்க வேண்டும்.

திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை குத்தகைக்கு விட்டுவிட்டு முதலாளி எங்கேயோ இருந்தான். குத்தகைக்காரன் பங்கை பிரித்துத் தரவில்லை. பொறுத்துப் பார்த்த எஜமான் நம்பிக்கைக்குரிய தனது பிரதான சீடனை அனுப்பி பணம் கேட்டான். குத்தகைக்காரன் அடித்து விரட்டினான். அடுத்த சீடனும் அடிவாங்கித் திரும்பினான். இறுதியாகத் தனது குமாரனை அனுப்பினான். அவனையும் கொலை செய்வார்கள். இறுதியாய் எஜமானே வந்து ஆக்ரோஷத்தோடு தன் பங்கை வசூலிப்பான்.

எஜமான் - கடவுள், சீடர்கள் முன் வந்த தீர்க்க தரிசிகள், மகன் - இயேசு, திராட்சைத் தோட்டம் பூமி, குத்தகைக்காரன், ஏழைகளை ஏமாற்றி நசுக்கும் கூட்டம்.

பள்ளத்திற்குள் விளக்கை வைத்தால் அதனால் என்ன பயன்? பாறையின் மேல் வைத்த விளக்காய் இருங்கள்.

ஒரு விவசாயி விதைகளைப் பாறையின் மேல் தூவினான். இறுகிய நிலத்தின் மேல் தூவினான். புதர்களில் தூவினான் இறுதியில் நல்ல நிலத்தில் தூவினான். பாறையில் விழுந்தவை கருகின. முட்புதரில் முட்கள் பயிரை நாசம் செய்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் முளைத்து வளர்ந்து பலன் கொடுத்தன.

உங்கள் வாழ்க்கையை பலன் தரும் நிலத்தின் விதையாக மாற்றுங்கள் என்பது தானே இது.

அதனால் தான் பலன் கொடாத மரங்கள் யாவும் வெட்டப்பட்டு தீயில் பொசுக்கப்படும்.

இப்படி விவிலியம் எங்கும் உதாரணங்கள் மூலமாகவே அறிவைப் புகட்டி போதனைகளைச் செய்தார் இயேசு மகான்.

புத்தர் இதைத்தானே செய்தார்.

ஏதோ கஷ்டத்தோடு, தெரியாத பாதசாரிகள் இடம் பெயர்ந்து செல்லும் போது புத்தர் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கண்டு சுமைகளை இறக்கி வைத்துவிட்டு சீலைத் துணிகளால் முகமெல்லாம் துடைத்து அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு அந்த மகானிடம் சொன்னார்கள்.

"நேத்து வரைக்கும் ஒண்ணா மண்ணா வாழ்ந்தோமய்யா . திடீர்னு பெரிய தலையாரி இறந்து வாரிசு இல்லாமல் போயி வேற தலையாரி வந்துட்டாருய்யா. நாங்க ஏற்கனவே குடுத்துக்கிட்டிருந்த பரமக்கூலி பத்தாதுன்னு இஷ்டத்துக்கு கேக்குறான்யா. இருக்குற எடத்துக்கு பரமக்கூலி கொடுக்குறதே கெரகசாரம்னு நெனைக்குறோம். ஏன்யா இருக்குற எடதுக்காய்யா ஒருத்தன் கூலி கேப்பான். முடியாதுன்னு சொல்லலாங்கலாய்யா. அதுக்கு மேல குடுக்க வழியில்லனு தானே சொன்னோம். குடிசையெல்லாம் இடிச்சிப்புட்டு எங்கையாவது போங்கனு விரட்டிட்டான். அந்தப் பக்கமா போய்க்கிட்டிருக்கோம்."

எல்லாப் புலம்பல்களையும் அமைதியாய் புன்னகை தவழும் முகத்துடன் கேட்ட புத்தரை பார்த்து,

"என்னங்கய்யா உங்களைப் பார்த்தா கடவுள் மாதிரி தெரியுது. கேட்டுகிட்டு சிரிக்கிறீங்க" என்று அவர்கள் சொல்ல...

"உங்கள் கதையைக் கேட்டு நான் அழுதால் தலையாரி மீண்டும் உங்களைக் கூப்பிட்டு விடுவானா? சிரிக்காமல் நான் கோபப்பட்டால் தனி ஒருவனாக உங்கள் தலையாரியிடம் போர் புரிய இயலுமா?"

"வருத்தப்படலாமுலய்யா"

"உங்கள் மேல் எனக்கு எப்படி வருத்தம் வரும். இவ்வளவு தூரம் அந்தச் சிறுவர்களைத் தூக்கி வந்திருக்கிறீர்களே அவர்களுக்கு ஏன் வருத்தம் வரவில்லை. இறக்கி விட்டதும் சிரித்து விளையாடுகிறார்களே ஏன்?"

"அதுங்களுக்கு என்ன சாமி தெரியும். எங்க போனாலும் கஞ்சி கெடச்சிடும். காப்பாத்துறதுக்கு நாங்க இருக்கோம்."

"அந்த நம்பிக்கை ஏன் உங்களுக்கு இல்லை? அந்தச் சிறுவர்களைப் போல் நம்பிக்கையோடு இருங்கள். அவர்களைப்போலச் செல்லுங்கள். உணவும் இருப்பிடமும் உங்களுக்கு கிடைக்கும். நடையும் தூக்கிச் செல்லும் பாரமும் தான் உங்களை வருத்தும்."

வாழுகின்ற வாழ்க்கையை வைத்தே வாழச் சொன்னவர் புத்தர்.

குழந்தையாக மாறாவிட்டால் கடவுளின் ராஜ்ஜியத்தில் இடம் கிடைக்காது என்று இயேசு இதைதான் சொன்னாரா?

நம்பிக்கையோடு வாழ்பவன் இறைவனை அடைவான் என்பது தான் அவரின் கருத்தாக இருக்க முடியும். அது ஒரு குழந்தையின் நம்பிக்கை. எதையும் யோசிக்காமல் விளையாடும் அந்தக் குழந்தைகள் போல் வாழ்வதைத்தான் மீண்டும் பிறக்க வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இப்படி புத்தரை போல் ஏசுவும் உதாரணங்களில் மனித வாழ்க்கையை மாற்றிய மகான்.

புத்தர் மக்களைப் பற்றி யோசித்தார்.
இயேசுவும் அதைதான் செய்தார்.
புத்தர் கடவுளைப் பற்றி பேசவில்லை
இயேசு பேசினார்.

புத்தருக்கு மறுபிறப்பில் நம்பிக்கை இருந்தது. அந்த சித்தாந்தங்களுக்குள் நாம் போக வேண்டாம்.

புத்தருக்கு ஒரு கவலை இருந்தது. அது அரண்மனையில் பிறக்காமல் சாதாரண மனிதனாக பிறந்திருக்க வேண்டும் என்று முன்பு குறிப்பிட்டேன்.

மக்களுக்காக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட புத்தருக்கும், ஏழையாக மாட்டுத் தொழுவத்திலே பிறந்து மக்களுக்காக ரத்தம் சிந்திய ஏசுவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்க்கும் போது ஒரு எண்ணம் தோன்றுகிறது.

அதைச் சற்று தள்ளிப் பேசுவோம்.

அந்த மூன்றாவது ஒளி..

எங்கு பிறந்தது? ஏன் பிறந்தது?

அதையும் கொஞ்சம் பேசுவோம்.

வானுலகத்தை வணங்கி
அகத்தியன்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </