வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -6

பெருந்தேவி – வானை முட்டும் நுரைகளின் கெக்கலி

குட்டி ரேவதி  

‘புத்தகங்கள் தமக்குள்ளே உரையாட இருக்கிறோம் யாம் வாசித்துக்கொண்டே. நிகழும் அல்லது அற்ற உரையாடலின் சாத்தியத்தை நிர்ணயிப்பது தமிழ் நூன்மரபு. கவிதைகள் இவை பண்பட்ட மரபின் வசமானால் மாத்திரமே எழுத்தென்று அறியப்படட்டும்’ என்ற வரிகளை வாக்குத் தத்தங்களாக்கி கவிதைக்குள்ளே அழைத்துச் செல்லும் தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘தீயுறைத்தூக்கம்’ எனும் கவிதைக்குரலுடன் வந்தார், பெருந்தேவி. 1997- ல் வெளிவந்த இந்நூலுக்குப் பின் பெருந்தேவியின் கவிதை ஆளுமை நிகரற்றப்பயணங்களால் விரிந்து கொண்டேயிருக்கிறது.

தன் அக உணர்வுகளை தொடர்ந்து அர்த்தப்படுத்தவும் மொழியாக்கவும் நாம் எடுத்துக்கொள்ளும் மொழிவழியான பயிற்சி தான் கவிதை என்ற புரிதலை தமிழ்த்தளத்தில் முதன்மையாக முன்வைத்த பெண் கவிஞர் பெருந்தேவி. சொற்களின் வளமான தேசத்தை இவர் தனக்கு ஏற்படுத்திக்கொண்டது போல் எவரும் அதற்கு முன்போ பின்போ ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் தளும்பிக்கொண்டிருக்கும் அர்த்த உணர்வு சலித்துப் போன காலக்கட்டமதில் அச்சொற்களின் வழியாகவே அவ்வுணர்வுகளைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் மொழியைக் கவிதையாக்கினார், தன் தீயுறைத்தூக்கத்தில்.

விழைந்து தானிருக்க
மறுத்து சருகாக
சலசலத்து வீழும்
                     இலைத்துளிர் குளத்தில்.

மறுத்து தன்னிருப்பை
விழைந்து தானாக
வண்ணம் சிறகடிக்கும்
                     கூட்டின் புழு.

கற்கும் வாழ்வு கசடற அதனதன்
நகர்ந்தேன் என,

                     பிறகான வண்ணத்தின்
                     முட்டைகளால்
                     பரப்படர
                     இலை வீழும்
                     இன்னொன்று.

நீர்முகம் அலையும்
கற்பிதம் அற.

இப்படித்தான் சொற்கள் தமக்குள் அடர்த்தியாக்கி வைத்திருந்த உணர்வுகளை சொல்லும் பொருட்டும், ஒரு சொல்லோடு பிறிதொரு சொல்லை இணைத்து வேறு அர்த்தங்களுக்கு அவ்வுணர்வுகளை இழுத்துச்செல்வது என்றும் நவீனக்கவிதையில் இத்தகைய சொல் முறையை அறிமுகப்படுத்தியதுடன் அம்முறையைத் தன் வசப்படுத்தவும் செய்தார்.

சென்றது கடலுள்
வந்தது திரும்ப
நிலமெலாம் உப்புக்காடு
மணலெலாம் மணிநெற்கூட்டம்
கோள்திரிய வாய்திறந்து
நதிசேரும் புனல் பெரிது
கரையேறும் பவளப்பூச்சி
கடற்கன்னி தானியம் தின்னும்
வயல்விரவும் நாற்றாக
துயில்மடிந்த சுருளோசை
படகமிழ்ந்த நீர்த்தடத்தில்
பைகளாகும் மனிதருக்குள்
விலைபேசும் சிறுமீன்கள்

இத்தகைய சொற்சுவையும் கட்டமைப்பும் கொண்ட கவிதை மொழியிலிருந்து பின்னாளில் தன்னைத் தளர்த்திக்கொண்டார். இது இவரது மொழி வெளிப்பாடானது, இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான, ‘இக்கடல் இச்சுவை’யில்.

ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும்
ஆகாயவிமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன
ஒவ்வொரு சிறுமியின் காதுகளும்
புகழுரைகளின் காதணிகளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன
ஒவ்வொரு ஆண்மகனும் கலவியின் இன்பத்தில்
உயரப்பறத்தலை மனதில் கொள்கிறான்.
ஒவ்வொரு பெண்மணியும் அப்போது தன்
யோனியும் காதாகி வளரப் பிரார்த்திக்கிறாள்.
                     சிறுவன் ஆண்மகனாக சிறுமி பெண்மணியாக மட்டுமே வளர்வதாக
                     தப்பபிப்ராயம் கொண்டவர் அனேகம்.
சிறுமி ஆணாக வளரும் போது
விமானம் கட்டப்பெறாத
வலிய தன் துளைகண்டு எரிச்சலடைகிறான்.
சிறுவன் பெண்ணாக வளரும்போது
புகழுரையின் ஓடுதளத்தைக் கண்ட அவசரத்தில்
தன் விமானத்தை இறக்குகிறாள்.
                     சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
                     வளர்வதுமுண்டு.
                     அதி
                     காலையாகவும்
                     அந்தி
                     மாலையாகவும்
                     தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
                     வேறு ரம்மியங்கள் சேர
                     ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
காதுகளை உடலோடு இணைத்தும்
விமானங்களை உயரத்திலிருந்து பிரித்தும்
காணத்தெரிந்தவர்களும் கூட.

இக்கவிதை பெண்- ஆண் உடலை குறியீடுகளாக்கி, பாலியல் அரசியலை மிகவும் நுட்பமாகப் பேசும் கவிதை. இக்கவிதை பேசும் பாலியல் சமன்பாடுகள் நவீன பெண் –ஆண் உளவியலையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டக்கூடியன. பெண்- ஆண் என்று எந்தப் பக்கமும் சாயாமல் இரு வகையான உடலும் பாலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பதை அதன் பொருள் முனை முறியாது எடுத்து வைத்திருக்கிறார். அதே சமயம், எவ்விடத்தில் சிறுமி, சிறுவனாகிறான் என்றும் எங்கு சிறுவன் சிறுமியாகிறாள் என்றும் பிறிதொரு சமன்பாட்டை விளக்குகிறார். உடலின் பெண்மை, ஆண்மை இரண்டையுமே இழக்கச் செய்தலோ அல்லது இரண்டையுமே வலிமைப்படுத்தலோ சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. நவீனச் சமூகத்தின் பெண், ஆண் ஆதங்கங்கள் விமானமாயும் காதணியாகவும் மாறுவது அழகர்த்தம் தருகின்றது. எந்தச் சமூக அமைப்பிலும் ஆணின் குறிகள் உயரப்பறக்கும் இழுவிசையுடனும், பெண்ணின் குறிகள் தன் புகழுரை பேசும் அணிகளை அணிந்து கொள்ளும் ஆர்வங்களுடனும் தாம் மதர்த்து எழுகின்றன.

ஆனால், ’அழுகுணி’ கவிதை பந்தயத்தில் தான் எந்தப்பக்கம் நின்று ஆடினாலும் வெற்றி பெறும் ஆணின் விளையாட்டைச் சொல்கிறது. இத்தந்திர விளையாட்டைப் புரிந்து கொள்ளுதல் பாலியல் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

அழுகுணி

பகடையாட்டத்தில் தோற்கும் நிலை
தெரிந்தவுடனேயே
பதறி ஆட்டத்தைக் காலால்
கலைத்துவிடும் சிவன்
சாபமிட்டு விடுவான் உடனுக்குடன்
உமையொர் பாகத்துக்கு
அவ்விடம் நீங்கி
இவ்விடம் சேர.
ஈசன் அருள் பெற்ற
அசுரரைக் கொல்லும் முனைப்பில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தபசு
அவளது
ஆயுத நீட்சிகளையும்
குருதி குடிக்கக் கன்னிப்பெண்களையும்
அடிமைத்தலை தாங்கிகளையும்
இச்செகக்
கோயில்களின் கலாகுழுமங்களாகப்
பிறப்பிக்க
அங்கே விளையாட்டுத்துணை அகன்ற துக்கத்தில்
எதிராளி மறைந்த களிப்பில்
தானே ஆடிக்கொள்வான் பித்தன்
இப்பக்கத்திலிருந்தும்
அப்பக்கத்திலிருந்தும்
தெறித்த எண் இணைவுகள்
புழங்க வரம் பெற்று சொற்றொடர்களாக
அவதரிக்க
இறை தாயகத்தின் முதல் ஒழுங்காக
உலகம் நிறைக்க
தாயுமாகிய
விளையாட்டின்
தந்தையாட்டம் ஜெயிக்கும்
எப்பக்கம் நின்று ஆடினாலும்

இம்மாதிரியான தந்தையாட்டங்களை அழுகுணி ஆட்டம் என்கிறார் கவிஞர்.

ஊரிழுக்கும்

ஒவ்வொரு முக்கிலும்
பலிகளைக்
கேட்டும் கொண்டும்
நகர்கிறது குடும்பத்தேர்
மயானத்தை நோக்கி


உட்பொருள், சொல்லாட்சி, நடை நயம், உணர்வெழுச்சி, தொடர்ந்த சலனம் மேற்கண்டவற்றைக் கையாளும் கவிஞரின் ஆளுமை இவை எல்லாவற்றின் வழியாகவும் தான் கவிதை உருப்பெறுகிறது. இதில் ஒன்று தளர்ந்தாலும் கவிதை தன் இலக்கை அடையாமலோ அல்லது கவிஞரின் நேர்மையின்மையைப் பறைசாற்றுவதாகவோ ஆகிவிடுகிறது. இத்தகைய தருணத்தில் உடல்வெளிக்கவிதைகள் எனப்படுபவை உடல் எதன் கயிறெல்லாம் கொண்டு கட்டப்படுகிறதோ அந்தக் கயிறுகளை எல்லாம் அறுத்தெறியும் மொழியுடன் உருவாகி நிற்கின்றன. குடும்பம், பால்நிலைப்பாகுபாடுகள், அர்த்தம் பொதியப்பட்ட முனை மழுங்கிய சொற்கள் இவற்றையெல்லாம் உடைத்தெறியும் வீர்யத்துடன் எழுகின்றன. பெருந்தேவி, இந்நுட்பங்கள் எல்லாவற்றையும் அறிந்தவராயும் சொற்களை நவீனப்படுத்தும் தன் முயற்சியைத் தொடர்பவராயும் இருக்கிறார். ‘ஒவ்வொரு கண்ணும் ஆகப்பெரும் வனம்’, ‘இரவின் ஒவ்வொரு நாளும் தூக்கத்தின் விழுதுகளைப் பற்றி விரைந்து கனவுகளுக்குள் விழுகிறேன்’, ‘என் உதடுகளின் பாகு சொற்களை இனித்துக் கெட்டிக்கிறது’ எனும் சொல் தொடர்கள் இன்னும் அதிகமாய் தித்திக்கின்றன.

’உலோக ருசி’ என்ற தன் மூன்றாம் தொகுப்பில் நவீன வாழ்வில் நவீனமடைந்திருக்கும் மனித உறவுகளின் புதிர்களையும் அறியாமைகளையும் விலங்குகளையும் விடுவிக்கும் கவிதைகளுடனும் அவ்வாழ்வின் முட்டுச்சந்துகளுடனும் திருப்பங்களுடனும் கூட வருகிறார். இணைய வெளி தந்த புலனுணரா காமங்களை மொழிப்படுத்துவதில் தீவிரப்பட்டவராயும் அப்பாலினத் தன்மையை அதன் நேர்மையான அரசியலுடன் முன்வைப்பவராயும் இருக்கிறார். ’மதிப்பு’ எனும் கவிதையில், ’ஆண்கள் / பெண்கள் / இருபாலர் / உடல்களுக்கு / உடல்களின், நீண்ட உறவுக்கு / கொழுத்த வங்கிக்கணக்கு போதும். / சின்ன முத்தங்களே / தரமுடியாத உறுதிமொழிகளைக் / கேட்கின்றன விலையாக. ’ கவிஞர் குறிப்பிட்டிருக்கும் உடல் சார்ந்த ஒப்பந்தங்களும் பேரங்களும் இன்றைய பாலின உறவுமுறையின் நேரடியான அணுகுமுறைகளாகி விட்டன.

என்றாலும் எனக்கு பெருந்தேவியிடம் பிடித்தமானது, அவரது கவிதைகளில் தொனிக்கும் பல்வேறு பட்ட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நின்று பேசும் பெண்குரலாய் மாறி நிற்கும் கவிதைகள் தாம். தன் உடல் வெளியை விரிக்கும் குரலாயும் உடலுக்கும் அதன் மொழிக்கும் பொதுத்தன்மையையும் அடையாளத்தையும் கட்டமைப்பில் அவர் தீவிரப்பட்டிருப்பது இங்கே தான். ஒரு பெண்ணியவாதிக்கு வயப்படும் தீவிரமான போராட்டத்தை இவர் மொழிவழியாகவும் அதில் கையாளும் நவீனப் படிமங்கள், உருவகங்கள், ஆளுமைச் சித்திரங்கள் வழியாகவும் தொடர்ந்து வழங்குகிறார். இது பெண்ணல்லாதோருக்கும் பெண்விடுதலைக்கான விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியை ஆற்றும் என்பதில் சந்தேகமில்லை.

புஷ்பா சேலையணிந்த முதல் நாள்

புஷ்பாவின் அண்ணன்
குளியலறைக்குப் போய்
நேரங்கழித்து வந்தான்
புஷ்பாவின் அக்கா
அத்தானை
அன்று அழைத்து வந்தது தான்
புஷ்பாவின் அப்பா
அவள் மேல் கண்ணடிபடுமென்றார்
புஷ்பாவின் காதலன்
அவன் எங்கே சேலையைப் பார்த்தான்?
புஷ்பாவின் சிநேகிதி
அவள் மட்டும் தொட்டுப் பார்த்தாள்.

புஷ்பா
புஷ்பாவின் அம்மாவாக இருந்தபோது
சேலையணிந்த முதல் நாள்
இப்படித்தான்
சிடுசிடுத்தாள்
தடுக்கி விழாமலே
தடுக்கி விழுந்ததாக நினைத்துக் கொண்டாள்
கற்பனையில்கூட அன்று
அவள் சேலை விலகவேயில்லை.

இக்கவிதை, மறுவாசிப்பில் பால் நிலை உட்பொருளை மிகத்துல்லியமாகவும் கத்தியைப் போன்றும் எடுத்துவைக்கிறது. குடும்பச்சுவருக்குள், கழிவறை, குளியலறை, படுக்கையறையின் சுவர்களுக்குள் தனிமனிதன் கொண்டிருக்கும் பாலியல் உள்நோக்கங்கள், வெளியுலகில் அவற்றை நேர்மையின்மையாய் ஆக்கி வன்மங்கொண்டு எழும் தன் சுயத்தை பிறர் மீது ஏவும் வல்லமையான பாலிமை கொண்ட மனிதர்கள் தாமே நாம்!

பாலியல் அரசியலைப் பேசுவதைக் காலமொட்டியும் வரலாறு ஒட்டியும் தன் இயக்கமாக்கிக் கொண்ட நவீனத்தமிழ்க் கவிதை, இன்று பேசவந்திருப்பதோ பண்பாட்டால் பிளவுண்டிருக்கும் பெண்ணுடல்களை அறிந்த காத்திரமும் அதற்கான உழைப்பும் கொண்டு அந்தப் பல உடல்களையும் முன் வைக்கும் இயக்கத்தை நோக்கி எல்லா பெண்களையும் குரலெடுத்து அழைக்கிறது. இது மிகவும் கடினமான முயற்சி என்றாலும் சீதை, ஆண்டாள் போன்ற தன் உடலை பக்தி என்ற பெயரில் ’கார்க் அடைப்பானா’ல் அடைத்துகொண்ட பெண்களை முக்கியமான படிங்மகளாக்குவது தொடரியக்கத்தைச் சாத்தியப்படுத்தாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்பெண்களின் உடல்கள் ஆதிக்கத்துடன் இயங்கிய உடல்கள் என்பதால் தாம் கடவுளின் உடலை ஆண் உடலாக வரிந்து கொண்டவை, அதற்கு தம் உடலை வழங்கத்துணிந்தவை என்பது மறை பொருள்.

இம்மாதிரியான சிக்கலான ஒற்றைத்தன்மையான பெண் படிமங்களைப் புறக்கணித்தல் அல்லது பிற பண்பாடுகள் சார்ந்து சீரமைத்தல் எல்லா பெண்களும் ஓர் அணியாக உணர்வுகொள்ள உதவக்கூடும்.

பெருந்தேவியின் ‘என் புனல்’ கவிதை பேராற்றின் சுழிப்பும் பாய்ச்சலும் நிறைந்த கவிதை. நவீனபெண்ணுடலை மொழிப்படுத்தும் அழகியலும் சொல்லாட்சியும் கொண்ட இக்கவிதை, பெண்ணுடலுக்கான இலக்கைத் தீர்மானித்த அதே சமயம், அதைக்கைக்கொள்ளும் நம்பிக்கைகளுடனும் பாய்கிறது. மறுவாசிப்பில் தீவிர அர்த்தம் பெறும் உட்பொருள் கொண்ட கவிதை. வாசித்துப்பாருங்கள்!

என் புனல்

என் புனல் வலிது
கொப்பும் நுரையும் நிறைந்தது
பழைய வெள்ளத்தின் பயணம் தெரிந்தது
அபாயத்தின் நுட்பம் கூடியது
ஓடோட ஓட
நளினத்தின் அருங்கரைகள் நைகின்றன
ஒழுக்கத்தின் திண்தோள்கள் குலைகின்றன
இன்னும் இன்னும்
என்கிறதென் நீர்கள்
சரியின் புதைகுழிகள் அடித்துச்செல்லப்படுகின்றன
சரியற்றதன் மலர்கள் முக்குளிக்கின்றன
பேராண்மையின் சில கூரைகள் தடுமாறுதல் கண்டு
ஒரு சுழிப்பில் பெண்புனல் சிரிக்கிறது
அஞ்சும் பாவனையில் அலையுயரம் குறைகிறது
நீர்க்கால்களைப் பரப்பி எழும்புகிறது பின்
வானை முட்டுகிறது நுரைகளின் கெக்கலி
நாணுறத் தெரிந்த ஆணை
நாண மறுக்கிற பெண்ணை
இதமாய் அணைத்தல் அதன்
குளுமை அறிந்த ஒரு விதி.
ஆணைப் புரட்டிப் பெண்ணோடு இணைத்தல்
போகும்போக்கில் அதன் ஒரு இலக்கு.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: பெருந்தேவி ‘தீயுறைத்தூக்கம்’, ‘இக்கடல் இச்சுவை’, ‘உலோக ருசி’ ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகளை எழுதியிருக்கிறார். பண்பாட்டு மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் க்ளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியாகப் பணியாற்றுகிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </