வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 13

அனார் – குறிஞ்சியின் தலைவி

குட்டி ரேவதி  

பெண்ணின் குருதியைச் சடங்கார்த்தங்களுடன் பார்க்கும் நிலத்திலிருந்து பெண்ணின் ஓடும் குருதியைத் தன் ஆண்மையின் வெற்றியாய்ப்பார்க்கும் நிலத்தின் மொழியைப் பற்றி எழுதுதலும் பேசுதலும் எவ்வளவுக்குச் சாத்தியம் என்னும் சந்தேகத்துடன் தான் அனாரின் கவிதைகளைப் பற்றி எழுதத்தொடங்குகிறேன். தன் மொழியை, மாதாமாதம் ஓடும் குருதியாக்கிப் பார்க்கவில்லையெனில், பெண் தன் உடலையே காய்கறிகளையும் மாமிசத்தையும் வெட்டிக்கிழிப்பது போல் தான் கிழித்துக்கொள்ள நேரும். உடலின் வேட்கை அவ்வளவு! தன்னுள் கிளரும் மனோவேகத்தையும் ஹார்மோன்களின் இனிய வாசனை நிரம்பிய பூக்களையும் நிரப்பிய குருதி வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். மீண்டும் உடலை நிரப்பிக்கொள்ள இருக்கவே இருக்கிறது, மொழியின் பாடல்களோ குருதியின் உஷ்ணமோ! மொழியும் வேட்கையும் ஒன்று சேர முடியாத வாய்ப்புகளை எல்லாம், குருதி பாயும் நிலமாய் விரித்துக் கொண்டனர் கவிப்பெண்கள். ஆனால், அவள் அனுமதியின்றியே அவள் உடலிலிருந்து குருதியை சேற்றில் புரளும் ஆடையாக்கியவர்களுக்கு எப்படி மொழியைத் தருவது? சொற்களை அடுக்கி, எப்படி அதன் வெப்பத்தை உமிழ்வது? எப்படித் தன் உடலைக் காத்துக் கொள்வது? மூப்பும் பிணியுமான இயற்கையின் வாதைகளையும் மீறி தன் உடல் அனுபவிக்க நேர்ந்த வதைகளை மொழியின் வழியாகக் காத்துக்கொள்ளத் துணிந்ததன் பீறிடல் தான் இதுவென்று கொள்ளலாமா?

மேலும் சில இரத்தக்குறிப்புகள்

மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாகக் காண்பது போன்று
‘இரத்தம்’ கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக்கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத்தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறை படிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும், எப்பொழுதும் பெண்ணுக்கு இரத்தம் என்பது முதல் முறையாகக் காண நேர்ந்தது போல் தான் என்பது மானுடத்திற்கான பரிவு நிறைந்த இயல்பே. பலவகையான இரத்தக் குறிப்புகளை முன்வைத்து அவர் சாவின் தடயங்களைச் சென்று தொடுகிறார்.

வேட்கை என்பது தன்னுடல் பிறிதோர் உடலுடன் புணர்வதற்கான இச்சையை மட்டுமே சொல்வதன்று. பெண் உடலென்றாலே, பிறிதோர் உடலுடன் புணர்ந்தும், பிணைந்தும் இருக்கவேண்டுமென்ற அடிப்படையான நியதியையும் குலைப்பது. இதை, உடலை முற்றும் முழுதுமாய் ஒரு தனிப்பிரதியாக்கிக் களிப்பது என்று கொள்ளலாமா? ஆனால், பெண்ணின் வேட்கையும் வேட்கைக்கான முகவுரையும் எப்பொழுதும் பாலியல் சாயமேற்றப்பட்ட கறையுடையதாகப் பார்க்கப்பட்டிருப்பதை புரிந்துகொண்டால், இங்கு அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பிறந்து வந்து நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்.

அனாரின் முதல் கவிதைத் தொகுப்பான, ‘ஓவியம் வரையாத தூரிகை’ சில சம்பிரதாயத் தெறிப்புகளைக் கொண்டே வெளிவந்தது. பெண்கள் தங்கள் மனவெளியில் புறச்சூழலால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலியான பிம்பங்களை மொழிவழிக் கசடாக்கி வெளியேற்றுவது தான் தொடக்கக்கட்டப் பணியாக இருந்திருக்கிறது. இந்தவொரு நிகழ்விலிருந்து, எந்தவொரு படைப்பாளியுமே தப்பித்ததில்லை. இது பொதுவிதி. தன் சுயத்தை வடிவுறச்செய்யும் பணியை, தொடரும் தம் எழுத்தின் இயக்கங்களால் தான் சாத்தியப்படுத்திக்கொண்டனர் என்பதால் தன் உடலிலிருந்து முதல் தொகுப்பின் வழியாகக் கசடை வெளியேற்றுவது என்பதை உலகப்பொது மறை என்றும் கொள்ளலாம். அனார், தன் முதல் தொகுப்பை, ஆண் இனத்தை எதிர்வெளியாக்கி சில முறையிடல்களாலும் அடக்கமான எதிர்ப்புகளாலும் கடந்திருக்கிறார்.

வேர்களில் எடுத்தவலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதில்லை

என்பது போன்ற, சொற்தெறிப்புகள் அவருக்கு அவரே சமாதானம் தரவும் ஊக்கம் கொடுக்கவும் உதவியிருக்கலாம்.

தாமரைக்குளத்துக் காதலி

உன் உள்ளங்கைகள் பொத்தும்
தாமரைப்பூவின் அளவு தான்
என் இதயம்

குளிரில் கொடுகும்
சிறு அணிற்பிள்ளை ஜீவன்

’சூ’ என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும்
சிட்டுக்குருவி நேசகி

உப்புமூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி

கொச்சுக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காகப் பொறுத்திருக்கும்
தனிமை எனது

தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில்
விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும்
தூக்கணாங் குருவி

நான் தான்
தூண்டிலில் மாட்டிய
மான் குட்டி
நான் தான்
நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

இக்கவிதையில், வடிவம் பெறும் தாமரைக்குளத்துக்காதலி, தன் குற்றச்சாட்டுகளை தரையிறங்கி அறிவிக்கும் சிறு பறவைகளாகத்தான் இருக்கிறார். ஆனால் அடுத்த கவிதையில் அந்த வானத்துப்பறவைகளையே பணிக்கிறார் பாருங்கள்!

அரசி

உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடிபணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்
ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச்செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும்மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்
ஒருத்தி சொல்கிறாள்
‘என்னிடமிருந்து தீர்வற்ற புலம்பல் கசப்பு’
இன்னொருத்தி கூறுகின்றாள்
‘குரலில் இறக்க முடியாச் சுமை’
இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த
துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி
நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன்
சுயபலம் பொருந்திய தேவதைகள்
விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை
வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள்
பாட்டம்பாட்டமாய்
பெண்கள் குலவையிடும் ஓசை
பெரும்பேரிகைகளாய் கேட்கின்றன
நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே
கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி

இரண்டாவது கவிதையில் இவர் பயன்படுத்தியிருக்கும் தொனியின் பாய்ச்சல், அமானுஷ்யமான ஆழமும் அகலமும் கொண்ட மடுவைக் கடந்தது. தன் இருப்பை ஆணித்தரமாய் உறுதிசெய்யும் நெடிய தூண் போன்ற பிரமை இக்கவிதையின் பின்னே ஒளிந்திருக்கிறது. அகம், புறம் என்ற இருவகையான கவிதைப் பண்புகளையே சங்கப்பாடல்கள் நமக்குப் புகட்டியிருக்கின்றன. அகம் என்பது பெண் - ஆணின் காதல், இன்னபிற அந்தரங்க உறவுகளையும், புறம் என்பது ஆணின் போர்புறப்பாடுகளையும் வெற்றிகளையும் பறைசாற்றுவது. அகப்பாடல்கள், பெண்ணின் இருப்பு என்பது ஆணைச்சார்ந்ததாகவும், புறப்பாடல்கள், ஆணை மட்டுமே நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆகவே, இவ்விடம், ‘சுயம்’ என்பதை ஒரு வகையாக, அதிலும் பெண்ணை முதன்மையாக, அடுத்து ஆணுக்கும் ஆகுவதாக நாம் கட்டமைக்கலாம், அனாரின் இந்தப் பாடல்கள் வழியாக என்று தோன்றுகிறது.

வேட்கை என்பது, தன் இச்சைகளைச் சொல்வதற்கான அவகாசத்தை மட்டுமே குறிப்பிடுவது அன்று. அது பெரும்பாலும், சமூகத்தின் அசந்தர்ப்பங்களையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு வாய்ப்பாக்கிக் கொள்பவர்களுக்குத் தன் வேட்கையை வெளிப்படுத்துவதும், அதை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தை ஏதோ ஒரு வடிவில் தன் மொழியில், உடலில், பாலிமையாகச் சேமித்துவைத்திருப்பவர்களுக்குமானது. அது அவர்களுக்குச் சிரமமானதொரு செயலாக இருப்பதில்லை. ஆனால், தன் தனித்ததொரு வேட்கையை உலகின் பெண்களுக்கு எல்லாம் பொதுவாக்கி, அதிகாரக்கட்டமைப்புகளைக் குலைக்கும் கடப்பாறைகளாய் மொழியை இறக்கித் தகர்ப்பது என்பது உண்மையிலே ஒரு களப்பணியைப் போன்றே ஈடுபாடும் உழைப்பும் கோரும் செயல். இதற்கு, அதிகார இயங்கியலை நன்கு கற்றுணர்ந்த தெளிவும், மொழியின் அதிகார அமைப்புகளை ஆராயும் தெளிவும் வேண்டியதாயிருக்கிறது. அனாரின், நீரோடை போன்ற மொழியும், சிக்கலற்ற படிம அசைவுகளும், சொற்கள் உதிர்ந்து பொலபொலவென கொட்டாமல் அல்லது அறுந்து தொங்காமல், கவிதையின் அழகோடு சமைவதும், அதே போல ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதைக் கட்டிடத்தின் செங்கற்களை உதிர்த்து புதிய ஒழுங்கைத் தைப்பதும் என இவரது செயலாக்கம் விரிகிறது. இந்த அனுபவத்தை உணர, நான் இங்கே எடுத்துக்காட்டும் சில கவிதைகளோடு முடிந்து விடாமல், அவரது முழுத்தொகுதியையும் வாசிக்கும் அனுபவத்திற்கும் அவகாசத்திற்கும் உங்களை அனுமதிக்கும் போது தான் வாய்க்கும் என்று நம்புகிறேன்.

தணல் நதி

மழைக்கு முன்னதாக
தூது வரும் குளிர்ந்த காற்றலைகளாய்
மெருகுடன் நெகிழ்ந்தன தாபங்கள்
விசித்திரமாய்
விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு
கண்ணீராய் காய்த்துக் கொட்டும்
இமைக்கந்துகளில்
தீயும் இக்கனவின் துயர்கள்
மேகங்களை
ஓட்டிச் செல்கின்ற காற்றிலெல்லாம்
இன்று இதே கசப்பும்
கசகசப்பும்
இந்தப் பேரலைகள்
இரைந்து கொண்டே இருக்குமோ
கடக்கவே முடியாமல்
என் முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு.

எனக்குக் கவிதை முகம்

எல்லா மயக்கங்களுடனும்
மெல்ல
அதிர்கிறது இசை
படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச்சொரியலாய்
வறண்ட சுண்ணாம்புப்
பாதைகளில் மேற்கிளம்பும்
வெண்புழுதியில் மணக்கிறது
அவன் குதிரைக் குளம்பொலி
சாம்ராஜ்யங்களின்
அசைக்கமுடியாதக் கற்றூண்களை
பிடுங்கி ஒரு கையிலும்
போர்களை வெற்றி கொண்ட
வாள் மறு கையிலுமாய்
அதோ வருகிறான் மாவீரன்
இருபுறமும் பசுமரங்கள் மூடியிருக்க
மூடுபனி தழுவி நிற்கும்
சிறுத்து ஒடுங்கிய பாதையில்
என் கனவின் உள் புகுந்து
தாவுகின்றன இரண்டு முயல்கள்
விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியா ஒரு காட்டுப்பூச்சி
அதனாலென்ன
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்

இக்கவிதையில் தான் அனார், ஆணாதிக்க மனநிலையை வெல்லுகிறார். ‘எனக்குத்தெரியும் அவன் வாள் உறைக்குள் கனவை நிரப்புவது எப்படியென்று’ என்ற வரி வாள் உறைகள் மற்றும் கனவுகளின் முரணை நம் நினைவில் தீப்பிழம்பாய் எரியச்செய்கிறது. அதுமட்டுமன்றி, இவ்வரிகள் பெண்ணின் அடுத்தக்கட்ட இருப்பை நியாயப்படுத்துவது. ஆணின் சூழ்ச்சிகளை மெத்த அறிந்தப் பெண்ணின் மனநிலையை விரித்துக்காட்டும் வரிகளும் கூட. பொதுவாகவே இம்மாதிரியான கவிதைகளை எல்லா தற்காலப் பெண் கவிஞர்களின் மையக்கவிதையாகவும் நாம் காண முடிகிறது. ஆணின் உளவியலுக்கு பயிற்றுவிக்கப்படும் சூழ்ச்சிகளை, அறிதலைப் பெண் தன் விடுதலையின் முகாந்திரமாக்கும் கவிதைகள், சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் இணங்கிவிட்ட சமூகத்தின் பிற பெண்களிடமிருந்து தன்னை உயர்த்திக்கொண்ட, வலிமைப்படுத்திக் கொண்ட கவிப்பெண்களின் அடையாளத்தை இவ்வெழுத்தில் பெறமுடிகிறது.

’வித்தைகள் நிகழ்த்தும் கடல்’, ‘குறிஞ்சியின் தலைவி’, மற்றும் ‘எல்லை வேலிகள்’ ஆகிய கவிதைகள் பெண்ணின் வேட்கையை கத்தி போல நெஞ்சில் இறக்குபவை. இதுவரையிலுமான உலகச் செவ்விலக்கியங்களிலும் கூட பதிவாயிருக்கும் கதாபாத்திரங்களின் வேட்கையை, அதற்கான தேவையை, வெளிப்பாடு நிகழ்த்தும் சமூக அசைவைப் பேசுபொருளாக்காமலேயே இலக்கிய நுகர்ச்சி என்பது கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களின் பிரதிகள் தம் பாலியல் வேட்கையை, இச்சையை, தேவையை கவிதை எனும் உரத்த மொழியில் வெளிப்படுத்துவது என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேல், அனார் தன் வேட்கையை வெளிப்படுத்தும் அழகும் அர்த்தமும் சிதறாத மொழி, நேரடியாக வாசகர்களை கவிதையின் வெளிக்குள்ளேயே இழுத்துச்செல்லும். மூன்றாவது தொகுதியான, ‘உடல் பச்சை வானம்’ திணைவெளிகளை ஆளும் பெண்ணின் மனத்தை கவிதையாக்கியிருக்கிறது. குறிஞ்சி, மருதம், கடல் என வேறு வேறு நிலவெளிகளில் தன் குரலை உரக்கக் கூவுகிறது. அடர்த்தியான மொழியும், மேன்மையான கற்பனையும் நம்மை உய்விக்க உதவும். அருகிருக்கும் உடலைப் போற்றவும் உதவும். மூன்று கவிதைகளைத் தந்திருக்கிறேன், அதன் அடுத்தடுத்த தீவிரத்தை வாசகர்கள் பெறுவதற்காக.

வித்தைகள் நிகழ்த்தும் கடல்

மயங்கி மயங்கிப் பொங்கும் கடல்
மெளனமாகவும் உரத்தும் பாய்கின்றது
மிரண்டு தெறித்தோடும் குதிரைகளென
அலைகள் துரத்தி வருகின்றன
உயரப்பறக்கிறது நுரைப்பறவை
சம்மணமிட்டு உயிர் இரையும் பாற்கடலை
உன் கண்களால் திருப்பிவிட எத்தனிக்கிறாய்
மாபெரும் கடலை
கண்கள் சவாலுக்கு இழுக்கின்றன
நினைவு வரைபடங்களின் வழிகளில்
ஏதோ ஓர் புதிர் விரைகின்றது

எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பது போல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப்பொடியாக்கித் தூவினாய்
சேகரித்து வந்த நூறு பிறைகளையும்
கடலுக்குள் வீசி எறிகின்றேன்
எல்லாம் மறைகின்றன
கண்ணில் படாத ஒரு சாகச நிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ ‘பூப் போல’ என்கிறாய்

………………….
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பிஎழுப்பிக் கடல் ஆகினோம்

குறிஞ்சியின் தலைவி

இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் தோன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தகதகத்தது

இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்

பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாழ்ந்து பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக் கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம் கசியும் கறுவாச்செடி
கோப்பி பழங்களும் சிவந்திருந்தன

நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்

சுட்ட கிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி…கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச் சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்…. பெட்டிப்பாம்புகளும்…
காத்துக்கிடக்கின்றன
மாய ஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக் கதிர்களை கடித்துத் தின்கின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு….
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’

அவளது குரல்…. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது

’பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’

காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்

எல்லை வேலிகள்

எங்களுக்கிடையில்
இந்து மகா சமுத்திரம் இருந்தது

வழிநடையில் முகில் குவியல்கள்
எண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…

சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன

மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்

காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன

ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்.

‘எல்லை வேலிகள்’ கவிதையை வாசிக்கும் போது, இந்துமகா சமுத்திரம், முகில் குவியல்கள், குகைகள், ஒளிக்காடு, வானம், சுரங்கப்பாதைகள், காடுகள் எல்லாம் அசைச்சித்திரங்களாகின்றனவா என்று பாருங்கள்!

நிறைவாக, எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக, ‘மண்புழுவின் இரவு’ கவிதையைச் சொல்லுவேன். இந்த உலகின் எந்த ஓர் உயிரிலும் தொக்கி நின்று அதன் குரலாக முழுமையும் நின்று ஒலித்து சவால் விடுக்கும் அனாரின் திறன் என்னை இக்கவிதையில் என்னையும் மண்புழுவாக்கியது!

மண்புழுவின் இரவு

மழை ஈரம் காயாத தார்வீதி
நிரம்பிய மாலை
இருள் அடர்ந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன்
இருளின் இருளுக்குள்ளே
எவ்வளவு பிரகாசம் நீ
கூதல் காற்றுக் கற்றைகளில்
நாசியில் நன்னாரிவேர் மணக்க மணக்க
மிதந்து வருகின்றாய்
தூர அகன்ற வயல்களின் நடுவே
‘றபான்’ இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
மிருகங்களுக்குப் பயமூட்டுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோற் பொம்மைகள்
அளவற்ற பயத்தில் தாமே நடுங்கிக் கொண்டு நிற்கின்றன
அடிபெருத்த விருட்சங்கள்
தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை
இலைகளால் கீறும் காற்றை உராய்ந்து
கரும்புக்காட்டை நடுவகிடெனப் பிரிக்கும்
மணல்பாதையை எனக்கு முன் மஞ்சள்நிறப்பூனை
குறுக்கே பாய்ந்து கடக்கின்றது
நாடியில் அளவான மச்சமிருக்கும்
பெண்ணின் கீழ்உதடு பிறை நிலா
மிக அருகே பேரழகுடன் அந்நட்சத்திரம்
இந்தப்பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி
தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்லை நூல் தெரியும் வரி

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: அனார், கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் பிறந்தவர். இயற்பெயர், இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். ’ஓவியம் வரையாத தூரிகை’ (2004), ‘எனக்குக் கவிதை முகம்’ (2007), ‘உடல் பச்சை வானம் (2009) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.