வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 12

சுகிர்தராணி – பாலியல் போரின் ஒற்றைச் சிறகு

குட்டி ரேவதி  

அதிகமும் காயடிக்கப்பட்ட உடலரசியல் சார்ந்த விவாதங்களை மீண்டும் தொடக்க இடத்திலிருந்தே விவாதிக்கலாம். எல்லோரும் சேர்ந்து இழுத்தப் பின்னரும், அதே இடத்தில் நிற்கப் பணித்தது போல் உறைந்து போய் நிற்கிறது அந்தத் தேர். வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள் தோன்றி, தேர் நகரவே முடியாது என்று உறுதிப்படும் நிலையில் கூட தேரை வலுவோடு இழுத்து ஊரைச் சுற்றிவருவதற்கான இன்னொரு வாய்ப்பும், மொழியும் பெண் கவிஞர்களுக்கு கிடைத்துவிடும். ஏனெனில், பெண்ணின் உடல் மீது செலுத்தப்படும் வன்முறைகள் அத்தனைக்கு எல்லையற்றவை.
‘பெண்ணின் உடல் ஒரு புதிர்; அது விடுவிக்கப்படக் கூடாது’ என்று பெண்களே வழிமறித்து நிற்கும் போதும், தன் ஒவ்வொரு கவிதையிலும், முன்செல்லும் வண்டியில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் இடுப்பை நுகர்ந்து தன் காமத்தைச் சொற்களாகப் படைத்து திருப்தியெய்திய ஆண்களே பெண்களுக்கு அந்த அனுமதியை மறுத்த போதும் இன்னும் அதிகமாக பெண் மொழி வலு பெற்றிருக்கிறது. வழிமறிப்புகள் எப்பொழுதுமே பாலியல் ஒடுக்குமுறையாகப் பெண் உடல் மீது தான் நிகழ்த்தப்படுகின்றன. போர்க்களம் என்பது, இந்த விஷயத்தில் பெண்ணின் விரிந்த உடல். காயங்களும் வலிகளும் இழப்புகளும் உடலுக்குத் தந்த வடுக்களை பெண்கள் மொழியாக்கி வைப்பது மூதாதைத்தாயிடமிருந்து வந்த மரபணுப் பழக்கம் இல்லையா?

அதற்கு உதாரணமாக, பெண் உடல் மீது செலுத்தப்பட்ட வன்முறைகளை இங்கு அட்டவணைப்படுத்தலாம் என்று இருக்கிறேன். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணாய் வாழ்வது எத்தனை கொடிய ஆயுள் தண்டனை என்பது புலனாக, இவ்வுதாரணங்கள் உதவக்கூடும். அந்தத்தண்டனை, பெண் என்ற பெயரால் எந்த ஒரு பெண்ணுக்கும் நிகழலாம். தான் அந்தத் தண்டனையை அனுபவிக்க மறுத்து, தற்கொலை செய்து கொண்டால், இன்னொரு பெண் வழியாகவேனும் அத்தண்டனை தொடரும்.

பெண் சிசுக் கொலையில் தொடங்குகிறது, இந்த வன்முறை. நம்மூரில், கள்ளிப்பால் கொடுத்தோ, நெல்முளையை விழுங்கச் செய்தோ அல்லது ஈரத்துணியால் மூச்சடக்கியோ கொல்வதுண்டு. இன்னும் இக்கொடிய முறை சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறது. சீனப்புரட்சிக்கு முன்பாக, பிரசவத்தின் தயாரிப்புகளில் ஒன்றாக சாம்பல் நிரப்பிய பெட்டி ஒன்றையும் அருகில் வைத்திருப்பார்கள். பிறந்தது பெண் குழந்தையென்றால், அச்சாம்பலில் முகத்தை அழுத்திக் கொன்றுவிடுவர். இத்தகைய வன்முறை, பெரும்பாலும் பெண்ணுக்குத் திருமணம் என்பதே எல்லை, அதற்குப் பொருட்செலவு அதிகமாகும் போன்ற பாமரத்தனமான காரணங்களால் தாம் நிகழ்ந்திருக்கின்றன. இலட்சம் இலட்சமாய்ப் பெண் குழந்தைகள், வலியை உச்சரிப்பதற்கான அழுகுரலுக்குக் கூட வாய்ப்பின்றி மூச்சடைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அடுத்தக் கட்டமாக, வளர்ந்த பெண்களின் முக்கியமான பணி, ஆண்களுக்கு பாலிமை இன்பத்தை வழங்கி அவர்களைக் களிப்பூட்டுவதே. இதை நிறவேற்றாத அரசக்குலப்பெண்கள் கூட நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு விநோதமான முறைகள் கூடப் பின்பற்றப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் நான்காவது இவான் என்ற மன்னன், தனக்குத் தேவைப்படாத மனைவியை, கனமான கோணிப்பையில் போட்டு மூட்டையாகத் தைத்து பாஸ்பரஸ் ஜலசந்தியில் நீரில் போட்டு மூழ்கடித்துக் கொன்றான்.

இந்து மதத்தில், உடன்கட்டையேறுதல் என்பது தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பெருங்கோப்பெண்டு என்னும் பெண், கணவன் மாண்ட பின் தான் விதவைப் பெண்ணாய்க் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விரதங்களினும், அவனுடைய சிதையில் குதித்து எரிந்து போவதே மேல் என்று தீயில் குதித்து எரிந்தாள். கைம்மை எவ்வளவு கைப்பாய் இருந்திருக்கிறது பாருங்கள். உடன் கட்டையேறும் பெண், சொர்க்கத்தில் பலவித இன்பங்களுடன் வாழும் பாக்கியத்தைப் பெறுகிறாள் என்ற கட்டுக்கதைகளும் நிறுவப் பட்டன. இன்றும், சொர்க்கம் என்னும் உலகம், மதநிறுவனங்கள் தம் அதிகாரத்தை, பெண்கள் மீது நிகழ்த்திக் கொள்வதற்கான எக்கச்சக்கமான வாய்ப்புகளை அது எந்த மதமானாலும், அம்மதகுருக்களுக்கு வழங்குகிறது.

பெண்களின் பிறப்புறுப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவென்றே, இடுப்புப்பகுதி முழுமைக்குமான இரும்பாலான கச்சை ஒன்றைத் தயார் செய்த காலங்களும் உண்டு. இக்கச்சை, கால்களுக்கிடையே இரும்பாலான பட்டை ஒன்றுடன் இணைவதாக இருக்கும். பெண்ணின் சிறுநீர் துளை, பாலுறுப்பு துளை மற்றும் மலவாய் எதையுமே ஆணின் கட்டளையின்றி பயன்படுத்தமுடியாது. ஜெர்மனியில் நிறைய பெண்கள் இக்கச்சைகளுடன் புதைக்கப்பட்டது வரலாற்று ஆவணத்தில் பதிவாகி இருக்கின்றது. தண்டனைகளில் பொதுவானது, கசையடிக் கொடுப்பது. இரத்தம் பீறிடும் வரை கசையடிக் கொடுப்பது!
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண், தான் பெண் என்று அறியும் முன்னரே எல்லா வித சமூக அமைப்பிற்கும் அவளைக் கட்டுப்பட்டவளாக ஆக்குவது என்பது வழக்கமாக இருக்கிறது. சிறு வயது திருமணங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் முன்னரே நடத்தப்பட்டன. அதுமட்டுமன்றி, அத்திருமணங்கள், அந்தப் பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள், பிற ஆண்களால் உபயோகப்படுத்தப்படாதவள் என்பதை உறுதி செய்வதற்குமானதாக இருந்தது. இந்தியச் சமூகத்தில், பெண்ணின் பிறப்புறுப்பும் அதன் செயல்பாடுகளும் வேறெந்தச் சமூகத்தையும் விட தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பெண்கள் தம் பால்நிலை விழைவை எப்படி வெளிப்படுத்துவது? ஆனால், அவ்விழைவைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பே இன்றி அதற்கு வசதியான எல்லா ஊடகங்களிலிருந்தும் புறம் நிறுத்தப்பட்டாள். குறிப்பாக, மொழி என்பதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கூட அவள் பெற்றிருக்க வில்லை. மொழியும் சொல்லும், பெண்களை மெளனமாக இருக்கவிடாது என்பதை உணர்ந்து தான் ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்கு மொழியை, கல்வியை மறுத்தது.

சுகிர்தராணியின் கவிதைகள், மொழியற்ற மெளனத்தால் கட்டிப்போடப்பட்டிருந்த உடலை தனக்குக் கிடைத்த மொழியாலும், அதன் வீச்சாலும் கட்டறுத்து அவிழ்த்துவிடுகிறது. மொழியால் உடலுக்குச் சுகிப்பைத் தரமுடியும் என்பதன் நேரடியான மொழிதல்கள் இவரது கவிதைகள்.

‘பருவ திரவத்தில் தோயாத என்னுடல்’, ‘பருவங்கள் வாய்த்த என்னுடல் காளானைப் போலக் கனிந்து குவிகிறது’, ‘ஒற்றைக்கரை கொண்ட உடல்’, ‘மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்’, ‘வார்களால் இழுக்கப்பட்ட உன் இசைவுகளுக்கேற்ப கட்டப்பட்டிருக்கிறது என்னுடல்’, ‘அவரவர் விரும்பியபடி ஆணிகளால் நிரப்பப்படுகிறது என்னுடல்’, ‘தூர்ந்து போன உடல்’ என பலவகையான உடல்களைக் கண்டடையும் கவிதைகளாக இருக்கின்றன இவருடையவை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்ணின் உடல்கள் தட்டையானதாகவும் ஒற்றைப் பரிமாண அர்த்தத்துடனும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. உழைப்பிற்கான இயந்திரமாயும் நாட்டின் பொருள் உற்பத்திப் பெருக்கத்திற்குப் பயன்படும் ஒன்றாகவே அர்த்தம் பெறுகின்றன. இந்நிலையில், தன்னுடலை முழுதும் தனக்கேயான ஒன்றாக்கி அதன் மற்ற பரிமாணங்களையும் கண்டடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார், சுகிர்தராணி.

கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
அதிவிரைவு வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன
அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என் மீது படிந்து நகர்கின்றன
முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்த படி செல்கிறது
நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்
போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையொளி
இரயிலை நிறுத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடக்கிறது
கடலளவு இரத்தம்

பெரும்பாலான இவரது கவிதைகளில் தனித்து ஒற்றையாய் இருக்கின்றது இவரது உடல். எதிர்வரும் கற்பனை உருவமோ, இரவோ, காற்றோ, நிகழ்வோ உடலுக்குள் தீராத வினைகளைப் புரியும். அதனால் உண்டாகும் உடலெழுச்சிகள் கவிதைகளாகும். ஆனால், இத்தகைய கவிதைகளாய் இவருடையது மட்டுமே இருப்பது தான் இவருடைய சிறப்பு.

அதுமட்டுமன்றி, சுயம் பொங்கும் தனது உடலை மட்டுமே தொடர்ந்து எழுத்தாக்குகின்றன இவரது கவிதைகள். வன்மத்தைச் சொற்களாக்கும் போது, அவை கோபத்தின் சீற்றத்தோடும் பெருமூச்சோடும் முடிந்து போகும் பிறரின் கவிதைகளுக்கிடையில், சுகிர்தராணி தன் கோபத்தைத் தெளிவான அம்பொன்றாக எய்தத் தெரிந்தவர்.

தமிழில் பாலிமை உணர்வுகள் கவிதை ஆகும் போது, உதாசீனப்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமாக நான் எண்ணுவது, அதைப் புரிந்து கொள்ள பழக்கப்படாத உளவியலுடன் ஆண்களும் பெண்களும் திரியும் சமூகமிது என்பதே. உடலை விடுதலைக்குத் திறந்து கொடுத்த நிலையில், தன்னகத்தே சிக்கல் ஏற்படாத கவிஞர்களும் இல்லாமல் இல்லை. அதன் எல்லா பிசிறுகளுடனும் தான் உடல் மொழிக்கவிதை உருவாகிறது. பெண் பால் உணர்ச்சியை அதன் அழகு குறையாது, சங்ககாலப் பாடல்களில் பயிலப்பட்டது போல் முனை முறையாது வழங்குவதில் சுகிர்தராணி வல்லவர். இவரது, ‘உடலெழுத்து’ கவிதை, இம்மாதிரியான முதல் கவிதை. இதற்குப் பின்பு, சில பெண் கவிஞர்கள் இம்மாதிரியாக எழுத முனைந்தனர். என்றாலும் இம்மாதிரியான முதல் கவிதை இதுவே.

தன் பாலிமையின் விடுதலையைக் கண்டடையும் பயணத்தில், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் உடலில் தான் அதற்கான கதவைக் காண்கிறாள். ஒருபாலுணர்ச்சி, அரசியலாகவும் சமூகக் கருத்தாக்கமாகவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கவிதையில் அது அழகு பெறும்போது, உடல் மொழியை இயல்பாகவே, உண்மையாகவே விடுதலை செய்கிறது. இரு ஒரேவிதமான துயரங்களை அனுபவிக்கும், ஒரே மாதிரியான உடல்களின் உரையாடலை இக்கவிதை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்கமுடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக்கோப்பைகள்
பற்றப்பட வாகாய்க் காத்திருந்தன
பணித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத்தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துகள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது

இரவு மிருகம்

பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்
கதவடைத்து விட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போது தான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.

‘இரவு மிருகம்’ என்ற கவிதை வெளியான காலக்கட்டம் இன்றும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ‘பனிக்குடம்’ இதழில் தான் முதலாக வெளியானது என்று நினைக்கிறேன். மிகவும் சர்ச்சைக்கு உள்ளான கவிதையும் கூட. இரவை மிருகமாக்கி எழுதப்பட்ட கவிதை. கொடிய இரவுகள் தொடரும் பெண்ணின் தனிமை முழுதும், காமவயப்பட்டதாயும், அதனடியில் நிரம்பும் சோகமும் உடைய கவிதை.

என்னைப்பொறுத்த வரை, பெண்ணின் விடுதலை என்பது உரக்க உச்சரிக்கப்படும் புரட்சியான எச்சில் தெறிக்கும் வார்த்தைகளில் இல்லை. அது ஒரு வகையில் இல்லாததைப் பேச முயலும் மனித உளவியலின் எழுச்சி மட்டுமே. ஆனால் சோகமும் துயரமும் வலியும் சொற்களாகும் போது அவை அந்த உடலிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கான வழியைத் தேடிக்கொள்கின்றன என்று தான் பொருள். உடலிலிருந்து சிறகடித்து வெளியேறத் துடிக்கும் உணர்ச்சிகள், உடலுக்கு ஆசுவாசத்தைத் தருகின்றன. பேராற்றலைத் தருகின்றன. அம்முயற்சியைத் தொடர்ந்து செய்கையில், உடலை உடனுக்குடன் துயரற்றதாக மாற்றும் கமலைகளாக வார்த்தைகள் மாறி நின்று, துயரை வாரி இறைக்கின்றன. அப்பொழுது, அதன் கடைசி வரியில், அல்லது வார்த்தையில், துயரைக் கடந்த பெருங்களிப்பு ஊற்றெடுக்கிறது.

பறக்கடவுள்

சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன் பெயர் பறவெயில்

உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்

கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநோய்

நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு

சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்தப் பறக் கடவுள்

‘பறக் கடவுள்’ கவிதையும், கீழே வரும் ‘ஓட்டம்’ கவிதையும் சாதிய அரசியலை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள். மலினமானது எதையும் ‘பற…’ என்னும் சொல்லடையுடன் வழங்கும் மனிதனின் சாதிய உளவியலை, ஆதிக்கத்தை, நேரடியான கேள்வியால் கொக்கி போட்டு இழுப்பவை. ‘ஓட்டம்’ கவிதை வரையும் புத்தி விளையாட்டும் அதன் ஓவியமும், ஒடுக்கும் விழைவு கொண்ட எந்த ஓர் ஆதிக்க மனதையும் சவாலுக்கு அழைப்பதுடன், ’நான் இல்லாத போது என் தொடக்க இடத்தில் குவியும் உங்கள் காலடித்தடங்கள்’ என்ற வரியில், எல்லோரின் தந்திரங்களையும் தான் அறிந்திருப்பதை சூசகமாகச் சொல்கிறது.

ஓட்டம்

சிக்கலான விதிமுறைகள்
கொண்டது
என்னுடைய ஓட்டம்

தோற்பவர் எவருமின்றி
வென்றுவிட வேண்டும்
வெல்பவர் எவருமின்றி
தோற்க வேண்டும்

பயணத் தூரத்தை
மனம் தீர்மானித்துக் கொள்ளலாம்
தொடக்க இடத்தில்
கால்கள் குறியிட்டுக் கொள்ளலாம்

பயணிக்க வேண்டிய
பாதையை
நதியோரமோ
வெளிச்சத்தின் சாயல்படாத
வனத்தின் வழியோ
சாம்பல் படிந்த
எரிமலைப் படிவுகளைக் கடந்தோ
ஆதித்தோட்டத்தின் அந்தரங்க வழியோ
கண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடக்க முடியவில்லையெனில்
இடையில் இளைப்பாறிக் கொள்ளலாம்.
காலத்தின் கைகளில்
நிறுத்து கடிகாரம் இல்லை

திரும்பிவரும் தூரம் கூட
முன்னோக்கிய பயணத்தில்
சேர்த்துக்கொள்ளப்படும்

ஓட்டத்தை முடித்துவைக்க
கையசைவுகளோ
கொடியசைப்புகளோ
ஏதுமிருக்காது

பின்
எவை என்னைத்
தீர்மானிக்கும்?
நான் இல்லாதபோது
என் தொடக்க இடத்தில்
குவியும் உங்கள் காலடித் தடங்கள்

யோனிகளின் வீரியம்

பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன் குறி மறைந்து போகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

‘யோனிகளின் வீரியம்’ என்ற இக்கவிதை, அது சொல்ல வந்திருக்கும் கருப்பொருளால், இத்தலைமுறையின் மிக முக்கியமான கவிதை ஆகிறது. தொடர் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்ணுடலின் இயல்பான உடற்கூறுகள், நூற்றாண்டுகளாக மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. உருமாற்றமும், வளர்சிதை மாற்றமும் பெற்றிருக்கின்றன. ‘குடல் வால்’ எனும் உறுப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் பயனற்றுப் போன உறுப்பாக இருக்கிறது. அந்த வரிசையில் ஆணின் குறியும் தேய்ந்து நலிந்து போகும் என்று குறிப்பிடுகிறார். பரிணாம வளர்ச்சியில் அப்படியான ஒரு நிலை என்றால் மானுடத்தின் தோல்வி தான் அது. என்றாலும், வீர்யமுற்றிருக்கும் எம் யோனி எனும் சொற்பதத்தை முத்திரையாக்கி, சொல்லவந்த பொருளை தொடர்நிலையில் வைக்கிறார்.

சுகிர்தராணிக்குப் பின்பாக உருவான பெண் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும், அவர் பேசிய பொருளையே மீண்டும் வேறொரு தொனியில் பேசிப்பார்ப்பதாய் இருக்கின்றனவே அன்றி, அவர் கவிதைகளில் கையாண்ட சுயத்துவத்தைச் சிறிதும் உள்நுகர்ந்ததாய் இல்லை. குறிப்பாக, நான் மேலே சுட்டிக் காட்டிய, ஒரு பாலுணர்ச்சி, சுயப்புணர்ச்சி, தன் உடலின் சுயம் மேலோங்கிய ஆண் புணர்ச்சி என்று பால் உறவின் எல்லா வெளிகளையுமே தமிழ்ச் சூழலில் வேறெவருக்கும் முன்பாகவே பேசத் துணிந்தவர். அல்லது எப்பொழுதோ பேசத் தொடங்கியவர். பாலியல் போருக்கான தன் சிறகுகளைத் தானே அசைத்து எழுந்தவர். மேலும், அது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்குரலென அடையாளம் பெறுகையில், அது தன் மீது அழுந்தியிருக்கும் எல்லோருடைய குரலையும் துச்சமாகத் தூக்கியெறியும் சக்தியுடன் பீறிட்டிருக்கிறது.

’கைப்பிடித்து என் கனவு கேள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு சாதாரண மிகுபுனைவுக் குரலாகவே பதிவாயிருந்தது. என்றாலும், வளமான மொழியும் கருப்பொருளும் கொண்ட இவரது இரண்டாம் தொகுப்பு முதலான கவிதைகள், தொடர்ந்த ஒரே மாதிரியான தொனியால் தன் படிமங்களை முன் வைக்கும் போது தொடர் வாசிப்பில் எங்கோ அயர்ச்சியூட்டுகின்றன. எங்கேயோ வாசித்த உணர்வை அவை தருவதையும் தவிர்க்கமுடியவில்லை. விடுதலையின் வேட்கையை வெவ்வேறு தொனியும் மொழியும் கொண்டு வரிகளாக்குகையில், அடுத்தடுத்த அடிகள் இன்னும் அதிகமாய் வேகம் பெற்று முழங்கும். அதற்கான அத்துணை பலமும் கொண்டவர் சுகிர்தராணி என்பதை, அவரது தொடர் கவிதை இயக்கம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: ‘கைப்பற்றி என் கனவு கேள்’(2002), ‘இரவு மிருகம்’ (2004), ‘அவளை மொழிபெயர்த்தல்’ (2006), ’தீண்டப்படாத முத்தம்’ (2010) ஆகிய நான்கு கவிதை தொகுப்புகளைப் படைத்துள்ள இவர் தலித் பெண் கவிதையின் முன்னோடிக் கவிஞர். வேலூர் மாவட்டம் அம்மூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)