வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள TS பண்பாடு கவிதைகள் வாயில்

பண்பாடு


விநாயகதாசன், தஞ்சாவூர்  


பண்படுதலுக்கான நெறிமுறைகள்
நாகரீக வளர்ச்சியின் அடிப்படைகள்
வாழ்வியலின் விதிமுறைகள்
தேசத்தின் கடமைகள்
அனைத்திற்கும் ஓர் பெயர்தான் பண்பாடு

காதல், திருமணம்
இல்லறம், குடும்பம்
கல்வி, தொழில்
கலை, இலக்கியம்
இன்னும் எல்லாம்
பண்பாட்டின் அங்கங்கள்

வீதியில் பார்த்தால் அரிவாள் வெட்டு
வீடு தேடி வந்தால் வெட்ட ஒரு விருந்து இது
பகைவனுக்குமான நம் பண்பாடு

பாரதியே ஆனாலும்
தாலியின்றி மனைவியில்லை
இல்லறத்தின் பண்பாடு

சுவற்றில் அல்லாது
சுவர்களுக்குள் வரைதல்
காதலின் பண்பாடு

உழுமண் உழுது
உழுவேர் கட்டி
வியர்வையிலே நே பாய்ச்சி
ஊர் உண்ண உழைத்து வாழ்தல்
இயற்கையினை வாழ்த்தி வாழ்தல்
உழவர்தம் பண்பாடு

கொற்றவனே ஆனாலும்
சட்டம் பொது என்பதுதான்
நீதியின் பண்பாடு

தன்னலத்தை போற்றி நின்றால்
தனித்தெய்வம் நன்று
மனதில் எண்ணி வணங்கி நின்றால்
இறைவன் அவன் ஒன்று
இறையாண்மையின் பண்பாடு

நோயுற்ற மிருகம்
கொல்வதில்லை வேட்டையின் பண்பாடு
மக்கள் நலன்
காப்பதிங்கே கோட்டையின் பண்பாடு

கற்கும் கல்வி
தெளிந்தறிதல் மாணவர் பண்பாடு
தெளியும் படி
தெரிவித்தல் ஆசிரியர் பண்பாடு

நிகழ்காலம் பத்வித்தல்
வரும்காலம் புதுப்பித்தல்
நற்கலையின் பண்பாடு

தன்னொழுக்கம் தன்மானம்
தன் கடமை தன் பெருமை
சிதையாத வாழ்வே
சிறப்பான் வாழ்க்கை என‌
பிறர் போற்ற வாழ்தல்
மானுடப்பண்பாடு

இடும் தொட்டிலில் தொடங்கி
இடுகாட்டில் இடும் வரை
வரும் இசைப்பண்பாடு

உடலசையா நேரத்திலே
இசையொத்த விரலசைவும்
நடனம்தான் இது
வரலாறு வளர்த்த‌
வரலாற்றை வளர்த்த‌
உன்னத பண்பாடு

ஞானம் தேடி
கண்களில் பசித்திருத்தல்
கிடைத்தால் மட்டும்
வயிற்றுக்கு புசித்திருத்தல்
உண்மை ஊருக்கு உரைத்திருத்தல்
துறவியின் பண்பாடு

ஆனால்

அலங்கார மண்டபத்தின்
ஆடமபர அறைகளில்
சிறுதுளி போலே சிதறும்
ஒளி ஊடே தொலைகிறது பண்பாடு

அங்கே
இறைத்து கொட்டும்போது
மொத்தமாய் விழும் நீர் போலே
பொத்தென விழும் இசை இறைச்சலில்
இறந்துபோன பண்பாட்டிற்கு
இரவு முழுவதும் வழ்ங்கப்படுகிறது
இறைச்சல் அஞ்சலி

தீவிரவாத தாக்குதல்களில்
சிதிலமைடகிறது பண்பாடு

உடலில் இருந்தும்
தெரியாத உடைகளால்
துகிலுரிக்கப்படுகிறது பண்பாடு

கட்டப்படாத வேட்டிகளில்
கட்டத்தெரியா சேலைகளில்
கட்டுண்டு கிடக்கிறது
பண்டைய பண்பாடு

முதியோர் இல்லத்தின்
மூலை விசும்பல்களால்
குழந்தை காப்பகத்தின்
அழும் குரல்களால்
வசைபாடப்படுகிறது
வனப்பிழந்த பண்பாடு

மம்மி டாடிக்களில்
தொலைந்து போன‌
அப்பா அம்மாக்களை
தேடி அலையும்
கன்வென்ட் குழ்ந்தைகளிடம்
கலங்கி நிற்கிறது பண்பாடு

எனினும்..

விண்வெளி தாண்டிய‌
விஞ்ஞான விடியலில்
கடலின் ஆழம் ஆர்க்கும்
ஆழ்ந்த அறிவியலில்...

மதம் கரைத்து
மனம் குழைத்து
உயிர் வளர்க்கும் காதலில...

இருநாட்டு வெண்கொடியின்
இதமான மோதலில்...

தீண்டப்படாத தீண்டாமையில்...

நோய் குறைக்கும் விழிப்புணர்வில்
நோய் தீர்க்கும் மருத்துவத்தில்....

கைம்பெண் மறுமண்த்தில்
முதிர்கன்னி விடுதலையில்
வரதட்சணை கைதுகளில்...

சிறுநூல் தறித்து உருவான‌
பெண்ணடிமை நோஞ்சான்
கூடுகளை உடைத்து வீழ்த்துவதில்....

எல்லோர்க்கும் கல்வி
எனும் நிலையில்....

தழைக்கிறது சமூகம்
உயிர் பிழைக்கிறது பண்பாடு!!!

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இஷ்மாயிலின் மூக்குக்கண்ணாடி

தூங்கும் உன் கைகள்
இல்லாமலே
களைகிறதென் நடுநிசி உறக்கம்

இனி அதிகாலைத் தேனீர்
என்னை ம‌ட்டும்தான் எழுப்பும்

எழுந்த பின்னும்
தொட‌ர்ந்து உற‌ங்க‌
அறையில் இனி ஆள் இல்லை

அனாதை என
யாரும் எனை சுட்டியதில்லை
உன் மரணம் தவிர!!!

அறையில் என்னுடன் பேச‌
அழைபேசி தவிர‌
யாருமில்லை இஷ்மாயில்...

நகம் கடித்தல் பிடிக்காதெனக்கு
இப்போதெல்லாம்
கடித்துவிழும் என் கட்டைவிரல் நகம்
நகைக்கிறது அழகாய் உன்னைப்போலவே!

கலைப்படுத்தியும் அழகு சேர்ப்பதாயில்லை
கலைத்துப்போடும் நீ இன்றி
அறையில் பொருட்கள்

உள்ளிருக்கும் உன்னால்
தெளிக்கப்படாத நீரால்
பாலையாகி விட்ட‌து
குளிய‌ல‌றை வாச‌லில் த‌ரை

நீ இற‌ந்து போனாயா
என‌க்குள் நீயாய் புதைந்து போனாயா
குழ‌ம்புகிறேன் இஷ்மாயில்...

என்றுமே ம‌ற‌க்க‌ மாட்டாய்
ஆனால்‍‍‍‍‍‍ அன்று ம‌ட்டும்
நீ ம‌ற‌ந்த‌ உன் மூக்குக்க‌ண்ணாடி ‍
என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ உன் நினைவுக‌ள்
இர‌ண்டினோடும்
இன்னமும் வாழ்கிறேன் நான்!

 

 

 


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</