வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கட்டுரைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
கட்டுரைகள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கட்டுரைகள் கட்டுரைகள் வாயில்


சாருவின் நூல் வெளியீட்டு விழா

சா.ரு. மணிவில்லன்  

சாருநிவேதிதாவின் ஏழு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 13/12/2010 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது, சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் எஸ், ராமகிருஷ்ணன், நல்லி குப்புசாமி செட்டியார். கவிஞர் கனிமொழி. எழுத்தாளர் ரவிக்குமார். தூர்தசன் முன்னாள் இயக்குனர் ஏ,நடராசன். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். கார்ட்டூனிஸ்ட் மதன். இயக்குநர் மிஷ்கின். மற்றும் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

பதிப்பாளரும். கவிஞருமான மனுஷ்யபுத்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், தமிழ் எழுத்தாளனின் நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமான செய்தியை தினசரிகளில் கொண்டுவரமுடியாத அவலத்தைப்பற்றி பேசினார், அரங்கில் காலியாக இருக்கும் இருக்கைகள் இலக்கிய வறுமையை காட்டுவதாக குறிப்பிட்டார், எதிர்காலத்தில் அரங்கில் நூல் வெளியீடு செய்தால் இடம் போதாதநிலை ஏற்பட்டு மெரினாவில் விழா நடக்கும் காலம் வருமென நம்பிக்கை கொள்வதாகவும் கூறினார், சிறப்பு விருந்தினர்களின் சிறப்புகளை அவையோருக்கு விளக்கினார்,

சாருநிவேதிதாவின் ஏழு நூல்களையும் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட சாருவின் ஏழு நண்பர்கள் பெற்றுக் கொண்டனர்,

நூல்களின் பெயர் பெற்றுக்கொண்டவர்கள் பெயர்

1, தேகம் (நாவல்) - ஸ்ரீனிவாசன்

2, சேக்ஷ்பியரின் மின்னஞ்சல்
முகவரி (சிறுகதைகள்) - அவந்திகா

3, சரசம் சல்லாபம் சாமியார்
(நித்தியானந்தா பற்றியது) - நரசிம்மன்

4, கனவுகளின் நடனம்
(சினிமா விமர்சனம்) - ரமேஷ்

5, கலையும் காமமும்
(விவாதம்) - ஞான பாஸ்கர்

6, மழையா பெய்கிறது
(விவாதம்) - ஜெயசிம்மா

7, கடவுளும் சாத்தானும்
(கட்டுரைகள்) - ராக்கேஷ் கண்ணா

தலைமையுரை வழங்கிய நல்லி குப்புசாமி செட்டியார் மிகச் சுருக்கமாகவே பேசினார், சாரு வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர், மனதில் பட்டதை துணிச்சலாக எழுதக்கூடியவர் என குறிப்பிட்டார், சமூகத்தில் பல விஷயங்களின் மதிப்பு மாறிவிட்டதாகவும் கூறினார்,

ரவிக்குமார் :

சரசம் சல்லாபம் சாமியார் - நித்தியானந்தாவைப் பற்றிய இந்நூல் குமுதம் ரிப்போட்டரில் தொடராக வெளிவந்தது, அப்போதே விட்டு விட்டு வாசித்திருக்கிறேன், ஊடகங்கள் நித்தியானந்தாவைப் பற்றி நிறைய செய்திகளை வெளியிட்ட பின்பு அதை தொடராக விறுவிறுப்பு குறையாமலும் நாம் சொல்ல வந்த செய்தியோடும் எழுதுவது மிகவும் சிரமமானது, ஆனால் சாரு சவாலை எதிர்கொண்டு சிறப்பாக எழுதியுள்ளார், பிரேமானந்தா தொடங்கி பல சாமியார்கள் போலியென உலகுக்கு தெரிந்த பின்பும் எது மனிதனை சாமியாரை நம்பி செல்லச் சொல்கிறது என யோசித்து பார்க்கலாம், சாமியார்கள் கல்விக்கூடம் நடத்துகிறார்கள். மருத்துவமனை நடத்துகிறார்கள். மரம் நடுகிறார்கள். மனநலம்பற்றி பேசுகிறார்கள். இயற்கை பேரழிவின்போது வீடுகட்டி தருகிறார்கள், ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அவர்கள் செய்கிறார்கள், கடைசியில் மக்களை ஏமாற்றவும் செய்கிறார்கள், நம் காலம் அவநம்பிக்கையின் காலம். எல்லோரும் எல்லோரையும் சந்தேகப்படுகிறோம். எதிர்காலத்தில் எது மானுடத்தை ஈடேற்றப்போகிறது,

சாருவுக்கும் எனக்கும் இருபது வருடங்களுக்கு மேலாக நட்பு உள்ளது, எனக்கு ஆங்கில இலக்கியங்களை அவர்தான் அறிமுகம் செய்து வைத்தார், இவ்விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

ஏ. நடராசன் :

சாரு இணையத்தில் தன் வாசகர்களுடன் நடத்திய விவாதங்களின் தொகுப்பே கலையும் காமமும் என்ற இந்நூல், சாரு இசை ரசிகர், இசைக்கும் ஏழுக்கும் சம்பந்தமுண்டு, சாரு இன்று ஏழு நூல்களை வெளியிடுவது ஏழு ஸ்வரங்கள் போல் உள்ளது, இப்புத்தகத்தில் சாரு தனக்கு பிடித்தவர்கள் பற்றியும் பிடிக்காதவர்கள் பற்றியும் விவாதித்துள்ளார், எப்போதும் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறார், எழுத்தில் பல உத்திகளை கையாண்டுள்ளார், எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூலாகும்,

தமிழச்சி தங்கபாண்டியன் :

"மழையா பெய்கிறது" எனும் இவ்விவாத நூலை குறுக்கு மறுக்காக வாசித்தபோதிலும் இப்புத்தகத்தில் நவீனத்துவத்தையோ. பின் நவீனத்துவத்தையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, அறுபதுகளின் கதாநாயகன் சாத்தர், தத்துவ வரலாற்றில் சாக்ரட்டீஸ் முதல் சாத்தர் வரை என்ற ஒரு சொற்றொடர் உண்டு, சாத்தருக்கும் சாருவுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு, சில வேறுபாடுகளும் உண்டு, சாத்தரோடு சாருவை ஒப்பிடுவதால். சாத்தர் வரிசையில் சாருவை வைக்கிறேன் என பொருள் கொள்ளக் கூடாது,

தத்துவத்தில் மாபெரும் புயலென கிளம்பிய டெரிடாவை இளம் போக்கிரி என செல்லமாக அழைப்பார்கள், சாருவையும் அவ்வாறு அழைக்கலாம் என கருதுகிறேன், சமூக அக்கறையுள்ள. மனித உணர்வுகளை சரியாக புரிந்து கொள்கிற ஒரு விஷயத்தில் தனக்கு சரியென பட்டதை துணிந்து சொல்வது சாருவின் இயல்பாக உள்ளது,

இலக்கிய வாசகதளத்தை சாரு விரிவுபடுத்தியுள்ளார், நூலில் பலதரப்பட்ட மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், வெறும் சம்பவம் உரையாடல் என இல்லாமல் காட்சிப்பதிவு செய்கிறார், தந்திரங்கள் இல்லாத சுதந்திரமான மனிதர், இலக்கியம். இசை. நுண்கலைகள், சினிமா என பல்துறை சார்ந்தும் தம் எண்ணங்களை பதிவு செய்துள்ளார், இலக்கியத்தின் மீது ஆளுமை செலுத்தும் மனிதரிடம் தான் நம்பிக்கை அதிகமாக இருக்கும், சாரு சமூக போராட்டங்களை ஆதரிக்கிறார், எழுத்து மக்களுக்கு சென்று சேர வேண்டும், சாருவின் படைப்பு வாழ்க்கை கலகம் நிரம்பியது, அவரை வெறுப்பவரால்கூட சாருவுடைய எழுத்தை உதாசினம் படுத்த முடியாது,

கனிமொழி :

சாரு எனக்கு பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர், அவருடன் அதிகம் சண்டை போட்டவள் நானாகத்தான் இருப்பேன், என் வளர்ச்சியில் என் தேடலில் என் சக பயணி, இக்கூட்டத்திற்கு நிறைய இளைஞர்கள் வந்துள்ளார்கள், இளைஞர்களின் வரவு நம்பிக்கை தரக்கூடியது,

சாரு தன் எழுத்து மூலம் லத்தீன் அமெரிக்க இலக்கியம். பிரெஞ்சு எழுத்தாளர்கள் பற்றியும். நல்ல சினிமா பற்றியும். நல்ல இசைப்பற்றியும் அறிமுகம் செய்கிறார், இலக்கிய அரங்கின் இருக்கைகள் நிரம்ப கலாச்சார மாற்றம் தேவை, அந்த மாற்றத்தை செய்யக்கூடியதாக சாருவுடைய எழுத்து உள்ளது,

மதன் :

"கனவுகளின் நடனம்" என்ற இந்நூல் சினிமா விமர்சனங்கள் அடங்கியது, விமர்சனம் இல்லாத வாழ்க்கை மோசமான வாழ்க்கை, சாருவிற்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கும்போது இவ்வளவு தீவிரமாக விமர்சனம் செய்தால் யார் வாய்ப்பு தருவார்கள் என யோசித்து பார்க்கிறேன், இவருடைய விமர்சனத்தின் நோக்கம் நல்ல சினிமா வேண்டுமென்பதே, தனிப்பட்ட குரோதத்தினால் அல்ல,

சாருவைப்பற்றி. அவருடைய எழுத்தைப்பற்றி நிறைய பேசலாம், இந்ந நூல் வெளியீட்டு முறையே மாற்றியமைப்பது பற்றி யோசிக்க வேண்டும், ஒரு பாரா-வை மட்டும் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன், சாருவின் எழுத்துக்களோடு உடன்படுகிறேன், அவர் எழுத்தை வழிமொழிகிறேன்,

முடியாட்சியிலும் சரி, சனநாயகத்திலும் சரி எதிர்கருத்துக்கு மரண தண்டனைதான், சாக்ரடீசை அரசுதான் கொன்றது, இவ்வளவு ஆபத்தான நிலையிலும் சாரு தன் கருத்துகளை தைரியமாக முன்வைக்கிறார், அவருள் ஒரு சின்ன வீரன் இருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கம் விருப்பம் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என நினைக்கிறேன்,

மிஷ்கின் :

சாரு வெளிப்படையாக பேசக்கூடியவர், கலையை யாரும் கற்றுக்கொடுக்க முடியாது, நான் 72 தொழில்கள் செய்துள்ளேன், குறைகள் இல்லாதது ஒரு வாழ்க்கையே அல்ல, தேசம் நாவல் கிளர்ச்சியான புத்தகம், நாம் முகம் சுளிக்கின்ற விஷயங்களை. நாம் பார்க்க மறந்த காட்சியை நுணுக்கமாக பதிவு செய்துள்ளார், சாருவின் எழுத்தில் ஒரு வீச்சு உள்ளது,

என் சின்ன வயதில் என் அண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததை கண்ணால் கண்டவன், ஜப்பானிய இயக்குநர்களிடம் (அகிரா குரோசோவா, Takeshi Kitano's ) சினிமாவை கற்றுக் கொண்டேன், நான் பார்த்து ரசித்த கிக்கி ஜிரோவை தமிழ் மண்ணில் நிகழ்த்தி காட்டினேன், இதற்கு முன் அப்படத்தை பார்த்தவர்கள் எத்தனை பேர், நந்தலாலாவில் உள்ள சிறப்புகளை மறைத்துவிட்டு வெறுமனே காப்பி அடிக்கப்பட்ட படம் என எழுதி அதை தோல்வியடைய செய்தார்கள், குழந்தை வயிற்றிலேயே சாகாமல் பிறந்து பின் இறந்தால் ஒரு தாய் அடையும் உணர்வை நான் அடைகிறேன், இதை படித்தவர்கள் செய்ததுதான் அதிர்ச்சியாக உள்ளது, காப்பி என்று சொன்னாலும் நான் பெருமைப்படுகிறேன்,

எஸ். ராமகிருஷ்ணன் :

ஒரு எழுத்தாளன் தன் புத்தகத்தை சக எழுத்தாளனிடம் படிக்க கொடுத்த பிறகு ஏற்படும் பதற்றத்தை நான் அறிவேன், சாருவும் ஒருவாரகாலமாக அப்படித்தான் இருந்திருப்பார், சாரு உங்களுடைய நாவல் நன்றாக வந்துள்ளது, நான் எழுத்தாளானக அல்லாமல் சாருவின் வாசகனாகவே தேகம் நாவலைப்பற்றி பேசப்போகிறேன்,

எழுத்தாளன் நாவல் எழுதுவது தற்செயலானது அல்ல, சவாலான விஷயம், பதற்றம் தரக்கூடியது, சாருவின் தேகம் நாவல் பல்வேறு வகையான உரையாடல்களை தோற்றுவிக்கிறது, பேசுவதற்கான கருவை கொண்டுள்ளது, ஒரு படைப்பை புரிந்துக் கொள்ளும் வாசகனிடமும் படைப்புத்திறன் உள்ளது,

இந்த நாவலில் வதை முன்வைக்கப்படுகிறது, வதையைப்பற்றி நீண்ட வரலாறு உள்ளது, வதையின் சரித்திரம் தேகம் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது, வரலாறு முழுக்கவும் வதையுள்ளது, மதத்தின் பேரால், நிறத்தின் பேரால், சாதியின் பேரால், அதிகாரத்தின் பேரால், ஒழுக்கத்தின் பேரால் என வதை வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் உள்ளது, எளிய மனிதர்கள் வதைக்கப்படுகிறார்கள், பெண்களின் உடல்கள் பாலியலை காரணமாக வைத்து வதைக்கப்படுகிறது,

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒரு சீன சித்திரம் உள்ளது, அதில் மனிதர்களை பல விதங்களில் வதை செய்யும் காட்சிகளை வரைந்துள்ளனர், ஒரு நாடு மற்றொரு நாட்டிடம் கற்றுக் கொள்வது மனித வதைப்பற்றிதானா?

சிறைச்சாலைகளில் மனிதர்கள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்கள், அமெரிக்க ராணுவம் எளிய மனிதர்களை சிறையில் எப்படி வதைக்கிறது என்பதை இணையத்தில் பார்க்கலாம், உலகில் அதிக மனிதர்கள் வதைக்கப்படுவதற்கு காரணம் உண்மையை கண்டறிவதற்காகத்தானாம், இவர்கள் எந்த உண்மையை கண்டறிய போகிறார்கள்,

எழுத்தாளன் அவமானத்தை தேடி அலைபவன், அவமானங்களை தாண்டி வாழ்வை ரசிப்பவன் கலைஞன், வதையை அரசுகள் மட்டும் செய்யவில்லை, நம் குடும்பமும் அதைத்தான் செய்கிறது, நமக்கு வதையை கற்றுத் தருவதும் குடும்பமே, வதை. வன்முறையின் பாரம்பரியம் நீண்டது,

பலர் மறந்த விஷயங்களை நினைவுபடுத்துவது எழுத்தின் வேலையாகும், சமகால முக்கியத்துவம் வாய்ந்த சாருவின் தேகம் நாவல் அக்காரியத்தை செய்கிறது, பாலுணர்ச்சி சார்ந்தும் பேசுகிறது, இங்கு கடவுளும் பாலுணர்ச்சியும் தவறாகவே பார்க்கிறார்கள், இரண்டையும் புனிதம் என்று கொண்டாடுகிறார்கள் அல்லது காலில் போட்டு மிதிக்கிறார்கள், இதற்கு இடைப்பட்ட நிலையில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன, உடல் என்பது வெறும் இயக்கம் சார்ந்தது மட்டுமல்ல, உடல் கடற்கரையை போன்றது, அதில் எண்ணற்ற நீரூற்றுகள் உள்ளன, பெருநகர் வாழ்வு சார்ந்த பதிவு பதற்றமடைய வைக்கிறது, பெருநகரத்தில் தொடர் அவமானத்தை எதிர்கொள்ளும் மனிதன். ஏமாற்றத்தை அனுபவிப்பவன். துரோகம் புரிபவன். வன்முறையாளன் என பலவகையான மனிதர்கள் உலவுகின்றனர், இவர்களுக்கு மத்தியில்தான் நாம் வாழ்கிறோம், நம் குழந்தைகள் இவர்களுக்கு இடையில்தான் உலவ வேண்டிய சூழல் உள்ளது, மகிழ்ச்சியை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு, ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல, இதுபோன்ற ஒரு நாவலை எழுத நான் துணியமாட்டேன், ஆனால் இதுபோன்ற நாவலின் தேவை இன்று உள்ளது.

சாரு நிவேதிதா :

கலாச்சார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் செட்டியார், எனக்கு கூடுதலாக உணவு இட்டவரும் கூட, அவர் தலைமையேற்று என் நூலை வெளியிடுவது எனக்கு சந்தோஷமே, ரவிக்குமார் என் நீண்டநாள் நண்பர், அதை அவரே பதிவு செய்துள்ளார், கனிமொழி. தமிழச்சி தங்கபாண்டியன் என் குடும்ப நண்பர்கள், மதன் தீவிரமான விமர்சனக் கண்ணோட்டம் கொண்டவர், அவர் வெறும் கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, ஏ,நடராசன். மிஷ்கின் என் நண்பர்கள், காவேரி லால்சந்த் குடும்பத்தினர், ராக்கேஷ் கண்ணா மற்றும் நூல்களை பெற்றுக் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

கேரளாவில் இலக்கிய இதழ்களில் தினசரிகளில் முன்பக்கம் என் படத்தை போட்டு என் பேட்டியை வெளியிடுகிறார்கள். ஆங்கில தினசரி தன் இந்திய பதிப்புகள் அனைத்திலும் என் நேர்காணலை முதல் பக்கத்தில் வெளியிடுகிறது, ஆனால் தமிழ்நாட்டில் என் நூல் வெளியீடு சம்பந்தமான செய்தியைக் கூட வெளியிட முன்வரவில்லை, சில தனிப்பட்ட நண்பர்களின் காரணமாக நாளை ஒரு சிறு பெட்டி செய்தி வெளிவரும்,

என்னுடைய படைப்புகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆசியன் கிளாசிக் வரிசையில் பாடமாக உள்ளது, இந்தியாவில் பெண்கள் விரும்பி படிக்கும் ஐந்து புத்தகங்களில் என்னுடைய புத்தகமும் ஒன்றுள்ளது, தமிழ் சமூகம் எழுத்தாளனை கொண்டாடுவதற்கு பதில் புறக்கணிக்கிறது,

இந்நிகழ்ச்சியை சாரதா சிறப்பாக தொகுத்து வழங்கினார், பார்வையாளர் வரிசையில் எழுத்தாளர் பாலகுமாரன். நடிகர் மதன்பாப் போன்றவர்கள் நிகழ்ச்சி முடியும்வரை அமர்ந்திருந்தனர், அரங்கம் நிறையவில்லை என்றாலும் வேலைநாளின் மாலை வேலையில் இவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடியது சாருவுடைய எழுத்துக்காக என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான், இலக்கிய வாசகதளம் விரிவடைவது நம்பிக்கை அளிக்கக் கூடியதுதானே.

நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/13122010#


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</