வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
யாழினி முனுசாமி
 
 
 
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள் TS ஈன்றுப் புறந்தருதல் கவிதைகள் வாயில்

சதுர பூதம்


யாழினி முனுசாமி  

பெண்களின் ருசி கொண்டலைகிறது
சதுர பூதம்
மனித ராசியின் ஓய்வு நேரத்தை
அபத்தங்களால் நிறைத்த வண்ணம்
நாலாதிசையும் வளர்கிறது
வண்ண வண்ணமாய்
அறையுடை வெண் தோல் பருவச்சிகள்
குதறுகின்றன ஆன்மாவை .
குட்டி யாழ்களும்
இன்னதெனத் தெரியாமலே மீட்டுகின்றன
சதுர பூதம் தரும் விசப்பாக்களை
ஏதுமில்லா குகைகளுக்கு
தேவன் ஒரு நாள் பரிசளித்தான் சதுர பூதங்களை
இனிப் பசியற்றுக் கிடக்கும் மானுடம்
----------------------------------------------------------------------------------------------------------

பொய்

யார் சொல்லியிருக்கக்கூடும்
முதல் பொய்யை ?
ஏவாளிடம் ஆதாம் சொல்லியிருப்பானோ?
தெரிந்திலோம் .
மெக்கானிக் தொழில் கற்க
விட்டு வந்த இரண்டாவது வாரத்தில்
வயிற்றுவலி என வீடு சேர்ந்தது
நினைவிலிருக்கும் முதல் பொய் .
பள்ளி நாட்களில்
விடுப்புகளுக்காக
வராத காய்ச்சலும் தலைவலியும்
வந்ததாய்ச் சொன்னபோது
பொய்கள் வளர்ந்தன.
பனையுச்சியில் ஏறமுடியாமல்
தேளிருப்பதாய்ப் பொய்த்துவிட்டுத்
தரைமீண்டது
நுங்காசைப் பொய்த்துப்போன
சென்னை நண்பனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கோழைத்தனத்தின் மறுபெயர் பொய்
எச்சூழலிலும் பொய்ச்சொல்லாதவன்
தூய வீரன்.
என்ன செய்ய ?
இப்போதும்
பொய்யைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது
பேராசிரியரான பிறகும்
அவசர விடுப்புக்கு!
------------------------------------------------------------------------------------------------------

எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்

நாம் நம் வேலையைச் செய்வோம்
மிகக் கவனமாகச் செய்வோம் .
இப்போதைக்கு நாம் வெற்றி பெற்றாக வேண்டும்
ஏதேனும் ஒரு கரம் கிடைத்தால் பற்றிக் கொள்வோம்
கரத்திலிருந்து கரத்திற்கு
கரத்திலிருந்து கரத்திற்கு என மாறிக் கொள்வோம்
கைதூக்கிவிட்ட கிளையே எனினும்
மிதித்து மிதித்து மேல் செல்வோம்
எதனெதன் உதவியையோ பெற்று
இலக்கடைந்து
புகழடைந்து
தனிமனிதனாய்ச் சாதித்து விட்டதாய்
மேடையில் முழங்குவோம்
உதவிகளைப் பெறுகையில்
துண்டு நிலம் இல்லாதவனைப்போல்
பணிவு காட்டுவோம்
பின் பண்ணையார்போல்
நெஞ்சு நிமிர்வோம்
காரியம் சாதிக்க எதால் அந்த ஏமாளிகளை
வீழ்த்தலாமென்று பார்ப்போம்
கொள்கை, இலக்கியம் ,
அரசியல், சாதி...
ஏதேனும் ஒரு கண்ணியில்
சிக்காமலாப் போய்விடுவார்கள்
கிரீடம் கிடைக்கும்வரை காத்திருப்போம்
பின் காலில் இடரும் சருகென அவர்களைக்
கடந்து செல்வோம்
நமக்குத் தேவை
இலட்சியத்தை அடைதல்
அதற்காக எந்த அரிதாரத்தையும்
அவர்கள் நம்பும்படியாகப்
பூசிக்கொள்வோம்
அவர்கள் நம்மை அடையாளம் காணும்போது
இன்னொருவன் கிடைக்காமலாப் போய்விடுவான்.

------------------------------------------------------------------------------------------------------------------------

கனவுடன் அலைபவள்

முன்பொருமுறை
வெள்ளுடை தரித்த தேவதைகளில்
ஒருத்தியாக இருந்தவள்
பிறகு
இளவரசியின்
நூற்றுக்கணக்கான தோழிகளில்
ஒருத்தியாக மாறினாள்.
அவ்வப்போது அவள்
இப்படி
உருமாறிக் கொண்டிருக்கிறாள்
தேவைகளின் பொருட்டு
அடுக்ககத்தில்
தன் உடுப்புகளையும்
களைந்து கொண்டிருக்கிறாள்
வரசியாகும்  கனவுடன் .
---------------------------------------------------------------------------------------------------------------

யாழினி முனுசாமி செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் 1971இல் பிறந்தார். எஸ்.ஆர்.எம். கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உதிரும் இலை (கவிதைகள்), தலித் இலக்கியமும் அரசியலும் (கட்டுரைகள்) பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும் (கட்டுரைகள்) ஆகியன இவரது நூல்கள். குறும்பட இயக்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </