வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
கலாப்ரியா
 
 
 
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள் TS ஈன்றுப் புறந்தருதல் கவிதைகள் வாயில்

என்பிலதனை


கலாப்ரியா  

புழுவெனச்
சொருகிய வார்த்தைகளுடன்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறான்.

கள்ளப்பட்டுப் போன மீன்கள்
எல்லை தள்ளி
வளைய வருகின்றன.

எல்லை தாண்டியோரின்
எலும்புகளை
குறிப்பாய் முதுகெலும்புகளை
வலையினடியில்க்
கனத்துக்காய்க் கோர்த்து
வீசுவோருண்டென

அவை பேசிக் கொள்வதைக்
கேட்க விடுவதில்லையவனது
‘ஞாபகங்களை அழிக்கும்
ஒரே ஞாபகமான பசி’

புழுவெனச் சொருகிய்
வார்த்தைகள்
மிதக்கிறது
தென்கடலெங்கும்
அவன் கை விட்ட
தூண்டிலுடன்

---------------------------------------------------------------------------------------------------------------



தோழி

நீ அதிர்ச்சியடையக்
கூடிய
சொல்லொன்றைச்
சுமந்து நிற்கிறேன்

சிறு திருட்டுகள்
செய்யப் பழகிய
வீட்டுப் பிராணியொன்றை
சாக்குப் பையிலிட்டு
மூடி
எங்கேனும்
கண் காணா இடத்தில்
விட்டு வருவது போல
சுமந்து செல்கிறேன்

வார்த்தைகள்
வளர்த்தெடுக்கும் முன்
முத்தமிட்டு
உன் இதழ் பூட்டத்
துணிகிறேன்
அதிர்ச்சியுறும்
ஆதிச் சொல்லொன்றை
நீ சொல்கிறாய்

வாசலில்
வளர்ப்பு மிருகம்
வாலாட்டியபடி

----------------------------------------------------------------------------------------------------------------

மேற்குறிப்புகள்:

கவிதைகளோடு அந்தந்த எழுத்தாளர்களின் கவிதைகள் பற்றிய ஒரு திறனாய்வை, அல்லது கவிஞர்கள் பற்றிய ஒரு கவி அறிமுகத்தை இந்தப் பகுதியுடன் கொடுத்தால் புதிதாக படிக்க வரும் வாசகருக்கு அந்தக் கவி ஆளுமை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டுரை எழுதியவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்தப் பகுதி நீக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------

கலாப்ரியா கவிதைகள்: என் பார்வை - வா.மணிகண்டன்

http://www.nisaptham.com/2010/05/blog-post_11.html

வாசிக்கத் துவங்கிய காலத்தில் வார இதழ்களிலும், நூலகத்தில் கிடைக்கும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியிருந்த கவிதைகளை படித்துவிட்டு என்னை ஒரு தீவிரமான கவிதைப் பிரியனாக சிலாகித்துக் கொண்டிருந்த காலகட்டத்தை நினைத்துக் கொள்கிறேன். அப்பொழுது புதிது புதிதாக நான் அறிந்து கொண்ட கவிஞர்களின் பெயர்களை பட்டியலிட்டு நண்பர்களிடத்தில் என்னை நிரூபித்துக் கொண்டிருந்தேன். கைவசத்தில் ஆத்மாநாம், பசுவய்யா, மனுஷ்ய புத்திரன் போன்ற வித்தியாசமான பெயர்கள் இருந்தால் சற்று அதிகமாகவே பயமுறுத்தலாம். அந்தப் பட்டியல் தயாரித்த போதே வித்தியாசமான பெயர் என்ற வரிசையில் கலாப்ரியா என்ற பெயர் அறிமுகம் ஆகியிருந்தது.

அந்தப் பள்ளிப் பருவத்தில் இருந்து கலாப்ரியா என்ற பெயர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. கலாப்ரியா என்பவள் ஒரு அழகான இளம்பெண் என்ற நினைப்புதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளில் தெறிக்கும் பாலியல் குறியீடுகளும் ஈர்ப்புக்கு இன்னொரு காரணமாக இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் வாசித்திருந்த கலாப்ரியாவின் வெகு சில கவிதைகளில், யாவுமே ஆணின் பார்வையில் அமைந்த கவிதைகளாக இருந்தன. இது கலாப்ரியா ஆணா பெண்ணா என்ற குழப்ப நிலையிலேயே என்னை வைத்திருந்தது.

அந்த நாட்களில் கலாப்ரியாவின் சில கவிதைகளையே வாசித்திருந்தாலும் அவை அந்த வயதுக்கும், அந்த வயதில் கிடைத்திருந்த வாசிப்பனுவத்துக்கும் ஏற்ப சிலாகிக்கத்தக்க கவிதைகளாக இருந்த சாதாரண கவிதைகள்தான். அவரது முக்கியமான கவிதை எதையும் வாசித்திருக்கவில்லை. உதாரணத்திற்கு பின்வரும் கவிதையை குறிப்பிடலாம்.

அழகாயில்லாததால்
அவள் எனக்குத்
தங்கையாகிவிட்டாள்.

இப்பொழுது வாசிக்கும் போது இந்தக் கவிதை எந்த விதமான கவிதானுபவத்தையும் தருவதில்லை. இது ஒரு துணுக்கு மட்டுமே. ஆனால் பதினாறு வயது நிரம்பியவனுக்கு இது துள்ளலான கவிதையாக இருக்கும்- எனக்கு இருந்தது.

நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்திருந்த கவிஞர் ஒருவர் "கலாப்ரியாவை படிங்க" என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அப்பொழுது கவிதை குறித்த பெரிய தேடல் எதுவும் இருக்கவில்லை. அதனால் கலாப்ரியா கவிதைகளை தேட வேண்டும் என்ற உத்வேகம் எதுவும் எனக்குள் உருவாகியிருக்கவில்லை.அதற்கு பிறகாக சென்னை வந்து நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போதுதான் கலாப்ரியாவின் கவிதைகள் பெருமளவில் வாசிக்கக் கிடைத்தது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதியிருக்கும் கவிதைகளின் எண்ணிக்கையும், கவிதைகளில் தொட்டிருக்கும் தளங்களும் பரந்துபட்டது.

தமிழில் நவீன கவிதைகளை வாசிக்க ஆரம்பித்த போது அவை புரிவதில்லை என்ற கருத்து மெல்ல மண்டையில் ஏறிக் கொண்டிருந்தது. எந்தக் கவிதையும் தான் சொல்ல வந்ததை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்து இருப்பதாகவே நினைப்பு உருவானது. அந்தச் சமயத்தில் உயிர்மை பதிப்பகத்தில் "நவீன கவிதை:ஓர் அறிமுகம்" என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். முக்கியமான தமிழ் கவிதாளுமைகளின் கவிதைகள் அந்தத் தொகுப்பில் இருந்தது.

என்னளவில் இந்தக் கவிதைகளுக்கான திறப்பு என கலாப்ரியாவின் விதி என்ற கவிதையை குறிப்பிடத் தோன்றுகிறது.

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை

நவீன கவிதைகள் என்பது புரியவில்லை என்ற முடிவுடன் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்தக் கவிதை தரக் கூடிய வெளிச்சம்தான் இந்தக் கவிதையின் வெற்றி. இந்தக் கவிதை தன்னளவில் எந்தவிதமான உணர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. இந்தக் கவிதையில் எந்தவிதமான புலம்பலும் நேரடியாக இல்லை. ஆனால் ஆழ்ந்த துக்கத்தை, உடனடி பதற்றத்தை வாசகனின் விரல்களுக்குள் பாய்ச்சுகிறது. இந்த 'அமைதியான உணர்ச்சி மாற்றம்தான் நவீன கவிதை' என இந்தக் கவிதையை வைத்து என்னளவில் ஒரு வரையறையை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இதன் பிறகாகவே நான் வாசிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலை தயாரிக்க முடிந்தது. நவீன கவிதை என்ற பெருங்கடலின் சூட்சுமங்களை நோக்கி நகர்ந்தவனுக்கு சிக்கல்களை அவிழ்க்கும் சூத்திரங்கள் நிரம்பிய கவிதைகளை அறிமுகமாகத் துவங்கின.

கலாப்ரியாவின் கவிதைகளில் வாசகன் எதிர்நோக்கும் நேரடித் தன்மையும், எளிமையும்தான் இந்தக் கவிதைகளின் தனித்துவமாகத் தெரிகிறது. காட்சிகளையும், இயல்பான பேச்சினிடையே தெறித்த சொற்களையும் அவற்றின் துல்லியம் மாறாமல் கவிதைகளாக்கியிருக்கிறார். வைப்பாட்டி வீடு 'போய்த்' திரும்பும் நெல்லையப்ப முதலியார் ஈரக்காலுடன் நுழைவதும், மூன்றாம் வகுப்போடு படிப்பையும் தோழியையும் பிரிந்த தக்ஷிணாமூர்த்தி எழுத்துக் கூட்டி தந்திப்பேப்பர் பார்க்கும் சலூன் கடை வாசலும் பிசிறில்லாமல் கவிதைகளாகியிருக்கிறது. தமிழில் நவீன கவிதைகள் இறுக்கத்திலிருந்து இன்றைய எளிமையை நோக்கி மிக மெதுவாகவே நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்க் கவிதையின் இந்தப் பயணத்திற்கு- எளிமை நோக்கிய பயணத்திற்கு கலாப்ரியா தன் கவித்தோள்களை கொடுத்திருக்கிறார் என்பதற்கான சாட்சியங்கள்தான் அவரது கவிதைகள்.

சொன்னான், "நெடுநாளாய் ஒரு கவிதைக்காய் காத்திருக்கிறதாய்-" என்ற ஒரு வரியை எழுதியிருக்கிறார். அனுபவங்களை கவிதையாக்குவதற்கான மனநிலை அமையாமல் கவிதைக்காக காத்திருப்பதும் உண்டு, கவிதைக்கணங்களை அனுபவிக்காது 'எதையாவது' கவிதை ஆக்கிவிடுவதற்காகக் காத்திருப்பதும் உண்டு. கலாப்ரியாவின் இந்த காத்திருப்பை முதல் வகையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது வகை காத்திருப்பிற்கு காரணம் அனுபவ வறட்சி. இந்த அனுபவ வறட்சிதான் கவிதை வருவதற்காக இரவு முழுவதும் பேனா மூடியை திறந்து வைத்து காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தை சில கவிஞர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் அனுபவமின்றி கவிதையின் வருகைக்காக காத்திருப்பதற்கான தடயம் எதுவும் கலாப்ரியா கவிதைகளில் தென்படுவதில்லை.

அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் மின்னல் கணங்களில் இருந்தே கலாப்ரியாவின் ஒவ்வொரு கவிதையும் எழுகின்றன. அது பிள்ளைகளை வசைபாடும் அம்மை என்றாலும் சரி, ஞாயிறு தாம்பத்யத்தை நெருங்கி வந்து பார்க்கும் மழையென்றாலும் சரி. சோமசுந்தரத்தின் நிகழ்கணங்களில் இருந்து வந்துதான் கலாப்ரியாவின் கவிதைக்குள்ளாக அமர்கிறார்கள். நினைவின் தாழ்வாரங்களை வாசித்துவிட்டு அவரது கவிதைகளை வாசிக்கும் போது அவரது வாழ்வு சார்ந்த அனுபவங்களையே கவிதைகளாக்கியிருப்பதை கவனிக்கலாம். நினைவின் தாழ்வாரங்களில் கலாப்ரியா என்ற கவிஞனுக்கு இடம் இல்லை. அங்கு சோமசுந்தரம் மட்டுந்தான் வாழ்கிறார். மாறாக கலாப்ரியாவின் கவிதைகளில் சோமசுந்தரத்துக்கு அதிகபட்ச இடத்தை கலாப்ரியா கொடுத்திருக்கிறார். தி.ஜானகிராமப் பிராமணத்திகளின் இடுப்புச் சதை பார்ப்பதும், குழாயடிச் சண்டையில் கறுத்த முண்டையின் மயிர்ப்பிடி உலுக்கலில் முலைதெறிக்க நின்ற-சிவப்பு மூளிப் பறச்சியைப் பார்ப்பதும் சோமசுந்தரம்தான். அந்தப் பார்வையைத்தான் கலாப்ரியா கவிதைகளாக்கியிருக்கிறார்.

கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பதா என்பதும் அல்லது கவிஞனின் ஊடாகவே அந்தக் கவிதையை வாசிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. விமர்சனக் கோட்பாடாகச் சொன்னால் கவிதையை கவிதையாக மட்டுமே வாசிப்பது என்பதை Close Reading என்கிறார்கள். இந்த வாசிப்பில் கவிஞனுக்கு இடம் இல்லை.கவிதையில் 'இருப்பதை' மட்டுமே கவனிக்கும் போது வாசகனுக்கும் கவிதைக்கும் மட்டுமே நேரடித் தொடர்பு உருவாகிறது.

கவிதையை வாசிக்கும் போது கவிஞனின் உணர்ச்சி,மனநிலை போன்றவற்றை படைப்பின் வழியாகத் தேடுதல் என்பது இன்னொரு வாசிப்பு முறை. இப்படி கவிஞனோடு சேர்த்து கவிதையை வாசிப்பது என்பதில் வாசகன் உணர்வுப் பூர்வமாக(Emotional) படைப்பை அணுகக் கூடும். முதலில் சொன்ன Close Reading -இலும் உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுக முடியும் என்றாலும், இரண்டாவதில்தான் உணர்ச்சிப்பூர்வ அணுகலுக்கு வாய்ப்புகள் அதிகம். அப்படி உணர்வுப் பூர்வமாக படைப்பை அணுகும் போது, கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதனை துல்லியமாக நிர்ணயிக்க முடியாமல் போய்விடலாம். இந்தத் துல்லியமில்லாத வாசிப்பினை உணர்வுப்பூர்வ பிழை(Affective Fallacy) எனக் கோட்பாடுகள் குறிக்கின்றன.

இரண்டில் எந்த வகை வாசிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் தேவையில்லை. அது தனிப்பட்ட வாசகனின் விருப்பம் என்பதுதான் என் முடிவு. எனக்கு அமைப்பியல்,கோட்பாடுகள் ரீதியாக கவிதையை அணுகுவதில் விருப்பமில்லை. துல்லியத் தன்மை இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்கு கவிதை என்பது அறிவியல் இல்லை. மனதோடு கவிதை நிகழ்த்தும் அனுபவ விளையாட்டுதான் பிரதானமாகப் படுகிறது.

கலாப்ரியா என்ற கவிஞரோடு பழகியிருக்கிறேன் என்பதால் அவரது கவிதைகளில் கலாப்ரியாவையும், சோமசுந்தரத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன். நான் பழகியிராத ஆத்மாநாமும், ஞானக்கூத்தனும், கல்யாண்ஜியும் எழுதிய கவிதைகளில் நான் அவர்களைத் தேடுவதில்லை. அங்கு அந்தக் கவிதைகளை மட்டுமே உள்வாங்குகிறேன். அதுதான் சாத்தியமும் கூட.

கலாப்ரியாவை தேடும் மனம் கலாப்ரியோவோடு சேர்த்து கவிதையை வாசிக்கும் போது ஒரு வாசிப்பனுபவத்தையும், கலாப்ரியாவை விடுத்து கவிதையை மட்டும் வாசிக்கும் போது இன்னொரு வாசிப்பனுபவத்தையும் அடைகிறது. எந்த விமர்சனக் கோட்பாடுகளையும் தவிர்த்துவிட்டு கவிதையின் ரசிகனாக எனக்கு இந்த இரண்டு அனுபவங்களுமே சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கின்றன. இந்த இரண்டு வித அனுபவத்தைப் பெறுவதும் கூட கலாப்ரியாவின் கவிதையில் இருக்கும் நேரடித்தன்மையால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது.

கலாப்ரியாவின் கவிதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது பல கவிதைகளில் பழைய வாசம் இருப்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உதாரணமாகக் கவிதை சொல்லியோடு உறவு கொள்வதற்கு குழந்தையை வைத்திருக்கும் பிச்சைக்காரி/விபச்சாரி அவ்வப்போது கவிதைகளில் தென்படுகிறாள்.

நமது மனம் கைக்குழந்தையுடையவளை பரிதாபமான அல்லது இரக்கம் காட்டப்படவேண்டிய ஜீவனாக கட்டமைத்திருக்கிறது. அவளை காமத்தோடு பார்ப்பதும் கூட பாவமான செயல் என்று மனம் சொல்கிறது.

தன் காமத்தை வெல்ல வழியில்லாதவனாக, எந்தப் பெண் என்றாலும் உறவுக்கு தயார் என்னும் மனநிலையில் கவிதை சொல்லி இருக்கிறான் என்னும்படியான தொனியில் கவிதையை வாசிக்கும் போது இரண்டு நுட்பங்கள் புலப்படுகிறது. ஒன்று, தன் காமத்தின் அளவினை கவிதையில் வெளிப்படுத்த கவிஞன் கொடுக்கும் அழுத்தம் என்று சொல்லலாம் அல்லது (இரண்டாவதாக) செண்டிமெண்டலாக தன் பார்வையாளனை தன்னை நோக்கி திரும்ப வைக்கும் வெகுஜன சினிமா அல்லது வெகுஜன பத்திரிக்கைக் கதையின் நுட்பமாக ஒப்பிடலாம். இதைக் குறிப்பிடும் போது, தன்னை வெகுஜனத் தளங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்பாத கவிதை ஆளுமை கலாப்ரியா என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. வெகுஜன ஊடகத்தின் மீது விருப்பம் கொண்டிருந்த சோமசுந்தரம், அந்த ஊடகத்தின் சில குணாதிசயங்களை தன்னை அறியாமலேயே தனக்குள் உள்வாங்கிக் கொண்டதன் விளைவே கலாப்ரியாவின் கவிதையில் தென்படும் அதீத அழகியலும், இரக்கம் வேண்டி நிற்கும் கவிதைகளும் என எடுத்துக் கொள்ள முடிகிறது.

கலாப்ரியாவின் மொத்தக் கவிதைளின் வடிவம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. வடிவம் என்பது கவிதை சொல்லும் பாங்கு(Pattern). வடிவத்தில் வெள்ளம் தொகுப்பில் தொடங்கி வனம்புகுதல் தொகுப்பின் வரையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கவில்லை. மொத்தத் தொகுப்பாக வாசிக்கும் போது ஒரே வடிவக் கவிதைகளில் உண்டாகக் கூடிய சலிப்பு இந்தக் கவிதைகளில் ஒரு சில இடங்களில் தோன்றினாலும், இந்தக் கவிதைகளின் பெரும் பலமாக இருப்பது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கவிதையின் காட்சிகள்தான். இந்த புதுப்பித்தல் வாசகனை உற்சாகமான மனநிலையில் நிறுத்தும் பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றன. இந்த புதுப்பித்தல்தான் கலாப்ரியாவை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்திருக்கிறது எனவும் நம்புகிறேன்.

ஒரே வடிவந்தான் என்றாலும் இந்தக் கவிதைகளுக்குள்ளாக நிகழ்த்தப்பட்டிருக்கும் புதுமைகளை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. ஒரு கவிதையின் தலைப்பு π=22/7. இன்னொரு கவிதையின் துவக்கத்தில் 6 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேயக்கூடிய பரப்பினைக் கண்டுபிடிக்கச் சொல்லும் ஒரு வினாவும் அதைத் தொடர்ந்த கணக்குப் போடாமல் அடிவாங்கி எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் சங்கரனின் வாழ்க்கை கவிதையாக்கப்பட்டிருக்கிறது.

அகம் சுற்றியே நிகழ்ந்த தமிழ்க் கவிதைகளை புறத்திற்கு எடுத்து வந்த முக்கியமான ஆளுமை கலாப்ரியா. கவிதைகளை தன்னில் மட்டுமே நிகழ்த்தாமல் பொதுவில் நிகழ்த்துகிறார் . இவரது கவிதைகளில் பேருந்து நிலையம்,ஆற்றோரம், வாய்க்கால் வரப்பு, ரயிலடிகள் என காட்சிகள் இடத்தையும் உணர்ச்சியையும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகளில் சாமானிய, நடுத்தர மனிதன் கடக்கும் சகல இடங்களும், சகல உணர்ச்சிகளும், எதிர்கொள்ளும் சகல நிகழ்வுகளும் கவிதையாக்கப்படுகின்றன. கலாப்ரியா நிகழ்த்திய இந்த அக/புற மாற்றம் நவீன கவிதையின் பயணத்தில் மிக முக்கிய இடம் பெறுகிறது.

தொண்ணூறுகளின் மத்திய பகுதிக்குப் பிறகாக தமிழ் நவீன கவிதையில் அதன் வடிவம், உள்ளடக்கம், இயங்குதளம் என பலவற்றில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலை கலாப்ரியாவின் கவிதைகளில் காண முடியவில்லை என்பது கவிதை வாசகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு. தமிழ்க் கவிதையின் தொடக்கம் முதல் இன்றைய தினம் வரை காலவரிசையில் வாசிக்கும் வாசகனுக்கு கலாப்ரியா ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். எதிர்திசையில், அதாவது இன்றைய கவிதைகளில் இருந்து பின்னோக்கி நகர்பவனுக்கு கலாப்ரியாவின் கவிதைகள் தரும் தாக்கம் என்ன என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

கவிதை கலாப்ரியாவைத் தாண்டிச் சென்றிருக்கிறது. அதேசமயம் தமிழ்க் கவிதையின் வரலாற்றில் கலாப்ரியா என்னும் கவிதாளுமைக்கான இடம் என்பது நிராகரிக்கப்பட முடியாத இடம்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </