வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. அயல் இலக்கியம் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வெளிநாட்டு இலக்கியம், மற்றும் வெளிநாட்டு இலக்கியவாதிகள் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் பகுதி.
 
 
 

ஹோர்ஜ் லூயி போர்ஹே (1889–1986)வை புனைவுச் சிறுகதை எழுத்தாளர் என்றே பெரும்பான்மையோர் அறிவர். அவர் ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். 1914ஆம் ஆண்டிலிருந்து 1920ஆம் ஆண்டு வரை போர்ஹே ஐரோப்பியாவில் படித்தார். முதல் உலகப்போரின் போது அவரது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு சென்ற அவர் குடும்பம், போர் முடியும்வரை அங்கே தங்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. ஸ்பெயினில், குறிப்பாக மேட்ரிட் நகரில், அவர்கள் சிலகாலம் இருக்க வேண்டி வந்தது. போர்ஹே எழுதிய முதல் கதை ஒன்றினை மேட்ரிட் பத்திரிகை ஒன்று நிராகரித்தது. ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரம் கண்டது. பல வேறுபட்ட ஐரோப்பிய இலக்கியக் குழுக்களுடன் போர்ஹே தொடர்பு கொண்டிருந்தாலும் தன்னுடைய உத்வேகத்தை (கவிதையில்) அவர் கண்டுபிடித்துக் கொண்டது ஸ்பானிய யூதக்கவிஞரான ரஃபேல் கான்ஸினோஸ் அஸென்ஸ் என்வரைச் சந்தித்த பிறகுதான்.

மேலும்:

http://brammarajan.
wordpress.com
/2008/11/30/ஜோர்ஜ்-
லூயி-போர்ஹே-என்/

 

 

 

 
     
     
     
   
அயல் இலக்கியம்
1
 
  ஆசிரியர் பற்றி  
     
  சா தேவதாஸ்

மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் மற்றும் விமர்சகர்

1. மொழிபெயர்ப்புகள்

1) புன்னகை புரியும் இளவரசி - இந்தியச் சிறுகதைகள், மருதம், நெய்வேலி, 1995
2) பகத்சிங் சிறைக்குறிப்புகள், விஜயா பதிப்பகம், கோவை, 1995
3) கதாசாகரம் - சர்வதேச வாய்மொழிக் கவிதைகளின் தொகுப்பு, விஜயா பதிப்பகம், கோவை, 1999
4) குளிர்கால இரவில் ஒரு பயணி, இடாலோ கால்வினோ, உன்னதம், ஈரோடு, 2001
5) ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை, இடாலோ கால்வினோ, வ.உ.சி. நூலகம், சென்னை, 2006
6) புலப்படாத நகரங்கள், இடாலோ கால்வினோ, வ உ சி நூலகம், 2003
7) சேகுவோராவின் கொரில்லா யுத்தம், ரெஜி டெப்ரே, வ உ சி நூலகம், சென்னை, 2003
8) காஃப்கா - கடிதங்கள், கதைகள், கட்டுரைகள், வ உ சி நூலகம், சென்னை 2006
9) டாலியன்டைரி, வ உ சி நூலகம், சென்னை 2006
10) பிளாடெரோவும் நானும், ஜுவான் ர«£ன் ஜிமெனெஸ், வம்சி, திருவண்ணாமலை, 2005
11) செவ்விந்தியன் நீண்ட பயணம், பெர்னார்ட் மலமூட், வம்சி, திருவண்ணாலை, 2008
12) யூதப்பறவை, உலக சிறுகதைகள், அனன்யா, தஞ்சாவூர், 2007
13) லியோனார்டோ டாவின்ஸி, ஆழிபதிப்பகம், சென்னை, 2008
14) அமெரிக்கன், ஹென்றிஜேம், வம்சி, திருவண்ணாமலை, 2009
15) இறுதிசுவாசம், லூயிபுனுவல், வம்சி, திருவண்ணாமலை, 2009

ஆய்வுகள் - கட்டுரைகள்

1) தேவதாஸ் கட்டுரைகள், அன்னம் சிவகங்கை, 1993
2) மறுபரிசீலனை, விஜயா பதிப்பகம், கோவை, 2001
3) மூன்றாவது விழியன் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும், ஆரூத் புக்ஸ், சென்னை, 2002
4) சூரிய நடனம், விளிம்புநிலைப் பிரதிகள், தென்திசை, சென்னை, 2007
5) அமர்தியாசென்- ஒரு சுருக்கமான அறிமுகம், ஆழி பதிப்பகம், சென்னை 2008
6) சார்லஸ் டார்வின், பரிணாமத்தின் பரிமாணங்கள், ஆழிபதிப்பகம், சென்னை 2009
 
     
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  அயல் இலக்கியம் TS அயல் கவிஞர்கள் / எழுத்தாளர்கள் அயல் கவிஞர்கள் / எழுத்தாளர்கள்  வாயில்


நிக்கி ஜியோவன்னி


சா.தேவதாஸ்  



''மனித சுவாசத்தின் மீது எழுதவேண்டும் என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் நமக்குக் கற்பிக்கின்றார். Ulysses மற்றும் Finnegan's wake என்னும் நூல்களை வாசிக்கும்போது குழப்பம் ஏற்படுவது இதன் காரணமாகத்தான். நிறுத்தங்கள் இல்லை - அவற்றை எப்படி வாசிப்பதென்று தெரியவில்லை. ஆனால் ஜாய்ஸ் தான் சுவாசித்தது போல எழுதினார். நாம் சுவாசிப்பது போல எழுதவேண்டும்.''

- நிக்கி ஜியோவன்னி

தன் கவிதையில் சந்தமிருக்கிறது, தன் கவிதைகளை வாசிக்கும்போது ஒருவர் தன் பாதங்களால் தட்டவேண்டும் என்று கூறும் ஜியோவன்னி, தன்னை ஒரு தன்னுணர்ச்சிக் கவிஞராகக் (lyricist) கருதுகிறார்.

''கருப்புக் கவிதையின் புரோகிதை' என்றழைக்கப்படும் ஜியோவன்னி கவிதையை வாழ்ந்து காட்டுகிறார் என்றெண்ணுகிறார் லூயி ரோஜெந்தால்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைகள் எழுதிவந்துள்ள ஜியோவன்னி (கி.பி  .1943) ஆஃப்ரோ- அமெரிக்கக் கவிஞரும் போராளியும் பேராசிரியையும் ஆவார்.

'கருப்புக் கலைகள் இயக்கத்தின்போது முக்கிய கவிஞராக அறியப்பட்டவர். மிகவும் கொண்டாடப்பட்டவர். மிகுதியும் சர்ச்சைக்குள்ளானவர். தனிப்பட்ட எதிரிவினையினை அரசியல் எதிர்வினையுடன் இணைத்துக் கொண்டவர். குறிப்பானதில் தொடங்கி உலகளாவியதாக விரிவு பெறச் செய்பவர். எதிர்கொள்ளும் எல்லாவற்றின்பாலும், பொருட்கள், நபர்கள், இடங்கள் என எதுவாயினும், தன் கரிசனத்தைக் காட்டுபவர். சாதாரணமானதைப் போற்றி அசாதாரணமானதைத் தேடுபவர்.'

வாழ்வில் எதனைச் செய்தாலும் அதனை அதிகபட்ச உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்புவர். எழுத்தாளராகவும் போராளியாகவும் விளங்கும் அவர், எழுந்து, எல்லாவற்றையும் பிரகனடப்படுத்துவதில்லை. ''யாருடைய மனதையும் எழுத்தாளர்கள் எப்போதும் மாற்றி இருப்பதாக நான் கருதவில்லை. காப்பாற்றப் பட்டவர்களிடமே நாம் எப்போதும் போதிக்கிறோம் என்றெண்ணுகிறேன்''.

தம் யதார்த்தங்களையும் தம்மையும் வெளிப்படுத்துவதற்கான குரல் ஒன்றினைக் கண்டறிவதே கறுப்பினக் கலைஞனுக்கு அடிப்படையாக உள்ளது என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டுள்ளார். ''தன் தெய்வங்கள் நாட்டவன், புதியதொரு குரலுக்காக தன் இருதயத்தைத் தேடினான். வெய்யிலிலும் வியர்வையிலும் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் இதன் பிறகான வாழ்க்கையின் சாத்தியப்பாட்டையும் தேடினான். இருதயத்தின் சந்தங்களை விடுவிப்பதற்காக, அவர்தம் பாதங்களைத் தட்டினர். கைகளைக் கொட்டினர் ஒன்று சேர்ந்து சுவாசித்தனர. தம்மை வழிநடத்திச் செல்லவும், அழைப்புக்குப் பதிலளித்திடவும் ஒரு மானுடக்குரல் அவசியம் என்பதை அந்த இருண்ட தினங்களில் உறுதிப்படுத்தினர்.''

மானுட நிலையிலுள்ள தனிமையினைப் போக்கும் தொடர்புக் கண்ணியாக கலையினை அவர் கருதினார். கலை என்பது இணைப்பது. தன் கவிதையும் உரைநடையும் உண்மையாய் இருக்கும் காரணத்தால் கலை' என்பார். லாங்ஸ்டன் ஹக்ஸ் என்னும் ஆஃப்ரோ-அமெரிக்கக் கவிஞனின் கவிதைகளின் தாக்கம் பெற்றுள்ளவர். கவிதையினை மக்களின் பண்பாடாகக் காண்பவர்.

நம் மக்களின் கதையைச் சொல்வதை ஒரு துறையாக வரலாற்றிடமோ சமூகவியலிடமோ அறிவியலிடமோ பொருளாதாரத்திடமோ விட்டுவிட முடியாது. அது எழுத்தாளர்களால் சொல்லப்பட வேண்டும்'' என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார்.

நாம் பயணித்துள்ள பாதையைக் கொண்டாடுதல்....வரப்போகும் பாதைகளுக்கான பிரார்த்தனை'' என்னும் ஜியோவன்னியின் வரி அவர் கவிதைகளுக்கு அப்படியே பொருந்திப்போவது.

ஒவ்வொருவரும் கவிஞராகிவிட்டால் உலகம் இன்னும் நன்றாயிருக்கும் என்றெண்ணும் ஜியோவன்னி, தன் மனத்திற்கான வடிகாலாக கவிதை உள்ளது என்றொரு நேர்முகத்தில் விவரிக்கிறார்.

'' என் மனத்திற்கான வடிகாலாக நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன். இது வாழ்தலுக்கான என் நியாயம். ஆனால், என் மனத்தைப் பேசிவிடுவது என் வாழ்வின் முக்கிய அம்சமாகும் -அது மக்கள் விரும்பும் ஒன்றாக இல்லையாயினும், ஒவ்வொருவருக்கும் அவரவரின் இருதய கட்டளைக்கு அடிபணியும் உரிமை உண்டு. மக்களிடமிருந்து எடுத்துவிட முடியாத ஒன்று, நாணயம் குறித்த அவர் தம் உணர்வாகும். என் நாணயம் மோதுண்டுபோவதை நான் விரும்பாதது போலவே, இன்னொருவரது நாணயத்தின் மீதும் என் நாணயம் மோதுவதையம் நான் விரும்பவில்லை.

ஆதாரங்கள்

1. The collected poetry of Nikki Giovanni, William Morrow, N.Y. 2003
2. Nikki Giovanni / Lois ரோசெந்தால்

அறிமுகக்குறிப்பும் கவிதைகள் தமிழாக்கமும் - சா.தேவதாஸ்

குளிர்காலக் கவிதை

ஒரு சமயம் பனிக்கட்டி ஒன்று விழுந்தது
என் நெற்றி மீது அதனை நான் நேசித்தேன்
பெரிதும் அதனை முத்தமிட்டேன்
சந்தோஷமான அது தன் ஒன்றுவிட்ட சோதரரையும்
சோதரரையும் அழைத்தது
அப்போது ஒரு பனிவலை என்னைச் சுற்றி வளைத்தது
அவர்களனைவரையும் நேசிக்க நெருங்கினேன்
அவர்களைப் பிடித்துப் பிழிந்தேன் அவர்கள்
வசந்த மழையாகினர் ஆடாது அசையாது
நின்றேன் பூவாய் இருந்தேன்

பெண்கள் ஒன்றுகூடுகின்றனர்
(ஜோ ஸ்டிரிக்லேண்டிற்கு)

பெண்கள் ஒன்று கூடுகின்றனர்
ஏனெனில் அது விசித்திரமானதில்லை
பதற்றமான நேரங்களில் ஆதரவுதேடுவது
ஒருவன் புதைக்கப்பட வேண்டும்

அது விசித்திரமானதில்லை
முதியோர் இளையோரைப் புதைப்பது
அது அருவருப்பானது ஆயினும்

அது விசித்திரமானதில்லை
அறிவற்றோரும் கண்ணியமற்றோரும்
மனிதாயத்தின் பதாகை ஏந்துவது
அது ஆன்மாவைக் காயடிப்பது ஆயினும்

அது நம் அறிவாற்றலை நொறுக்குவதில்லை
யுத்தம் புரிவோர்
தம்மை ராஜதந்திரிகள் என்றழைத்துக் கொள்வது

நாம் ஆச்சரியப்படுவதில்லை
விசுவாச மற்றோர் உரத்துப் பிரார்த்திப்பது
ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு தேவாலயத்திலும்
சிலவேளைகளில் கிழக்கு நோக்கிய அறைகளிலும்
அது ஒரு பாவம், அவமானம் ஆயினும்
ஆக நாம் ஒருவனை மதிப்பீடு செய்வது எப்படி

பெரும்பாலானோர் நேசிக்கிறோம் நேசிக்க வேண்டாம்
என்னும் நம் தேவையிலிருந்து
ஏனெனில் தகுதியுடைய ஒருவனைக் காண்கிறோம்
பெரும்பாலானோர் மன்னிக்கிறோம் நாம் அத்துமீறி
இருப்பதாலேயழிய
பெருந்தன்மையானவர்கள் என்பதால் அல்ல

ஒரு கவிதை
(லாவ்ஸ்டன் ஹக்ஸுக்கு)

வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. . . எண்ணெய்
கண்டறியப்படுகின்றது
தங்கம் தேடிஎடுக்கப்படுகிறது. . . ஆனால் சிந்தனைகள்
திறக்கப்படுகின்றன
கம்பளி கத்தரிக்கப்படுகிறது. . . பட்டு நெய்யப்படுகிறது
நெசவு சிரமமானது... ஆனால் வார்த்தைகள் வேடிக்கையானவை

நெடுஞ்சாலைகள் அளாவிக் கிடக்கின்றன. . . பாலங்கள்
இணைக்கின்றன
கிராமச் சாலைகள் அலைந்துதிரிகின்றன. . .ஆனால்
நான் சந்தேகிக்கிறேன்

வானவில்லேறி நானேகினால்
உன்னருகே நானிருக்க முடியும்

உருவகத்திற்குத் தன்நோக்குநிலை உண்டு
குறிப்பீடு மற்றும் மாயக்காட்சியும் . . . கூட

அணி.. . செய்யுள். . . செவ்வியல். . . சுயேச்சா
கவி கேளே நீ எனக்கு எழுதுவது

இதனை நோக்குவோம் மேலும் ஒருமுறை
இந்த வரிகளுக்கு நான் சந்தம் அமைத்திருப்பதால்

வானவில்லேறி நானேகும்போது
என்னருகே நீயிருப்பாய்
ஹே பாப் ஹே பாப் ஹே ரீ ரீ பாப்

தனித்து

என்னால் இருக்க முடியும்
நானாகத் தனித்து

நான் இருந்தேன்
தனித்து நானாக
இப்போது தனித்திருக்கிறேன்
உன்னுடன்
ஏதோ கோளாறு உள்ளது
ஈக்கள் இருக்கின்றன
எங்கிலும் நான்போகும்

புரட்சிகர கனவுகள்

எப்படி இருக்கவேண்டும்
என்று வெள்ளையருக்கு எடுத்துக் காட்டுவதற்காக
அமெரிக்காவைக் கைக்கொள்ளும்
தீவிரக் கனவுகள்
நான் காண்பதுண்டு

என சரியான பகுப்பாய்வு
அறிதல் ஆற்றல்களால்
ஒவ்வொருவரையும் தூக்கி எறிந்திடும்
ஆவேசக் கனவுகள்
நான் காண்பதுண்டு

கலவரத்தை நிறுத்தி சமாதானத்தைக்
கொண்டு வர முற்படுவது நானே
என்று எண்ணிக்கொள்வதும் உண்டு

அப்போது நான் விழித்தெழுந்து
பெண் இயற்கையாய் இருக்கையில்
என்ன செய்வாளோ என்று
இயற்கைக் கனவுகள் கண்டேன்
என்றுணர்ந்தால்
புரட்சி ஒன்று பெற்றிருப்பேன்

இரவு

ஆஃப்ரிக்காவில் இரவு
நடந்துபோகிறது பகலுக்குள்
சுடர் மீதான வேட்கையால்
அழிந்துபடும் பூச்சிபோல் அவ்வளவு விரைவாக

மேகங்கள் இரவினைக்
கொண்டு செல்கின்றன கரீபியன்கடலில்
நீலவானில் கருப்புப் புள்ளிகளாகச்
சொட்டும் குறிவிரைப்புடன் செல்லும்
இளைஞனைப் போல
சூரியனின் காதலியான காற்று
ஓலமிடுகிறது தன் வேதனையை
அறியாது நிகழ்ந்த கூடலுக்காக

ஆனால் நியூயார்க்கில்
இரவுகள் வெண்ணிறமானவை
அதிருப்தியின் அங்கிகள்
மறைக்கின்றன
தனிமையின் போர்வைகளுக்கிடையே
நோக்கிடும் நம் பீதியை

நேசம் - ஒரு மானுட நிலை

ஓர் அமீபா அதிருஷ்டவசமானது அது சிறியதாக
இருப்பதால்.. இல்லாதுபோனால், அதன் தன்மோகன் யுத்தத்திற்கு
இட்டுச்சென்றிருக்கும்... தன் - நேசம் தார்மிக
நிலைக்கு (self-righteousness) அடிக்கடிகொண்டு
செல்வதாகத் தோன்றுவதால். . .

மக்களை விடவும் அமீபாக்கள் அதிகம்
உள்ளன. . . என்று வைத்துக் கொள்வோம். .
பௌதிகப் பெரும்பான்மை கொண்டுவிடுகின்றன
அதன்காரணமாக தார்மிக உரிமை.. . ஆனால்
அதிருஷ்டவசமாக அமீபாக்கள் மேலான
தெய்வங்களிடம் தொலைக்காட்சி கோரிக்கை
கள் வைப்பது அரிதாகவே. . . மற்றும்
இழிந்த உள்ளுணர்வுகள். . .ஆக தன்னைத் திறம்பட
விருத்தி செய்திடும் திறமை, நேசத்துடன்
ஏதேனும் தொடர்பு கொண்டுள்ளதா என்று
ஒருவர் வினவவேண்டும்

இருளுடன் விளையாடும் நட்சத்திரங்
களை இரவு நேசிக்கின்றது. . சூரியனைத்
தழுவிடும் ஒளியைப் பகல் நேசிக்கின்றது
நாம் நேசிக்கின்றோம். . நேசிப்பவர்களை
ஒளியும் இருளும் தேவைப்படும் உலகில் நாம்
வாழ்கின்ற காரணத்தால் . . சேர்ந்து கொள்ளல்
மற்றும் தனிமைப்படல்.. ஒத்தன்மை மற்றும்
பேதம்... பரிச்சயமானது மற்றும் அறியாதது
நாம் நேசிக்கின்றோம், அது மட்டுமே நிஜமான
சாகசமாக இருப்பதால்

நான் ஒரு அமீபா இல்லை என்பதில் சந்தோஷப்
படுகிறேன்... நம்மைவிடவும் கூடுதலாய்
இருக்கின்றது நம்மனைவரது வாழ்க்கைகளிலும்
மற்றும் அதனையே மேல்திகமாக செய்திடும் நம் திறமை...
(and out ability to do mine of the same)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.



   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</