இன்றைய நிலையில் ஒரு குறும்படம் எடுப்பது என்பது யாருக்கும் எட்டாக் கனியல்ல. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்த பிறகு எங்கோ ஒரு கிராமத்தின் மூலையில் இருக்கும் திரை ஆர்வலர்கள் கூட தங்கள் எண்ணங்களை குறும்படமாக பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்கள் பத்து வருடத்திற்கு முன்பு செய்துப் பார்த்த பரிசோதனை முயற்சிகளையே நாம் இப்போதுதான் தொடங்கி உள்ளோம் என்பது புலப்படும். குறைந்தபட்சம் இப்போதாவது தொடங்கியதற்கு மகிழ்ச்சி கொள்வோமாக..
ஆர்வத்தோடு இத்துறையில் நுழையும் ஆர்வலர்கள் தங்கள் எண்ணங்களை அழகாக பதிவு செய்கிறார்கள். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சோடைப் போனவர்களாக உள்ளனர். திரைப்படக் கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர்கள் எடுக்கும் குறும்படத்துடன் இவர்களால் தொழில்நுட்ப ரீதியாக போட்டியிட முடியாது. மேலும் அனைவராலும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்து விட முடியாது. பலருக்கு அது எட்டாக் கனி என்பதில் ஐயமில்லை. ஆனால் அத்தகைய ஆர்வலர்களை நாம் கண்டு கொள்ளாமலேயே விட்டுவிட்டால் இச்சமூகம் சிறந்த படைப்பாளிகளை இழந்து விடும். எனவே அத்தகைய ஆர்வலர்களை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தும் முயற்சியே இந்த பகுதி.
திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களோடு தொழில்நுட்ப ரீதியாக போட்டி போடும் அளவுக்கு மாற்ற ஆர்வலர்களையும் உருவாக்கும் இந்த முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை.
இங்கு திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் கற்பிக்கப்படும். தமிழில் எடுக்கப்படும் குறும்படங்கள் உலகத்தரமான தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இங்கு திரைப்படக் கலையை இணையதளத்தில் கற்றுக் கொடுப்பது நீச்சலடிக்க அஞ்சல் வழியில் கற்றுக் கொடுப்பதற்கு சமம் என்பதை நாங்க அறிவோம். எனவே இங்கு தியரி எனப்படும் பாடம் மாட்டுமே கற்றுக் கொடுக்கப்படும். ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டுக்கு (பயிற்சி பெற விரும்புபவர்களின் விருப்பத்திற்கேற்ப) ஒரு முறை நேரடி வகுப்புகள் எடுக்கப்படும். இவ்வகுப்புகள் மூலம் நீங்கள் இங்கு கற்றுக்கொள்ளும் பாடங்களின் ஐயங்களையும் தீர்த்துக் கொள்ளலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் இவ்வகுப்புகள் ஒரு மாதம் ஒரு பயிற்சி என்கிற அடிப்படையில் நடத்தப்படும். உதாரணமாக மாதத்தில் ஒரு நாள் முழுதும் ஒளிப்பதிவு பற்றி பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் ஒரு நாள் முழுதும் படத்தொகுப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்படும். எனவே ஆர்வலர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
|