|
நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!
தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.
மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.
உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம். |
|