அக்னிப்பார்வை
இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவள்ளுரில். படித்தது கணிப்பொறி பொறியியல்.
வாணியம்பாடியில் படிக்கும் போது கல்லூரிக்கு போனதை விட திரையரங்கிற்கு போனது அதிகம் என்று கூறும் இவர் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். புத்தகங்களை உயிராக மதிக்கும் இவர் புத்தகங்கள், சினிமா இவை போதும் வாழ்க்கையை ஓட்ட என நினைப்பவர். திரைப்படங்களை பற்றி தொடர்ந்து தனது வலைப்பூவில் எழுதி வருபவர். இவரது வலைப்பூவைப் படிக்க: http://agnipaarvai.blogspot.com
தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
வணக்கம் வாசகர்களே!
எடிசன் சினிமாவை கண்டுபிடித்தபோதோ, லூமினியர் சகோதரர்கள் அதை பொது மக்களுக்கு திரையிட்டபோதோ அது, உலகில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இன்று பல கோடி புரளும் ஒரு துறையான சினிமா, பணத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், சமுதாய அக்கரையை தன் வசம் எடுத்துக்கொண்டுள்ளது.
சினிமா ஒரு பொழுது போக்கு வடிவத்திலிருந்து, ஒரு கலையாக, இலக்கியமாக, ஒரு பிரச்சார சாதனமாக, ஏன் அறிவியல் வளர்ச்சிக்கு உந்துகோலாகவும் இருந்திருக்கிறது. அத்தகைய சினிமவை பற்றி பேசும்பொழுது அதன் ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு, அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டு, சினிமா பேசாத போது அதைப் பற்றி பேச வைத்தவர்களில் குறிப்பிடதக்கவர் சார்ளி சாப்ளின்.
சாப்ளின் இங்கிலாந்தில் பிறந்து, அமெரிக்க ஹாலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி, உலக மக்களை தன் நகைச்சுவை திறனாலும், நடிப்பாலும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தவர்.
தான் உருவாக்கிக்கொண்ட ‘The Tramp’ (வழிப்போக்கன், நாடோடி) என்னும் கதாப்பாத்திரத்தைக்கொண்டு நம்மை சிரிக்கவைத்தார், சிந்திக்கவைத்தார், அழவைத்தார், ஆர்பரிக்க வைத்தார். இவரின் படங்கள் அப்படி என்ன சொல்லுகின்றன?
சினிமாவின் முதல் ஜீனியஸ் என இவரை அழைக்க காரணம் என்ன? இரண்டாம் உலக போர் உச்சத்தில் இருந்த சமயம் ‘ஹிட்லரை’ கேலி செய்து இவர் எடுத்த ‘த கிரேட் டிக்டேடர்’ படத்தை ஹிட்லர் இரண்டு முறை பார்த்தார்.
இவரின் படங்கள் கம்யூனிசத்தை பரப்புகிறது என அமெரிக்க அரசாங்கம் இவரை அமெரிக்காவினுல் வர அனுமதிக்கவில்லை. இத்தனை நாள் என்னை வாழவைத்த மக்கள் என்னை வெறுக்கிறார்கள் என மனம் வருந்தினாலும், சாப்ளின் வழக்கமான தன் சினிமா வேலைகளை தொடர்ந்தார். அதுதானே அவர் திரையில் காட்டிய கதாபாத்திரத்தின் பழக்கம்.
அந்த ’வழிபோக்கன்’ கதாபாத்திரம் விழும் , உடனே எழுது தூசி தட்டிக்கொள்ளும். எவ்வளவு வீழ்ச்சிக்குபின்னும் நாளை வரப் போகும் நல்ல நாளுக்காக உலகை ரசிக்கும். கஷ்டங்கள், காதல் தோல்வி, அவமானம், அனைத்திற்க்கும் சிறிது நேரம் வருந்திவிட்டு, தன் அடுத்த வேலையை தொடரும்.
இது ஒரு விதத்தில் சாப்ளினின் மனோபாவம். தன் குழந்தை இறந்தது, சரியான மணவாழ்க்கை அமையவில்லை, தன் நாட்டு மக்கள் அவரை வெறுத்து நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை, இதன், ஒரு பொருட்டும் அவர் கலங்கவில்லை தன்னுடைய வேலைகளை தொடர்ந்தபடியிருந்தார்.
இனி இந்தத் தொடரின் மூலம் நாம் சாப்ளினின் திரைப்படங்கள் பற்றி படிக்கப் போகிறோம். அவர் சொல்ல வந்தது என்ன? மக்கள் அவரை ஏன் ரசித்தனர்? சர்சைகள், அவர் ஏன் சினிமாவின் முதல் ஜீனியஸ் என அழைக்கப்படுகிறார்? அவர் படங்கள் கம்யூனிசத்தை சொல்லுகின்றனவா? அவரின் படங்களினூடே ஒவ்வொன்றாக சென்று பார்ப்போம்.
அடுத்த வாரம் (11-02-2009) முதல் சார்லி சாப்ளினையும் அவரது படைப்புகளையும் ஆழமாய் அறிவோம். |