3. பந்தாட்டம் :
 |
இதனை மகளிர் மட்டுமே ஆடினர். இவ்விளையாட்டு வீட்டிற்கு வெளியிலும் முற்றத்திலும் மாடத்திலும் மணல் மேட்டிலும் ஆடப்பட்டது. பந்து நுலினால் செய்யப்பட்டது. அதைச் சுற்றிப் பல வேலைப்பாடுகள் அமைந்திருந்தன. 'வரிபுனை பந்து' (நற்றிணை 305:1, குறிஞ்சிக் கலி 15/1-4) என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. இதனைச் செல்வக்குடி மகளிர் விளையாடினார்கள். சங்கப் பாடல்களில் வரும் ஆடுபந்து, எறிபந்து என்னும் தொடர்கள் விளையாடும் முறைகளைத் தெரிவிக்கின்றன.
|
வானைத் தொடுமளவிற்குப் பந்தை எறிந்து விளையாடியதாக குறிஞ்சிக் கலி (4:22-23, 21/6-7) குறிப்பிடுகிறது. காலால் பந்தைத் தள்ளி விளையாடியதாக நற்றினை (324:7-9) சொல்கிறது. எனவே சங்க காலத்தில் கைப்பந்து (Catch ball) எறிபந்து (Sky ball), கால்பந்து (Foot ball) ஆட்டங்களை மகளிர் ஆடினார்கள் என்பதை அறியலாம்.
4. ஊஞ்சல் :
பழங்காலத்தில் பருவப் பெண்கள் மகிழ்ந்து விளையாடிய ஆட்டங்களில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம். பனைமடலுக்குக் கருக்கு நீக்கிப் பலகை இணைப்புப் போல் பரப்பிப் பெருங்கயிற்றால் பிணைத்து ஊஞ்சலை அமைத்தார்கள் (நற்றிணை 90/6-10). கருங்கால் வேங்கை மரத்திலும் ஊஞ்சல் கட்டப்பட்டது. (நற்றினை 368/1-4). ஞாழல் மரத்தின் உயர்ந்த கிளையிலும் (அகநானுறு 20/5-8) கட்டப்பட்டது. சுறாமீன் கொம்பினால் பலகை செய்தும் அதனைக்
கட்டி விளையாடினார்கள்.
5. மல்லாட்டம் :
இது இரண்டு ஆடவர்கள் விளையாடும் புற விளையாட்டு. சோழன் போர்வைக்கோ பெருநற்கிள்ளிக்கும் முக்காவனாட்டு ஆமூர் மல்லனுக்கும் நடைபெற்ற மல்லாட்டத்தைப் பற்றி புறநானுற்றுப் பாடல்கள் (80,81,82,83,84,85) சித்தரிக்கின்றன. மேலும் பட்டினப்பாலை, மறவர்கள் கையிலும் கலத்திலும் சண்டை செய்தனர் என்று குறிப்பிடுகிறது. ஆகவே சங்க காலத்தில் மல்லாட்டம் (wrestling), கைக்குத்துச் சண்டை (boxing) ஆகிய இரண்டும் இருந்திருக்கின்றன என தெரியவருகிறது. சிலப்பதிகாரம் பதினொருவகைக் கூத்துகளுள் ஒன்றாக மல்லாட்டத்தைக் குறிப்பிடுகின்றது. பின்னர் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
6. கழைக்கூத்து :
இந்த ஆட்டம் ஆரியக் கூத்து என்றும் கயிற்று நடனம் என்றும் சுட்டப்படுகின்றது. விழா நாட்களில் ஆடல்மகளிர் உடற்பயிற்சி வித்தைகள் (நிஹ்னீஸீணீவீநீ)பலவற்றைச் செய்வார்கள். கழைக்கூத்து நடக்கும் போது வாத்தியங்கள் பல ஒலிக்கப்படுகின்றன. மகளிர் கயிற்றில் நடந்தும் ஆடியும் பொதுமக்களை மகிழ்விக்கின்றனர். இதனை ஆரியர் ஆடினர் என்று குறுந்தொகை (7/3-5) கூறுகிறது. இது விழாகாலத்தில் நடைபெற்றதென குறிஞ்சிப்பாட்டு (192-194) குறிப்பிடுகிறது. இது இன்று தெருக்கள் கூடுமிடத்திலும் சர்க்கஸிலும் ஆடப்படுவதைக் காணலாம்.
7. வல்லாட்டம் :
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி இலக்கணம் கூறுமிடத்து வல்லாட்டம் (373, 374) பற்றி குறிப்பிடுகிறார். இந்த ஆட்டத்தை முதியோர் ஆடினர் என்றும், ஊர்ப் பொது மன்றத்தில் இதற்கான வல்லப் பலகை இருந்தது என்றும், முதியோர் மிகுந்த சிந்தனையோடு ஆடினர் என்றும் புறநானுறும் (32), அகநானுறும் (377) தெரிவிக்கின்றன. வல்லுப்பலகை பற்றி மருத கலியும் (29/13-14) குறிப்பிடுகின்றது. வல்லாட்டம் போட்டி விளையாட்டாக ஆடப்பட்டது என்று பரிபாடலின் (29/13-14) வாயிலாக அறியலாம். திருவள்ளுவர் காலத்தில் வல்லாட்டம் சூது விளையாட்டாக இருந்திருக்கிறது.
இனி ஆடவர் விளையாட்டுகள் பற்றி பார்ப்போம்:
ஜல்லிக்கட்டு :
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
 |
ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் (மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்) இடம் பெற்றது. ஏறு தழுவலுக்கும், குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18).
|
குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் துண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய ஜல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறு தழுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றி பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். ஏறு தழுவுதலில் உள்ளது போன்றே ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பண முடிப்பினைப் பரிசாகப் பெறுதல் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழாப் போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சி காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுப் போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டி சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் ஜல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
s
தொடர்ந்து விளையாடுவோம்...
|