|
படைப்பாளிகள் - சுப்பராஜ்
ரிஸ்க் எடுப்பது எங்களுக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடறது மாதிரி என்பது திரைப்படங்களில் வரும் நகைச்சுவை வசனம் மட்டுமல்ல.. இங்கே பலர் மற்றவரை கவர பயன்படுத்தும் வார்த்தைகளில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அத்தகைய ரிஸ்க்கை, உண்மையில் எவரும் எடுக்க முன்வருவதில்லை. ஆனால் தனக்கு எவ்வித இலாபமும் இல்லை என்று தெரிந்தும், தான் நேசிக்கும், போற்றும் ஒரு கலைக்காக ஒரு வருடம் செலவழித்து சைக்கிள் சாகசங்களை கற்றுக் கொண்டு தன்னுடைய முதல் குறும்பட முயற்சியிலேயே நம்மையெல்லாம் சிலிர்க்க வைத்தவர் திரு. சுப்பராஜ். "செடி" என்கிறக் குறும்படம் மூலம் ஒட்டுமொத்த குறும்பட ஆர்வலர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
கல்வியின் அவசியத்தை, எவ்வித பிரச்சார நெடியுமின்றி, மிக நேர்த்தியாக, படம்பிடித்துள்ளார் சுப்பராஜ். தொழில்நுட்ப ரீதியிலும், கதையை விவரிக்கும் விதத்திலும், பல கோடிகள் கொட்டி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே சவால் விடுகிறார் இவர். தன்னுடைய குறும்பட பயணத்தில் அடுத்ததாக "பயணம்" என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படத் துறையை தலை நிமிர செய்யும் இன்னொரு படைப்பாளி. திரைப்படத் துறையில் சாதிக்கக் காத்திருக்கும் அவருக்கு தமிழ் ஸ்டுடியோ வின் வாழ்த்துகள்.
இனி இயக்குனர் திரு. சுப்பராஜ் அவர்களுடன் ஒரு நேர்காணல்:
1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
என் தந்தை பெயர் S. அருணாச்சலம். தாயார் T. ராஜம். அப்பா ஓய்வு பெற்ற ஸ்டேட் பேங்க் மேனேஜர்., இருந்தாலும் கலை உலகில், நாடக நடிப்பில் ஈடுபாடு உடையவர். அப்பாவின் மூன்று சகோதரர்களும், நாடகத்தோடும், சினிமாவோடும், ஈடுபாடும், ஆர்வமும் உடையவர்கள். இந்தப் பின்னணியில்தான் எனக்கும் கலை உலகின் மீது நாட்டம் வந்தது. எனக்கு தற்சமயம் திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.
2. திரைப்படத் துறைதான் உங்களுக்கானது என எப்போது முடிவானது? அதற்கான முறையான பயிற்சி பெற்று இருக்கிறீர்களா?
பட்டப்படிப்பு முடிக்கும் நேரத்தில், நடிப்பு, நாட்டியம் முதலியவற்றில் நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகளும் பாராட்டின. அப்போதே முடிவு செய்தேன் கலை உலகில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்று. அது இன்று வரை தொடர்கிறது.
அடையாறு திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பிரிவில் தேர்வாகி, சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தேன். திருப்தியில்லை.
திரு. கோமெல் சுவாமிநாதன் நாடகக்குழுவில் மூன்று வருடங்கள் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்து மேலும் நடிப்பில் மெருகேற்றப்பட்டேன்.
திரு. ஆரூர்தாஸ் அவர்களிடம் 48 படங்களுக்கு உதவி கதாசிரியராக பணிபுரிந்து, கதை எழுதும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.
திரைப்படத்திற்காக சில கதைகளை தயார் செய்து முயற்சி செய்துக் கொண்டிருந்தேன். நல்லாயிருக்கு என்று பலபேர் பாராட்டினர். ஆனால் அது அரங்கேறவில்லை. எப்படி என்னை நம்பி கோடி ரூபாய் தருவார்கள். தயாரிப்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கையை கொடுப்பது என்று யோசித்தபோதுதான் குறும்படம் பற்றி ஆலோசித்தேன். "செடி", "பயணம்" என்று இருக் குறும்படங்களை இயக்கி உள்ளேன். இப்படியாக முறையான பயிற்சிகள் தொடர்கின்றன.
3. திரைப்படத் துறைக்கும், குறும்படத் துறைக்கும் எத்தகைய வேறுபாடுகளை நீங்கள் உணருகிறீர்கள்?
திரைப்படத்துறைக்கும், குறும்படத்துறைக்கும் பண முதலீடுத் தவிர வேறு எந்த வேறுபாடும் தெரியவில்லை.
4. நீங்கள் இது வரை எடுத்துள்ள குறும்படங்கள் பற்றி?
"செடி" - 53 நிமிடங்கள். மனைவியை இழந்த ஒரு கழைக்கூத்தாடிக்கு ஏழுவயதில் ஒரு மகள் இருக்கிறாள். சைக்கிள் சாகசங்கள் செய்து பிழைக்கும் அவனின் வாழ்க்கையை அக்கறையுடனும், யாதார்த்தமாகவும் விவரிக்கும் குறும்படம். இவனுடைய கஷ்டமான வாழ்க்கையின் இடையில், கண் சிமிட்டிக் கடந்து செல்லும் காதல். இதற்கு மத்தியில் குழந்தைக் கல்வியின் அவசியத்தை பிரச்சார நெடியின்ரி கலாபூர்வமாக உணர்த்துகிறது இக்குறும்படம். வாழ்வின் மீது நம்பிக்கை அளிக்கும் பாசிடிவான அணுகுமுறை. கட்டுக்கோப்பான திரைக்கதை, தேர்ந்த தொழில்நுட்பம், கச்சிதமான ஒளிப்பதவு, ஒரு சிறந்த குறுநாவல் படித்த திருப்தி. 10-10-2007 ஆனந்த விகடனில் வெளிவந்த விமர்சனம்.
"பயணம்" -15 நிமிடங்கள். மகன்களால் புறக்கணிக்கப்பட்ட, ஒரு மன நலம் பாதித்த 72 வயது முதியவர் மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணம் செய்கிறார். இரண்டு சிறுவயது திருடர்கள் அவரைக் காப்பாற்ற நினைக்கும்போது போலீசில் மாட்டிக்கொள்கின்றனர். முதியவரின் பயணம் கால்நடையாக தொடர்கிறது.
5. செடி குறும்படம்.. அதற்கான உங்கள் உழைப்பு உண்மையில் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை? இதற்கான கரு உருவானது எப்படி?
திரையில் பெரும்பாலும் பார்த்திராத காதாப்பாத்திரங்களை மையமாக வைத்து கதை உருவானால், காட்சிகளும் புதிதாக அமையும். அதன் அடிப்படையில் இந்த காதாப்பாத்திரத்தை ரோட்டில் சந்தித்தேன். சைக்கிளில் சாகசங்கள் செய்து பிழைக்கும் ஒருவன். முக்கியக் கதாப்பாத்திரம் கிடைத்துவிட்டது. அதைச் சுற்றி ஒருகதை பின்னவேண்டும். ஒரு காதல்கதையாக எழுதி நண்பர்களிடம் சொன்னேன். யாருக்கும் திருப்தியில்லை. அதை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மீண்டும் புதிதாக எழுதி நண்பர்களிடம் நல்ல Response கிடைத்த பிறகுதான், அதனை முழுவதுமாக எழுத ஆரம்பித்தேன். அது செடியாக வளர்ந்தது.
6. பெரிய திரைப்படங்களில் நடிப்பவர்களே சில சாகச முயற்சிகளை மேற்கொள்வதில்லை.. அப்படி இருக்கும்போது, எந்தப் பெரிய இயக்கங்களின் பார்வையும் படாத, எந்த இலாபமும் இல்லாத குறும்படத்திற்காக நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்திருப்பது எதனால்?
ஒரு நடிகன் தனக்கு கிடைத்த கதாப்பாத்திரத்தை எந்த அளவுக்கு நம்பகத்தன்மையோடு பார்வையாளருக்கு கொடுக்கிறானோ, அந்தளவுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அந்தக் கதாப்பாத்திரம் வெல்லும். அதற்காகத்தான் சில பயிற்சிகள் தேவைப்பட்டது. No pain, No gain.
 |
7. இந்தக் குறும்படம் எத்தகைய வரவேற்பை பெற்றது? பொதுவாகவே குறும்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது?
* திருப்பூர் அரிமா சங்கம் நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றது.
* சென்னை Prime Force Academy நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றது.
* நெய்வேலி புத்தகக் கண்காட்சி - தினமணி இனைந்து நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
* மதுரை DHAN Foundation நடத்திய போட்டியில் மூன்றாவது பரிசுக் கிடைத்தது.
* சென்னையில் "கவிதை உறவு" சிற்றிதழ் நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசுக் கிடைத்தது.
* 'Art for change' சென்னையில் நடத்தியக் குறும்படப் போட்டியில் சிறந்தக் கதைக்காக பரிசுக் கிடைத்தது.
* திருச்சி Lion's Club நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
* மேலும், ஆனந்த விகடன், கல்கி, நிழல் ஆகியப் பத்திரிக்கைகள் பாராட்டி எழுதியது பெரும் ஊக்கத்தை கொடுத்தது.
குறும்படப் போட்டிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இலக்கிய வட்டங்கள் ஆகிய இடங்களில் குறும்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. பரிசுக் கிடைக்கும்போதே பொருளாதார ரீதியாகவும் உதவி செய்கிறார்கள். சில சேனல்களில் ஒளிப்பரப்பு செய்கிறார்கள். ஆனால் பொருளாதார உதவி செய்வதில்லை.
மக்கள் மத்தியில் குறும்படம் இன்னும் பரவலாக சென்றடையவில்லை. படம் நன்றாக இருந்தால் மீதிக்கதையை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். குறும்படத்தை Documentary film, Newsreal படம் என்றுதான் சொல்கிறார்கள்.
8. உங்களுடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் பற்றி? உங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சி அளித்தவர் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?
திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்ற திரு. அருண் (10%), திரு. கீர்த்திபாசு, நிரன் சந்தர் (80%), திரு. பிரேம் (5%), திரு. ராஜேஷ் (5%), ஆகியோர் இந்தக் குறும்படத்திற்காக ஒளிப்பதிவு செய்தனர். படத்தொகுப்பை திரு. குட்டிக்குமார் சிறப்பாக செய்தார். Effects ஐ திரு. ராஜு (பலத் திரைப்படங்களில் பணியாற்றியவர்) நட்பு ரீதியாக ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆர்யா என்கிற நண்பர் இசையமைத்தார். Late. திரு. பாண்டியன் அவர்கள் Audiography செய்துக்கொடுத்தார்.
இணை இயக்குனராக, திரு. ஹரி ராகேஷ், உதவி இயக்குனர்களாக திரு. ஆறுமுகம், திரு. சுப்பிரமணியம், திரு. தியாகு, திரு.சுந்தர் போன்றோர் கடுமையாக உழைத்துக்கொடுத்தனர்.
திரு. மணி அவர்கள் ஒரு வருட காலம் சைக்கிள் பயிற்சியளித்தார். குரோம்பேட்டையை சேர்ந்த இவர், சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக நகைச்சுவை வேடத்தில் நடிப்பதில் வல்லவர்.
9. உங்களின் இந்தக் குறும்படத்தில் சமூதாயத்தில் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி உள்ளீர்கள்.. எதிர்காலத்தில் நீங்கள் பெரியத் திரைக்கு சென்றாலும் இந்த சமூக அக்கறை தொடருமா?
நிச்சயமாகத் தொடரும்.
10. குறும்படம் சார்ந்து பிறர் உங்களிடம் உதவி கேட்டு வந்தால் எத்தகைய உதவிகள் உங்களால் செய்ய இயலும்? அல்லது இதேக் குறும்படத் துறையில் சாதிக்க உங்களுக்கு பிறரிடமிருந்து தேவைப்படும் உதவிகள் என்னென்ன?
புதிதாக குறும்படம் எடுப்பவருக்கு உதவி இயக்குனராக பணிபுரிய தயாராக உள்ளேன். நமது படங்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் பார்க்கும்படி செய்ய வேண்டும்.
படைப்பாளிகள் பயணிப்பார்கள்...
|
விரைவில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.. உங்கள் ரிஸ்க் பற்றி படித்துவிட்டேன்.. படத்தை எங்கே பார்ப்பது?
அனுப்பியவர் மனொஹர் on Friday, 11.06.10 @ 10:15am
செடி என்ன மாதிரியான படம்? எஙெக் கானக் கிடைக்கும்.
அனுப்பியவர் சிவா on Monday, 14.06.10 @ 03:22am
sedi oru vizhavil partha niyabagam. anal neengale risk eduthu nadithadhu patri padithadhum sock agiviten. arupudham subbaraj.
அனுப்பியவர் Subramaniyan on Monday, 14.06.10 @ 05:35am
sedik kurumbadam patri konjam solli irundhal nanraga irundhirukum. nambikkai nathchathiram unmaiyil oru nalla paguthi. valthugall mr. subburaj.
அனுப்பியவர் Madhi J on Monday, 14.06.10 @ 22:15pm
sedi parthadhaga ninaivu. payanangal eppodhu edutheergal? eppodhu thiraiyidal nigazhvu?
அனுப்பியவர் Madhavan on Tuesday, 15.06.10 @ 23:02pm
adhavan yar.? nalla nalla pathigalai thamizh studiyovil kana mudigiradhu ivar peyaril? nalla thiramaiyana eluthalar. valthugal.
அனுப்பியவர் Priya on Tuesday, 15.06.10 @ 23:12pm
Kurumbada thuraiyil neengal melum valara vendum.
அனுப்பியவர் Mani on Wednesday, 16.06.10 @ 02:29am
BEST OF LUCK.CINEMA UNNAI VEERAIVIL DIRECTORAHA YEATRUKOLUM.VAZHAVALAMUDAN
அனுப்பியவர் MYLAIKUMAR on Tuesday, 22.06.10 @ 00:28am
all the best brother
அனுப்பியவர் justin jawart prabhakaran on Wednesday, 23.06.10 @ 01:53am