வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கூடு விட்டு கூடு TS சுஜாதா தேசிகன் தொடர்கள் வாயில்


புலிநகக் கொன்றை

சுஜாதா தேசிகன்  


மேலே இருக்கும் படம், நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் சென்ற வருடம் எடுத்தது. பார்க்கும் போது எல்லாம் வசிகரித்தது. பல நாள்கள் அதைத் தொட்டுப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். பழைய சினிமா வில்லனின் புலி நகம் வைத்த செயின் மாதிரி என்ன விதமான படைப்பு! இதைப் படம்பிடித்தபோது பூவின் பெயர் தெரியாது. படம் எடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றபோது, சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) பக்கம் பெரிய மரம் அதிலும் அதே பூ!.

சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் ஒரு கிளிக்குஞ்சு. பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பி வந்ததிலிருந்து அந்தப் பூவின் பெயரையும் அந்தக் கிளியின் பெயரையும் தேடிக்கொண்டிருந்தேன். சில வாரங்களுக்குமுன் பூவின் பெயர் தெரிந்தது- புலிநகக் கொன்றை! பூவை இன்னொரு முறை பாருங்கள். பெயர்க் காரணம் தெரியும்.

பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம்தான் நினைவு வந்தது. பல வருடங்களாகப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் அடுக்கியிருக்கும் அந்தப் புத்தகத்தை எடுத்து புலிநகக் கொன்றை பற்றி எதாவது சொல்லியிருக்காரா என்று மேலோட்டமாகத் தேடியபோது 'புலிநகக் கொன்றை - பெயரும் பின்னணியும்' என்ற தலைப்பில் இந்த பூவை பற்றி ஐங்குறுநூறு 142-ஆம் பாடலில் வருகிறது என்று எழுதியுள்ளார். உங்கள் பார்வைக்கு அதை இங்கே தருகிறேன்.

ஐங்குறுநுறு 142-ஆவது பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்துதான் எனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்தது. மொழி பெயர்த்தவர் சங்கப் பாடல்களை உலகம் முழுவதும் அறியச் செய்த AK ராமானுஜன் அவர்கள். பாடலும் அதன் பொருளும் ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கீழே தரப்பட்டிருக்கிறது.

எக்கர் ஞாழல் இறங்கிணார்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் காண்ணே
[அம்மூவனார், ஐங்குறுநூறு 142]

தோழி கேள்,
அவனுடைய மணலடர்ந்த கூரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூட்டலிட்டு அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை இனி நான் நினைக்க மாட்டேன். எனது கண்களுக்குச் சிறிது தூக்கமாவது கிடைக்கும்.

The Tigerclaw Tree
What she said
Friend, listen
I'll not think any more
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches
and my eyes will get some sleep

[A.K.Ramanujan translation]

கிளிக்கு வருவோம்.

'வானவில் நிறத்தில் கிளி' என்று கூகிளில் தேடினேன். உடனே அதன் பெயர் lorikeets என்று கிடைத்தது. தமிழில் இதற்கு இன்னும் யாரும் பெயர் வைக்கவில்லை.

நமக்கு அடுத்த சந்ததியினர் வளரும்போதும் புலிநகக் கொன்றை பூக்கள் இருக்கும்; ஆனால் அதன் பெயர் தெரியாமலே வளர்வார்கள்.

----oooo0000oooo----

பி.ஏ.கிருஷ்ணன், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தனக்குத் தலைப்புக் கிடைத்தது என்று எழுதியிருந்தார். ரா.கி.ரங்கராஜன் பல்லக்கு என்ற சிறுகதை எப்படி உருவானது என்று அந்தச் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார்.

"ஒரு காகிதத்தில் இங்க் தெளித்துக் கசக்கியபின், பிரித்துப் பார்த்து என்ன காட்சி தென்படுகிறதோ அதை வைத்துக் கதையைக் கற்பனை செய்ய வேண்டும் என்பது அவர் (எஸ்.ஏ.பி) சொல்லித் தந்த உத்திகளில் ஒன்று. அதன்படி ஒரு நாள் செய்து பார்த்த போது கோவில் பல்லக்கைச் சிலர் சுமந்து வருவது போன்ற காட்சி என் கண்ணுக்குத் தெரிந்தது. கும்பகோணத்தில் சப்த ஸ்தானப் பல்லக்கை சிறு வயதில் பார்த்திருந்த அனுபவமும் சேரவே 'பல்லக்கு' சிறுகதை உருவாயிற்று. அந்த வருடத்தில் வெளியான சிறந்த சிறுகதை என்று தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பரிசளித்தார்கள்"

ரா.கி.ரங்கராஜன் நினைவாக அவருடைய பல்லக்கு சிறுகதையை இங்கே படிக்கலாம்.

கதை முழுவதும் படித்தபோது தோன்றியது, கடைசி ஒரு வரியை எடுத்துவிட்டால் அது இன்னும் நல்ல சிறுகதையாக இருந்திருக்கும். நிச்சயம் படிக்க வேண்டிய கதை.

என் புத்தக அலமாரியில் படிக்க வேண்டும் என்று வாங்கி, படிக்காமல் இருக்கும் பல புத்தகங்களில், இரண்டு புத்தகங்களைப் படித்து முடித்தேன். ஒன்று, 'எடிட்டர் எஸ்.ஏ.பி'; மற்றொன்று சாண்டில்யன் எழுதிய 'போராட்டங்கள்'. இரண்டும் அளவில் சிறிய, ஆனால் தவறவிடாமல் படிக்க வேண்டிய புத்தகங்கள்.

முக்கியமாக, 'எடிட்டர் எஸ்.ஏ.பி' இன்றைய பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். அதில் சிறுகதை எழுத, தொடர்கதை எழுத என பல சின்ன சின்ன குறிப்புகள் இருக்கின்றன. முக்கியமானவற்றை மட்டுமாவது தனியாக எங்காவது எழுதிவைத்தால் நல்ல கையேடு ஆகும். சிறுகதை எழுதுவதற்கு முதல் தகுதி நல்ல சிறுகதைகளை படித்து அனுபவிக்க வேண்டுமாம்!

----oooo0000oooo----

கடைசி பகுதியில் இந்த வாரம் இரண்டு டம்பளர் கேள்விகள்:

1. பீர் அல்லது சோடாவை கிளாஸில் ஊற்றும் போது மேலே நுரை வருவதைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தமுறை ஈரமான கிளாஸில் ஊற்றும் போது நுரை வராதது ஏன் என்று யோசித்துவையுங்கள்.

2. மைக்ரோவேவ் ஓவனில் காபி சுட வைக்கும் போது ஒரு எறும்பு என் டம்பளர் விளும்பில் ஓடிக்கொண்டு இருந்தது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை ஏன் ?

இந்தக் கடைசிப் பகுதியில் ஒரு தொடர்கதை எழுதலாம் என்று நினைக்கிறேன். தொடரும்.. சொல்லிவிடலாமா?

தொடரும்....

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </