வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


வயது வந்தவர்களுக்கு மட்டும்

கலாப்ரியா  

ஊருக்கு தென் மேற்கே ஒருபெரிய மண்மேடு போல இருக்கும். செக்கச்சிவப்பாய், ஏதோ பல ரகசிய இறந்த காலங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல் இருக்கும். ஏதாவது பாண்டியர்களின் பொக்கிஷங்களை அடக்கியிருக்கும் என்று அதன் மேல் ஏறிப் போகும்போதெல்லாம் சொல்லிக்கொள்ளுவோம். அநேகமாக சனிக்கிழமை மத்தியான வெயிலில்த்தான் இப்படி யோசனைகள் யாருக்காவது உதிக்கும். ”ஏல, திருநாங் கோயில் போவோமாலே, சுத்தமல்லி அணைக்கிப் போவோமாலே”, என்று யாருக்காவது யோசனை கிளம்பும். நேரம், சைக்கிள் வசதி இவற்றைப் பொறுத்து, போகும் இடம் முடிவாகும்.குன்னத்தூர்ப் பொத்தை என்றால், அடிவாரம் வரைதான் சைக்கிளில் போகமுடியும் அதனால் அங்கு நடந்தே போய்விடுவோம்.

குன்னத்தூர் பொத்தை என்கிற மண் குன்றுக்கு, கல்லணை வாய்க்கால், பாட்டப்பத்து, கம்புக்கடைத்தெரு என்று போகிற வழியும் ரம்மியமாய் இருக்கும். அடிவாரத்துக்குச் சற்று முன்னர் ஒரு பலசரக்குக் கடை உண்டு அதுதான் அந்தப்பக்கத்து மக்களுக்கான சூப்பர் மாக்கெட்.’லண்டன் நேவிகட்’ சிகரெட் மட்டும் கிடைக்கும். மற்றப்படி பீடிதான். சிகரெட்டையும் அவர் கல்லாப்பெட்டிக்குள்தான் வைத்திருப்பார், அந்த வயசான செட்டியார். அநேகமாக, இந்தமாதிரிக் கிளம்பும்போதெல்லாம், நாங்கள் ஊருக்குள்ளிருந்தே சிகரெட் வாங்கிக் கொள்ளுவோம். குஞ்சுப்பிள்ளை மகன் – ’குசன்,.(லெச்சுமணபிள்ளை சன், ‘லெசன்’ கந்தையாப்பிள்ளை சன் ‘கசன்’ கொஞ்ச காலம் இப்படி ஒருவரையொருவர் கூப்பிட்டுக் கொள்ளுவோம், அப்புறம் அது வழக்கொழிந்து போகும்.) அபூர்வமாய் ‘கூல்’ என்று ஒரு சிகெரெட் வாங்கி வருவான், அது மெந்தால் கலந்தது. அது இல்லையென்றால் ’நார்த் போல்’ என்று ஒரு மெந்தால் சிகரெட் வாங்கி வருவான். பொத்தையின் மீது அநியாயத்துக்கு காற்றடிக்கும்.ஒரு பாக்கெட் சிகரெட்டைப் பத்த வைக்க இரண்டு பெட்டி தீக்குச்சிகள் வேண்டும். எல்லோருக்கும், எப்போதாவது ‘திருட்டு தம்’ குடிக்கிற பள்ளிக்கூட வயசு. வழியிலேயே ‘கூல்’ சிகெரெட் காலியாகிவிட்டால்தான், செட்டியார் கடையில் லண்டன் நேவிகட்.

செட்டியார், சின்னப் பெண்பிள்ளைகளுக்கு, தாளில் பொதிந்து, சாமான் கொடுக்கும் போது கையை ஒரு தடவு தடவித்தான் கொடுப்பார். ”சும்மா இருங்க தாத்தா”, என்று பிள்ளைகள் வெட்கத்துடன் சொன்னால் “ஏட்டீ, கிழவன் சாமான் கிழங்குடீ….பாக்கியா தாத்தாவுக்கு பவுன் பவுனா விழும்.”என்பார்.”போங்க பாட்டையா..” என்று சொல்லியபடியே ஓடிப்போகும். குசன்தான், “என்னா அண்ணாச்சி…பெரிய ஆளா இருந்துகிட்டு இப்படியெல்லாம் பேசுதீங்க..” என்று கொஞ்சம் நக்கலாய்க் கேட்டான். அதற்கு அந்த ஊக்காரர் ஒருவரே, “தம்பிகளா என்ன டவுன் பசங்களா வந்து வெவகாரம் பண்ணுதீங்களா….” என்று சண்டைக்கு வந்து விட்டார். நாங்கள் ”யாத்தாடி இது என்ன வம்பு, பாட்டையா பிரபலமான ஆள் போல இருக்கே என்று நகர்ந்துவிட்டோம்..அடுத்த முறை அடிவாரம் வரை போகும் போது நல்ல மழை பெய்து இரண்டு நாட்களாகி இருந்தது. கோடை மழை. அதனால் சகதியான பாதையில் வண்டிகள் ஓடி ஓடி,சகதி பாதையெங்கும் கரண்டை உயரத்திற்கு வரிவரியாக, நீளமாக காய்ந்திருந்தது. சைக்கிளில்தான் போயிருந்தோம். சைக்கிளை ஓட்டுவதும் சிரமமாக இருந்தது. உருட்டிக் கொண்டு போவது அதைவிடச் சிரமமாயிருந்தது. காலை, திரடு கட்டிப் போயிருந்த சகதி வரிகள் அறுத்தது.

நாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருந்த எம்.ஜி.ஆர் மன்றத்திற்கும் திறப்பு விழாவிற்கும் ரசீது புத்தகம் அடித்து நிதி பிரித்துக் கொண்டிருந்தோம்.அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஒரு கட்சிப் பிரமுகர் இரண்டு ரூபாய் எழுதியிருந்தார். ஆனால் பணம் தரவேயில்லை.இரண்டு ரூபாய் என்பது மிகப்பெரிய நன்கொடை. ஒரு ரூபாய்க்கு மேல் எழுதுபவர்களுக்கு என்று தனி ரசீது புத்தகம் வைத்திருந்தோம். அதில் முதல் ரசீதாக அவர் இரண்டு ரூபாய் எழுதிய போது நாங்கள் எல்லாம் அதிசயித்துப் போனோம். அதுவரை அதிகபட்ச ஸ்கோரே எட்டணாதான். ஆனால் அவரிடம் பணத்தை வசூல் பண்ணத்தான் சிரமமாயிருந்தது. பல முறை வீட்டுக்கு நடந்தும் ஆளையே பிடிக்க முடியவில்லை. தெருவின் மூத்த கட்சிக்காரர்கள் எல்லாம் சொன்னாகள். ”வேய் தம்பியாபுள்ளைகளா, இந்த மாதிரி பார்ட்டிகளெல்லாம் நாம திறப்பு விழா நடத்தற அண்ணக்கி வந்து மேடையில பேசறதுக்கு சான்ஸ் கேட்டு நிப்பாங்க, அப்பத்தாம்ப்பா கறக்கணும்….நீங்க இப்பவே ரசீது கிழிச்சிட்டீங்களே… இன்னம இந்த மாதிரி ‘பிரமுகர்கள்’ கிட்ட வசூல் பண்ணற வேலையை எல்லாம் எங்க கிட்ட விட்டுருங்க…” என்றார்கள். இதை எப்படியும் வசூல் பண்ணிருவோம் என்ற தீர்மானத்தில்தான் கிளம்பிப் போனோம். அவர் குன்னத்தூர் வயலுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கேயே போயிர்றதுன்னு முடிவு செய்து திடீரென்று பதினோரு மணி வெயிலில் கிளம்பினோம். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

அன்று மத்தியானம் பாப்புலரில் ‘வெண்ணிற ஆடை’ இரண்டாவது ‘ரன்’ போட்டிருந்தார்கள். அதற்குப் போவதாகப் பிளான். ஆறு ஏழு மாதத்திற்கு முன்னால் ராயலில்தான் முதல் ரிலீஸ். ’வயதுவந்தவர்களுக்குமட்டும் ’என்று சென்ஸார் சர்ட்டிஃபிகேட்டுடன் வந்த படம். தமிழின் இரண்டாவது ’’ஏ’ சர்ட்டிஃபிகேட் படம். முதல்ப்படம் மர்மயோகி. வெண்ணிற ஆடையுடன் ‘கார்த்திகை தீபம்’ என்ற படத்திற்கும் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார்கள். அதாவது சற்றுப் பொருத்தமானதாக இருந்தது.

வெண்ணிற ஆடைக்கு ’ஏ’ சர்ட்டிஃபிகேட் சற்றும் தேவையில்லை. காதலிக்க நேரமில்லையின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் வந்த ஸ்ரீதரின் படம். ஏ சர்ட்டிஃபிகேட் வேறு ரொம்ப எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டது. முதல் நாள் பயங்கரக் கூட்டம். அதிலும் முதல் நாள் என்னையெல்லாம், 15 வயது கட்டிளங்காளையான என்னையெல்லாம், அனுமதிக்கவில்லை. இவ்வளவிற்கும் அண்ணனின் நாலு முழ வேட்டியை, இடுப்புப் பகுதியில் கொஞ்சம் மடித்து மூணரை முழமாக்கிக் கட்டிக்கொண்டு போனேன், ’ம்ஹூம்’, விட மறுத்துவிட்டார்கள். மாட்னி ஷோவுக்கு அப்புறம் ரிசல்ட் கூவி விட்டது. செகண்ட் ஷோவுக்கு ஆளைத் தேட வேண்டியதாயிற்று. நாங்கள் மறுநாள்க் காலைக்காட்சிக்கு டிராயர் சட்டையுடன் போனோம். எங்களுக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் தியேட்டரில் ஒரே கூச்சலாயிருந்தது. படமும் ஓடவில்லை. எங்கவீட்டுப்பிள்ளை படத்தின் தாக்கம் இரண்டு மாதமாகியும் குறையவில்லை. எந்தப் படம் வந்தாலும் சுருண்டு கொண்டிருந்தது. காதலிக்கநேரமில்லை படமும் அப்படியே, அது ஓடும் போது வந்த படங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டது.

பிரமுகரைத் தேடி காலைப்பதம் பார்க்கும் காய்ந்த சகதிச் சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் பண்ணியும் பயனில்லை. இன்னொரு வழியாய் வந்து பழைய செட்டியார்கடை அருகே பிரமுகரை ஒரு வழியாய்ப் பிடித்தோம். ரொம்ப அன்பாய் உபசரித்தார். மூன்று பேருக்கும் செட்டியார் முணுமுணுக்க, கடனுக்கு கலர் வாங்கித் தந்தார். பர்ஸ் வீட்டில் இருக்கு தம்பிகளா என்றார். எங்களுக்கு படம் போகிற நினைப்பு வேறு விரட்ட நாளைக்கு வீட்டில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு திரும்பினோம். மனுஷன் கடைசி வரை தரவே இல்லை.

திறப்புவிழாவிற்கு, அப்போதிருந்த ஐம்பது எம்.எல்.ஏக்களில் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு போக்குவரத்துச் செலவிற்கு ஐம்பது ரூபாய்தான் அனுப்பியிருந்தோம். எவ்வளவோ பெரிய ஆட்களையெல்லாம் கூப்பிட பிளான் போட்டோம். பணம் அவ்வளவு திரட்டமுடியவில்லை. மூத்த தோழர்கள் சொன்னது போல் அவர்கள் பெரிய ஆட்களிடம் கொஞ்சம் வசூல் செய்து தந்தது கூட்ட மேடை, ஒலிபெருக்கிச் செலவுக்கு கூட காணவில்லை. கடைசியில், திறப்புவிழா முடிந்து கூட்டம் துவங்கியதும், எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச வாய்ப்புத் தாருங்கள் என்று ,பிரமுகர்கள் கெஞ்ச ஆரம்பித்தனர். அப்போது தென் பகுதியில் எம்.எல்.ஏக்களே கிடையாது. வந்திருந்தவரும் சட்டமன்றத்தில் உரத்துக் குரல் கொடுப்பவர். அதனால் உள்ளூர்ப் பிரமுகர்கள் அவர் முன்னால் பேசி, தங்களை நன்கு அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதுதான் சமயமென்று மூத்த தோழர்கள் சொல்லித் தந்த மாதிரி. நன்கொடை கேட்டோம். மறு பேச்சுப் பேசாமல், பத்து ,பதினைந்தெல்லாம் தந்தார்கள். சிலர் அதற்கு வசதியில்லாமல் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணியை நெருங்க நெருங்க நச்சரிப்பும் கூடிக்கொண்டிருந்தது. ஏனென்றால்,ஒன்பது மணிக்கு ‘ஸ்டார் ஸ்பீக்கர்’ பேச ஆரம்பித்தால்தான் பத்து மணிக்குள் முடிக்க முடியும்.கோவில்பட்டி தேவராஜன் என்று அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த பாடகர் ஒருவர் தானும் கடைசியில் இரண்டு இயக்கப்பாடல்கள் பாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

அப்போதுதான் ஒரு பெரிய மாலையுடன் நம்ம ‘இரண்டு ரூபாய் பிரமுகர்’ வந்தார். மூச்சுக் காட்டாமல் என்னிடம் பத்து ரூபாயை நீட்டினார்….நான் வாங்கவா வேண்டாமா என்று தயங்கினேன். எங்கள் அரசியல் குருநாதர், வாங்கிக்கோ என்று கண்ணைக் காட்டினார்… வாங்கியதுதான் தாமதம், விறுவிறுவென்று மேடையில் ஏறி மாலையை எம்.எல்.ஏவுக்குப் போட்டுவிட்டு மைக்கை விடாப்பிடியாகப் பிடித்து பத்து நிமிடம் முழங்கி விட்டே இறங்கினார். என்னிடமும் சில நண்பர்களிடமும், ”தம்பி நம்ம பேச்சு எப்படி” என்றார். நாங்கள் பிரமாதம் அண்ணாச்சி, அந்த ரெண்டு ரூபாய் நன்கொடை என்று இழுத்தோம். சரியான விடாக்கண்டனுங்கப்பா என்று ‘கொடாக்கண்டனாய்’ நழுவினார். மீட்டிங் முடிந்ததும் எல்லோரும் பிரமுகரின் கெட்டிக்காரத்தனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பாரு பின்னால பெரிய ஆளா வரப்போறான் பாரு.,என்றார் எங்கள் ‘குருநாதர்;’ குருநாதர் என்னவோ கடைசி வரை எங்களைப்போல் தொண்டனாகவே இருந்தார். நாங்களோ மேற்படிப்பு, வேலை சோலி என்று தேடிக் கொண்டிருந்தோம்.. ஆனால் அவர் சொன்ன மாதிரி, பிரமுகரோ பிரபலமாகி விட்டார். யூனியன் சேர்மனாகி போடுபோடென்று போட்டுக் கொண்டிருந்தார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வார். என்ன தம்பி மன்றமெல்லாம் நல்லா நடக்கா என்று கேட்பார். ஆமா அண்ணாச்சி என்று நிறுத்திக் கொள்வேன். ஆனால் அதெல்லாம் எப்பொழுதோ விட்டாயிற்று. எத்தனையோ அரசியல் மாற்றங்கள்… வாழ்க்கை மாற்றங்கள்.

நண்பர்கள் அழைத்த அழைப்பிற்கெல்லாம், அங்கே போக இங்கே போக என்று ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தது. ஒரு நண்பனுக்கு சென்னையில் பெரிய தனியார் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் சொல்லியிருந்தார். அவர் நம்பகமான ஆளில்லை, சரியான ’டம்பாச்சாரி’ (ஏமாற்றுப் பேர்வழி) என்று நான் கேள்விப்பட்டதை அவனிடம் சொன்னேன். அவனது அப்பா அந்த ஆளை நெருக்க, அவர் சென்னைக்கு அவனை அழைத்துப் போய் அந்தப் பெரிய கம்பெனியினைச் சுற்றிக் காட்டிக் கொண்டுவந்து விட்டார். பேருக்கு ஏதோ ஒரு அதிகாரியிடம் இன்டர்வியூ மாதிரி நடத்திக் கூட்டி வந்து விட்டார். அதிகாரி, நீ சரியாகத் தயார் செய்யவில்லை, இன்னொரு முறை வா என்று அனுப்பி விட்டார். டம்பாச்சாரி ஒரு விபத்தில் மாட்டி ஒரு காலை எடுக்க வேண்டியதாயிற்று.ஒரு கையும் சரியாக விளங்கவில்லை. அவர் ஒரு டம்பாச்சாரி என்று என் அப்பாதான் சொன்னார். எனக்கும் அவர் மூலமாக வேலைக்கு முயற்சிக்கலாமா என்று கேட்ட போது அப்படிச் சொன்னார்.

சென்னைக்குப் போய் அவரைப் பாத்து விவரம் கேட்டு வர என்னையும் துணைக்கு அழைத்தான். ”எதுக்குலே துக்கம் விசாரிக்கவா, எவ்வளவுலே கொடுத்தே… ” என்றேன். தொகையைச் சொன்ன போது ஆச்சரியமாயிருந்தது.”உங்க அப்பா அவ்வளவு சீக்கிரமா ஏமாற மாட்டாரே..” என்றேன். “நீ வாறியா இல்லையா என்றான். கிளம்பினேன். சென்னையில் இலக்கிய நண்பர்களைப் பார்க்கலாம் என்றும் யோசனை. சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜைப் பார்த்து அசந்து போனேன். அது கொஞ்சம் ஒதுங்கிய சந்து ஒன்றில் இருந்தது. ஆனால் ரொம்ப நன்றாக இருந்தது.. அதையும் அவரையும் கண்டுபிடிக்கச் சிரமமாயிருந்தது. அப்போது எமெர்ஜென்சி நேரம். பல கட்சிக்காரர்கள் சிறையில் இருந்தனர். பலர் எனக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு ஒளிந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் தரப்பில் அப்படி விளம்பரம் கொடுக்க நிர்ப்பந்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று கேள்வி. அப்படி விளம்பரம் கொடுத்த பின்னும் சிலரை விடுவதாயில்லை. அதை வைத்தே ஒளிந்திருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க யுக்தி செய்தார்கள் என்றெல்லாம் கதைகள் உலவிக் கொண்டிருந்தன.

லாட்ஜிலும், எங்களை எளிதில் விடவில்லை.எப்படியோ அறையைக் கண்டு பிடித்து ரொம்ப நேரம் தட்டிய பின், ஊன்றுகோலுடன் ‘டம்பாச்சாரி’ தட்டுத்தடுமாறி வந்து திறந்தார். பார்க்கவே பாவமாயிருந்தது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 67 வயது இருக்கும். ரொம்பத் தளர்ந்திருந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார். எங்களுடன் ஒரு சென்னை நண்பர், ’ஸ்ரீ’ வந்திருந்தார். அவர் எங்கள் ஊர்தான். சென்னையில் இருக்கிறார். ரொம்பக் கெட்டிக்காரப் பையன். சினிமாவில் நல்ல செல்வாக்கானவன். அவனால்த்தான் லாட்ஜைக் கண்டு பிடிக்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.அவன் எப்படியோ அறையில் மூன்றாவது ஆள் ஒருவர் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டான். நைசாக டம்பாச்சாரியின் வாயைக் கிளறிக் கண்டு பிடித்துக் கேட்டும் விட்டான். அப்புறம்தான் அவர் சொன்னார்.”ஏம்யா பயப்படனும் இந்தா நாங்கள்ளாம் கரை வேட்டி கட்டிக்கிட்டு தைரியமா அலையலையா அவரை வெளிய வரச் சொல்லுங்க’’ என்றான்.

பாத் ரூமிலிருந்து ‘பிரமுகர்’-இரண்டு ரூபாய்ப் பிரமுகர் வந்தார், அசட்டுச் சிரிப்புடன். ”தம்பீ…, நீங்க.., நம்ம புள்ளைகளா, நான் பயந்துட்டேன்” என்றார். டம்பாச்சாரியிடம் அவனே பேசினான். ஒரு வழியாக பாதிப்பணத்தை தருவதாகச் சொன்னார். அவனும் பிரமுகரும் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவரிடமும் சண்டை போட்டான், நீங்கல்லாம் என்ன கட்சிக்காரங்க என்று. நாளை வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

பிரமுகர் பின்னாலேயே வந்து ஸ்ரீயைத் தனியே உள்ளே அழைத்தார். நாங்கள் வெளியேயே நின்றோம். ஸ்ரீ வெளியே வந்து தலையில் அடித்துக் கொண்டான். என்னப்பா விஷயம் என்றேன். “என்ன விஷயம், எல்லாம் பொம்பளதான்..காலும் கையும் வெளங்கலேன்னாலும் கிழவனுக்கு ரொம்பநாளாச்சாம்ன்னு ஆசையா இருக்காம்….அவருக்கேயிருந்தா அப்புறம் சின்னக் கிழவனுக்கு இருக்காதா….சினிமாக்குட்டியா கிடைக்குமான்னு கேக்கானுக….”என்றான். என்னாப்பா இந்த வயசிலயா..என்றோம் நாங்கள் இருவரும். ஸ்ரீ சிரித்துக் கொண்டே, :” ஒரு கைப்பிடி உமியைத் தூக்கற அளவுக்கு சீத்துவம் (தெம்பு) இருக்கிற வரை எல்லாருக்கும் இந்த ஆசை விடாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்கல்லா… அந்தக்கதைதான்…….“ ,என்றான். உம்ம விஷயத்துக்காக வேண்டியாவது ஏதாவது ஏற்பாடு செய்யறேன்னேன். ஒன்றியம்தான் பணத்துக்குப் பொறுப்புன்னும் சொல்லீட்டு வந்திருக்கேன்….”என்ற ஸ்ரீ, ”எத்தனையோ பிள்ளைங்க என்னைச் சுத்திச்சுத்தி வந்தாலும் நான் ஒன்னைக்கூடத் தொட்டதே கிடையாது…”என்று சிரித்தான். ஆம்.. ’ஸ்ரீ’ அவ்வளவு அழகாயிருப்பான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </