வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


தழும்பு...

கலாப்ரியா  

வல்லிக்கண்ணன் சொல்வது போல, ரொம்ப நாள் கழித்துப் பார்க்கையில் சொந்த ஊரும் தெருக்களும் இன்னும் சுருங்கி இருந்தது. இந்தப் பகுதிக்கு வந்து எவ்வளவோ காலம் ஆகி விட்டது. பரப்பான சாலை அது. எதிர் எதிராக இரண்டு தெருக்கள் சாலையிலிருந்து பிரிகின்றன. சாலையில் தாருக்கு மேல் தார் விரித்து விரித்து, நல்ல உயரமாகி இருந்தது. தெருக்கள் தாழ்ந்திருந்தன. ஒரு தெருவின் முனையில் நாங்கள் படித்த ஆரம்பப் பாடசாலை. எதிர்த் தெருவின் முனையில் இருந்த பூடம், அதன் மேல் போகும் வரும் வாகனங்கள் இறைக்கும் தூசி, அதன் மேல் எண்ணெய், மறுபடி தூசி என்று படிந்து படிந்து அது என்ன உருவம் என்று தெரியாமல் கழுக் மொழுக்கென்றிருந்தது. அந்தப் பூடமும் அதைச் சுற்றிய சிறு காலி இடமும் அப்படியே இருப்பதால் அந்தப் பகுதி மட்டும் பழைய அகலத்துடன் இருப்பது போலிருந்தது.

பூடத்தையே பார்த்து, அது என்ன பூடம் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தவன், நாய் குரைப்பதையே கவனிக்கவில்லை. நாய் எதிர்த்தாற் போலிருந்த சற்றே உயரமான படிகள் கொண்ட வீட்டிலிருந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பெரிய அல்சேஷன் வகை. அந்தப் பூடத்தின் அருகேயிருந்த பெட்டிக் கடையில்தான் பள்ளிக்கூடம் இடைவேளை விடும்போது ஓடி வந்து ஏதாவது பண்டம் வாங்குவது, காலணா அரையணாவுக்கு தாய்க்குப்பின் தாரம் எம்.ஜி.ஆர்-பானுமதி, நேரு மாமா-குருஷ்சேவ், படங்கள் வாங்குவது (ரவி அன் கோ படங்கள்), அந்நேரம் கடை பரபரப்பாக இயங்குவது என எல்லாவற்றையும் மனதில் ’ரீவைண்ட்’ பண்ணிப் பார்த்துக் கொண்டேயிருக்க என்னை அறியாமலேயே, நான் அந்தப்படிக்கட்டின் அருகே போயிருந்திருக்கிறேன்.அது கத்திக் களேபாரம் பண்ணியதில் வீட்டின் வெராந்தாவில் இருந்த பூந்தொட்டிகள் உருண்ட சத்தம் கேட்டு, “யார் அங்கே” என்று கேட்டபடியே ஒரு பெண் உள்ளேயிருந்து வந்தாள்.....நல்ல வெண்மையான சேலையும் முழங்கை வரை நீண்ட உடலைப் பிடித்த ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தலை பின்னப்படாமல், முடி முகத்தை ஒட்டி வழிந்து, இரண்டு தோளிலும் ஏகத்திற்கு பரந்து கிடந்தது.. கொஞ்சம் ஆண் தன்மையுள்ள முகம். பொட்டு இல்லாதது நெற்றியின் அகலத்தை இன்னும் அதிகமாக்கிக் காட்டியது. எல்லாம் ஒரு வினாடியில் மனதில் பதிவாகிவிட்டது....”ஆகா இது பெர்னி அக்கா மாதிரி இருக்கே..... “ என்று தோன்றியது...மனக்குறளி சட்டென்று ”அக்காவா....!” என்று தன்னையறியாமலே கேட்டுக் கொண்டது.

பெர்னியின் பெயர் ’பெர்னாடின்’ என்பதன் சுருக்கம் என்பார்கள். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாது.என்னவோ. பெயருக்கேத்த தைர்யசாலி என்பார்கள்

கல்லூரி என்.சி.சியில் எல்லாம் அவள் உண்டு. பஸ்ஸ்டாண்டில் அவள் நிற்கிறாள் என்றால்...கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்..இல்லேன்னா அவள் வாயில் விழ முடியாது என்பார்கள். நல்ல வேளை அவள் எங்களை விட மூத்த செட். அநேகமாக எங்கள் புறாக்கள் முதலாண்டோ இரண்டாமாண்டோ படிக்கிற காலத்தில் அவள் இறுதியாண்டை முடித்து விட்டாள்.எப்போதும் சேலை ட்டியிருப்பாள்.அப்போதெல்லாம் லோஹிப் சாரி தமிழ் சினிமாவை லேசாக எட்டிப் பார்த்திருந்த நேரம்.அந்நேரத் தமிழ் நடிகைகள், லோஹிப் கட்டினால் இடுப்பின் கருப்புத் தழும்பு மேக்கப்பை மீறித் தெரியும்.. ராஜ்யஸ்ரீ போன்ற இந்தி நடிகைகளை லோஹிப்பில் பார்க்கவே, ’ஷெனாய்’, ’பிரம்மச்சாரி,’ போன்ற படங்களை விரும்பிப் பார்ப்போம்.ராஜயஸ்ரீ மேல் அப்படியொரு பைத்தியம். அற்புதமான நடிகையும் கூட. அவர் பிரபல டைரக்டர் வி.சாந்தாராமின் மகள். ‘கீத் கயா பத்தரோன் நே’ (கற்கள் கவி பாடின-என்று தலைப்பை சரியாக மொழிபெயர்த்து குமுதத்தில் பிரமாதமான விமர்சனம் எழுதியிருந்தார்கள். குமுதத்தில் சிறப்பாக எழுதுவதென்பது அந்தக்காலத்தில் ரொம்ப அபூர்வம்). ஒரு மலை முழுக்க ராஜ்யஸ்ரீயின் முகத்தை சிலை வடித்து வைத்திருப்பார்....சிற்பியாக வரும்,கதாநாயகன் ஜிதேந்திரா.

http://video.easybranches.com/video/4INDBRQVtuM/Geet-Gaya-Pattharon-Ne-from-Geet-Gaya-Pattharon-Ne-1964.html

ராஜ்யஸ்ரீ ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை –கிரிகோரி சப்மென் என்று நினைவு-மணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டதற்கு தென்கோடியில் நாங்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, துக்கம் அனுஷ்டிக்காத குறைதான்.அந்த திருமணமும் ரொம்ப நாள் நிலைக்கவில்லை என்பதற்கு அதிக சோகம் கொண்டோம், ”ஏன் நாமெல்லாம் இல்லையா”, என்கிற மாதிரி. பெர்னிக்கு ரஜ்யஸ்ரீயின் சாயல் என்று ஞானையா சொல்லுவான்.அவன் அவளது வீட்டுப்பக்கம். அது அவ்வளவு உண்மையில்லை என்றாலும் பெர்னியின் உடல் ஒரு சிற்பம்தான். சேலையும் .... இடுப்பை விட்டு இறங்கட்டுமா என்று கேட்பது போல் அழகாகக் கட்டியிருப்பாள் பெர்னியின் அப்பா அருமையாக வயலினும், ஆர்கனும் வாசிப்பார்.கொஞ்சம் இட்லர் மீசையுடன் சற்றே கனமான நாகேஷ் போல இருப்பார். நாங்கள் “ஏலே, காக்கும் கரங்கள் நாகேஷ்...” என்று ஞானையாவிடம் கேலி செய்வோம்.. காக்கும் கரங்கள் படத்தில் ”திருநாள் வந்தது தேர்வந்தது..ஊர்வலம் போகின்ற நாள் வந்தது.. ஓட முடியாமல் தேர் நின்றது.....” என்று பி.சுசிலாவின் பிரமாதமான பாட்டு வரும் அதில் நாகேஷ் வயலின் வாசிப்பது போலவும் வரும்... ஞானையா, .”போடா அவர் சர்ச்சுல் வாசிச்சு நீங்க கேட்கணும்”, என்பான். நாங்கள் அதற்கும் கேலி செய்வோம். யாரிடம் என்ன பந்தயம் கட்டியிருந்தாளோ., பெர்னி ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் வைத்து ஜம்மென்று தம் அடித்துக் கொண்டிருந்தாளாம்.. இதைக் கேள்விப்பட்டு பஸ்டாண்டிற்கு ஓடிப் போய்ப் பார்க்கப்போனோம்... அதற்குள் பஸ்ஸே போயிருந்தது....அவள், அப்பாவுக்கு வளர்ப்புப் பிள்ளைதான்.இதைக் கேள்விப்பட்டு அவள் அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் என்றும் அவர், இரவு நெடுநேரம், எதுவும் பேசாமல் வயலின் வாசிக்க அவள் மண்டியிட்டு மன்னிப்புக் கோரினாள் என்றும் மறுநாள் வந்து ஞானையா சொன்னான். அப்போதும் நாங்கள் “ யாரு, காக்கும் கரங்கள் நாகேஷா, நீ தானலே சிகரெட்டே வாங்கிக் கொடுத்தியாம் ”என்று கேலி செய்து சிரித்தோம்.ஞானையாவுக்கு கோபமே வராது.

ஆனால் ஒரு நண்பனின் கல்யாண வரவேற்பிற்கு-அவனுக்குத்தான் எங்கள் குழுவிலேயே முதலில் திருமணம் நடந்தது, அப்பாவும் மகளும் வயலின் பெட்டியுடன் வந்திருந்தார்கள்.அவர் மணமக்களுக்கு கல்யாணப் பரிசாக அரை மணி நேரம் வயலின் வாசித்தார்....அன்று பிரபலமான கிளாரினெட் கச்சேரி வேறு இருந்தது. கிளாரினெட் வாசிப்பவருடன் இணைந்தும் அவர் வாசித்தார், ஜுகல் பந்தி போல. வாசித்து முடித்துப் போகையில் நான் கவனித்தேன், கிளாரினெட்காரரின் கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை..ஆறு ஏழு வருட இடைவெளியில் நாங்கள் சற்று எங்கள் கேலிகளைக் குறைத்திருந்தோம். உண்மையிலேயே அற்புதமான வாசிப்பில் நெகிழ்ந்து போயிருந்தோம்..நெகிழ்ச்சியை இரவில் எப்படிக் கொண்டாடினோம் புது மாப்பிள்ளை செலவில் என்பது சொல்லாமாலே தெரிந்திருக்கும்.
பெர்னியைத் திடீரென்று பார்த்ததும் ஆச்சரியத்தில் பேசாமல் நின்றேன். அவளும், “ ஏய் நீங்க...நீ...ஸ்டீபன் ஞானையா சேக்காளியில்லா... “ என்றாள். தெருவில் ஒன்றிரண்டு பேர் நின்று இதைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். நாய், குரைப்பை நிறுத்தியிருந்தாலும், இன்னும் அடங்கியபாடில்லை. அதை அடக்கியவாறே தெருவில் நின்றவர்களை “ என்ன ...?” என்று பார்வையாலே கேட்பது போல் பார்த்து விட்டு, ” வா உள்ளே” என்றாள். நான் எங்களது வீட்டின் மாடிக் கூரைக்கு பனங்கம்புகள் வாங்குவதற்காக அந்தத் தெருவில் ஒருவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன். ஓடு போட்ட பழைய மாடி வீடு, அதன் பனங்கைகள் இற்று விழ ஆரம்பித்திருந்தன....”ஒன்று அதை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டுக் கூரையைத் தட்டி விட்டு செண்ட்ரிங் போடு” என்று அதை மேற்பார்க்கும் உறவினர்கள் வற்புறுத்தியதாலேயே கிடைக்காத லீவை எடுத்துக் கொண்டு வந்திருந்தேன்.

இன்னும் அதே துணிச்சலான தொனியும் ’அசால்ட்டான’ நடையும் போகவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே நேரமாகிறதே என்கிற மாதிரியில் தயங்கி நின்றேன். அவள் ”என்ன...? “ என்று மறுபடி அதிகாரமான தொனியில் கேட்டதும்...கால்கள் மரியாதையாக உள்ளே சென்றன. இல்லையென்றல், ”போகிறாயா.. போ...”என்று கதவைச் சாற்றினாலும் சாற்றி விடுவாள். .நாய் சற்று அடங்கி வாலை ஆட்டியது,. “பார் ’டார்லின்’ சமாதானமாகி விட்டான்....நீ தாராளமாய் வரலாம் என்கிறான்... வா...” என்று சொல்லியபடியே அதை அவிழ்த்து விட்டாள். வீட்டினுள் சென்றாள்.அந்த வீடு ஏற்கெனவே எங்களுக்குப் பழக்கமான வீடுதான். நல்ல பெரிய வீடு. முன் வெராந்தாவில் உயரமான இரண்டு தூண்கள் மட்டும் இருக்கும்.இப்போது அது உயரத்திற்கு பெரிய மூங்கில் அழி அடித்து க்ரீப்பர்கள் எல்லாம் படர்ந்திருந்தது. நிறைய சிமெண்ட் தொட்டிகளில், க்ரோட்டன்ஸ், பின்சார்வெல்ஸ், பெரணீ, ரோஜா என்று செடிகளாக இருந்தன.ஆனால் அவையெல்லாம் சமீபமாகப் பராமரிக்காமல் இருப்பது போலிருந்தது.

பூபாலனின் ஆச்சி வீடு அது.அவனது ஆச்சி மட்டும் அவ்வளவு பெரிய வீட்டில் தனியே இருந்தாள்.கூடமாட ஒத்தாசைக்கு பண்டாரம் பிள்ளை என்கிற தவசுப்பிள்ளை மற்றும் மேனேஜர்.எல்லா வரவு செலவுகளும் அவர்தான். காலணா திருட மாட்டார்.கல்யாணமும் பண்ணிக் கொள்ளவில்லை.அவருக்கு நான் அறியவே முப்பது வயதுக்கு மேலிருக்கும். அதாவது என்னையும் பூபாலனையும் விட இருபது வயதாவது கூட இருக்கும். ஆனால் எல்லோரும் அவரை நீ, வா, போ என்று ஒருமையில்தான் கூப்பிடுவார்கள்.ஆச்சி கூப்பிடும் பழக்கம்.அவரும் ஒன்றும் சொல்ல மாட்டார்.எங்கே போனாலும் மடித்துக் கட்டிய எட்டு முழ வேட்டி மட்டும்தான்.சட்டை மேல்த்துண்டு எதுவும் கிடையாது. கல்யாண வீட்டிற்கு போகும்போது மட்டும், போனால் போகிறதென்று ஒரு கதர்ச் சட்டை போட்டுக் கொள்வார்.அதையும் எப்படா கழட்டுவோம் என்கிற மாதிரி ஒரு தவிப்பு தெரியும். சில பெரியவர்கள், ”வே பண்டாரம் பிள்ளை, என்ன இன்னும் சட்டையோட அலையுதீரு, கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணுக்கு நாலாம் நீர் சடங்கு நடக்கே..” என்று கேலி செய்வார்கள்.” எங்கெ ஐயா இன்னும் பொம்பளை பந்தியே முடியலையெ..நீங்க அதுக்குள்ளேயே ராத்திரி ஆன மாதிரி பேசுதீங்களே” என்று சிரிப்பார்.

பட்டாசல் இப்பொழுது டிராயிங் ரூம் ஆகி இருந்தது. நடுவில் சோஃபா செட், டீப்பாய், அழகான கண்ணாடித்தட்டில் கொஞ்சம் பழங்கள், டீப்பாய்க்கு கீழே பழைய ஆங்கில தினசரிகள், ஒரு ஆஷ்ட்ரே, என்று ஜாடை மாறி இருந்தது.முன்பு ரேடியோ கிராம் இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு டி.வி. பூபாலன் அம்மா வீடு அதற்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது.. பூபாலன், அதாவது பூரண பாலசுப்ரமணியன் ஆள் நல்ல வளர்த்தி, வீட்டில் அம்மாச்சி செல்லம். யாருக்கும் அடங்க மாட்டான்.அவனது ஆச்சி பெரிய பண்ணையார் வீட்டு வாரிசு.எல்லாமே அவள் சொத்து என்பார்கள்.அவன் ஆச்சி வீட்டிலேயேதான் இருப்பான். பத்து படிக்கும் போதே ஆச்சி அவனுக்கு, புல்லட் பைக் வாங்கித் தந்து விட்டாள். அவன் கேட்டானென்று குதிரை வாங்குவதற்கு பண்டாரத்திடம் சொல்லி அனுப்ப, அவர், விவரம் தெரியாமல், பாலனின் அப்பாவிடம் போய் நின்றிருக்கிறார்.அவர் நேரே ஆச்சியிடம் வந்து, ”செல்லம் கொடுக்கதுக்கும் அளவில்லையா.....அத்தையம்மா” என்று சத்தம் போட்டுவிட்டுப் போய் விட்டார்.அவர், வராதவர் வந்ததும், முகம் பார்த்துப் பேசாதவர் பேசியதும் ஆச்சி சற்று ஆடிப் போய்விட்டாளாம். ”ஏய், பண்டாரம் பட படங்கு, பானைச்சட்டி குடுகுடுங்குன்ன மாதிரி அவுக கிட்டயா போய் சொல்லுவே....அவுகளும்தான் எதுக்கு இப்படிக் குதிக்காக, ஏன் எங்க வீட்டில குதிரையும் சாரட்டும் இருந்ததில்லையாமா...” என்று அங்கலாய்க்க ஆரம்பித்திருக்கிறாள். எல்லா விஷயமும் கேள்விப்பட்டு பாலனின் அம்மா தன் அம்மாவை சமாதானப் படுத்த, போட்டதை போட்டமாதிரி கைச் சோலி எல்லாம் விட்டுவிட்டு ஓடியே வந்து விட்டாளாம்.எல்லாமே பாலன் சொல்லிச் சிரிக்கிற, பெருமையடித்துக் கொள்கிற கதைகளில் ஒன்று.

நான் பெர்னியை நிமிர்ந்து பார்க்காமல், குனிந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். பேசவேயில்லை. அவளாகத்தான் ஆரம்பித்தாள் “ ஏய், அம்பிகாபதி, உங்க ஆளு அதாம்ப்பா உங்க அமராவதி கொஞ்ச நாள் இந்தா எதிர் வீட்டிலதான் குடியிருந்தா தெரியுமா.....””ஆமா இப்ப பத்திரிக்கைகளிலெல்லாம் எழுதறியாமே.. நீ நோட்டில் எழுதி வச்சிருப்பியே அந்த மாதிரி, நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டுன்னு அது மாதிரி அவ சுருள் சுருளான தலை முடிதான் உன்னை கிறுக்கனா அலையவிட்டிருக்கு, ஒரு நாள் குற்றாலத்தில பார்த்தேன் ஐந்தருவில வச்சு, எல்லா அருவிகள்ளையும் குளிச்சுட்டு பிசாசு மாதிரி தலை விரிஞ்சு கிடக்க ஐந்தருவிக்கு வந்தா பாக்கணும்....., எனக்குத் தெரியும் நீயும் அங்கதான் எங்கேயாவது இருந்திருப்பேன்னு.. . ஆனால் தேட முடியலை, அன்னக்கி பாலன் ஏகமா குடிச்சுட்டு காரிலிருந்து இறங்கவே கஷ்டப்பட்டான்......” சொல்லும்போதே குரல் கம்மத்தொடங்கியது.வலது கையிலிருந்த பிறை நிலா வடிவத் தழும்பை இடது கையால் தடவ ஆரம்பித்தாள்.அவளுக்கு இடுப்பிலும் இதே போல் ஒரு தழும்பு உண்டு.

ஞானையா ஒரு ப்ளஸ் டூ பிள்ளையை டாவடித்துக் கொண்டிருந்தான்.அதை எப்படி கணக்குப் பண்ணினான் என்றே புரியவில்லை. என்னையும் அழைத்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் ஒரு தெருவில் ராத்திரி எட்டுமணி சுமாருக்கு கிழக்கும் மேற்குமாக அலைந்து கொண்டிருந்தான்.அந்த தெருவின் முடிவில் ஒரு வாய்க்கால். ஸ்டாப் பெயரே வாய்க்கால்ப்பால ஸ்டாப்தான்.இரண்டு தடவை அலைந்தாயிற்று. மூன்றாம் முறை போனால் “ஏல யாராவது கட்டி வச்சிராமலே...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வீட்டிலிருந்து அந்தப் பெண் வெளியே வந்து உங்களுக்கு யாரைப் பார்க்கணும் என்று கேட்டது. அவளுக்கருகே ஒரு சேக்காளி .” இல்லை.... என் தங்கை.. குளோரின் ஒரு நோட்டு வாங்கி வரச் சொன்னாள்.....மனோ வீடு எது” என்று கேட்டான்..இதுதான் என்றது சேக்காளிப் பெண்.அதற்குள் அவளது சித்தி வெளியே வந்தாள். “ யாரப்பா தம்பி என்ன விஷயம்...” என்றதும் ஞானையா அதே கதையச் சொன்னான்.அவள் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தொடை நடுங்கிக் கொண்டிருந்தது....”சரி கொடுத்து அனுப்பிட்டு வா என்றாள் சித்தி. அவள் ஒரு நோட்டைக் கொடுத்தாள்.”ஞாவகமா நாளைக்கி நோட்டைக் கொண்டு வரச் சொல்லிருங்க...”என்று சத்தமான சிரிப்புக்கிடையே சேக்காளிப் பெண் சொன்னது.

இரண்டு பேருக்குமே வெலவெலத்துப் போனது.நோட்டுக்குள் காதல் கடிதம் வேறு.நான் படிக்கிற முதல் காதல்க் கடிதம் அதுதான் என்று நினைக்கிறேன்.” இயற்கையெனும் இளைய கன்னி (மனோ), ஏங்குகிறாள் துணையை( ஸ்டீபன்) எண்ணி ....”என்று ஆரம்பித்து புகுந்து விளையாடி இருந்தது பெண். சித்தியின் கொடுமை பற்றி அங்கலாய்ப்பு வேறு.ஞானையாவுக்கு நோட்டை எப்படி திரும்பக் கொடுப்பது என்று ஒரே யோசனை. மறுநாள் அவனே எப்படியோ கொடுத்து விட்டான்.இதில் வேடிக்கை, அந்தப் பெண்ணுக்குப் பதில் எழுத என்னிடம் கவிதைகள் கேட்டிருந்தான். நான் என் கவிதை நோட்டைக் கொடுத்து விட்டு, ஏங்கிக் கொண்டிருந்தேன்.என் நோட்டைத்தான் பெர்னியிடமும் காட்டியிருக்கிறான், ஸ்டீபன்.அவள் என்னை அழைத்து வா, பார்ப்போம் என்றாளாம்.”ஏய் யார் இந்தக் காதலன், வார்த்தையிலேயே தாஜமகால் கட்டியிருக்கிறான், ஆளைக் கொஞ்சம் காண்பி பார்ப்போம்“ என்றாளாம்.சொன்னதோடு சரி, நானும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்தேன்.அவளைச் சந்திக்க தைரியமில்லை.ஆனால் ஓரிரு முறை சந்தித்தேன்.

பெர்னியின் கண்ணில் கண்ணீர் துளிர்த்திருந்தது. அப்போதுதான் என் கண்ணில் பட்டது பூபாலனின் மாலையிட்ட படம். ஆகா, யாரோ சொன்னார்களே அவன் இறந்து போனதாக என்று நினைவு வந்தது.பக்கென்றிருந்தது வயிற்றுக்குள். பெர்னி இன்னும் தழும்பையே வருடிக் கொண்டிருந்தாள். அதில் தனக்குத்தானே அவள் எதையோ கண்டு கொண்டது போலிருந்தது. வருடுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லாம் பழங்கதை என்பது போல சோகமான முறுவல் ஒன்று உதட்டில் நெளிந்தது. பழங்கதை என் நினைவில் ஆடியது அன்று திடீரென்றுதான் திருச்செந்தூர் போகலாம் என்று முடிவெடுத்தோம். பூபாலன் கார் எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தான். அநேகமாக எல்லோரும் வேலை தேடுகிற வேலையைத்தான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தோம்.அவனுக்கு வேலை பற்றியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை.நன்றாகத்தான் பழகுவான். ஆனாலும் ஏனோ ஒரு ஒட்டுதல் இருக்காது. எப்போதும் ஒரு பெட்டிக்கடை முன் நின்று அரட்டை நடக்கும். திடீரென்று வருவான். பைக்கில் அமர்ந்தபடியே, யாரிடமாவது, ”ப்ரதர் என் கணக்கில் ஒரு சிகரெட் வாங்குங்க” என்பான், ”அப்படியே உங்களுக்கும் வாங்கிங்க” என்பான். அதைக் கேட்கும்போது எனக்கெல்லாம் எரிச்சலாயிருக்கும். அவனே இறங்கி வாங்கிக் கொண்டாலென்ன என்றிருக்கும்.அவன் நடவடிக்கை, கதையாடல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.

பொதுவாக நான் அவனிடமிருந்து சற்று விலகியே இருப்பேன். காரை இன்னொருவன் எடுத்து வந்தான்.நிறையப்பேர் சேர்ந்து விட்டதால், சிலரைக் கழிக்க வேண்டியதாயிற்று.சிலர் பஸ்ஸில் வருவதாகச் சொன்னார்கள் நானும் பஸ்ஸில் போகவே பிரியப்பட்டேன்.ஆனால் என்னைச் சிலர் காரில் வரச் சொல்லி கட்டாயப் படுத்தினார்கள்.சில அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் கேட்டுக் கொண்டே போகலாம் என்றோ என்னவோ.காரில் போகையில்தான் சொன்னார்கள், பாலன் பைக்கில் வரப்போவதாகவும் அவனுடன் யார் வரப்போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றும். எங்களில் சிலருக்கு பராபரியாக காதில் விழுந்திருந்த செய்திதான், பூபாலனும் பெர்னியும் நெருக்கமாயிருக்கிறார்கள் என்று. பெர்னியுடன் இரண்டு மூன்று பேரை நெருக்கமாக்கி பேச்சு அடிபட்டு அது மறைந்துவிட்டது. ஸ்டீபன், நாணிக் கோணி சமர்ப்பித்த ‘வேட்புமனு’வை நிராகரித்து....”எதற்கு எனக்கு, தலை மாட்டில் உட்கார்ந்து கதைப் புஸ்தகம் படிக்கப்போறியா...” என்று கிண்டலடித்து அனுப்பியதாக பாலனே சொல்வான்.

நாங்கள் பின் சீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு வந்தோம்.பாதி வழியில் திடீரென்று பைக் ஒன்று எங்களை முந்தியது.பாலனும் அவளும்.. பாலனை இடுப்பைச் சுற்றிக்கட்டிப் பிடித்திருந்தாள். அப்போது பார்க்கையில் பாலனை விட சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். திடீரென்று கார் அவர்களை முந்தியது. மறுபடி பாலன் முந்துவதற்கு முயற்சித்தான். கொஞ்ச நேரம் இந்த தொட்டுப்பிடி விளையாட்டு நடந்தது. சற்று நேரம் கழித்தே பார்த்தேன் திடீரென்று பாலன் காரை இடது கையால் தட்டியபடி கத்திக் கொண்டே வந்தான். யாருக்கும் புரியவில்லை.. இங்கே காருக்குள் சிகரெட் பற்றவைக்கும் முயற்சியில் எல்லோரும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்.என்ன நடந்தது என்று நிதானிக்கும் முன் அவளை அவன் கீழே தள்ளினான். அவன் காரோடு இழுபட்டுக் கொண்டே பைக்கை ஓட்டி வந்தான். அவனுடைய பம்பர் காரின் பம்பரில் சிக்கிக் கொண்டது போலிருக்கிறது. எங்கள் கூக்குரலைக் கேட்டுக் கார் ஒருவழியாய் நின்றது. குறைந்தது ஒரு கிலோ மீட்டராவது வந்த பாதையிலேயே ஓடி இருப்போம் நானும் இன்னும் இரண்டு பேரும். பெர்னி சாலையோரம் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தாள்., நல்ல மத்தியான வேளை, அதனால் பெரிய போக்கு வரத்து ஒன்றுமில்லை.பெர்னி எழுந்து நின்றாள். அப்பாடா என்றிருந்தது. அதற்குள் கார், பின்னால் வந்தது.பாலனுக்கு நல்ல அடி, காருக்குள்ளிருக்கிறான் என்றார்கள்.

அவள் தன் வீட்டுக்குப் போகத் தயங்கினாள். வீட்டில் என்ன சொல்லிவிட்டு வந்திருந்தாளோ. பெர்னியை, ஆச்சி வீட்டில் கொண்டு சேர்ப்பது என்று பாலனின் யோசனையின் பேரில் முடிவாகி, அது என் பொறுப்பாயிற்று..ஏனென்றால் பாலனின் ஆச்சியை எனக்குத்தான் கொஞ்சம் தெரியும்.ஒரு வகையில் தூரத்து உறவு. ஆச்சிக்கு இது பிடித்தமில்லை, என்னை யாரென்று விசாரித்துக்கொண்டிருந்தாள் எனக்கு உறவு வழிகளைச் சொல்லத் தெரியவில்லை, விரும்பவுமில்லை.. நான் ஆச்சியிடம் உறவையும் காரண காரியங்களையும் விளக்கும் முன்பாகவே பாலன் வந்து விட்டான்.நிறையக் கட்டுப் போட்டிருந்தான்.அவனைப் பார்த்ததும் ஆச்சியின் கோபமெல்லாம் போய் அழுகை வந்து விட்டது.நான் நழுவி விட்டேன்.

இந்த சங்காத்தமெல்லாம் ஓய்ந்து முடிந்தது. அவ்வப்போது அவர்கள் கதை சபைக்கு வரும். பாலனை விட அவளுக்கு நான்கு வயதாவது அதிகம் இருக்கும். அவன் ‘மாட்டிக்கொண்டான்’ என்றே எல்லோரும் பேசினார்கள்.ஸ்டீபன் மிலிட்டரியிலிருந்து லீவில் வந்திருந்தான். ஒரு நாள் மதியம் போல ஸ்டீபன் வீட்டு மாடியிலிருந்து அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அன்று அவன் வீட்டில் பிரியாணி என்று சாப்பிடக் கூப்பிட்டிருந்தான். ஒரு வித்தியாசமான முகப்பவுடர் மணம் மாடிப்படியேறி வந்தது.ரொம்ப ஸ்ட்ராங்கான மணம்.யார் என்று பார்த்தால் பெர்னி..நான் ஒரு மேஜையின் ஒருபுறம் உட்கார்ந்திருந்தேன். எதிர் முனையில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவள் உட்கார்ந்தாள். ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் சாவகாசமாகப் பார்ப்பது அதுதான் முதல் முறை. திடீரென்று என்னிடம், ”ஹேய், நீங்கதான் ஸ்டீபன் சொன்னதா... ஆமா யார் அது. உங்கள் கவிதைக்காதலி என்று நேராகக் கேட்டாள். ஹி ஹி என்று தயங்கிக் கொண்டே சொன்னேன். ”ஓ... அதுவா... அது நல்ல பெண்ணாயிற்றே... அவளும் உண்டா...” என்றாள்...” இல்லை இல்லை என்று அவசரமாக மறுத்தேன்.ஸ்டீபன் உன் கவிதை நோட்டுகளை வைத்திருந்தான்.. நானும் பார்த்தேன்..என்றாள்.”நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டு என்று முதல்ப்பக்கம் எழுதியிருந்ததைப் படித்தேன்......அது என்ன, இதுவா நீளமான முடி..”என்று அவள் முடியைக் காண்பித்தாள். ”இல்லை, அது கண்ணதாசன் பாட்டு... ”என்றேன். ஸ்டீபன் அவள் ரொம்ப சங்கோஜமில்லாத டைப், பட் பட்டென்று மனதைப் படம் பிடித்துவிடுவாள் என்று சொல்லியிருக்கிறான், என்றாலும் என்னவோ போலிருந்தது.

அவன் மேஜையில் தி.ஜா வின் இரண்டு நாவல்கள் இருந்தன. ’மலர் மஞ்சம்’, ’அன்பே ஆரமுதே’. பலத்த தேடலுக்குப்பின் ஒரு லைப்ரரியிலிருந்து நான் எடுத்து வந்திருந்தேன்.அதை எடுத்துப் பார்த்தாள். “மோக முள்’ இருக்கா என்றாள். இவள் என்ன மாதிரியான பெண், உண்மையில் இதையெல்லாம் படிக்கிற நம்முடைய ஜாதியா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”எங்க ப்ரொஃபஸர் சொல்லுவார்..அது ரொம்ப நல்ல நாவலாமே...காதல் எல்லாம் சும்மா, வெறும் உடம்பு மட்டும்தான் எல்லாமுமே என்று சொல்லியிருப்பாராமே...”என்றாள். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.அவள் வலது கையில் தழும்பு நல்ல தடிப்பாய் பிறை மாதிரி இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இது அன்றைய விபத்தில் ஏற்பட்டது. இதோ இடுப்பில் இன்னும் பெரிதாய்க் கிழித்து விட்டது” என்று எழுந்து நின்று இடது வயிற்றைக் காட்டினாள்.வயிற்றின் சரிவில் சேலையை ஒட்டி.....தழும்பு நீளமாய் உள்ளிறங்கியது. ”அவன் இதைத்தான் எப்போதும் தடவிக் கொண்டேயிருப்பான்” என்றாள் திடீரென்று. நான் மச்சு வெக்கையில் சட்டை வேறு போட்டிருக்கவில்லை. அதனால் ரொம்ப நெளிந்து கொண்டிருந்தேன் ”அவன் என்னை இப்போதெல்லாம் ரொம்பத் தவிர்க்கிறான்...சொல்லி வை, என் குணம் எல்லோருக்கும் தெரியுமில்லையா...” என்றாள். “நீங்கள் இதை ஸ்டீபனிடம் சொல்லுங்களேன் அவன்தான் அவனுக்கு நெருக்கம்., உங்களுக்கும் சொந்தம்” என்றேன். “அவனுக்கு என்ன தெரியும், எங்களுக்கு மிலிட்டரியிலிருந்து ரம் வாங்கிவந்து தருவான், வேறு என்ன செய்வான்” என்றாள்.

என் மௌனத்தைப் பார்த்தோ என்னவோ. ”சரி நான் போகிறேன், சும்மா காதல் கத்திரிக்காய் எல்லாம் விட்டு விடு....இப்போ நான் சம்மதிச்சா என்னை தொட்டுப்பார்க்க மாட்டியா” என்றாள்.. வெறுமே எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.”நானே பார்க்கிறேன் அவனை. முடிஞ்சா சொல்லு” என்று மிரட்டுகிற தொனியில் சொல்லி விட்டு இறங்கிப் போனாள்.நான் சாயுங்காலம் இதை சபையில் சொன்னபோது “போடா நீ தான் கடைசி ஆள். அவ எல்லார்ட்டயும் சொல்லிட்டாளாம்....அது அவங்க பாடு“ என்று சாதாரணம் காட்டினார்கள். நானும் ”தொட்டுப்பார்க்க மாட்டியா..” கதையை எல்லாம் சொல்லவில்லை.

நான் வேலை கிடைத்து வெளியூரில் செட்டிலாகி விட்டேன். ஆச்சி இறந்து போய் ஆச்சி வீட்டிலேயே அவளுடன் அவன் தங்கி இருக்கிற கதை மட்டும் தெரியும். அவனை வீதியில் ஓரிரு முறை பார்த்த போதும் என்னைப் பார்க்காமலே நாயைப் பிடித்துக் கொண்டே போனான். நானும், “நரி இடம் போனா என்ன, வலம் போனா என்ன, மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி” என்ற மாதிரியில் போய்விட்டேன்.

என்ன ஆச்சு அவனுக்கு என்று கேட்கலாமா, என்று நினைத்தேன். அந்த சம்பிரதாய சாமர்த்தியமெல்லாம் கிடையாதே என்றும் தோன்றியது.”ஸ்டீபன் எங்கே இருக்கிறான்” என்று பொதுவாகக் கேட்டு வைத்தேன்.”அவன் எப்போதாவது வருவான், இங்கேதான் இருக்கிறான், டிஃபன்ஸ் கேண்டீனிலிருந்து கொஞ்சம் சாமான் வாங்கித் தருவான்... நீ நினைக்கிறதும்தான்.. இவனும் குடிச்சுக் குடிச்சேதானே செத்தான்....என்ன, பாவிமட்டை, பிள்ளையே பெத்துக்கக் கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டான்....நானே ஆப்பரேட் பண்ணிகிட்டேன்....லேப்ராஸ்கோப்பி....தழும்பே இல்லாமல்...” என்று சொல்லிக் கொண்டே கையின் தழும்பை வருடியபடி சோஃபாவின் முதுகில் தலையைச் சாய்த்துக் கண்ணை மூடிக் கொண்டாள்.....”நீ போய்ட்டு வாப்பா, என்ன வேலையாப் போறியோ...” என்றாள். நான் தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினேன்...சட்டென்று நிமிர்ந்து, ”எதிர் வீட்டில் இப்ப உன் ஆள் இல்லை அவ எங்கேயோ இருக்காளாம்.. அங்க போய் எட்டிப்பார்க்காதே...” என்று.. சிரிக்க முயன்றாள். எப்படி மனதைக் கண்டுபிடித்தாள் என்றிருந்தது.



--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </