வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

ஆசிரியர் பற்றி
------------------------

சமயவேல்

எட்டையபுரம் அருகில் உள்ள வெம்பூர் என்ற கிராமத்துக்காரன் .

முதல் கவிதைத் தொகுப்பு காற்றின் பாடல்

அடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு : அகாலம்

பிறகு நண்பர் எஸ். இராமகிருஷ்ணனின் அட்சரம் இதழில் வந்த கவிதைகள் என மொத்த கவிதைகளும் அரைக்கணத்தின் புத்தகம் உயிர்மை பதிப்பகம் கொண்டு வந்தது.

தெற்கிலிருந்து சில கவிதைகள் என்ற தொகை நூலும் வந்திருக்கிறது.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
கருப்பு பாலைவனம்
தொடர் பற்றி
-------------------------
 
  இன்று நகரங்களில் வாழ்கிற நம்மில் பலரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான். பல கிராமங்கள் நகர்ந்து நகரின் புறநகர்ப் பகுதிகளாகவும் சேரிகளாகவும் மாறிவிட்டன. தாய் வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து கணவர் ஊருக்குக் கொண்டு செல்லும் பொழுது ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து தொட்டிற் சேலையில் முடிந்து அனுப்புவார்கள். இல்லை என்றால் புது இடத்தில் அந்தக் குழந்தைக்கு தூக்கம் வராதாம். ஆனால் இன்று ஊரிலிருந்து சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் எப்படித் தூங்குகிறார்கள்? தாங்கள் பிறந்த கிராமத்து மண்ணை தங்கள் மனதில் ஒரு மூலையில் சிறந்த ஞாபகங்களாக முடிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி தன் மனதில் முடிந்து வைத்திருக்கும் தங்களூர் மண்ணின் சில நினைவுகளை இந்தக் கட்டுரைத் தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சமயவேல். இந்த நினைவுகள் மூலம் வறண்ட கரிசல் காட்டின் கறுப்புப் பாலைவனத்தின் நிலவியல் குறிப்புகள், தங்களூர் மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், தங்கள் கடவுள்கள், சாமிகள், பேய்கள், தொன்மங்கள், சடங்குகள், விழாக்கள் என எல்லாவற்றையும் எழுதிவிடும் முனைப்பில் இத் தொடரைத் எழுதவிருக்கிறார்.
 
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சமயவேல் தொடர்கள் வாயில்


உருமித் திரியும் தற்கொலைகள்

சமயவேல்  

டுன் டுவ், டுன் டுவ், டுன் டுவ் என்று அகாலத்தில் எழுந்த உருமிச் சப்தம் கேட்கக் கேட்க பயத்தில் மனம் சுருளத் தொடங்கியது. ஒற்றை உருமி என்பது ஒரு அகால மரணத்தின் அறிவிப்பு என்பது விஜயா அக்காவிடம் அம்மா சொல்லிக் கொண்டிருந்த போது தெரிந்து கொண்டேன். நடுத் தெருவில் ஒன்னம்மா அரளி விதையை அரைத்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஒற்றை உருமி துக்க அலைகளாக ஊர் முழுதும் பரப்பிக் கொண்டிருந்தது. ஒன்னம்மாவை நான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அது மாலை நேரங்களில் அவள் முற்றம் தெளித்துப் பெருக்குகிற நேரமாக இருக்கும். முற்றம் என்ற பெயரில் அவளது தெரு முழுவதையும் பெருக்கிக் கொண்டிருப்பாள். அவளுக்குத் தான் குழந்தை குட்டி கிடையாதல்லவா, நல்லாப் பெருக்கட்டும் என்று பார்ப்பவர்கள் கூறிச் செல்வார்கள். குழந்தை இல்லாததற்காகவா அவள் அரளி குடித்தாள்? பெரியாஸ்பத்திரியில் இறந்ததால் அறுத்துத் தான் கொடுத்தார்களாம். ஓலைப் பாயில் சுருட்டப்பட்ட அவளது உடல் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஒற்றை உருமியைச் சுற்றி ஊர் திரண்டு கொண்டிருந்தது. சிறுவனான எனக்கு பயம் கூடிக் கொண்டே இருந்தது. நானும் திருஞானம் அண்ணனை ஒட்டியபடி நின்று கொண்டேன். டேய் நீ பேசாம வீட்டுக்குப் போ என்றான். நானும் சரிண்ணே என்று சொல்லிவிட்டு தெருக்கடைசியில் போய் நின்று கொண்டேன். பிணம் வந்தபொழுது அழுகைச் சப்தமும் முண்டியடித்த கூட்டமும் பேச்சுச் சப்தமும் பயமும் துக்கமும் கலந்த உருமிச் சப்தமும் சேர்ந்து எனக்குள் ஆழப் பதிந்து விட்டன. ஓலைப்பாயின் ஒரு சிறு பகுதியை மட்டுமே நான் பார்த்ததாக ஞாபகம். ஒன்னம்மாவின் சாவுக்கு காரணங்களாகப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். துடி துடிப்பான முப்பது வயது கூட ஆகாத ஒன்னம்மா, அரளி விஷத்தின் கொடிய வலியால் துடிதுடித்து இறந்த கொடுமையை ஊர்க்காரர்கள் பல நாட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எனது இளம் பருவத்து உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஏராளமான தற்கொலைகள் ஊரில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. இவர்கள் எல்லாருமே பெண்களாக இருந்தது தான் பெரும் கொடுமையாக இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களைப் பெண்கள் முன்னெடுத்துச் சென்றதைப் பொறுக்க முடியாமல் ஆண்--மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுத்தது தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவதைக் கூட பொறுக்க முடியாத காலம் அது. விஜயாக்கா இறந்ததை என்னால் தாங்கவே முடியவில்லை. விஜயாக்கா மதுரையிலிருந்து வந்த பெண். கொஞ்சம் படித்த, நகரில் வளர்ந்த பெண்ணை ராஜபாண்டிக்கு எப்படி திருமணம் முடித்தார்கள் என்று புரியவில்லை. நல்ல நிறத்தில் ஒடிசலாக புதுவிதமான சேலைகள் உடுத்திய புதுப் பெண்ணாய் வெளியே வரவே வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தான் இருந்து வந்தாள். அக்காவுக்காகவே ட்ரைவிங் பழகி ராஜபாண்டி ஜெயவிலாஸில் சேர்ந்தார். பள்ளிக்கூடத்துக்குப் போகும் போதும் வரும் போதும் அக்காவைப் பார்த்தால் வெட்கப்பட்டுக் கொண்டு ஒரே ஓட்டமாக வந்துவிடுவேன். புதூர் நூலகத்தில் இருந்து எடுத்து வரும் தமிழ்வாணன் புத்தகங்களை அக்காவும் வாங்கிப் படிக்க ஆரம்பித்ததில் இருந்து தான் எங்கள் சிறிய நட்பு ஆரம்பித்தது. விஜயாக்காவின் குரலை எதனோடு ஒப்பிடுவது என்று தெரியவில்லை. என்னைச் சுண்டி இழுக்கக் கூடிய அவளது ஜலதரங்கக் குரல் ஒருபோதும் மறக்கக் கூடியதில்லை. ஆனால் இவள் எப்படி தூக்கிட்டுக் கொண்டாள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பல மாதங்கள் அந்த வீட்டுப் பாதையில் செல்வதைக் கூட நிறுத்தி விட்டிருந்தேன். தமிழ்வாணனின் "எங்கிருந்தோ கேட்ட குரல்" புத்தகம் கூட அவளிடம் தான் இருந்தது. லைப்ரரிக்கு பைன் கட்டியது ஞாபகம் இருக்கிறது. நிறைய வருடங்களுக்குப் பிறகு ராஜபாண்டி மாமாவை திருச்சிக்கருகில் ஒரு லாரி ட்ரைவராகச் சந்தித்த பொழுது விஜயாக்காவை நினைத்து வாய்விட்டு அழுதார். அவருக்குமே அவள் ஏன் இறந்தாள் என்று தெரியவில்லை. வாழ்வினுள் பொருந்த முடியாத தருணங்களில் இந்த அப்பாவிப் பெண்களை மரணம் உறிஞ்சிக் கொள்கிறது போலும்.

அமராவதி அண்ணி பூச்சி மருந்தைக் குடித்த பொழுது நான் உயர் நிலைப்பள்ளி மாணவனாக இருந்தேன். கொழும்பிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், மகேஷ் இருவருமே என் நண்பர்கள். இவர்களது அண்ணியான அமராவதி அவர்கள் எனக்கும் அண்ணியாகவே இருந்தார்கள். அண்ணியின் கணவரை நான் பார்த்ததே இல்லை. சிறுவயதிலேயே அண்ணியைத் திருமணம் முடித்து கொழும்பு சென்றவர் பல வருடங்களாக வரவே இல்லை. எங்கள் ஊரார்கள் எல்லோராலும் நேசிக்கப்பட்ட காத்தம்மா--திருமேனி தம்பதியரின் ஒரே மகள் அமராவதி. வேறு குழந்தைகளும் கிடையாது. கணவரோடு வெறும் நினைவுகளைக் கொண்டே வழ்ந்து வந்த அவர் அந்தப் பகுதியின் இளவரசியாகவே மதிக்கப்பட்டார். அண்ணியின் கணவர் ஊருக்கு வருவதாக திடீரென ஒரு பேச்சு கிளம்பியது. சென்னைக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது என்றார்கள். பிறகொரு நாள் ஊருக்கே வந்துவிட்டார். வந்தவர் பெரிய குண்டாக தூக்கிப் போட்டார். ஏற்கனவே அவர் இன்னொரு பெண்ணோடு வாழ்ந்து வருவதாகவும் சென்னையில் குடியேறிவிட்டதாகவும் கூறினார். அப்படியானால் அவரையே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணி? ஒரு கேள்விக்குறியாக வாழ்வதைவிட சாவது மேல் என்று பூச்சி மருந்தைக் குடித்து விட்டார். ரமேஷ், மகேஷ், நான் நாங்கள் மூவரும் அண்ணியைத் தூக்கிக் கொண்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். நள்ளிரவில் உயிர் பிரிந்தது. மறு நாள் மதியத்திற்குப் பிறகு தான் அண்ணியின் அறுத்த உடம்பை ஓலைப்பாயில் கொடுத்தார்கள். ஒரு லாரி பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம். சுடுகாட்டில் எரித்துவிட்டு வந்த இரவு முழுதும் தூங்காமல் பேசிக் கொண்டே உருண்டு கொண்டிருந்தோம். ஊர்க்காரர்கள் பல காலம் அவரது கணவரைத் தூற்றிக் கொண்டிருந்தார்கள். எவர் மரணத்திற்கோ எவரோ காரணமாகிறார்கள்.

இதை விடக் கொடுமையான மரணம் எனது அம்மாவின் தோழியும், எனது பிரியமான அக்காவும் ஆன மஞ்சுளா அக்காவின் மரணம்.

இந்த அக்காவின் வீடு எங்கள் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. நான் நிலக்கடலைக் காவலுக்கு வரப்பில் உட்கார்ந்து படித்தபடி இவர் எத்தனை குடம் தண்ணீர் எடுக்கிறார் என்று எண்ணிக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு நாளும் நாற்பது குடங்கள். என்னக்கா உங்கள் வீட்டுக்குள் கண்மாய் எதுவும் இருக்கிறதா, இவ்வளவு தண்ணீரைக் கொண்டு போய் எங்கே ஊற்றுகிறீர்கள் என்று கேட்பேன். அம்மாவும் அவரும் மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்பார்கள். அவர் மணமாகி வந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரது கொளுந்தனாருக்கு திருமணம் ஆகியது. அந்த அக்காவும் இவரைப் போன்றே நல்ல நிறத்துடனும் அழகுடனும் இருந்தார்கள். இருவரும் இணைந்தே 40 குடம் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை. ஒரு நாள் அக்கா பூச்சி மருந்தைக் குடித்துவிட்டதாக ஊரே அவர்கள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. உடனே உயிர் போய்விட்டதாம். வேக வேகமாக உடலைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். சிதையில் மஞ்சக்காவின் மஞ்சள் கால்கள் தீயில் வெடித்து உருகி எரிவதைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். யாரோ நண்பன் கையைப் பிடித்து இழுத்து கிணற்றுக்கு குளிக்க அழைத்துச் சென்றான். அடுத்த வருடமே சின்ன அக்காவும் இதே ரீதியில் இறந்து போனார். இரு சகோதரர்களில் ஒருவரின் காம ஊனமே இரு சகோதரிகளின் தற்கொலைக்குக் காரணம் என்று பின்னாடி புரிந்து கொண்டேன்.

இப்ப்டித் தொடர்ந்த எல்லாத் தற்கொலைகளுக்கும் பழம் நிலவுடைமைக் கலாச்சாரத்தின் இறுக்கமான பாலுறவுக் கட்டுப்பாடுகளும் அவை சார்ந்த பொய் நம்பிக்கைகளுமே காரணமாக இருந்திருக்கின்றன. ஆண் மைய சமூகத்தில், ஆண்களின் உடலியல் மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கும் பெண்களைப் பலி கொடுத்து வருகிறோம்.. உடலியல் சார்ந்த உளவியற் கோளாறுகளை முறைப்படி மருத்துவரிடம் போய் குணப்படுத்தும் வழக்கம் இன்றும் நம்மிடம் இல்லை. கிராமங்களில் திருமணமுறிவு, திருமணவிலக்கு என்பதெல்லாம் கற்பனையே செய்ய முடியாத விஷயங்கள்.

ஒற்றை உருமிச் சப்தம் இன்றும் கேட்டுக் கொண்டிருப்பது தான் பெரும் கொடுமை. அண்மையில் ஒரு இருபது வயதுப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். காரணம் அவளது சொந்த மாமாவிடம் ஏற்பட்ட தவறான உறவாம். அந்தப் பெண்ணின் திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்த உறவால் ஏற்பட்ட உளவியல் மற்றும் எதார்த்தச் சிக்கல்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கிணற்றுக்குள் குதித்துவிட்டாள்.

ஒற்றை உருமியின் துயரம் மிக்க உறுமல் என்று நிற்கும் என்று தெரியவில்லை.



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</