வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 3

பி.ஜி.எஸ். மணியன்  

3. அனைத்தும் அவன் செயல் என்று இரு மனமே. இரு மனமே. கொஞ்சம் பொறு மனமே" - (தனது அண்ணன் சுந்தர பாகவதர் இயற்றி ஜி. ராமநாதன் சொந்தக்குரலில் பாடிய முதல் பாடல் - இடம் பெற்ற படம் “விக்கிரம ஊர்வசி”)

டி.ஆர். சுந்தரம்

பேசும் சினிமா - வந்தாலும் வந்தது.. மக்களிடம் வேறு பேச்சே இருக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வியப்பில் அதை பற்றியே பேச்சுதான். திரையில் தெரியும் பிம்பங்கள் பேசுவதும், ஆடுவதும், பாடுவதும் - நம்ப முடியாத அதிசயமாகவே இருந்தது
.
திரைக்கு பின்னாலே பொம்மலாட்டக்காரன் மாதிரி யாரோ நின்று கொண்டு இதை எல்லாம் செய்கிறான் என்று நினைத்தவர்களும் உண்டு. அப்படி கண்டு பிடிப்பதற்காக திரையை கிழிக்க முற்பட்டவர்களும் உண்டு.

"வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான்யா" என்று தட்டிக்கொடுத்தவர்களும் உண்டு.

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் நான்கு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு விட்டன. அன்றைய காட்சிகளுக்கு டிக்கெட் வாங்க அரங்குகளை முண்டி அடித்துக்கொண்டு கூட்டம் முற்றுகை இட்டது.

முதல் பேசும் தமிழ்ப் படமாக "காளிதாஸ்" 1931 -இல் வெளியானது. ஆனால் அது முழு தமிழ் படமாக இல்லை. கதா பாத்திரங்கள் தமிழ் பேசினார்கள்; தெலுங்கு பேசினார்கள்; ஹிந்தி கூட பேசினார்கள்.

திரையில் தோன்றும் பிம்பங்கள் பேசுவதே அதிசயமாக கருதப்பட்டபோது அவை எந்த மொழியில் பேசினால் என்ன?

அடுத்த கட்ட முன்னேற்றமாக ஒரு முழுமையான தமிழ் படம் - தமிழே பேசும் படும் - எடுக்கவேண்டும். அதுவும் தங்கள் படம் தான் முதலாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டிருந்த போது... மும்பையின் "சாகர் மூவிடோன்" புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்தது.

ஒரு முழுநீள தமிழ் மேடை நாடகத்தை அப்படியே காமிராவில் பதிவு செய்து
சினிமாவாக ரிலீஸ் செய்தது.

அப்படி வந்த படம் தான் "காலவ ரிஷி". அப்போது மேடை நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்துக்கொண்டு இருந்த ஜி. ராமானதனுக்கு இந்தப் படத்திலும் "ஹார்மோனியம்" வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த இடத்தில் ஜி. ராமனாதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தனது துறையில் அன்றாடம் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஏற்ப தன்னையும்
மாற்றிக்கொண்டார் அவர்.

ஆரம்பத்தில் கதா காலக்ஷேபங்களுக்கு ஹார்மோனியம் வாசித்து வந்தவர் - அடுத்து நாடக மேடை பிரபலமான போது அவற்றுக்கு வாசிக்க வந்தார்.

இப்போது புதிதாக திரைப்படங்கள் - அதுவும் பேசும் படங்கள் - தோன்ற ஆரம்பித்ததும் அவற்றுக்கு வாசிக்க தன்னை தயார் படுத்திக்கொண்டார் அவர்.

இப்படி தான் சார்ந்திருக்கும் துறையில் ஏற்படும் நவீன மாறுதல்களை தானும் கற்றுக்கொண்டு அதற்க்கு ஏற்ற மாதிரி தன்னை தயார் படுத்திக்கொள்ளும் மனிதனே வெற்றிச் சிகரத்தை வெகு சுலபமாக எட்டுகிறான்.

அதற்கு மாறாக அது வரை இருந்து கொண்டிருக்கும் பழைய முறையையே விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு கால மாறுதலை ஏற்க மறுப்பவன் தேங்கி விடுகிறான்.


ஜி. ராமநாதனும், அவரது அண்ணா சுந்தர பாகவதரும் இந்த புதிய பொழுது போக்கு சாதனத்தை ஏற்றுக்கொண்டார்கள்.கலைத்துறையின் புதிய பரிணாம வளர்ச்சியான திரைப்படத் துறையில் காலூன்ற எண்ணம் கொண்டார்கள்.
.
அவர்களுக்கு "காலவ ரிஷி" கை கொடுத்தது. மேடை நாடகமான காலவரிஷி திரைப்படமான போது...அதற்கு முறையான இசை அமைப்பாளர் என்று யாரும் இல்லை. ஆனாலும் ஆளுக்கொரு பக்கமாக இழுத்தால் ... இசை இம்சையாக மாறிவிடுமே. அதனால் ஹார்மோனியம் வாசித்த ஜி. ராமநாதன் அனைவரையும் ஒருங்கிணைத்து தலைமைப் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டார்.

"லீடர்ஷிப் குவாலிட்டி" என்பார்களே அது இயற்கையாகவே அவருக்கு கை வந்திருந்தது.

காலவ ரிஷி வெளிவந்த பிறகு... தனி தமிழ் படங்கள் தயாராக ஆரம்பித்தன. கதை... கதைக்காக அந்தக் காலத்தில் சிரமப்படவே இல்லை. புராணக் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆகவே பல தரப்பட்ட பக்தி கதைகள் திரைப்படங்களாக வெளிவரத்தொடங்கின.

அப்படி வந்தவற்றுள் ஒன்று தான் "விப்ரநாராயணா". பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான "தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் கதை இது. இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் யார் தெரியுமா?

சுந்தர பாகவதர் .. நமது ஜி. ராமநாதனின் தமையனாரான சாட்சாத் ராஜாமடம்
சுந்தர பாகவதரே தான். இந்தப் படத்திலும் "ஹார்மோனிஸ்டாக" பணியாற்றினார் ஜி. ராமநாதன்.

ஜி. ராமநாதன் படவுலகில் நுழைந்த நேரம் நல்ல நேரமாக இருந்திருக்க வேண்டும். அப்போது சேலத்தில் இருந்து ஒரு இளைஞர் படத் தயாரிப்பில் நுழைந்தார். இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்று வந்த அவர் சொந்தப் பட நிறுவனத்தை துவக்கினார். நண்பர்கள் சிலருடன் முதலில் கூட்டுத் தயாரிப்பில் இறங்கினார்.

அவர் தான் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் T.R. சுந்தரம். அவர் பாகஸ்தராக இருந்த "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற நிறுவனம் தயாரித்த படம் தான் "பரசுராமர்". இந்தப் படத்துக்கு முறையாக இசை அமைய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் பட அதிபர் சுந்தரம்.

ஏற்கெனவே காலவ ரிஷி உள்ளிட்ட சில படங்களுக்கு ஹார்மோனிஸ்டாக பணியாற்றியபொழுது ஜி. ராமநாதன் காட்டிய ஆளுமைத் தன்மை அவரை மிகவும் கவர்ந்தது.

விளைவு. முதல் முதலாக "பரசுராமர்" படத்துக்கு இசைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்று இசை அமைப்பாளராக உயர்ந்தார் ஜி. ராமநாதன்.

சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் சி.வி. ராமன் - (இவர் தென்னாட்டின் முதல் டாக்கி ஸ்டூடியோ அமைத்த ஏ. நாராயணன் அவர்களின் சகோதரர் என்று திரு. ராண்டார் கை அவர்களின் மூலம் அறிய முடிகிறது) அவர்கள் தயாரித்த படம் "மகா மாயா" அல்லது "பிட்சாடனர்". (ஆரம்ப காலங்களின் இப்படி ஒரே படத்துக்கு இரண்டு தலைப்புகள் வைக்கும் வழக்கம் நாடகமேடையில் இருந்து திரை உலகுக்கும் வந்தது) ஜி. ராமனாதனின் தமையனார் சுந்தர பாகவதர் கதை வசனம் எழுதி நாரதராக நடித்த படம் இது. இந்தப் படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு ஜி. ராமநாதனுக்கு கிடைத்தது.

வருடம்:1940 - தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவான "பரசுராமர்" படம் வெளிவந்து ஜி. ராமநாதன் இசை அமைத்த முதல் படம் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டது.

என்றாலும் அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. அதற்க்கு முன்பே பட அதிபர் சுந்தரம் தயாரித்த சில படங்களும் சொல்லிக்கொள்வது போல அமையவில்லை. ஆகவே ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்ற தீவிரமான வேகத்துடன் அடுத்த படத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்திருந்தார் சுந்தரம்.

அதே காலகட்டத்தில் ஒரு கதாநாயக நடிகரும் வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற தவிப்பில் இருந்தார். அவர் தான் பி. யு. சின்னப்பா. முதல் இரண்டு படங்களை அடுத்து வந்த படங்கள் சரியாக போகாதது அவரை மிகவும் பாதித்து விட்டிருந்தது. "ஆத்மசக்தியினால் திரை உலகை என் பின்னே அணிவகுத்து நிற்க வைக்கப் போகிறேன்" என்று மௌன விரதம், உண்ணா விரதம் என்று இருக்க ஆரம்பித்தார் அவர்.

"ஒரு இசை அமைப்பாளனாக இருந்தாலும் வெற்றிகரமான இசைஅமைப்பாளனாக நான் அங்கீகாரம் பெற வேண்டும்" என்ற தீவிரமான முனைப்பில் இருந்தார் ஜி. ராமநாதன்.

வெற்றிக்கான தீவிரமான தாகத்துடன் இருந்த இந்த மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து வைத்து மூவரையும் ஒரு சேர வெற்றிச் சிகரத்தில் ஏற வைத்தது மாடர்ன் தியேட்டர்ஸின் அடுத்த படம்.

அந்தப் படம் தான் "உத்தம புத்திரன்".

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</