வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
திகைப்பூண்டுகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


இலட்சுமணப் பெருமாள் 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS திகைப்பூண்டுகள் தொடர்கள் வாயில்

திகைப்பூண்டுகள் - 1

கருப்பண்ணசாமியும் சக்கண்ணனாசாரியும்


இலட்சுமணப் பெருமாள் 16-05-2011, 23:58 PM

ஞாபக சூழ‌ச்சேற்றுக்குள் மனசை அழுத்திக் கொண்டே போனால் தனது தட்டுகிற இடத்தில் அந்த சின்ன வயது பிராயச் சம்பவம் எல்லார்க்கும் எது முதலில் அகப்படுமோ! எனக்கு எங்க ஊர் கருப்பண்ண சாமி கோயிலும் சக்கண்ணனாசாரியும் தான் மனசிற்குள் படிந்து கிடக்கிறார்கள்.

மேற்கூரையின்றி ஆளுயர சுற்றுச் சுவருக்குள் கையில் அரிவாளுடன் இளம்பிராய அரும்பு மீசையுடன் அதுவும் சிரித்த முகத்துடனான கருப்பன் சிலை வேறெங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சுற்றிலும் வேலி கருவேல மரங்கள் கோட்டை போல் சுற்றி வளைந்து கிடக்கிறது. கோயிலின் எதிரே தூரத்தில உயர்ந்த கருவேல மரம் ஒரு பாட்டம் மழையை தாங்குமளவிற்கு குடைபோன்று கிளைகள் கவைகளாய் ஒன்றையன்று கோர்த்தும் சிறிய இலைகளும் முட்களும் பின்னி விரிந்து கிடக்கும்.

உருண்ட கம்பளிப் பூச்சிபோன்ற அதன் மல்லிகைப் மணத்தைவிட பல மடங்கு கமாளிக்கும் தன்மை கொண்டது. காற்றின் திசையில் மைல் கணக்கில் வாசனை தூக்கியடிக்கும் உடை மரத்திற்கும் கோட்டை வேலிக்கும் நடுவே போகிறது வண்டிப்பாதை. அதன் வழியே நடந்து போகும் பாதசாரிகள் கோயிலின் நேரே வந்ததும் மேல்துண்டை எடுத்து இடது குடங்கையில் போட்டு வணங்கி கீழே குனிந்து தரை மண்ணள்ளி நெற்றியில் பூசியபடி போகிறார்கள்.

ஏரு பூட்டிப்போகிற விவசாயி தலையில் கஞ்சிக்கலயம் இருப்பதால் கழுத்தை திருப்பாமல் கோயிலின் முன்னால் வந்திருக்கிறோம் என்பதை யூகமாய் உணர்ந்து அனிச்சையாய் கால்செருப்புகளை கழற்றிவிட்டு, ''அய்யா கடவுளே கருத்தப்பாண்டி'' இன்னைக்கி பொழுது எந்த நொம்பளமும் இல்லாம போகணுமப்பா'' என்றதும் கால்களால் மீண்டும் செருப்புகளை கோதியபடி மாடுகளுக்குப் பின்னால் தொடர்ந்து வேகமாக நடைபோடுவார்.

சாமிக்கு நிழலோட்டமா மேலே கூரைத்தளமும் சுத்தி கோட்டையும் கட்டணுமப்பா. ஊர் காக்கிற தெய்வத்தை இப்படி மழையும் வெயில் போட்டு வைக்கப்போய்த்தான விருத்தியில்லாம இருக்கு என்று ஒரு சாரரும். அதெல்லாம் கூடவே கூடாது. சாமியும் நம்மளக்கணக்கா வெயில்ல காய்ஞ்சி மழையில நனைஞ்சி கிடந்தாத்தான் நம்மகஷ்ட நஷ்டங்கள்லாம் தெரியும். இல்லேன்னா சாமி சுகங்கண்டுக்கிடும் என்று ஒரு கோஷ்டியும் இருந்தார்கள்.

ஊருக்குள்ளிருக்கிற எல்லா சாதிக்கும் இந்த ஒரு கோயில்தான். ஒரு பூசாரிதான். ஆளுக்கொரு மாதமா சாதிவாரி கொடை நடக்குமேயழிய நீ இன்ன சாதி கோயிலை விட்டு தள்ளி நில்லு என்கிற சமாச்சாரமெல்லாம் கிடையாது.

வடக்கேயிருக்கிற ஒரு அரசியல்வாதி போகிற போக்கிலே இந்தக் கோயில் கும்பிட்டுப் போக, அவர் தேர்தல்ல ஜெயிச்சு அதில் இருந்து வருசா வருசம் கிடா வெட்டி ஊரு பூராம் சோறு போடுறார். அவ்வளவு துடியாவுளசாமி. நெனச்சதெல்லாம் நடக்கும். கோயிலின் முன் படிக்கட்டுப் பக்கத்தின் இருபுறமும் தடித்து உயர்ந்த இரண்டு கல் தூண்களுக்கு நடுவே வெண்கலத்திலான பெரிய மணி ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதை அடித்து ஓசை உண்டாக்கினால் ஊர் முழுக்க கேட்கும். சிறுசுகள் முதல் பெரியவர் வரை அதை அடித்துப் பார்க்க ஆசைப்படாதவர்கள் யாரும் கிடையாது. அது ஒரு தடவை திருடுபோய்விட்டது. ஊருக்குள்ளும் அக்கபக்க கிராமத்தில் இது சம்பந்தமாக ஒரே பேச்சாகக் கிடந்தது. விடிந்ததிலிருந்து அடையுற வரை இதே பேச்சுத்தான். நாற்பது நாட்களில் மீண்டும் மணி கோயிலில் தொங்கிக் கொண்டிருந்தது. பழையபடி ஊருக்குள் கூட்டங்கூட்டமாய் நின்று பேசுறாங்க. களவாகுனவன் வீட்டு ''ஒரு மொய்'' ஆடு துள்ளத்துடிக்க செத்துப் போச்சுத்துன்னும், இன்னும் கொஞ்சப்பேர் ''நல்ல பால் மாடு ஆறேழு மாடு வாய்க்காணம் நோக்காடு வந்து'' செத்துப் போச்சுன்னும், நான்கு ஜோடி உழவுமாடு ராத்திரியே செத்து வெறச்சமட்டுல கிடந்ததாம். அதனால்தான் திருட்டுப்பய திரும்பக் கொண்டு வந்துட்டான்னும் எங்கு பார்த்தாம் பேச்சுக்கால் நடந்ததேயொழிய நபர் இன்னார்ன்னு யாரும் ருசிபிச்சிச் சொல்லவில்லை.

இருந்தால் மணியை திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட்ட கருப்பனின் மகிமையை வியந்து, சந்தோசத்திற்கும், பக்தி பரவசத்திற்கும் ஆளாளுக்கு நேமுகம் போட்டு செய்துகொண்டிருந்தார்கள். மொட்டை, கவுறுகுத்து என்று கோயில் அல்லோகலப்பட்டுக் கிடந்தது. வீட்டுக்கொரு கிடாய் என்ற பங்காரப்படி சொந்த கருத்துகளும் அழைப்பு அனுப்பி வரவழைத்து விருந்துகள் நடந்தது.

இதிலே சக்கண்ணனாசாரி கொஞ்சம் கூடுதலாக தான் அக்னிசட்டி ஏந்தி நான்கு ஊரு சுற்றி வந்து சன்னதியில் வந்து சட்டி செய்வதா நேர்ச்சை பண்ணிட்டார். ஆசாமி ரொம்பவும் சாமி மேல் உணர்ச்சிவசப்பட்டுட்டார்ன்னுதான் எல்லாரும் நெனச்சாங்க. பிறகுதான் அவரு ஒரு காரியார்த்தமாத்தான் இப்படி ஒரு எடுப்பு எடுத்திருக்கார்ன்னு தெரிய வந்தது.

சக்கண்ணனாசாரிக்கு வயசு அறுபது ஆகியும் குழந்தை பாக்கியம் கிடையாது. அவரு சம்சாரமும் குழந்தைக்காக இருக்காத விரதமில்ல. போடாத நேர்ச்சையில்ல. கோயில் குளம்ன்னு அலைஞ்சி கடைசியில அந்தம்மா ஒரு சாமிகொண்டாடியாவே ஆகிப்போச்சு. மேளச்சத்தம் கேட்டவுடன் ஆட்டம் கொடுத்திடும். கொட்டுமேளம் கொட்டி ஊருக்குள்ள யாரும் அக்னி சட்டி ஏந்தி வந்தா, ராத்திரி நல்ல தூக்கச் சடவுல இருந்தாம் குலவை போட்டபடி தெருவழியே ஓட்டமா ஓடி இருக்கிற நாய்களெல்லாம விரட்ட அக்னிசட்டியை தேடிப்போய் தன் கையில் வாங்கி ஒரு மூச்சு ஆடுவா. ஒரு வளையம் போட்டு சுத்தி சுத்தி ஆடுறது பார்க்க அவ்வளவு அம்சமாயிருக்கும். ஆசாமி பின்னாடியே வந்து இடுப்பைச் சேர்த்து பிடிச்சி சாமியை கொஞ்சம் கொஞ்சமாய் ஆசாரமாக்கி தன் நிலைக்கு கொண்டு வந்து மெல்ல வீட்டுக்கு கூட்டிப்போவார்.

சக்கண்ணனாசாரி ஏன் இப்படி ஒரு நேர்த்திக்கடன் போட்டாருன்னா ஊருக்குள்ளே அவரு ஏகப்பட்ட நல்லது பொல்லாததுகளுக்கு மொய்ச் செய்து வச்சிருக்காரு. இவருக்குத்தான் பிள்ளை குட்டி இல்லாதுனா வீட்டுல ஒரு கல்யாணம் காதுகுத்து சடங்கு சம்பிரதாயம்னு எதுவம் நடக்காததுனா செய்து வச்ச மொய்ப்பணத்தை எப்படி வாங்குறதுன்னு ஓசனை பண்ணி இந்த மாதிரி அக்னி சட்டி எடுத்து கோயில்ல செய்துற காரியம்னு பத்திரிகை அடிச்சி ஊர்ச்சோறு போட்டு மொய்யை வசூல் பண்ணீரலாம்னு வீடு தவறாம தகவல் தந்திட்டாரு. எப்படியும் அழிவு செலவு போக பத்து, ஆயிரம் மிஞ்சும்ன்னு அவரு கணக்கு. அவருக்கு கூடப்பிறந்த தம்பிமார் நான்கு பேரு. தங்கச்சிமாரு நான்கு பேரு. மகன்கள் மருமகள்கள் மகள்கள் மருமகன்கள்ன்னு ஏகப்பட்ட கூட்டம். பெரிசு வச்சிருக்கிற பணம் காசு சொத்து பாசம் பொங்குற மாதிரி வீட்டை சுற்றி சுற்றி வந்து நாளைக்கு ஒரு தேறமாவது சாப்பிட்டு போயிடுவாங்க. ஒருத்தனை ஒருத்தன் வீம்பு போட்டு வந்து கை நனைச்சிருவாங்க பெரிசு வீட்டுல சாப்பிட்டு வந்திர்ராங்க. நமக்கு வாச்சது நம்ம வீட்டு சோத்துப் பானையைத்தான் காலி பண்ணுது போங்கடா எதாவது கொண்டு வரப்பாருங்கடான்னு விரட்டி விடுவாங்க. பூராம் அசல் ஊர் நாயி மாதிரி அங்கேயே சுத்திக்கிட்டு கிடப்பாங்க.

அக்னிசட்டி எடுத்து ஊர் சுத்தி வரும்போது மேளதாளத்தோட வீட்டு ஆளுகளும் கூடவே விடிய விடிய அலையணும். பெட்ரோமாக்ஸ் விளக்குப்பிடிக்க, தட்சினை விழகுற தாம்பாளத் தட்டுப்பிடிக்க, எண்ணை தூக்குவாளி வச்சிருக்கி, அக்னியி போட வேப்பங்குச்சி எடுத்து வர்றதுக்கின்னு ஆளுக்கொரு வேலை. பொம்பளை பிள்ளை பின்னாடி குலவை போட்டு வரும்ங்க. இப்படி கூட்டமா வீடு வீடா போயி நின்னு காணிக்கை வாங்கணும்.

இதிலே தாம்பாளத்தட்டு பிடிக்கத்தான் இள வட்டங்களுக்குள்ளே அடிபிடி. வீட்டு வீட்டுக்குப் போயி அக்னி சட்டி நிற்கும்போது அதில் தான் காணிக்கையாய்ப் போட்டு அதில் இருக்கிற திருநீறை எடுத்து பூசிக்கிடுவாங்க.

அப்பொ ஒரு ரூபாத்தாள்ன்னா ரொம்பப் பெரிசு. அந்தக் காலத்து அன்னாடு கூலிக்கு ஒரு நாள் சம்பளமே ஒரு ரூபாய்தான். ஆசாரிக்கு இது மொத மொத சம்பவமா இருக்கிறதனா ரெண்டு, அஞ்சு, பத்துன்னு, ஒவ்வொரு வீட்டுயும் காணிக்கைகள் தட்டு நிறைஞ்சு போச்சு.

சில வீடுகள்ல அக்னி சட்டியில எண்ணை விடுவாங்க. சட்டி ஏந்துறவர்க்கு தலை வழியே தண்ணிவிட்டு அக்னியில எண்ணை விட்டு காணிக்கையும் போடுவாங்க. ஊர் நாட்டாமைக்காரர் பெண் சாதி சுத்தபத்தமா குளிச்சி மொழுகி மெனக்கிட்டு ஊர்க் கிணத்துல போயி ஒரு பானை தண்ணியெடுத்து வந்து வச்சிருந்து, அந்தம்மா வீட்டு வாசல முன்னாடி அக்னி சட்டி வரவும் தண்ணிப்பானையைத் தூக்கி சக்கண்ணனாசாரி தலையில ஊத்தப்போகும்போது ''ஏ...ஏ... ஊத்தாதே ஊத்தாதேன்னு தடுத்திட்டாரு. அந்த அம்மாவுக்கு என்னம்மோ மாதிரியாகிப்போச்சு.

சாமி இப்படி அபசஞ்சொன்னமாதிரி தடுத்திட்டாரேன்னு ரொம்ப வருத்தாமகிப்போச்சி. ஆசாரி மடியிலிருந்த பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து பக்கத்து கொடுத்திட்டு இப்பொ ஊத்துமான்னு குனிஞ்சாரு. இந்தக் காரணத்தை கவனியாத நாட்டாமையம்மா நேரா கோயிலுக்கு போயி கருப்பனுக்கு முன்னாடி நா என்ன கொற செஞ்சேன் ஏது கொற செஞ்சேன் என் விரதத்து கொறவா என் செய்கையில கொறவின்னு கையை நீட்டி நீட்டி முறையிட்டு ஒரு மூச்சு அழுது, மூக்கைச்சிந்தி சிந்தி அழுதுத மூஞ்சியே சிவந்து போயி கொண்டையை அள்ளி முடிஞ்ச வாக்குல வீடு வந்து சேந்தது.

நாட்டாமையம்மா மொத மொதல்ல தண்ணி ஊத்துனதுதான் தாம்சம். ஆசாரிக்கு அடுத்தடுத்து வீடுகள் ஒரே குளிப்பாட்டுத்தான். ஆசாரி தன்னா குளிர் பொறாமல் பெண்டாட்டி கிட்ட சட்டியை மாற்றிவிட்டு ஒரு பானைத் தண்ணிக்கு ஒரு பீடியை பத்தவச்சிக்கிட்டே வந்தார்.

இவரு அக்னி சட்டி ஏந்திக்கிட்டு தலையில தண்ணிய ஊத்தச்சொல்லி நனைஞ்ச புறாக் குஞ்சு மாதிரி கீநாடி மேநாடி அடிக்க ஊரு ஊரா அலைய வேண்டியதான். பின்னாடி தாம்பாளத்தட்டுக்காக நாம்பிடிப்பேன் நீ பிடிப்பேன்னு பயங்களுக்குள்ள ஒரே அடிபிடி. ஒண்ணோட ஒண்ணு போட்டி போட்டு இவன் அடிக்க அவன் அடிக்க ஒருதனையருத்தன் பின்னாடியிருந்து மிதிக்க பிடுங்கன்னு ஒரே சண்டைக்காடு, சத்தமின்றி நடந்துக்கிட்டு இருந்தது. ரெண்டு நாளா இரவும் பகலும் நான்கு ஊரு சுத்தி தாம்பாளத்தல அஞ்சாறு ரூபா சில்லறை தான் கிடந்தது. ரூபாய்தாள்கள் பூராவையும் அவனவன் அன்றாய்ர் பையில்ல சொருகிட்டாங்க.

தவசுப்பிள்ளை போட்டு சோறு பொங்கி ஊருபூராம் சோறு போட்டு அந்த மொய்யை வாங்க தனி ஏற்பாடும் பண்ணி அது ஒரு பக்கம் நடந்துகிட்டிருந்தது.

ஒரு கட்டம் போல ஊரு மந்தைக்கு மேளதாளத்தோட அக்னி சட்டி ஏந்தி வந்தாரு. அங்கே யாரோ ஒருத்தன் இவரு காதுபட, இருக்கிறவனெல்லாம் அக்னி சட்டி ஏந்தி என்னய்யா செய்ய. சக்கண்ணனுக்கு எப்படி தச்சுரூபமா பொருந்தியிருக்கு பாரு. அந்த கருப்பனே எதிர வந்த மாதிரி முகத்தில்ல பாரு. வீரம் கொப்பளிக்கிறதை. ஆன்னு சொல்லவும் இவருக்கு கெம்பீரியம் தாங்காம வயசுக்கு மீறி ஆய் ஊய்ன்னு மேலேயும் கீழேயும் ஆட்டமா ஆடுனார். பல் இல்லாத வாயை திறந்து திறந்து மூடினார்.

அவன் அடேங்கப்பா என்ன ஆட்டம். பாக்கிறவன் கண்ணு தெறிச்சுப் போற மாதிரி சும்மா சொல்லப்படாது. இவை கொடுத்து வச்சிருக்கணும் பாக்க. அப்படீன்னு ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுக்கிட்டே போனான். இவருக்கு நெல கொள்ளல. அவ்வளவுதான் ஒரு சந்துக்குள்ள திடுத்திடுதின்னுன்னு திடீர்ன்னு ஆக்ரோசமா நாக்கை துருத்துன மட்டு ஆய்... ஏய்..ன்னு அவயம் போட்டு ஓடுனார்.

எல்லாரும் மெம்மறந்து போலி நின்னுட்டாங்க. ரொம்ப குறுகிய சந்து. ஒரே இருட்டு. ஒரு தீக்குச்சியை உரசி பார்க்கிறதுக்குள் இன்னொரு சந்து வழியே நொண்டிக்கிட்டே வந்தார். சட்டி புகைஞ்சமட்டு இருந்தது.

அந்தச் சந்துக்குள்ளே நிறைய பீங்கான் கிடந்திருக்கு. எவனோ என்னம்மோ சொல்றான்னு பெருமை மயிரா ஓடி அதில்ல மிதிச்சு பக்கத்து வாறுகா இருக்கிறது தெரியாம அது தடுக்கி ஊட்டிக்குப்புற விழுந்து சட்டி ஒரு பக்கம் இவரு ஒரு பக்கமா கிடந்து எழுந்திரிச்சி சிதறிக்கிடந்த ஒண்ணுரெண்டு கங்குகளை அள்ளிப்போட்டுக்கிட்டு வந்திருக்கார்.

ஆரம்பத்து அக்னி வளர்க்கும்போது சட்டியை கை தாங்குகிற அளவுக்கு மொதலயே அரைச் சட்டிக்கு சாம்பல் போட்டு கிட்டிச்சு சூடு கைக்கு பரவாம பாதுகாப்புச் செய்து அதுக்குப்புறம்தான் வேப்பஞ்சிராய்களைப் போட்டு அக்னி வளர்ப்பாங்க. இந்த மனுசர் ஆட்டமா ஆடி அவை துப்புறவா கொட்டிப்போட்டு இப்பொ நேரடியா சூடான கங்குகள் சட்டியை சுட்டு அதுக்குமேல இன்னும் சிராய்களைப் போட்டு எண்ணைய ஊத்துனாங்க. தாங்குமா?

சூடுன்னா சூடு உசிருபோகிற வலி. இன்னும் உள்ளுர் சுற்ற வேண்டிய பாக்கி இருக்கு. அதுவும் மண்சட்டியா இருந்தா பரவாயில்ல. இவரோட பவுசைக்காட்ட வெண்கலச் சட்டி எடுத்திட்டாரு யம்மா.... அதோட அருமை இப்பத்தானே தெரியுது. எப்படியும் செய்துதானே ஆகணும்.

ஊர்ச்சோறு போட்ட இடத்துல்ல மொய் வாங்கின பயன்கள் இன்னொருன்னு தெரியாம அந்த கணக்கு வழக்கைக் காணோம். தாம்பாளத் தட்டு அவனிருந்தான் இவனிருந்தான் எனக்குத் தெரியாது. உனக்கு தெரியாதுன்னாட்டாங்க. எல்லாவற்றிம் ஏகப்பட்ட நட்டமாகிப்போன சக்கண்ணனாசாரி ரெண்டு கால கட்டிப்போட்டி கை வெந்ததிலே மஞ்சப்பத்துப்போட்டு நடமாட்டமில்லாத சட்டியா வீட்டு திண்ணையில அக்கடான்னு உட்கார்ந்திட்டார்.

அவரு பெண்சாதியை அடிக்கடி உத்து உத்து பாத்து அதிசயிச்சுப்போவார். பயமவ எவ்வள காலமா சாமியாடுறா அந்த வளையத்துவிட்டு ஒரு அடியாச்சும் நவிந்து ஆடுறாளா எவ்ளோ பந்தோபஸ்தா ஆடுறா! ரெண்டு கையையும் பாத்து, நொந்த கால்களை அமுக்கி விடவரமாட்டாளான்னு வளைச்சு வளைச்சு பாக்குறார்.

இப்பொ கருப்பசாமி கோயிலுக்கு மேற்கூரை அமைச்சு கசங்களெல்லாம் வச்சாச்சு. சுற்றி கல் கோட்டை கட்டி கேட்டெலாம் போட்டாச்சு. கோவில் முன்னாடியிருந்த உடைமரம் இருந்த இடத்தில தங்கும் விடுதி கட்டிட்டாங்க. வண்டிப்பாதை, பிரதான தார்சாலை ஆகிப்போச்சு. அதுவும் கார்களும் வேன்களும் பஸ்களும் போக வர இருந்தது.

கோயிலுக்கு பக்கமெல்லாம் வரிசை பிடித்து கருப்பண்ணசாமி கொடையை வாழ்த்தி ரசிகர் மன்ற பிரொக்ஸ் போர்டுகள் கட்சி பேனர்கள் கொடிகள் இறைந்து போயிருந்தது. ஊருக்குள் நரர்கள் ஒண்ணுக்குப் பத்தாய்க் கூறப்போயிருந்தார்கள். அவங்களுக்குள் பிரச்சனைகளும் நூறுவிதமாக நாள்தோறும் நீயா நானாவென்று விடிந்தது. இதையெல்லாம் பார்க்கமுடியாம கருப்பண்ணசாமி கைதியாகிப் போய் உள்ளேயே கிடந்தார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </