வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 2


இயக்குனர் அகத்தியன் 04-04-2011, 23.58 PM

கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். பூமியில் ஒருவன் ``போதை’’ என்பதையும் ``குடி’’ என்பதையும் நியாயப்படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறான் என்றனர். கடவுள் ஒரு தேவதூதனை அழைத்தார். எழுதுபவனிடம் சில குறிப்புகள் கொடுத்து விட்டு வா என்று பணித்தார். தேவதூதன் கொடுத்த குறிப்புகள்.

ஒரு பெண்ணின் சகோதரன் எப்பொழுது தன் நண்பர்களுடன் அமர்ந்து மதுவருந்தினாலும் கொஞ்சம் போதை ஏறியவுடன் தன் நண்பர்களிடம் சவால் விடுவது ``என் தங்கச்சிய விட ஒரு செம பிகரை காட்டு பாக்கலாம்’’. யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து பரவசப்படும் ஆணைப் போல் அவன் தன் தங்கையை வர்ணிப்பான். ஒருமுறை நிகழ்ந்தது அடிக்கடி நிகழ்ந்ததால் சீரியசான விஷயம் காமெடி ஆகிப் போனது. ஆம். கடைசியில் அது வடிவேலு அர்ஜூன் நடித்த ஒரு திரைப்படத்தில் காமெடியும் ஆகிப்போனது.

மதுவருந்தும் ஓரிடத்தில் அறிமுகமில்லாத இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருவன் சோகமாக இருக்க மற்றவன் காரணம் கேட்டான். சோகமாக இருந்தவன் மெல்ல குடும்பப் பிரச்சினை என்றான். பேச்சு நழுவி குடும்ப உறுப்பினர்களை பற்றிய குறைகளை பட்டியல் இட்டது. சோகமாக இருந்தவனின் மனைவி பட்டியலில் முதலிடம் வகித்தாள். அடுத்தவனுக்கு இவனின் குற்றப்பத்திரிகையால் இவன் மனைவி மேல் அதீத கோபம். போதை கொஞ்சம் தலைக்கேற, சோகமானவன் அழ, மற்றவன் ``கவலைப்படாதே சகோதரா, உன் வீட்டுக்கு வந்து அவளை நான் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்’’ என்றான்.

"அந்தத் தேவடியாளுக்கு எவ்வளவு திமிரு’’ என்றான். முதலாமவன் "அதையும் சொல்லிட்டேனா’’ என்று அழுதான்.

அந்த தேவதூதன் முதலில் இந்த இரண்டையும் சொல்லிவிட்டு கூட்டமாய்க் குடிப்பதும் முன்பின் தெரியாதவர்களோடு குடிப்பதும தேவையா என்று கேட்டார். நல்லவேளை குடிப்பது தேவையா என்று கேட்கவில்லை.

கொஞ்ச நாள் முன்பு Drink and Drive பிடித்துக் கொண்டிருந்தார், ஒரு காவலர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டான். காவலர் பக்கத்தில் இருந்த வாழைப்பழம் விற்பவரை அழைத்து அவர் முகத்தில் ஊதச் சொன்னார். மறுநாள் வாழைப்பழம் விற்பவரைச் சந்தித்து காரணம் கேட்டபோது 'காவலர் மதுவருந்தி இருந்தார், அதனால் வாடை தெரியாது என்பதால்', என்றார். இரவு நேரக் காவலில் காவலர்களை ஊதச் சொல்லி யார் கேட்பது.. இதைச் சொல்லிவிட்டு அந்த தூதன் சொன்னது "வாகனங்களை ஓட்டும்போது நாம் குடிக்காமல் இருந்தால் அவர்களை ஊதச் சொல்லலாம். சட்டத்துக்கு உட்படுத்தலாம்..’’

Assignment, sketch இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு உங்களில் யாருக்காவது தெரியுமா? அசைன்மென்ட் என்பது ஒரு காரியத்தைச் செய்ய ஒருவரிடம் தருவது. ஸ்கெட்ச் என்பது வரைபடம். இது நாம் அறிந்த அர்த்தங்கள். Oxford Dictionary Assignment என்பதற்கு "A task or piece of work that somebody is given to do usually as part of their job or studies” என்றும் The act of giving something to somebody என்றும் சொல்கிறது. Sketch என்பதை "a simple picture that is drawn quickly and does not have many details” என்றும், A short funny scene on television in theater என்றும், a short report of story that gives only basic details about something என்றும் சொல்கிறது. இப்பொழுது தமிழகத்தின் நடைமுறையில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்று பார்த்து விடுவோம்.

Assignment என்பது ஒருவரை கொலை செய்ய ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் வேலை.

Sketch என்பது அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் தன் உதவியாளர்களிடம் எப்படி எங்கு எப்பொழுது அந்த வேலையை, அதாவது கொலையை நிகழ்த்துவது என்று திட்டமிட்டுக்கொடுப்பது.

இந்த Assignment and sketch க்கும் மதுவுக்கும் என்ன தொடர்பு? ஒருவரைக் கொலை செய்யவேண்டும் என்று வன்முறைக் குற்றவாளியை (Rowdy) ஒருவன் அணுகும்போதே இருவருக்கும் இடையில் மதுவே முதலிடம் பெறுகிறது. அந்த வன்முறைக் குற்றவாளி தன்னுடன் இருப்பவர்களை அழைத்து Sketch போடும்போது மது தலைவிரித்தாடுகிறது. இந்த ஸ்கெட்ச் என்பதே ஒரு வெள்ளைத்தாளில் அந்த வன்முறைக் குற்றவாளி பென்சிலால் வரையும் கோடுகள். யார் கொலை செய்யப்பட வேண்டுமோ அவரது வீடு ஒரு கோடு. அவர் காலையில் நடைப் பயிர்ச்சி செய்பவர் என்றால் அடுத்த கோடு. இப்படி அவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு கோடுகள் போடப்படும். நாள் நிர்ணயிக்கப்படும். பதினேழு முதல் இருவது வயது வரை உள்ள இளைஞர்கள் அழைக்கப்படுவர். திட்டம் விவரிக்கப்படும். கொலையை அரங்கேற்றுவதற்கு முதல் நாளிலிருந்து கட்டிங் கொடுக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு கட்டிங். மெல்ல மனமும் உடலும் மதுவிற்கு உடன்படும். பாலுறவு மனதில் மென்மையை விதைக்கும். எனவே பாலுணர்ச்சி தோன்றா வண்ணம் போதையில் வைக்கப்படுவர். எங்கு, எப்பொழுது, எப்படி, யார் நிறைவேற்றுவது, யார் காரில் இருப்பது, யார் பைக்கில் இருப்பது, எப்படி இருப்பிடம் சேர்வது என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு கொலை நிகழ்வதற்கு அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முன்பாக அளவில்லா மது ஊற்றிக் கொடுக்கப்படும். மதுவின் ஆளுமையில் மனிதாபிமானம் மறந்து போனால்தான் கொலையை நிகழ்த்த முடியும். இந்த வகையில் மது நிறையக் கொலைகளைச் செய்திருக்கிறது. துப்பாக்கி, அரிவாள் போன்று மதுவும் ஒரு ஆயுதமாகிப் போனது இன்று.

பரிதாபத்திற்குரிய காவலர்களுக்காக நாம் சில நிமிடங்கள் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும. நம் அண்ணனோ, அப்பாவோ அந்த இடத்தில் இருந்தால்தான் நம் பிரார்த்தனையின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பிரார்த்தனைக்கான காரணம் ஒரு சொல். என்கவுன்டர்.

வன்முறைக் குற்றவாளி சமூகத்தில் ஊடுருவி பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போதுதான் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பிக்கின்றனர். அதிலும் மலர்களைக் கசக்கும்போதுதான் செடிகள் வேர்பிடுங்கிக் கொண்டு வீதிக்கு வருகின்றன. தவிர்க்க இயலாமல் சமூகத்தின் அமைதிக்காகவோ வன்முறைக் குற்றவாளிகளை உளவியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதற்காகவோ என்கவுன்டரை கையிலெடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு மறைமுக வாய்மொழி உத்தரவுகளால் காவல் நிர்வாகம் உட்படுத்தப்படுகிறது.

இங்கே மது என்ன செய்கிறது? யாரோ ஒருவர் கைகாட்டப்படுகிறார். அவர்தான் அதை நிறைவேற்ற வேண்டும். அவர் நமது அண்ணனாக இருக்கலாம். அப்பாவாக இருக்கலாம். சராசரி காவலர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உட்பட்டிருந்தாலும் துப்பாக்கியை எடுத்து பட்டென்று போட்டுத்தள்ளும் சினிமா வில்லன் அல்ல அந்தக் காவலர். உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும். இங்கும் மனிதாபிமானத்தைக் கொல்ல மதுதான் பயன்படுகிறது. ஒரு பொம்மையைப் போல் துப்பாக்கியை எடுத்து, ஒரு பொம்மையைச் சுட்ட உணர்வுடன், காயப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது சுட்டது மனிதனா? மதுவா? என்று குழம்பும் அந்தக் காவலருக்காக பிரார்த்திப்போம்.

இதுவரை குடித்துவிட்டு தங்கையையோ, அக்காவையோ, அம்மாவையோ கற்பழித்ததாக செய்திகள் இல்லை. மகளைக் கற்பழித்த தந்தை பற்றி படித்திருக்கிறேன். மகளுடன் குடும்பம் நடத்திய தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஒன்று விட்ட சகோதரனும், சகோதரியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள உறவுகளை விட்டு ஓடிப்போனதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். சகோதரியுடன் உடலுறவு கொண்ட அண்ணனைச் சந்தித்திருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? ஒரு பெண்ணை அல்லது ஒரு குடும்பத்தலைவியை குறி வைக்கும்போது மதுவைக் கையிலெடுக்கின்றனர். ஒருவனோ, இருவரோ, ஒரு குழுவோ மதுவருந்தி ஒரு பெண்ணைக் கற்பழிப்பது மதுவின் செயல் திறமையாக மிளிர்கிறது. ஆனால் பாலுணர்வின் தேவைக்காக பெண்கள் மதுவைக் கையிலெடுக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இந்தியாவின் எந்த சுற்றுலாத்தலமாக இருந்தாலும் சரி, ஆக்ரா, நைனிடால், குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் இப்படி உணவு உண்ண ஒரு உணவகத்தில் அமர்ந்தால் ஒரு பையன் வந்து நிற்பான், வயதைக் கேட்டால் 18 என்பான். ஒரு 14 அல்லது 15ல் இருப்பான் சற்று 10 ல் இருந்தும் ஆரம்பிக்கும். மிரட்டி வயது கேட்டால் ஒரு பெரியவர் வருவார்.. அறைகளில் தங்கும்போதும் இதுதான்.

அறைகளில் தங்கும் விருந்தினர்கள் மதுவருந்திவிட்டு கொஞ்சம் மிச்சம் மீதி இருந்தால் வேண்டாம் என்று விட்டு விட்டு வீடு திரும்ப.. அந்த சிறார்களால் கொஞ்சம் கொஞ்சமாக மது சேகரிக்கப்படும். வாரவிடுமுறையில் இரண்டு இரண்டு பேராகவோ நான்கு எண்ணிக்கையின் அடிப்படையிலோ சேகரிக்கப்பட்ட மதுவை எடுத்துக் கொள்கின்றனர். மது அருந்தியவுடன் அந்த சிறார்களுக்கு வடிகாலாக ஆணுக்கு ஆண் என்று ஆகிவிடுகிறது.

சாதாரண உணவு விடுதியில் பத்து வயதுப் பையன்களை பாத்திரம் தேய்ப்பதற்கும் மேலே குறிப்பிட்ட வேலைகளுக்கும் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களது தங்குமிடம் பெரும்பாலும் ஓட்டலில் சமையல் கூடத்தின் மேலே அமைந்து விடுகிறது. வெப்பம் தாங்க இயலாது, பத்திற்கும் பதினைந்துக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் நாடுவது பகல் நேரத்தில் பூங்காக்களை. நான்கு மணி நேரமோ மூன்று மணி நேரமோ பூங்காவில் தூங்க வரும் அந்த உழைப்பாளிகளுக்கு உழைக்க மதுவும் கொடுத்து, அதுவும் கொடுப்பது கொடுமையான விஷயம்.

பூங்காக்களில் தூங்கும் இவர்கள் வசதி படைத்த பெண்மணிகளால் கவனிக்கப்படுகிறார்கள். பரிவு காட்டப்படுகிறார்கள், வீட்டிற்கு வா என்று அழைக்கப்படுகிறார்கள். சாப்பிடு என்று அரவணைக்கப்படுகிறார்கள். கூல் டிரிங்ஸ் என்று லெமநேட் கலந்த வோட்காவோ அல்லது ஜின்னோ அருந்த வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணால் பாலூட்டி வளர்க்கப் பெற்று மடியில் கிடந்தவன், இன்னொரு பெண்ணால் மதுவூட்டி மயக்கப் பெற்று, மடியில் முட்டுகிறான். தேவை தீர்ந்ததும் அந்தச் சிறுவனுக்கு பணம், அவனால் அறிமுகப்படுத்தப்படும் இன்னொருவன். எது வழியாக ஒரு தாய் குழந்தையை உலகிற்கு அனுப்பினாளோ, அது வழியாகவோ அவனைக் கொன்று புதைப்பது நியாயமா தாயே?!.. நீங்களும் ஒரு தாய் தானே?

எல்லைகள் விரிவடைந்தபின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. மிக விரைவாகவே அவர்கள் நோஞ்சான்கள் ஆகி எல்லா போதைகளுக்கும் அடிமையாகி விவேகானந்தர் சொன்ன இளைஞர்கள் என்ற நிலையை எட்டாமலேயே, உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாகி, திருடனாகி ஒரு சமுதாயமே கெட்டு, சீரழிந்து போகிறது. நாம் அந்த சமுதாயத்தின் அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி..

ஒரு விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் நான் அடுத்த செய்திக்குப் போக வேண்டும். விடுகதை என்ற படத்தின் பாடல் காட்சி எம்.ஜி.எம் ல் எடுக்கப்பட்டது. நான் ஒப்பனை அறைக்கு போகும்போது நள்ளிரவு 1.30. இரவு 2 மணிக்கு பாடலின் படப்பிடிப்பு அன்றைய தினம் முடிவடையும். நிறையப் பெண்கள். அவர்களின் அனுமதியோடு அங்கே அமர்ந்து மதுவருந்த, பெண்கள் அனைவரும் வீடு திரும்ப கிளம்பினர், ஒரு பெண் அவராகவே வந்து என்னிடம் பேசினார். அனைவரும் வெளியே போக, ஒரே ஒரு பெண் மட்டும் என் அறைக்குள். உடனடியாக அவரும் வெளியே போக.. முன்பு போனவர்கள் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க பின்பு போன அந்தப் பெண் வேறு பாதையை தேர்ந்தெடுக்க.. குழப்பம் ஆரம்பமானது. முதலில் போன பெண்கள் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்து விடும் என்ற அச்சத்தில் திரும்பி வந்து அறை வாசலில் குழுமிவிட, நான் அசதியில் தூங்கிவிட, இன்றைய மைனா டைரக்டர் பிரபு சாலமன் அன்று என் அசோசியேட், என்ன என்று விசாரிக்க, உள்ளே ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்ல, பிரபு சாலமன் சொன்னது, "எங்க டைரக்டர், அப்படிப்பட்டவர் இல்லை". அவர் கதவைத் திறந்து உள்ளே வந்து, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, "என் டைரக்டர்", என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார். இனி நான் பேசலாம். நீங்கள் கேட்கலாம்.

ஒயின் தெரியுமா? உங்களுக்கு தெரிந்ததை விடுங்கள். எனக்கு தெரிந்த ஒயின் பொல்லாதது.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொலைக்காட்சி வளர்கிறது. ஆம். நாள் ஒரு மேனியும், பொழுது ஒரு வண்ணமும்.. என்ன வண்ணம் அது? சூரியன் மறையும் அந்திச் சிவப்பா?.. அந்திச் சிவப்பை இப்படியும் கற்பனை செய்யலாம். ஒரு பெண்ணின் உதிரப் போக்காய்…

தாயக்கட்டைகளை உருட்டும்போது ஐந்தோ, ஏழோ பன்னிரண்டோ விழும், அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. ஐந்து விழு, ஏழு விழு, என்று கேட்டு உருட்டும்போதுதான், தேவையாகிறது. நான் கேட்டு உருட்டும் சிலரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். கிராமங்களில் இருந்து 15 வயது முதல் 17 வயது வரை உள்ள பெண்கள், சீரியலில் கொடி கட்ட என்று வேண்டும் வருகின்றனர். சீரியலில் கொடி கட்ட வேண்டுமென்றால் சில சமயங்களில் பாவாடை நாடா அவிழ்ந்தால் கொடி உயரும்.

போட்டோ ஷூட் பண்ணிட்டியம்மா?

ரொம்ப ஒல்லியா இருக்கியே?

இந்தா இந்தப் பணத்தை வச்சுக்க.. "ஒடம்பை தேத்து"

சார் என்ன சாப்பிட்டாலும் உடம்பு வரமாட்டேங்குது சார்.

இந்த ஒரு வார்த்தைக்காகத்தான் வலை விரிப்பு.

ஒயின் சாப்பிடேன்.

அடப்பாவிங்களா.. பழைய சோறும் சின்ன வெங்காயமும் உடம்பைத் தேற்றாதா?

ஒயின் கலர் கொடுக்கும். ஷைனிங் கொடுக்கும். வாங்கி வைத்து, 'இந்தா' என்று கொடுக்கும்போது 'இந்தா' என்று எதிர்பார்த்ததைக் கொடுக்கும்.

"அம்மா இது போதை இல்லம்மா"..

"பரிமாற பரிமாற்றங்கள் நடக்கும்".

இயேசுவே.. ஒயின் குடித்தீர்கள். அந்தத் திருமணத்தில் ஜாடிகளில் நீர் நிரப்பி தொட்டு எல்லோருக்கும் ஒயின் பரிமாறச் சொன்னீர்கள். அப்போதெல்லாம் கலருக்கும் ஷைனிங்க்காகவும் ஒயின் குடித்தார்களா?
அம்மாவும் பெண்ணும் அடிமைப்பட்டார்களா?

அந்த ஒயினை வைத்துக் கொண்டு யாராவது எந்த சிறுமியையாவது தொட முடிந்ததா?

அந்த ஒயின் வேறு, இந்த ஒயின் வேறா?

அப்படியென்றால் வந்து
எந்த சிறுமியையும் கெடுக்க உதவாத
அந்த ஒயின் பார்முலாவை
சொல்லிவிட்டுப் போங்களேன்.

நண்பர்களே இனிமேல் தான் நாம் எப்படிக் குடிக்க வேண்டும் என்பதை ஆரம்பிக்க வேண்டும்.

காத்திருக்கும்
அகத்தியன்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.