வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -9

சுல்பிகா – கெழுத்தி முட்களைப் பிரசவிக்கும் நாரைகள்

குட்டி ரேவதி  



ஒரு பெண்ணோ ஆணோ பிறக்கும்போதே இன்னின்ன பால்நிலை, சாதி, மதம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிறப்பதில்லை. வாய்ப்பின் அடிப்படையில் பிறந்ததும் அவர் அந்த நிலையின் எல்லா அரசியல் நிலைப்பாடுகளுக்கும் எல்லா வகையிலும் பொறுப்பேற்பவராக இருக்கிறார். ஏனெனில், அச்சமூகத்தில் தான் அவரது இருப்பு நிலைநிறுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்திடமிருந்து பண்பாடு, சூழல், அன்றாட உணவு, இருப்பிடம் எல்லாவற்றையும் கேட்டுப் பெறுபவராயும் தன்னிலையிலிருந்து சமூகத்திற்கு அளிப்பவராகவும் இருக்கிறார். ஆகவே, அச்சமூகத்தின் மீது சுமத்தப்படும் எல்லா வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நிவாரணம் தரவும் முயலவேண்டியது அவரது பொறுப்பு. எனக்கென்ன என்று அவர் இருந்துவிடமுடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில், அவர் தான் சார்ந்த சமூகத்திற்குத் துரோகம் இழைத்தவராகவே இருக்கிறார்.

அம்பேத்கர் தன் கருத்து நிலைப்பாடுகளில் தொடர்ந்து இதை முன்வைக்கிறார். அதாவது, ஆதிக்க இனம், அவ்வினத்தால் ஒடுக்கப்பட்ட இனம் என இரண்டு வகையினம் தாம் இருக்க முடியும். ஆதிக்க இனம், ஒடுக்கப்பட்ட இனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு வசதியாக, ஒடுக்கப்பட்ட இனத்தைப் பலக் குழுக்களாகப் பிரித்து அவற்றை ஒன்றோடொன்று மோதச் செய்து, குளிர்காய்வதில் முனையும். இம்மாதிரி வெவ்வேறு காலக்கட்டங்களில் தொடர்ந்து பெரும்பான்மையினம் ஒடுக்குமுறையின் வடிவமைப்பால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முஸ்லீம் இனமும் அவ்வாறாக வேற்று மதத்தின் பெயரால் அர்த்தப்படுத்தப்பட்ட ஓர் ஒடுக்கப்பட்ட இனமே. விடுதலை இயக்கத்தை ஆதரிப்பவர், விடுதலை இயக்கத்தை ஆதரிக்காதவர் இவை இரண்டும் தாண்டி, ’இந்த இரண்டு வகையையுமே சாராதவர் என்ற மூன்றாவது வகை நான்!’ என சிலர் என்னிடம் தன்னை அடையாளப்படுத்துக் கொள்கின்றனர். இம்மூன்றாவது வகையினமே கூட, ஒரு வகையில் பொறுப்பிலிருந்தும், போராட்டத்தின் நுண்வடிவத்தை உணரும் முயற்சியிலிருந்தும் தப்பிக்கும் ஆதிக்க இனத்தைத்தான் சுட்டுவதாய்த் தோன்றுகிறது.

பெண்களுக்குத்தாம் விடுதலைக்கான இயக்கம் முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஆனால், அவை அதிகார ஆதாயங்களால் அரசியல் அடையாளம் பெறும் போது, தன் உடல், தன் கருப்பை, தன் குழந்தை, தன் அம்மா மற்றும் பாட்டி என பெண்ணுடல்களைப் பாதிக்கும் பெண்ணியச் சிந்தனை அல்லது பெண்ணினம் என்னவாகிறது என்ற அக்கறையற்ற இடத்தில் தான் போரைக் கடுமையாக எதிர்த்தனர். விடுதலை இயக்கங்களில் போராடிய பெண் போராளிகளும் இச்சிந்தனையையே கொண்டிருந்தனர். தன் இனத்தின் மீது நிகழ்த்திய கடுமையான ஒடுக்குமுறையை போரின் பெயரால் நிகழ்த்திய ஆணாதிக்கச் சிந்தனை வடிவப் போரைக் கடுமையாக எதிர்த்தனர். அதற்காகக் களம் சென்று நின்று போராடினர். கிராமங்களிலும் நகரங்களிலும் என தன் நாட்டில் குழந்தைகளையும் முதிய பெண்களையும் காத்து நின்ற ஒற்றைப் பெண்களுக்காகப் போராடினர். போராட்டத்தில் நின்று போராடிய பெண்களுடன், சென்று போராடாதவர்களும் கவிதைகள் எழுதினர். ஆணும் பெண்ணும் ஒரே மொழியைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் வேறு வேறு அர்த்தங்களில் அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதன் எதிர்ப்பாய்க் கவிதைகள் எழுதினர். தாய் மொழியின் சொற்கள் ஆணதிகாரமயப்பட்டிருப்பதைச் சிதைப்பதன் முதன்மையான உத்தியாகப் பெண்கள் கவிதை எழுதுகின்றனர்.

கவிதையின் கட்டமைப்பில் பெண்கள் தீவிரமாக ஈடுபடலாயினர். கவிதைப் பாரம்பரியத்தின் உயரம் என்று சொல்லப்பட்டு வந்ததை தம் மொழியாலும் கவிதை சொல்லல் முறையாலும் எட்டிக் குதித்தனர். இலங்கும் கவிதை வடிவ முறைகளைக் கற்காமல் அவற்றைக் குலைக்கவும் முடியாது என்பதால், புத்தெழுச்சியுடன் மொழியின் வித்தைகளை ஆண்டனர். முஸ்லீம் பெண்கள் கவிதை எழுத வந்ததும், இதன் அடிப்படையில் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டம் வென்று கவிதை எழுத வந்த முஸ்லீம் பெண்ணான சுல்பிகாவின் படைப்புப்பணியை இவரைத் தொடர்ந்து எழுத வந்த பஹீமா ஜகான் மற்றும் அனார் இருவருடனும் தொடர்ப்புப்படுத்திப் பார்க்கிறேன். இன்று பஹீமாவும், அனாரும் தமிழ் மொழியை, அதிகார நசிவிற்கு உட்படுத்திய குழைவுடன் ஆளும் வல்லமை மிக்கவர்களாய் இருந்தாலும் இப்பயணம் சுல்பிகாவிடமிருந்து தொடங்குகிறது என்பதற்கான எழுச்சிகளை சுல்பிகாவின் சில கவிதைகளில் காண நேர்ந்தது.

தனது முதல் தொகுப்பான, ‘விலங்கிடப்பட்ட மானுடம்’ பெரும்பாலும் உணர்ச்சியான பிரகடனங்களாகவே இருக்கின்றன. தன் பெண்ணிய கருத்தை அழகும் வடிவமும் இன்றி முறையிடும் வாக்குமூலங்களாகவோ அல்லது பிரச்சாரங்களாகவோ பதிவு செய்து விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவதுடன், மனதில் ஒரு துண்டிப்பு நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

சேற்றில் செழித்த,
செங்கமல அரும்புபோல
மென்மஞ்சள் நிறமுலைகள்,
வெண்ணய்யில் செதுக்கிய
உடல் வண்ணம்,
மென்மையான
பெண்மையின் அங்கங்கள்.
இவை மட்டுமா கொண்டு
இப்பூதம் உருவாகியுள்ளது?

செறிந்த பொருள்சேர்
சிந்தனைத் திறமையும்
அரியதிறன் மிகு
கொள்கையும்,
நெஞ்சுரமும்,
எம்மில் புதைந்துள்ளன.

பாலியல் உணர்வு
மட்டுமா எம்மில் கலந்துள்ளது?
பார்த்தல், கேட்டல்
ருசித்தல் மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும்
எமக்கு உண்டு.

கண்களும், மூக்கும்
செவிகளும், நாவும்
உணர்மிகக் கொண்ட தோல்முடியும்
எம்மைக் காவலிட்டுள்ளன.
இவற்றினுள்ளே,
இப்பிரபஞ்சத்தின் உயிர்ப்பே
உறைந்து கிடக்கின்றது.

மேற்கண்ட கவிதையை, உரைநடையாக்கி வாக்கிய அமைப்புகளுக்குள் கொண்டு வந்தாலும் அவை, படிந்து நிற்கின்றன. கவித்துவம் அடையும் முன் கருத்தைப் பதிவுசெய்யும் அவசரமாகவும் கொள்ளலாம்.

இதயராகம்

நீலவானில் நிலா
வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது.
மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி
மோகன வட்டமிட்டுள்ளது.

அதன் மருங்குகளில்
வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன.
அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது
மெல்ல செவிமடுத்துக் கேள்,

எங்கிருந்தோ பாடும் அவளது
இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது
ஆக்காண்டிப் பறவை அவள் குரலை
எங்கும் எடுத்துச் செல்கின்றது

இளம் தென்றல் அவள் மென்மணத்தை
எங்கும் தூவிச் செல்கின்றது
அவளது வரவை உன்னால்
உணர முடிகின்றதா?

இதோ அழகிய நட்சத்திரங்கள்
அவள் கண்ணிலிருந்து ஒளிபெற்று
மின்னுகின்றன.
கடலும் தொடுவானமும் அவள் வண்ணம்
கொண்டு மிளிர்கின்றன.
அதே ஒலி...
அதே ராகம்...
மீண்டும் மீண்டும் தொடர்கின்றது.

நன்றாகச் செவிமடுத்துக் கேள்-
அவள் இதயத்தின் ஒலிக்கூடாக
உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.
உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.

காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது
ஆயினும்,
உதடுகளுக்கு இல்லாத சக்தியை
அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதனால் தானோ என்னவோ,
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும்
அவளது ராகம் ஒலிக்கின்றது.
முடிந்தால் அதற்கப்பாலும் சென்று
செவிமடுத்துக் கேள்.

காற்று;
அதனால் அவளது
இதயத்தினுள் புக முடியாது.

அது; அவளது ராகத்தைத்
தடுக்க முடியாது தவிக்கட்டும்.
அவள் கண்களில் மினுங்கும்
சோகக் கதிர்களை
உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும்.

நீ பெற்றுக் கொண்ட
துலங்கலைக் கூட
அவள் கண்கள்
மீளவும் பெறவும் கூடும்.

எனினும்,
அவளது இதயராகம்
உண்மைக் கவிஞனின்
பேனா முனையினால் கூட
இதுவரை எழுதப்படாதவை
அவளைச் சுற்றி
எத்தனை வேலிகள்.

இவைகளைத் தாண்டி,
உன் மனத்திரையை அடையும்படி
அவள் இசைத்துக் கொண்டேயிருக்கிறாள்.
விடியற் காலையில் அவள் ராகத்தை
உன் செவிகள் கேட்கக்கூடும்.
யாருமே அறியாதபடி
அவள் இதயராகம் மீட்டப்படுகின்றது.
இப்போது உன்னால் மிகத்
தெளிவாகக் கேட்க முடிகிறதா?

உடன் பதிவு செய்து கொள்,
இந்தப் பொல்லாத காற்று,
அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.

ஆழ்மனக் காதல் கொண்டதொரு பெண்ணின் கவிதை. காற்று எதிரியின் உருவில் வருகிறது. காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது. ஆயினும், உதடுகளுக்கு இல்லாத சக்தியை அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள் என்ற வரிகளால் காதலின் வல்லமையைப் பதிவு செய்கிறார். ஈழக்கவிதைகள், தமிழ்க்கவிதைகளில் இல்லாத அளவிற்கு அகம் புறம் என்ற இரு நிலைகள் கவிதையின் தளத்தை ஆண்டிருக்கின்றன. நிரப்பியிருக்கின்றன. போர் என்பது காலம், நிலம் இரண்டின் பகுதிகளையும் சூறையாடிக் கொண்டபோதும், காதலும் மறமும் அதை ஆற்றிக்கொள்ளும் அருமருந்துகளாக, சொற்களால் ஆன மூலிகைச் சாறாகக் கவிதைகளில் வழிகின்றது. இக்கவிதை முழுமையும் காதல்ரசம் பொழியும் கவிதை.

சபதம்

சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்

சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்

நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன

உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.

தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று

எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன

தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.

போர் எனும் வடிவில் விடுதலை இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் தேவைப்பட்ட மனித இனங்களும் பூமியில் உண்டு. ஆனால், பெண்கள் அதை வேறு வடிவில் அணுகுகின்றனர். எதிர்ப்பை வன்முறைக்குறியீடுகள் அல்லாத வகையில் பதிவு செய்கின்றனர். ’எமது உடல்கள் மற்றொரு காமுகனைப் பெற்றுப் போடாதிருக்கட்டும்’ என்னும் வரியில் கருவிருக்கும் இடம் சென்று, காமுகனைக் கருவறுக்கும் வரை எதிர்ப்பு வலுப்பெற்றப் பெண்ணாகிறாள். இங்கு தாய்மை என்பதன் அர்த்தங்களும் வரையறைகளும் நொறுங்கிப் போகின்றன. பெண்ணின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையை வலுவிழக்கச் செய்யும் குறியீடுகள் ஆகும் கட்டத்தில், ஆண்களின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையைச் செயல்படுத்தும் குறியீடுகள் ஆகின்றன. போர் அத்தகைய வன்முறை ஆயுதங்களையும் உத்திகளையும் உள்ளடக்கிய அடக்குமுறைக் குறியீடு. மேற்கண்ட கவிதையில்,

தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று

என்ற வரிகளால் மட்டுமே கவிதையின் தீவிரத்தை அடையக்கூடிய தருணங்களை மேலே சொன்ன கவிதை, பெற்றிருந்தபொழுதிலும் ஆழமான கருத்தாக்கத்தை உட்கருவாகக் கொண்டிருந்த பொழுதிலும் இவ்வரிகள் கவிதையாக ஆகாமலும் போகிறது. என்றாலும் சொல்ல வந்த கருத்தின் உக்கிரத்தாலும், அது ஆரம்பித்த இடத்திலிருந்து பாய்ந்து வந்து முடிகின்ற வேகத்தின் தொனியாலும் நம் வாசிப்பில் அந்த குறையை மறைக்கிறது.

சமீப காலங்களில் பெண்ணின் கவிதைகளில் ’யோனி’ எனும் சொல்லும் பெண்ணுறுப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஆளப்பெற்று முக்கியமான அரசியலாகியிருக்கிறது. பெண்ணின் யோனி தான், ஆண் தன் வன்முறையை அதிகபட்சமாய்ச் சாத்தியப்படுத்தும் இடமாய் இருந்திருக்கின்றது. யோனி பெண்ணின் கருப்பனுவலாய் பரிணாமமுறும் உடல் உறுப்பு. ஆகவே தான், அது எதன் பெயர் சொல்லியும் ஆணினாலும் ஆதிக்கச்சாதியினராலும் ஒடுக்கப்படுவதாய், கட்டுப்படுத்தப்படுவதாய், சிதைக்கப்படுவதாய் இருக்கிறது. அல்லது, யோனி எனும் கருப்பிரதியைச் சிதைப்பதற்கு ஒரு பொய்ச்சாக்கோ கூட போதும் என்பது தான் இக்கவிதையினில் கவிஞரின் தொனி.

போர்க்கால சோகத்தில்
மூழ்கிக்கிடந்தது அந்தக் கிராமம்
ஆண் என்று சொல்லிக் கொள்ள
ஒரு துரும்பு கூட மிஞ்சியிருக்கவில்லை
கருவுற்றிருக்கும் தாய் ஆதங்கத்துடன்
தன் அடிவயிற்றைத் தடவி
நெஞ்சில் எதிர்பார்ப்பினை
ஏற்றிக் கொள்வாள்
பச்சைத் தளிர்கள் எதுவுமற்றுக் கிடக்கும்
தரிசு நிலம் கண்டு
இறுமாப்பில் நிமிர்கின்றது
இக்கோடையின் வரண்ட வெயில்
தனக்குள்ளே சிரித்துக் கொள்ளும்
மேகத்தினுள்
புகுந்த நீர்த்துளி

இக்கவிதையில் வாழ்க்கையின் நம்பிக்கையைப் பொதிந்து அளிக்கும் முனைப்பினைக் கொண்டிருக்கும் சுல்பிகா, இரு வகைகளில் அதைச் சாத்தியப்படுத்திக்கொள்கிறார். அக்கவிதையில் இடம் பெறும், கருவுற்ற தாயின் எதிர்பார்ப்பைத் தனக்குள் ஏற்றிக்கொள்ளும் இடம். இரண்டாவது இடம், ‘தனக்குள்ளே சிரித்துக்கொள்ளும் மேகத்தினுள் புகுந்த நீர்த்துளி’. இரு ஒரே நிலையிலுள்ள வேறுபட்ட விஷயங்களை ஒரு கவிதையில் இடம்பெறச் செய்து அர்த்தத்தை முழுமையாக்குகிறது, கவிதை. ‘ஆண் என்று சொல்லிக்கொள்ள ஒரு துரும்பு கூட மிஞ்சியிருக்க வில்லை’ என்ற வரியால் நிர்மூலமான ஆணின் இடத்தைக் குறிப்பாலும் பிற வரிகளாலும் காட்சிப்படுத்தவும் தவறவில்லை கவிஞர். ஆணின் போரால் எல்லாம் நிர்மூலமான பின்னர் பெண்ணிடம் இன்னும் மிஞ்சியிருக்கும் நம்பிக்கையைச் சுட்டும் கவிதை.

'கொட்டிக் கிடக்கிறது
பெண்ணின் பாலியல்
மடி முட்டுமளவுக்கு நீ
வட்டி கொள்ளலாம்
குற்றமொன்றும்
உன் மேலே வராது
குற்றம் செய்தது
கொட்டிக் கிடந்த
பெண்ணின் பாலியல் தான்'
உன்னைக் குதறி
உயிர் குடித்தோர்
எங்கெங்கு
குதூகலமாயுள்ளாரோ
அங்கெல்லாம் என் ஒலி
எதிரொலிக்குமா?
உன்னையோ யோனியாக்கி
உன் யோனியைப் புண்ணாகிய
காமுகக் கயவர்களின்
காது பறைகள்
வெடித்துச் சிதறுமளவிற்கு
என் ஒலி எங்கும்
எதிரொலிக்குமா?'

மேலே உள்ள கவிதையும் அடுத்து வரும் கவிதையும் எனக்குப் பிடித்தமான சுல்பிகாவின் கவிதைகள். ‘குற்றம் செய்தது கொட்டிக்கிடந்த, பெண்ணின் பாலியல் தான்’ என்ற வரிக்குப் பின்னர் அதை நீட்சி செய்யாமல் விட்டுவிட்டார். இல்லையெனில், பெண்ணின் பாலியல் குற்றஞ்சாட்டப்படுவதை உணர்த்தும் முழுமையானதொரு கவிதையாக இது ஆகியிருக்கும். 'கொட்டிக் கிடக்கிறது / பெண்ணின் பாலியல் / மடி முட்டுமளவுக்கு நீ / வட்டி கொள்ளலாம்’ என்ற வரிகளால் ஆண், பெண்ணின் பாலியலை நோக்கும் நிலையிலிருந்து தொடங்குகிறது. பெண்ணின் பாலியலைக் குதறிய இடங்களில் எல்லாம் என் குரல் ஓங்கி ஒலிக்குமா என்பது அவரின் கேள்வி. ‘தரித்திரம் பிடித்த நாரை கெழுத்தியை விழுங்கி விட்டது’ என்று தொடங்கும் கவிதை, இந்தச் செய்கைக்கு வெளியே அதன் புற வெளிக்கும் நோக்கத்திற்கும் வெளியே செல்லாமல் சொல்ல வந்ததை முழுமையும் சொல்லி விடுகிறது. இது ஒரு சாதனை தான்! பின், நாரைகள் கெழுத்தி மீனின் முட்களையல்லவா பிரசவிக்கவேண்டியிருக்கிறது?

'தரித்திரம் பிடித்த நாரை
கெழுத்தியை விழுங்கி விட்டது.
நாரைகளின் சந்ததிகள்
கெழுத்தி முட்களைப்
பிரசவிக்கத் தொடங்கியுள்ளன
எங்கும் கெழுத்தி முட்களின்
கொடுமை தலை விரித்தாடுகின்றது....
ஆக
தரித்திரம்
உயிர்த்தது
மறுப்பிலிருந்து தான்...
மறுத்தலை வெறுத்தல்
இயல்பாக நடந்ததுதான்
மறுத்தலை வெறுத்தல்
மகிமையுடயதுதான்
அதன் முள் வடிவம்
மாசற்றதல்ல'

விலங்கிடப்பட்ட மானுடம் எனும் கவிதையில் இடம்பெற்ற பிரசார வரிகளால் ஆன இக்கவிதையை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ‘இவ்வுலகில் தீயனவெல்லாம் செயலிழக்கச் செய்வேன்’ எனும் வரி பல வகையில் பெண்ணியத்தின் போது நோக்கைப் புரிந்து கொள்ளச் செய்யும் என்று நம்புகிறேன். ஆணினத்தைப் போலவே பாலியல் குற்றங்களைப் புரியும் அதிகாரத்தைப் பெறுவது தான் பெண்ணியம் என்று நம்பின பெண்ணிய வாதிகளுக்கு மத்தியில், தீயனவெல்லாம் செயலிழக்கச் செய்வேன் எனும் வரி மானுட நோக்கைப் பொதுவில் வைக்கிறது. ஆணாதிக்கச் சமூகத்தின் அதே அதிகார முறைகளைப் பின்பற்றுவதில் பெண்ணுக்கு எந்த நன்மையும் நிகழாது, என்பதைச் சொல்லும் நோக்கம் தான் இதில் ஓங்கி இருக்கிறது.

"இவ்வுலகில் தீயனவெல்லாம்
செயலிழக்கச் செய்வேன்
தோல்வி என்னைத்
தோற்கடிக்க முடியாது
தேவைகள் எதுவரினும்
தேறிநான் செல்வேன்
இவ்வாழ்வை வெல்வேன்"


சுல்பிகாவின் பெண்ணிய நிலைப்பாட்டை ஒரு தொடக்கப்புள்ளியாக இவ்விடம் வைக்கிறேன். இங்கிருந்து இவரைத் தொடர்ந்து நாம் பயணிக்க வேண்டிய பெண்கவிஞர்களை பிறிது வரும் கட்டுரைகளில் காணலாம்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: சுல்பிகா, ஈழத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்கவிஞர். விலங்கிடப்பட்ட மானுடம், உயிர்த்தெழல், உரத்துப்பேசும் உள்மனம் ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகளைப் படைத்தளித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரி. திறந்த பல்கலைக் கழகக்கல்வியியல் மேல்நிலைப் பட்டம் பெற்றவர்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.