வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -8

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்

குட்டி ரேவதி  

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கும், நிரூபனுக்கும்...

வணக்கம். விவாதம் ஒரு நிலைக்கு வரட்டும் என்று காத்திருந்தேன். இந்நீளவிவாதத்திற்கு ஏற்ற பொருள் இது அன்று என்பதே என் தாழ்மையான கருத்து. என்னுடைய முழுமுதற் நோக்கம், வழக்கம்போல ஒரு கவிஞர் பட்டியலை உருவாக்குவதன்று என்பதையும், எவரையும் முழுதாக நிராகரித்து விட்டு மேற்செல்வது என்பதில்லை என்பதையும் முதலில் இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பேசுபொருளென்பது, ஏற்கெனவே நண்பர், ‘முத்து ரமணி’ குறிப்பிட்டிருப்பது போன்று, “ஆண்மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்” என்பதே. அதற்கான முகவுரையில், எம்மாதிரியான பயணத்தை முன்னெடுக்கப்போகிறேன் என்பதை முன்னமேயே தெளிவாகவும் நிதானமாகவும் விளக்கியிருக்கிறேன். அதுமட்டுமன்றி, முழுத் தொகுப்பாக கவிதைகளை வெளியிட்டு இருப்பவர்களையும் தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்குபவர்களையும், குறைந்த காலத்திலேயே கவிதை இயக்கத்திற்கு பெண்ணிய அக்கறையோடு பங்களிப்புச் செய்தவர்களையும் மட்டுமே இங்கு கவனப்படுத்துவது என் நோக்கம்.

இந்நிலையில், முன்நிகழும் எதையும் வாசித்திராது வந்து தன் வாதங்களை தான்தோன்றித் தனமாக நிரூபன் முன்வைப்பது அவர் அசிரத்தையைத் தான் காட்டுகிறது. எவரையும் நான் ஒருத்தி நிராகரிப்பதால், அக்கவிஞர்கள் இல்லாது போவதற்கும் அவரை இருட்டடிப்புச் செய்வதற்கும் நான் ஒன்றும் கவிதையின் தலைமையிடத்தை எடுத்துக் கொண்டு இங்கு எழுத வரவில்லை. நான் எழுதாமால் போவதால் மட்டுமே நீங்கள் சொல்லும் வரலாற்றின் பொன்னேட்டிலிருந்து, எந்தக் கவிஞரின் பெயரும், அவர் அங்ஙனம் பங்களிப்புச்செய்தவர் என்றால் அழிந்தும் போய்விடப்போவதில்லை. மேலும், இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தையே சிதறடிக்கும் நிரூபனின் ஆதிக்க உத்தி தான் இது என்று தோன்றுகிறது. இது போல, பெண்ணியக் கவிதை இயக்கம் தீவிரப்படும்போதெல்லாம், ’பொத்தாம்பொதுவாக’ கவிதை என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு உள்நுழைந்துச் சிதறடிப்பவர்களை கடந்து சென்ற காலங்களில் நான் ஏற்கெனவே பலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அதனால் தான் இத்தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தையும் பெற்றேன் என்று குறிப்பிட வேண்டும், ’தமிழ் ஸ்டுடியோ’ பெண் கவிதை குறித்தத் தொடரொன்றை எழுத வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டதும், சில மாதங்கள் தயாரிப்பிற்குப் பின் தான் இதை எழுதவும் தொடங்கினேன். அதிலும், மையப்பொருள் குறித்த பல விவாத முன்னெடுப்புகளும் ஆலோசனைகளுக்கும் பின் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.

கவிதைக்குள் ஒட்டுமொத்தமாக பெண்ணியச் சிந்தனை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்றும் அது காலப்போக்கில் அந்தக்கவிஞரின் சுயமுயற்சியினாலேயே என்னனம் வளர்ச்சியுறுகிறது என்றும் அறிய விரும்புபவர்களுக்கும் கவனிக்கத் தவறுபவர்களுக்கும் இக்கட்டுரை உதவக்கூடும். ஆனால், கவிதை என்றால் என்ன என்று அறியாதவர்கள் சிலர், இம்மாதிரியாகச் சீர்மைப்படும் பாதைகளைச் சிதறடிப்பது வழக்கமானது தான். எனது இக்கட்டுரையின் நோக்கம், வெறுமனே பெண்ணியக் கவிதைகளோ, பெண்கள் கவிதைகளையோ தொகுத்து அடையாளம் பெறுவது அன்று. (மீண்டும் சென்று இக்கட்டுரை முகவுரையைப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்). தம் கவிதைகள் வழியாக, உடல் எனும் பிரதியைக் கலைத்துப் போட்டவர்கள் மற்றும் ஆதிக்கமொழிப் பிரதியைச் சிதைத்தவர்கள் வழியாக மட்டுமே கவிதையை ஓர் இயக்கமாக அணுகுவது. இதில், கவிதைகள் அல்லாத பிரதிகளையும் நாம் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். நான் இதைச் செய்யவேண்டியதில்லை என்றாலும், ‘தமிழ் ஸ்டுடியோ வாசகர்கள்’ தம் தொடர் வாசிப்பின் பயனால், எது சீர்மையான கவிதை என்பதை தாமே கண்டறியும், தெளியும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு, கவிதையல்லாத, கவிதை என்று முன்மொழியப்பட்ட வரிகளாலான தொகுப்பை நான் முன்வைத்தால் அவர்களே முன் வந்து இது கவிதையன்று எனச் சுட்டிக்காட்டும் தேர்ச்சியுடையவர்கள். இதை கவனத்தில் கொண்டு, நான் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள் எழுதியவை, கவிதைகளாகவும் இருக்கவேண்டும் என்பதற்கும் அழுத்தம் கொடுக்கிறேன்.

ஏற்கெனவே, செல்வி, சிவரமணி ஆகிய இரு கவிஞர்களையும் அவர்கள் கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளதை இங்கு நினைவுகூறுகிறேன். http://koodu.thamizhstudio.com/thodargal_14_3.php.

அவர்கள், தோன்றி வரும் இயக்கப்பின்னணிகளை வைத்து எழுதினால், என் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திலிருந்து கவனம் திருப்பும் ஒரு தொடராக இருக்கும் என்பதாலேயே, இக்கட்டுரையின் உள்ளுறையை, ‘உடலரசியல்’ என்றும், என்னளவில் இக்கட்டுரையில், உடலரசியல் என்று எதை முன்மொழிகிறேன் என்றும் திடமான விளக்கம் அளித்து விட்டுத்தான் நாம் இந்தக் கட்டுரைப் பயணத்தைத் தொடர்ந்தோம் என்பதை நினைவு கூறிக்கொள்கிறேன்.

இத்தொடரில் கப்டன் கஸ்தூரி போன்றவர்களையும் நான் விலக்கிவைத்துத்தான் நகர்கிறேன் என்ற கவன விழிப்பையும் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் அடிப்படைக் காரணங்களால் விலக்க முடியாத தகுதிகளைக் கவிஞர் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, அவை கவிதைகளாகவும் இருக்கவேண்டும். பெண்கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், தொகுக்கும் தொகுப்பாளர் ஆகியோரை முன்மொழியும் கட்டுரைத் தொடர் இது இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இம்மாதிரியான நாகரிகம் தான் பட்டியலையும் அதில் படிநிலையையும் உருவாக்கியது என்பதால் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். அப்பணியை நானும் செய்ய ஒப்பவில்லை. மேலும், நிரூபனின் விவாதத்தில் உள்பொருளும் அக்கறையும் சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருக்கின்றனரே என்பதைக் காட்டிலும் ஆழியாளை முதன்மைப்படுத்தியது தான் காரணமாக இருப்பது ஒரே சமயத்தில் எனக்கு வியப்பையும் நிறைய சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெண்ணியக் கவிதை மீதான அக்கறையோ தேர்ச்சியோ சிறிதும் ஏதுமில்லை. நிரூபன், தன் ஆதிக்கச் சிந்தனையை நிரூபிக்க இவ்வளவு போராடவேண்டியதில்லை. உங்கள் களம் வேறு என்பதையும் தாழ்மையுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

ஆழியாளின் வழியாக, கவிதைத்தளத்திலும் பெண்ணியத்தளத்திலும் நிகழ்ந்த நகர்வுகள் துல்லியமானவையும் வெளிப்படையானவையும்! நான் வியந்து மிகையாகச் சொல்வதற்கும் ஏதும் இல்லை. இம்மாதிரியான பெண்ணிய அசைவுகளில் அதிலும் கவிதைகளில் நிகழ்வது என்றால், அவை நாம் எல்லோருமே கொண்டாட வேண்டிய நகர்வுகள் தாம்! அம்மாதிரியான நகர்வுகளை தங்கள் சுய மொழியால் கவிதை வடிவத்தால் ஏற்படுத்தியவர்களை மட்டுமே அடையாளப்படுத்துவது என் முயற்சி! விடுபட்டவர்கள், வேறொரு பொருள் கொண்ட அத்தியாயத்தில் ஒருங்கிணையலாம்.

இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமெனில், கடந்த காலக் கவிதை வரலாற்றில் பெண்ணியச் சிதைவுகள் நிகழ்ந்ததை விளக்கியும் ஒரு தொடர், இக்கட்டுரைத் தொடருக்கான எதிர்த்திசையில் எழுதமுடியும். ஆனால், அது என்னுடைய நோக்கமன்று. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் ஈழத்து கவிதை வளர்ச்சி மற்றும் பிற ஈழக்கவிதை மரபுகள் குறித்த பேராசிரிய ஆய்வுகளை எல்லாம் நானும் வாசித்திருக்கிறேன். அவற்றின் பேராசிரியத்தன்மை நிஜமாகவே அலுப்பூட்டுகின்றது. அம்மாதிரியான கட்டுரைகள் வழியாக ஈழக்கவிதையின் ஒட்டுமொத்த கவிதைப் புலத்தையும் முன்வைப்பதும் இத்தொடரின் நோக்கமன்று. அதுமட்டுமன்றி, கவிதையை வாசிக்கும் போது பெறும் உணர்வெழுச்சியையும், அரசியல் கிளைத்தல்களையும் அவ்வாய்வேடுகளில் என்னால் ஒருபோதும் நுகரவே முடிந்ததில்லை. கவிதைகளே தமதளவில் முழுமையும் உணர்வெழுச்சியின் சுனைகளாக இருக்கும் போது எனக்கு இந்தப் பேராசிரிய ஆய்வுகள் எந்த வெளிச்சத்தையும் கொடுத்ததில்லை. ஆழியாளின் நூலில், மதுசூதனன் எழுதியிருந்த கட்டுரையின் நேர்மையான குரல் மட்டுமே என் உற்சாகத்திற்குத் துணை சேர்வதாக இருந்தது என்று சொல்லலாம். மொழியின் வழியாக, கவிதை என்று சொல்லிப் பிரசாரம் செய்தவர்கள் இக்கட்டுரையின் பொருளுக்குள் அடங்கமாட்டார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

மேலும், இம்மாதிரியான வரலாற்றுப் படிநிலைகளுக்கு அழுத்தம் கொடுத்து, அழுத்தம் கொடுத்தே, கவிஞர்களின் தனித்துவ முயற்சிகள் அதிலும், பெண்ணிய முன்னெடுப்புகள் நிகழ்த்தியவர்களின் சித்தாந்தங்களை விவாதத்திற்கு உட்படுத்தாததாலும், சமூகத்தின் இயக்கங்கள் உள்வாங்கிக் கொள்ளாததாலும் அம்முயற்சிகள் முனைமுறிந்து போயின. நீங்கள் முன்மொழிந்திருக்கும் தொடர் கருத்துரைகள் எல்லாமே ஆதிக்கச் சிந்தனைப் புரையோடியவையாக இருக்கின்றன. வரலாறு என்பதற்கு அழுத்தம் கொடுத்து, தனி நபர் படைப்பாற்றலை விவாதப்பொருளாக்குவதைச் சிதைக்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட தமிழ் என்னும் அடையாளம் குறித்த விவாதத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் காட்டும் பொருத்தங்கள் தெளிவற்றும் பொருள் மயக்கங்களோடும் விரிகின்றன என்பதால், நீங்கள் வந்து நிற்கும் இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டு எழுதுங்கள். அல்லது, நீங்கள் விரும்பும் பொருளில் தொடரொன்றை எழுதுங்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, கவிதையையும் அதன் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கும் நான் கவிதை பற்றிய எந்த நூலையும் தவறவிடுவதில்லை. விவாதத்தையும் தவறவிடுவதில்லை. நிரூபன் குறிப்பிட்டிருக்கும் நூல்களையும் வாசித்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆதாயங்களை ஒரு விவாதமாக்கவும் விமர்சனமாக்கவும் என் இடம் இது இல்லை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். ஆனால், நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும், தனிமனிதக் குரல் தொனியிலும் வரும் அவதூறுகளுக்கு நான் இது வரை பதிலளித்ததே இல்லை. புறக்கணித்திருக்கிறேன். அதற்காக என் நேரத்தை ஒரு பொழுதும் வீணாக்கியதில்லை. இது ‘ஆழியாள்’ என்ற, நான் இது வரை சந்தித்திராத, நான் உரையாடியிராத ஒரு கவிஞரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை என்பதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். செவிமடுத்த எல்லோருக்கும் நன்றி! இம்முறை கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகளுடன் வந்திருக்கிறேன்! வாருங்கள், நகர்வோம்!!

***************************

பெண்ணிய இயக்கங்கள், ஒரே நோக்கத்திற்காகப் போராடும் பெண்களை ஒன்றாக இணைப்பவை. இவ்வியக்கங்களில் இணைய முடியாமல் குடும்பத்தின் வலைகளில் சிக்கிக் கொண்ட பெண்கள் எப்படி தங்கள் உரிமைகளை வென்றெடுக்கின்றனர் என்ற கேள்விக்கான பதில்களைத் தேடிப் பெறுகையில், காலந்தோறும் பெண்கள் தம்மீதான குடும்ப வன்முறையை வென்ற வரலாற்றையும் பெறலாம். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் எங்குமே ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஆனால், மானுட இனத்தின் சரிப்பாதியான பெண்ணினம் தம்மீதான எல்லா வகையான வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கின்றனர் என்பதை நாம் அறிய பெண்ணெழுத்து மிகத் துல்லியமான ஆவணமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

எழுத்தைத் தன் போராட்டத்திற்கான ஆயுதமாகக் கொண்டு, தான் சார்ந்த குடும்பம், மதம், தன் இருப்பு இவற்றுடன் தொடர்புடைய அடிமைத்தனங்களை தன்னளவிலும் தன்னைச்சேர்ந்த பெண்கள் அளவிலும் புரிந்து கொண்டு மொழி வழியாக அவற்றை எதிர்க்கும் ஒற்றைப் பயணம் என்பதை நிறுவுவதாய் உமா மகேஸ்வரியின் எழுத்து தொடர்கிறது. தன் வீட்டை எல்லையாகத் திணித்த தன் இருப்பை மீறும் எழுத்தைப் படைப்பவர் இவர். குடும்பத்திற்குள் நின்று இயங்கும் பெண்கள் தம் உயிரைப் பேணுதலை மட்டுமே அதிகபட்ச உரிமையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், தம்மீது திணிக்கப்பட்ட தாய்மை எனும் மதிப்பையும், மனைவி எனும் பாரத்தையும் ஒரே சமயம் சுமக்கவேண்டியிருக்கிறது. குடும்பம் எனும் மண்டபத்தின் தூண்களாக எழுந்து நின்று தோள்களில் அதன் விதானத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து விட்டேகும் விடுதலைக்கான கற்பனைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய கற்பனைகளை எவரும் அவர்களிடமிருந்து அபகரித்துவிடவே முடியாது. விடுதலைக்கான கற்பனை தான் பெண்ணெழுத்தின் சீரிய நெடுஞ்சாலை.

உமா மகேஸ்வரியின் எழுத்து வீட்டுக்குள்ளேயே தன் முழு காலத்தையும் கழிக்க வேண்டியதொரு பெண்ணின் சிந்தனைகளை அன்றாடம் எழுத்தாக்குகிறது. எதிர்ப்பின் தொனியாக்குகிறது. கற்பனைகளின் வெளி கொண்டு அச்சூழலின் இறுக்கத்தை வெல்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ‘அன்றாடம்’ என்பதன் அரசியலைப் புரிந்து கொள்ள பெண்ணெழுத்து தான் உதவுகிறது. நாட்குறிப்புகள் என்றும் அழுகைப் புலம்பல்கள் என்றும் விமர்சிக்கப்பட்ட பெண்ணெழுத்து, மறுக்கப்பட்ட அவற்றிற்கான வெளியாக எழுத்தைக் கண்டுகொண்டது தான் பெண்விடுதலையின் தொடக்கம். தினந்தோறும், தான் காண நேரும் ஜன்னல் சட்டமிட்ட காட்சி, அடுப்பு மேடை, படுக்கையின் எல்லை, ஒரே மாதிரியான தோசைகளை உருவாக்கும் பணி ஆகியவற்றிலிருந்து விடுபட, ஜன்னல் கம்பியில் வந்து அமரும் ஒரு சிட்டுக் குருவி போதும். அது சிறகடித்துப் பறக்கும் வெளியைத் தனதாக்கிக் களிக்கும் கற்பனை போதும், விடுதலையைத் தொடங்க!

எனது நதி

சிறுவயதில் பார்த்த போது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப்பாய்ந்து மிரட்டும்.
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு.
வேறுதிசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பி வந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த அடி நீரோட்டத்தோடு

எனது நதி என்ற இக்கவிதை ஒரே சமயத்தில் நதியின் அடையாளம் தூர்ந்து போவதையும் அம்மாவின் புடவை வேறுருக் கொண்டு மாற்றமடைதலையும் ஒப்புமைப்படுத்துகிறது. ’பெண்மை’ என்பதன் மீது திணிக்கப்பட்ட தொடர் மாற்றங்களையும் திரிபுகளையும் சொல்லியிருக்கிறார். அவரது நதியின் பண்புகள் இன்னனம் தாம் அவருக்கு அர்த்தமாகியிருக்கின்றன என்பதைக் கவனப்படுத்துகிறார். இம்மாதிரியான புறவுலக மாற்றங்களை அகப்பண்புகளுடன் தொடர்புப்படுத்தும் பணியை உமா மகேஸ்வரி தொடர்ந்து தன் கவிதைகளில் செய்த வண்ணம் இருக்கிறார். இது ஒருவகையான சங்கேதங்களைத் தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்ளும் வெளிப்பாடு. இதுவே கலையுருவம் கொள்கிறது கவிதையில்.

பெண்களின் மாதாந்திர உதிரப்பெருக்கை, ‘பெரும்பாடு’ என்கிறது சித்தமருத்துவம். பெண்களின் உதிரப்பெருக்கு பெண் கவிதைகளாக்கிய போதெல்லாம் அதன் வலியும் அதை ஒட்டிய உடற்சங்கடங்களுமே பதிவாகியிருக்கின்றன. இங்கு உமா மகேஸ்வரி, அந்நிகழ்வின் காலாகாலங்களையும் தாமதங்களையும் காலம் தாண்டித் தொடர்தலையும் அரசியலாக்குகிறார். பெண்களுக்கு இடையிலான ’பேத அரசியல்’ என்பதே ஆண்களைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும் ஹார்மோன் அரசியலைத் தான் அடிப்படையாகக்கொண்டது. இவர் கவிதையிலும் மாமியார் கேட்கிறார்: ’மாமியாரின் ஆதங்கமோ ‘இன்னும் வருதா’ என.’ தனது இழப்பில் கொள்ளும் கவலையினும் இன்னொருவரின் அனுபவிப்பின் மீது கொள்ளும் ஆற்றாமை. இது நான் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளபடி, குடும்பத்தைத் தொடர்ந்து இயக்குவதற்கு மாமியாரையும் மருமகளையும் ஒருவருக்கொருவர் எதிரான நபர்களாய் நிறுத்தி ஆதாயங்களை அறுவடை செய்யும் நிகழ்தகவு. இதில் பெண்ணினம் பகுக்கப்படுவதுடன், ஒரே மாதிரியான பிரச்சனைகளையே இருவருமே அனுபவித்தாலும் அங்ஙனம் அடையாளம் காணமுடியாதவாறு முகம் பார்க்கும் கண்ணாடிகளைத் திருப்பிவைக்கும் ஆதிக்கத்தந்திரம். ’காட்டுத் தீ மரமோ பருவங்களைக் கவனியாது பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.’ என்ற தன் ஆதங்கத்தைப் பதிலாக்கி விடுதலையுறுகிறார்.

பூத்தல்

சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா” என
அம்மாவின் பதற்றம்.
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா?’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்.
மாமியாரின் ஆதங்கமோ
‘இன்னும் வருதா’ என.
தனியாய்ப் போனால் பிடிக்கும் முனி,
தலை குளியாதிருந்தால் அடையும் தேள்கள்
என்று நீளும் கதைகளில்
குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்.
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.
நான் நடமுடியாது
என் இஷ்டப்படி பூக்கும்
எந்த நாற்றையும் என்னுள்.
மஞ்சளில் ஆரம்பித்து
ஆரஞ்சில் ஆழ்ந்து
குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது
உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்
கொளுத்திய தீ

சிலந்தி

எனக்குள் இருக்குமொரு சிலந்தி
எப்போதும் வலை பின்னியவாறே.
மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக்
காத்துக் கிடக்கும்.
நினையாத் தருணங்களில்
எதிர்முகத்தில்
கொடுக்கைச் சுழற்றி
சொடுக்கும் வார்த்தை நஞ்சை.
சின்னஞ்சிறு கனவுகளையோ,
எண்ணற்ற விரல்களால்
நசுக்கி விழுங்கும்.
வெறுப்பென்றும் கோபமென்றும்
மறைகுணங்கள் மிகைத்து
குறுக்கும் நெடுக்கும் திரியும் ஊர்ந்து
இரவின் அமைதிகளில் விழி வழி நகர்ந்து
உலகைப் பார்க்கும்.
கண்ணாடிக் காகிதத்துள்
பொத்திய மலர் போன்று
அழகு காட்டும் சிலசமயம்.
விலக்கவே விருப்பமெனினும்,
பழகிப் பழகியே
பரிச்சயமாற்று தினமும்
எதுவும் செய்யக்
கூடுவதில்லை என்னால்
என்னுள் இருக்கும்
இந்தச் சிலந்தியை

தோசை என்பதைப் பெண்ணடிமைத் தனத்தின் குறியீடாக்கி நோக்கும் கவிதை! அதன் வடிவையும் தன்மையையும் பெண்மையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இக்கவிதையை வாசிக்கையில், பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுக்காகச் சுடவேண்டிய தோசைகளின் எண்ணிக்கையற்ற தன்மையைப் பேசும் அம்பையின் சிறுகதையொன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் உமா மகேஸ்வரியின் ’தோசை’, கவிதையின் நவீனத்துவத்துடன் பிரச்சனையைத் துலங்கவைக்கிறது.

தோசை

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்
விளிம்பு தாண்டாதது அவற்றின் விட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒரு போதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புழுங்கி வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

இன்றைய காட்சி

நிராசைகள் கொப்புளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரை நியமங்கள் விலகாத
எண்ணிக்கையில் வராத இன்றைய காட்சியை.
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
ராஜபாட்டையென்று கருதி
நிறுவிக்கொள்கிறாய் நீயாகவே
இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.
அனுசரணைகள் பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள் சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடையமுடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் வனத்தை
புதர்கள் தாண்டிப் பூத்த உச்சி மலரை
செய்வதொன்றுமில்லை இனி
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்
சில்லிடும் தரை
ஒண்டிய சுவர்.
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்.

மேற்கண்ட கவிதையில், ‘சில்லிடும் தரை / ஒண்டிய சுவர்’ என்ற முந்தைய வரிகளிலேயே சுருண்ட பூனையின் உளைச்சல்களை உணரமுடிகிறது பாருங்கள். ’நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை / ராஜபாட்டையென்று கருதி / நிறுவிக்கொள்கிறாய் / நீயாகவே / இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.’ ஆணுடனான பாலுறவின் இலக்கணத்தை விமர்சிக்கிறார். ஆணே நிர்மாணித்த சுலபப்பாதையை ராஜப்பாட்டையென்று கொள்ளுதல் தான் பாலியல் உறவிற்காக ஆண் கொண்டிருக்கும் நியமங்களில் முதன்மையானது. அப்படியான ஒருதலைப்பட்ச நியமம் கொண்ட உறவில் ஆதிக்காதலின் எந்தச் சுவடும் சுகமும் இருக்கமுடியாது. ’இன்றைய காட்சி’யின் தொடர்ச்சியாக உணரப்பட்ட இன்னொரு கவிதை.

முத்தங்களின்றி புகையும் நம் உடல்களைப்
புணர்ச்சிக்கு நகர்த்தலாம்;
மூலைகளில் உறைந்த பல்லியின்
மேற்செதில்களைப் போல்
அருவருப்பூட்டுகின்றன
உள்ளூர இந்த பாவனைகள்.
கனவின் தளிரசையும் பள்ளத்தாக்குகள்.
பிரியத்தின் நுனியிலாடும் வெறிக்கூர்மை;
நனைந்த வானம் விலக்கிவரும் மெதுவெயில்;
பட்டாம்பூச்சியின் நிற நிழலாடும் தோட்டச்சுவர்
எல்லாவற்றிலும் ஒரு தகரத்தன்மை ஏறுகிறது
பகல் சரிகிறது மெல்ல

அடி

நூற்றாண்டுகள் கண்ட
சாட்டைகள், சவுக்குகள்
ஈட்டிகள், கத்திகள்
எல்லாம் உண்டு அதில்; அடி

உன் வலு காட்டும்
வழி மட்டுமன்று,
என் பலவீனத்தை அடிக்கோடிடும்
வகையுமாகும்; அடி

மழுங்கிய உணர்வுகளை
மாற்றிக் கூராக்கும்;
எதிர்த்துக் குத்தவோ
எதையேனும் தைக்கவோ.
எனவே, மீண்டும்..
தழும்புகள்
கண்ணீர் பெருக்கவென்பதோடு
கலகம் துவக்கவும்
காரணமாகலாம்

தொடல்களை இனிமையற்றதாக்கும்
அடிகளாலான வலி.
நம் தூரம் நீட்டி
என்னை விடுவிக்கும் எதிலிருந்தாவது.

ஒருவேளை உன் மொழி
அதுவென்றால்
வேறெப்படிப் பேசுவாய் நீ?
ஆகவே, அடி.


’அடி’ என்பதே ஆணின் மொழியாக இருப்பதன் முரண் நியாயங்களை எழுதும் கவிதை இது. குடும்ப வன்முறை என்பது இன்றும் பேசாப்பொருளாக இருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு பால்நிலைப் பயிற்சிப்பட்டறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஓர் அமர்வில், அவரவர் உடல் குறித்த துன்பங்களையும் அவற்றிற்கு அடிப்படையான காரணங்களையும் ஏதேனும் படைப்பாக்க வடிவில் வெளிப்படுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட இருபத்திநான்கு வயதுப் பெண், இரு குழந்தைகளின் தாய். கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் காசு கேட்க, இல்லையென்பதால் கணவன் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். இதில், மாமியாரும் கணவன் பக்கம் நின்று அவளை விரட்டுகிறாள். கொட்டும் மழை. நடுநிசி. தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறாள். அவளையும் குழந்தைகளையும் கண்ட அவள் பெற்றோரோ, ‘இது உன் குடும்பத்தின் பிரச்சனை. நாங்கள் தலையிட உரிமை இல்லை’ என்று கதவைச் சாத்திக்கொள்ள அவள் முழு இரவும் தன் குழந்தைகளுடன் தெரு ஓரக்கடையின் தாழ்வாரத்தில் கழிக்க நேர்ந்த தன் வரலாற்றைப் பகிர்ந்தாள். குடும்பத்தின் வன்முறை பலமுனைகளைக் கூர்மையாகக் கொண்ட ஆயுதம் என்பதைச் சொல்லும் இக்கதை உடனே அங்கிருந்த நாடகக் கலைஞர்களால் அவள் விருப்பத்தின்பேரில் நாடகமாக்கப்பட்டது. மேற்கண்ட கவிதையில், ஆண் அடிப்பதை தன் திசை பொருள் விளக்கங்களுடன் அணுகுகிறார், கவிஞர். அதாவது, ஆண் பேசுவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஒரே மொழியாக வன்முறையைக் குறிப்பிடுகிறார்.

சிலாம்புகள்

உதிரத்தின் சுவையோடிருந்தது
அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள்
பிடுங்கப்படாமலிருந்தன

பயணக்களைப்பையும்,
ரணங்களின் நோவையும்,
பசிக்கும் வயிற்றையும்,
உன் கண்ணசைவு
புறக்கணித்தது.

தகிக்கும் உடலைத்
தண்மைப்படுத்தவில்லை
குளிர்சாதன இயந்திரம்.
பிரிபடாத உணவுப்பொட்டலம்
பேசித்தீர்க்காத உணர்வுகள்
முத்தங்களால்
மாறி மாறித் தாக்கிக் கொண்டோம்
ஒருவரையொருவர்

கொன்ற கோழியிறகுகளைப்
பிய்த்தெறிவது போல்
என் ஆடைகளை.
நாம் தழுவத் தழுவ
அவை நழுவிவிட விரும்பினேன்
தானாகவே

பகலொளி படக் கூசும் என் உடல்.
படபடத்து அதிரும் சுவர்கள்,
மோகம் பருகும்
என் மூடிய கண்களும்
உன் திறந்த பார்வையும்.

இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலின் ஆறுதல் தேட
தேகமோ இளகிவிடுகிறது
வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.

காதல் தனக்குள் பொதிந்த வன்முறைகளுடன் வெளிப்படுவதைக் கவிஞர், அக்காதல் வெளிப்படும் அவசர உணர்வின் வேகத்துடனேயே வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் புறக்கணித்து வெளிப்படுத்துவதிலேயே வேகமாய் இருக்கும், காதல். வன்முறைக்கான தடங்கள் இடம்பெற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள்! ‘உதிரத்தின் சுவையோடிருந்தது / அந்தக் கூடல் / என்னைக் குத்திய சிலாம்புகள் / பிடுங்கப்படாமலிருந்தன’

அடுத்து, ‘முத்தங்களால் / மாறி மாறித் தாக்கிக் கொண்டோம் / ஒருவரையொருவர்’.

தொடர்ந்து, கொன்ற கோழியிறகுகளைப் / பிய்த்தெறிவது போல் / என் ஆடைகளை. / நாம் தழுவத் தழுவ / அவை நழுவிவிட விரும்பினேன் / தானாகவே.’

’உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.’ என முடிக்கிறார்.

தன் நிராசைகளைத் தொடர்ந்து பதிவு செய்தலையே தன் விடுதலைக்கான வழியாகக் கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. இதற்காகத் தன் நிராசைகள் என்னவென்று கண்டறியும் அயரா பணியையும் தொடர்கிறார். இவை, எந்தவொரு மனித ஆளுமை பயிற்சி ஏட்டிலும் பட்டியல் பெறுவதில்லை. ஏனெனில், இவை சுயத்தின் நதியில் தீவிரமான தொடர் நீச்சலால் கண்டறியப்படுபவை. தனது தனிமையிடத்தையும் தனிமைத்துவத்தையும் அவர் கண்டு அடையும் மொழி, சீரிய அழகியலையும் பெண்பாற் விசனங்களையும் கொண்டவை. புற உலகத்தைப் புறக்கணித்து, தன்னை அக உலகத்தின் சிலந்தியாக்கிக் கொண்டிருப்பவை. மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக் காத்துக் கிடப்பவை!

புல்

விருட்சங்கள்
விரிந்து கிளைக்க
கொடிகள்
பந்தலைப் பற்றிப் படர
புதர்கள்
போக்கின்றி அடர –
மிதிபடுகிறது; நசுங்குகிறது;
நீரற்று வாடுகிறது;
எனினும் எழுதுகிறது
பசுமையின் வரியைத்
தனியாக –
ஒற்றைப் புல்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மதுரையில் பிறந்து ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்புப் பெற்றவர். ’நட்சத்திரங்களின் நடுவே’ (1990), ‘வெறும் பொழுது’ (2002), ‘கற்பாவை’ (2004) மற்றும் ‘இறுதிப் பூ’ (2008) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிரவும் சிறுகதை மற்றும் நாவல் வடிவங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு நூல்களைப் படைத்திருக்கிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </