வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -7

ஆழியாள் – 'என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி'

குட்டி ரேவதி  

மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும் பயன்படுத்தும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது தான் பெண்ணினத்தின் வெற்றிகளில் இன்று வரை முதன்மையானது. அதை முழுமையான இலக்கிய வடிவத்திற்கு உட்படும் தேர்ச்சியில் வெற்றியடைந்ததன் வழியாக, மொழியை ஒரு சாணைத் தீட்டப்பட்டக் கத்தியாகவும் ஆக்கினர். இனி, அம்மொழியின் இலக்குகளிலிருந்து தப்பவே முடியாது என்பதையும் உறுதிப்படுத்தினர். அந்த இலக்கிய வடிவங்கள், ஆணின் இலக்கிய நாற்காலிகள் முன்மொழிந்த தகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்ததுடன் அவற்றிற்கெதிரான வேறு தகுதிகளுடனும், அவற்றையும் மிஞ்சிய திறன்களுடனும் எழும்பி வந்தன. ஆண், கவிதை என்று சொல்லி வந்ததைப் புறம் தள்ளி, புத்துயிர்ப்பு உடைய மொழியால் ஆன கவிதையைப் படைத்ததில் இலக்கிய வரலாறு என்பது தலைகீழாகத்தான் ஆகிப்போனது.

கடந்த நூற்றாண்டில், ஈழத்துப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அரசியல் வன்முறைகள் அவர்களின் மொழியை இன்னும் இன்னும் கூரடைந்த ஆயுதமாய் ஆக்கியது. அதன் தாக்கமும், புழக்கமும் தமிழகத்தில் ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்களின் மொழியைக் கூடப் புதுப்பித்தது. தமிழகத்தில் நவீனப்பெண்கள், அரசியல் சிந்தனைகளிலிருந்தும் சித்தாந்தங்களிலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டவர்களாகவோ, அல்லது அவ்வாறு தங்களை அவ்விடம் நிறுத்திக் கொண்டவர்கள் மலிவான சித்தாந்தங்களை முன்மொழிந்தவர்களாகவோ அல்லது தனைத் தவிர்த்தப் பெண்கள் பற்றிய அரசியல் இருப்பு பற்றிய அக்கறைகள் அற்றவர்களாகவோ இருந்தனர். ஆனால், ஈழப் பெண்கவிதை மொழி, இப்பணிகளையெல்லாம் முழுவீச்சில் செயல்படுத்தும் தூண்டுகோலாகவே இன்று வரை இருந்திருக்கிறது. அரசியல் விளைவுகளை நேரடியாக அனுபவிக்க நேர்ந்ததின் அவலம், மொழி வழியானதொரு தீவிரமான இலக்கிய வகைமையாக ஈழப்பெண் கவிதை இன்று வரை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. அதை, ‘ஈழப் பெண் கவிதை’ எனும் சொற்தொகுதியால் ஆக்கும் போது அதன் அரசியல் வெளிச்சம் இன்னும் அதிகமாய் வாசிக்கும் எவரையும் கண்கூசச் செய்யக் கூடியதே!

2000 – ஆண்டில் வெளியான, ஆழியாளின் ‘உரத்துப் பேச’, கவிதைத் தொகுப்பு மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பை தனது தனித்ததொரு மொழியாகவும் குரலாகவும் பதிவு செய்தது. எதிர்ப்பின் குரலும், மானுட அவதானிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தும் குரலும் அப்படித்தான் உரத்துப் பேசும் என்பதையும் அவரின் முழு தொகுப்பிலிருந்தும் நம்மால் உணரமுடியும். சொற்களுக்குப் புதிய அரசியல் வெளிப்பாடுகளை கொடுத்தவர்களுள் இன்று வரை ஈழத்தமிழ்ப் பெண் கவிஞர்களே முதன்மையாக நிற்கின்றனர் என்பதை இவர் கவிதைகளிலிருந்தும் நாம் உணரக்கூடும். ஆழியாளின் மொழியில், ‘மன்னம் பேரிகள்’ கவிதை மிகவும் நேரடியான பாலியல் அரசியல் உடையது. அக்கவிதை சொல்லிய சேதியை மீள் பிரதியாக்கியே கவிஞர்களாகியவர்களையும் இவ்விடம் நான் நினைவூட்டக்கூடும். இதுவும் ஆரோக்கியமான விஷயமே!

மன்னம்பேரிகள்

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத்தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்*
அவள் கோணேஸ்வரிக்கும்**
புரிந்த வன்மொழியாகத் தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

* மன்னம்பேரி (22) 1971 ஜே.வி.பி.கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவள். 1971 ஏப்ரல் 16 – இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.

** கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ம் காலனியைக் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு, இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.

ஆண்களின் பாலியல் வன்முறையை, பாலியல் அரசியலாக்குவதில் அதிலும் அத்தகைய இலக்கியமாக்குவதில் இன்றும் பல பெண்கள் தோற்றுப் போகின்றனர். அது அவரவர் உணர்வின் நேர்மையையும், தன் இனப்பெண்கள் சார்ந்த ஒருமையையும் பொறுத்தது. ஆழியாள், ‘என்னை உற்றுக் கிடக்கும் அம்மிருகம் துயின்று நாட்கள் பலவாகியிருக்கும்’ என்ற வரியால் அதன் வழியாகச் சொல்லும் பாலியல் நுட்பத்தால் அந்த அரசியல் நிலைப்பாட்டின் அடுத்த நிலைக்குக் கடந்து செல்கிறார். அம்மொழியின் உருவாக்கம் வீரியம் பெறுவதற்கான தெளிவான சித்திரங்களை தன் ஒவ்வொரு கவிதையிலும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஆழியாளின் பலம். கவிதையை தான் நுகர்ந்த வெறும் சுகானுபவமாக மட்டுமே பதிவு செய்யாமல், இலங்கும் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தாக்க அமைவுகளைத்தாம் கவிதைகளாக்குகிறார். முழுமையான அதிகாரக் கட்டமைப்பைத் தகர்க்கும் பலமிருந்தாலன்றி இது சாத்தியமில்லை. நுண்மையான கருத்தாக்கச் சித்திரங்களை ஒவ்வொரு கவிதையிலும் வரைந்து கொண்டே இருக்கிறார். அவ்வகையில் பாலியல் நுண்ணுணர் திறனை முழுமையும் கொண்ட ஒரு பெண்ணியக் கவிஞராக அடையாளம் பெறுகிறார்.

பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங்கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறி கொட்டும்.

தனித்து,

அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.

அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என் மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.

‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். அரசு, யுத்தம், குடும்பம், தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்றவை இந்தியா உட்பட்ட நாடுகளிலும் பெண்ணுக்கு எதிரான அதிகாரக்கட்டமைப்புகளுடன் தாம் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. ஆணாதிக்கத்தின் விளைச்சல்களாகவே அவை அடையாளமும் பெற்றிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அத்தனை விடுதலைப் போராட்டங்களும், மக்களை ஒடுக்கும் பேரதிகார அடையாளங்களுடனேயே நாளடைவில் இணக்கம் பெற்று, பெண்களை முற்றிலுமாக ஆண்களிடமிருந்து விலக்கிவைத்து நோக்கும் போக்கையே கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கவிதை இயக்கச் செயல்பாடு என்பது சமீபத்திய காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் பங்கெடுப்பைக் கொண்டுடிருக்கிறது. அரசின் சுவர்களுடன் நேரடியான மோதுதலை நிகழ்த்தும், படைப்பூக்கத்தை விரயமாக்கும் பணியை ஆழியாள் போன்றவர்கள் ஆற்றவில்லை. மாறாக, அரசு எனும் அதிகாரக் கட்டமைப்பின் ஆதிக்கச் சுவர்கள் சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாக என வெளியைக் குறுக்கும் திடமான தன்மைகளுடன் செறிவடைந்து இருப்பதைக் கலைக்கும் வேலையைத் தமிழில் பெண் கவிதை தான் செய்துள்ளது. அரசுடன் மோதுவது வெவ்வேறு முகமூடிகளுடன் வரும் மனிதர்களையெல்லாம் மூடியைக் களைந்து அடையாளம் காணும் நோக்கத்தின்பாலது. எத்தனைக் கோடி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டிருப்போம், நாம். ஆக, நிஜமான போலியகன்ற முகங்களை உருவாக்குவதில் தம் நேர்மையான உழைப்பைக் கடந்த இரு பத்தாண்டுகளாகக் கவிப் பெண்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே வருகின்றனர்.

ஆழியாள், மொழியின் அதிகாரப் பயன்பாடுகளைத் தன் கவிதைகள் வழியாக அழித்தவாறே சமூகத்தின் அதிகாரக்கட்டமைப்புகளையும் தன் தீவிரமான மொழியால் தகர்க்கிறார். எல்லாவற்றையும் மீறிப்போய், சமூகத்தில் பெண்ணுடல் என்பது அருவக் குறியீடுகளாய் இயங்கும் முறைகளையும் கவிதைகளாக்குகிறார். இதுவரை பெண்ணின் உடல் ஆணாதிக்க, சாதியாதிக்க, வர்க்க ஆதிக்க நுகர்தலுக்கு ஊட்டமளிக்கும் குறியீடுகளாகவே இருந்து வந்திருக்கிறது. இத்தகைய அழகியலையும் குறியீட்டு இயலையும் சிதைப்பதும் கவிதையின் பணி என்பதை உணர்ந்தவராக பெண்ணின் உடலை மாற்று, எதிர்ப்புக் குறியீடுகளாக்கி, அவ்வாறு அணுகும் மொழி, கவிதை அமைப்புகளுடனும் வருகிறார். ஆழியாளின் இத்தகைய கவிதைச் செயல்பாடும், அவர் தன் கவிதைகளில் விரித்துத் தரும் உணர்வெழுச்சியும், அவ்வரிகளின் அடியில் பாயும் உணர்ச்சி நீரோட்டமும் வாசிப்பவர் தம் உணர்விழந்த நிலையிலும் அக்கவிதைகளுடன் இயங்க வல்லவையாக இருக்கின்றன. இதனால், வாசகர்கள் மனதில் பதிந்து புரையோடிப் போயிருக்கும் குறியீட்டு வடிவங்களையெல்லாம் சிதைத்து, அவர்களுக்கு புத்துயிர்ப்பான விடுதலைக் குறியீடுகளையும் வழங்குகின்றன. இன்றைய காலப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எல்லோருமே அப்படித்தான் இந்த நெடுஞ்சாலையை வந்து சேர்ந்திருக்கின்றனர்.

ஆழியாள், ‘பாதுகாப்பு’ என்ற கவிதையிலும் அதற்குப் பதிலைக் கொண்டதாக, ‘தடை தாண்டி’ என்ற கவிதையிலும் அப்படியானதொரு கட்டிட வேலையைத் தான் செய்திருக்கிறார். இரண்டு கவிதைகளிலுமே உடல் என்பது வேலியாக மாறும் தருணங்களை ஒப்பு நோக்கி நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு

உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே
ஆழக்கோடுகள் அதன் மேல் கிழித்து
கூராய்ச் செதுக்கிய கதிகால்களை நட
படுநேராய் எழுகிறது வேலிகள்.

தோல் மினுமினுத்துச் செழிக்க
மார்பின் பருக்கைகள் திரட்சிகளாகும் போது
சோடிக் கண்களால் உன்னை மேய்ந்தபடி
அவை கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றன.

பருவ கால மாற்றமதில்
மாரித் தவக்கைகளும் மயிர்க்கொட்டிகளும்
வந்து போய்க்கொண்டிருக்க,
கொலைஞன் ஒருவனின் கூர்க்கத்தி முனையைப் போல்
வளரும் எட்டு வாரக் கரு உருவில்

வயிற்றின் கொழகொழத்த சதை இடுக்குகளுள்
புகுந்தபடி
சொகுசின் கணச்சூட்டில்
வேலிகள் ஆழமாய்ப்
புதைந்து பதிகின்றன.

அருகில் ஆங்காங்கே
இன்னமும் வேலிகள்
வெளிர் பச்சையாய் முளைவிட்டுக் கிளம்பியபடி
வழிபாதை நெடுகிலும் சாரிசாரியாய்ச்
சாரிசாரியாய்….
உன் கண்பாப்பாக்கள் சலித்துக் குறுகி இருளும் வண்ணம்
மனம் எட்டும் பரப்பெங்கும் விரிந்து கிடக்கின்றன.

நீ நினைத்திருக்கலாம் அவை தாண்டுவதற்கென்று.

அவை காத்திருக்கின்றன
தோல்க்கூடாரத்தினுள்.
சிறுகச் சிறுக அரித்து அறியாக்கணத்தில்
உன்னுள் புகுந்து
முழுதாய் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே.
---------------------------------------------------------------------

தடை தாண்டி


என் ஆத்துமமும் அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்குப்
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை.

நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் – நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்.

எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!

ஒன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்

2006 - ம் ஆண்டு வெளிவந்த, ‘துவிதம்’ என்ற தனது இரண்டாவது தொகுப்பின் வழியாக இன்னும் ஆழமான பெண்ணிலை வாதத்தளங்களை துழாவும் உழைப்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆழியாள். ‘துவிதம்’ என்பது இருமை என்று பொருள் பெறும். பாலியல் உறுப்புகள் அல்லது பாலியல் விழைவை நேரடியான விளிப்பாக்கி முன்வைக்கும் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையில் ஒரு பெரிய தவிர்க்க இயலாத பரப்பாகிய பின்னர், அதன் அர்த்தமற்ற கவனச்சிதறடிக்கும் விவாதங்களால் கவனக்குவிப்பு பெறாமல் போகும்படி, உள்ளிருந்தும், வெளியே இருந்தும் எதிர்த்து இயங்குபவர்களுக்கு மத்தியில், ‘ஆழியாள்’ கவிதைகள் தெளிவாகத் தன் சித்தாந்தத்தை வரையறுத்தவாறே அதன் அழகியலும் எதிர்ப்புக்குரலும் மலினமுறா வண்ணம் மேலெழுந்து நகர்கின்றன. தான் எடுத்துக்கொண்டிருக்கும் பணியில் ஆழமான அக்கறையும் தொடர்ந்த மெனக்கெடலும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. ‘காமம்’ கவிதை அத்தகைய முன்னகர்வின் முதன்மையான மைல்கல்லாக இருக்கிறது.

காமம்

உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்

பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு.

சுவருக்கு செவிகள் உண்டு.
இருளுக்குக் கூர்விழிகளும் உண்டு.
பீறிக் கசியும் இரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவளுக்கு.

இக்கவிதை, பெண்ணின் காமம் என்ற உணர்ச்சியைப் புறக்கணித்ததைக் குறிக்கும் கவிதை. அதே சமயம் அதன் மூல அரசியல் தோன்றும் இடத்தை எளிதான சொற்களால் சென்று அடையவும் செய்கிறது. பெண்ணின் காமம் நசிபடும் இடங்கள் இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில், அதைப் பெண்களின் பொதுப் பிரச்சனையாக்கிப் பேசும் ஆழியாளின் இக்கவிதை தமிழ்ப்பாலியல் அரசியலின் நிகழ்நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி உருவாக்கிய ஓலங்கள் தாம் சொற்களாகி கவிதையின் குரல்களாய் ஆகிறதோ எனும் அளவிற்கு அவ்வலியையும் விடுதலைக்கான மன அவசத்தையும் தெளிவான நடை நயத்தில் பதிவு செய்திருக்கிறது இக்கவிதை.

பெண்ணியத்தின் பொது வரையறையை அடைய முடியாதபடிக்கு, பெண்ணின் அடையாளங்கள் சிதறுண்டு பல்கிப்பெருகிக் கிடப்பதைப் பலமுறைகள் நாம் பேசு பொருளாக்கியிருக்கிறோம். இதனால், பெண்ணிலைவாதத்தின் திரட்சியை எட்டுவதற்கான ஒருங்கிணைவைப் பெண்கள் அடைய முடியாமலேயே போய்விடுகிறது என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அடையாள அரசியல் பெரும் விவாதமாக மையத்தளத்தை ஆக்கிரமித்த போதெல்லாம், அடையாளங்களில் இளைத்ததும் ஒடுக்கப்பட்டதுமான அடையாளத்தை ஒரு கொடியாக உயர்த்திப்பிடிக்கும் சித்தாந்தத்தையே நாம் கையில் எடுக்க வேண்டும். இத்தகைய தவிப்பு நிலையையும் தன் ’அடையாளம்’ கவிதையில் துல்லியமாகக் குறிப்பிட்டிருக்கிறார், ஆழியாள்.

அடையாளம்

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில்
‘தெமள’

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி

மலையில்
மூதூர் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.

‘ஆழியாளின்’ தொகுப்புகள் சிந்தனைக்கு ஒரு பெருவிருந்து தான். எல்லா கவிதைகளையும் குறிப்பிட்டுச் சுவைப்பதற்குப் போதுமான கட்டுரை வெளி இங்கு இல்லை என்பதால் இவ்விடம் நிறுத்திக் கொள்கிறேன். என்றாலும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, அவரது இரு கவிதைத் தொகுதிகளையும் முழுமூச்சாய் வாசித்து விடும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெண் விடுதலை, பாலியல் அரசியல் போன்ற அரசியல் தெளிவுகளை, நுட்பங்களை நாம் பெற அம்முயற்சி உதவியாக இருக்கும். இத்தகைய வாசிப்பின் நிறைவில் எனக்குப் பிடித்தமான தனித்த ஒரு கவிதையையும் நான் கண்டுகொண்டேன். அழகியலிலும் படிமக் கட்டமைப்பிலும் நேர்த்தியான கவிதை. மொழியின் வீச்சில் சீராகப் பறந்துச் சென்று மனக்கூட்டுக்குள் சொற்களாகச் சிதறும் கவிதை. என்றாலும், ஒரு காட்சியை நம் எல்லோருக்கும் கண்களுக்குள் பத்திரப்படுத்தி நகரும், ‘இரை’ என்ற கவிதை.

இரை

பரிணாமம் கட்டியெழுப்பியிருந்த
அப்புராதன வீட்டின்
விட்டத்திலிருந்து
நூல் இறக்கிக்
கூடு இழைத்துக்
காத்திருக்கிறது இமைச்சிலந்தி
வெட்ட வெட்ட விழித்தபடி
விரிந்த கூடே அதன் பார்வையாய்

அதன் வழியில்
மணமூறும் லவெண்டர் பூக்களைக்
கொத்தாய் அள்ளி முகர்ந்தபடி
சில்லென வீசி நகர்ந்த
முன்பனிச் சாரற் காற்றில்
அந்தி பொழுதோ சறுக்கி விழ,

வீட்டின் தொடர்வேலி
மலைத்தடுப்புக்களிடையே,
சிக்கிக் கிடந்த சூரியனைக்
கவ்விக் கண்மூடியது இமைச்சிலந்தி.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: ஆழியாள், ஈழம் திருக்கோணமலையில் பிறந்தவர். இவரது இயற்பெயர், மதுபாஷினி. தன் ஆங்கிலப் பட்டப்படிப்பை மதுரை மீனாட்சிக் கல்லூரியிலும், அதில் முதுகலைப் பட்டப்படிப்பை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். ’உரத்துப் பேச’, ‘துவிதம்’ என்ற இரு கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.