வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -5

க்ருஷாங்கினி – சட்டகங்களால் அடைபட்ட சொற்கள்

குட்டி ரேவதி  

மீண்டும் ஒரு முறை எழுதிக்கொள்கிறேன். ‘ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்’ எனும் இத்தொடரில், சில பெண் கவிஞர்கள் முன்வைத்த ‘உடலரசியலை’ மட்டுமே எழுதுதல் என் நோக்கமன்று. எனில், வெகுசில கவிஞர்களை மட்டுமே எழுத வேண்டியிருக்கும். அதிலும், தங்கள் கவிதைகளில் பெண்ணுடலின் உடற்கூறுகளை வெறுமனே அடையாளப்படுத்தாமல், அவற்றின் அடியில் புரண்டெழும் அர்த்தங்களையும் அடுக்கடுக்கான அரசியல்களையும் அர்த்தப்படுத்தி நேர்மையாகவும் சுடும்படியாகவும் எழுதியவர்கள் ஒரு சிலரே. இந்நிலையில், ஆண் மையவாத எழுத்தைச் சிதைத்தவர்கள் என்னும் பதம், தங்கள் குடும்பம், தன் சூழல், தன் சுற்றம் இவற்றிற்கு மத்தியில் தன் இருப்பை முதன்மையாக்கும்போது, எழும் சிக்கல்களை எழுதிய பெண்களையும் தாம் அர்த்தப்படுத்தும். தன் இருப்பு என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இருந்த காலக்கட்டத்தில், தன்முனைப்பை மொழி வழியாக, அதிலும் இலக்கிய வகைமையின் செழுமையான வடிவமான கவிதையை ஆண்டவர்கள் வழியாக நாம் அறிந்து கொள்வதும், அவர்கள் எந்த கருத்துருவாக்கத்தை தம் எழுத்தில் சுயமாகக் கட்டியெழுப்பினார்கள் என்பதை அறிவதும், அவற்றை அவர்கள் கவிதைகள் வழியாகவே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதும் தாம் இத்தொடரின் நோக்கம். இத்தொடரில் விடுபடும் கவிஞர்கள், மேற்கண்ட தலைப்பில் அடங்காத கவிஞர்கள் என்னும் பொருளில் மட்டுமே.

க்ருஷாங்கினி, 1998-ல், ‘கானல் சதுரம்’ என்ற தொகுப்பின் வழியாகக் கவிதைப் பரப்பிற்குள் நுழைந்த மூத்த கவி. இவரது கவிதைகள் அடிப்படையில், வடிவொழுங்கு உடைய உருவமைப்புகளை சொற்களாகவோ, கவிதையின் கருக்களமாகவோ அல்லது படிமமாகவோ வைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு, அத்தகைய வடிவியத்தன்மைகளால் அலைக்கழிப்புக்குள்ளான கவிஞராகவே இருக்கிறார், இவர். மனித இயக்கங்கள் எல்லாமே வரையறுக்கப்பட்ட சட்டகங்களில் அடைக்கப்பட்டதாக இருக்கும் வாழ்வியலை, நவீன வாழ்வாகக் காட்சிப்படுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கும் இவரது தொடர் முயற்சியே, கவிதைகளாகப் பதிவாகியிருக்கின்றன. விளிம்பு, பரப்பு, கூம்பு மேடு, பள்ளம், பெருவெளி, நீளம், நடு, கோணல், குறுக்கு, கோடு என வடிவம் பெற்றுக்கொண்டேயும் இருக்கின்றன சொற்கள்!

ஓட்டுக்குள் பாதுகாப்பாக
பிசுபிசுத்த திரவத்தின் மத்தியில்
அதிராமல் நான்.
சுற்றிலுமுள்ள அனைத்துச் சத்தங்களும்
வடிகட்டி, நிறமற்ற வெளிர்நிலையில்

மிதமாக வந்தடைகின்றன
என்னிடம்.
எங்கோ ஓர் நீள் சதுரம்
துண்டாடப்பட்டு அடுக்கடுக்காக

விரிசல்களையும் உடனிருத்தி
சிறு சதுரங்கள் ஆவதை
மரங்களின் ஊடாகக்
காண்கிறேன்.
------------------------------

வாழ்க்கை

பரந்த மைதானத்தில்
பிடுங்கி எறியப்பட்ட
காம்புகளற்ற தனிப் பூக்கள்.
ரத்தத்தில் தோய்ந்ததால்
கூம்பு வடிவமாகக்
குத்திட்டு நிற்கும் மயிர் முட்கள்.
பிணமுகத்திலும் படிந்துவிட்ட பயம்
மொத்தமாக எரியவைக்க
முதலில் சில விறகு
அதன் மேல் ஓர் அடுக்கு உடல்
அப்புறம் மரம்
அப்புறம் உடல்கள்
அடுக்கப்பட வேண்டியவற்றில்
இன்னமும் பாக்கி உள்ளவை
உடல்களே!

ஒரு தச்சனைப் போல பெளதீக வடிவங்களை ஓயாது ஆராயும் கண்களுடைய இக்கவிஞர், அதன் எல்லைகளைத் தாண்ட முடியாமல் அதன் வளையத்திலேயே சிக்கிப் போகும் சமயங்களும் உண்டு. இம்மாதிரியான பெளதீக ஈர்ப்பை மட்டுமே தனது திறனாகக் கொண்டு, ஓர் ஓவியன் வரையத்தொடங்கினாலும் இச்சிக்கலைத் தான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, அப்பெளதீக, பொருண்மை சார்ந்த நோக்கம், ஏன் அவ்வாறு தான் ஈர்க்கப்பட்டோம் என்று ஆராய்ந்து தெளிந்த சித்தாந்தத்திலிருந்து உருவானதாக இருக்கும் பட்சத்தில் தான் புத்துயிர்ப்பு பெறும். இல்லையெனில், பிளாஸ்டிக் போன்ற உயிரற்ற கவர்ச்சியுடன் உருவாக்கப்படுவதாய் இருக்கும். ஆனால், இத்தகைய சிரமங்களை, கருக்கொண்டுள்ள உட்பொருள் தரும் வாய்ப்புகளால், கடந்து செல்ல முடிகிறது இவரால்.

மனித சமூகத்தில், எல்லா உறவுகளும் வாழ்வியலும் கட்டங்களுக்குள் கட்டமாக சதுரமான பரப்புகளுக்குள் அடைக்கப்பட்டதாக இருக்கிறது. எண்ணங்களும் அவ்வாறே! பெண்ணுக்கான எல்லைகள், வீடு, கழிவறை, தனி அறை என ஒன்றுக்குள் ஒன்றாகக் குறுகிக் கொண்டே இருக்கும் பரப்பின் சித்திரம் கண்டு இவர் கவிதைகள் இப்படி உருக்கொண்டிருக்கலாம். எல்லா சதுரங்களுமே சட்டகமாக ஆக்கி அடித்து இறுக்கப்படுவதும், அதில் பெண்ணின் இருப்பு நிர்ப்பந்திக்கப்படுவதும் என உடல் பூர்வமான அதே சமயம் சடப்பூர்வமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

உறவு II

வெளிக்கதவு பூட்டியிருந்தால்
சிறிதே திறந்திருக்கும் உள் கதவு.
அதுவும் பூட்டியிருந்தால்
விரிந்திருக்கும் முன் கதவு
இருளை உணரும் போது
எல்லாமே அடைத்திருக்கும்
உள்ளது வெளியேயும்
வெளியது உள்ளேயும்
பிரவேசிக்கத் தடை.

இக்கவிதை ஒடுக்குமுறை என்னும் நடைமுறைச்செயல்பாட்டில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், அது ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் உறவையும் எதிர்வினையையும் விளக்குவது. செம்மையாகச் சிக்கனமான சொற்களால் சொல்லியிருக்கிறார். இதிலும் இயக்கம் என்பது வெளி, உள், கதவு, இருள், முன் என பெளதீகச் சட்டகங்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, ஒடுக்குமுறையை இயக்கும் மனதின் சட்டதிட்டங்களையும் எழுதிவைக்கிறார். சென்ற கவிதையின் தொடர்ச்சியைப் போன்றதொரு அவரது இன்னொரு கவிதையைக் கண்டெடுத்தேன்.

பெண்

அறைக்குக் கதவு தேவை
சுய உபயோகத்திற்கெனினும்
பொது உபயோகத்திற்கெனினும்
அறைக்குக் கதவு அவசியம்
உள்நுழைய உத்திரவு
கதவா தர வேண்டும்?
உந்தித் தள்ளியும்
மெதுவாகத் திறந்தேனும்
உள் நுழைதல் மட்டுமே எல்லை
எனினும் கதவு வேண்டும்.
சுய உபயோகத்திற்கு மட்டுமெனில்
பாதுகாக்க, பத்திரப்படுத்த
அறைக்குக்
கதவோடு பூட்டும் தேவை.
அழுந்த நுழைந்தும்
அவசரமாய் வெளியேறியும்
கதியின் இயக்கத்தில்
கக்கலும், கரைசலும், கரைத்தலும்
பிண்டமும். முழுதுமான
பலப்பலப் பண்டங்கள்
வெளியேற்றம் –
அடைத்தலும், திறத்தலும்
உத்திரவு அவசியமற்ற
கதவின் வேலையானது.


இக்கவிதையின் வரியான, ‘அடைத்தலும் திறத்தலும் உத்திரவு அவசியமற்ற கதவின் வேலையானது’ என்பது பெண்நிலைவாதத்தைக் கூர்மைப்படுத்தும் வரியாகும். இங்கு கதவு என்பது, வெறும் பெளதிகச்சட்டமாக மாறி நிற்கும், ஒடுக்குமுறையைச் செயல்படுத்தும் ஆதிக்க மனநிலையை, ஆணின் மனநிலையை உருவகப்படுத்துகிறது. அந்த வேலையைப் பகிர்ந்து கொண்ட கதவைக் குறிப்பது. உத்திரவு அவசியமற்ற சேவகனைப் போல பணிவிடை செய்யக்கூடியது.

செயற்கை சதுரம்

நீண்ட நெடும் பயனம்
இரை தேடியும் இருக்க இடம் தேடியும்
வம்ச விருத்திக்காவுமாக,
நெளி விளிம்பு
ஒழுங்கற்ற நீர்
கடலின் நீலப்பரப்பு

சட்டமிட்டு திட்டமிடப்பட்ட
பச்சைகள் கடந்து
மணற்துகள் பறக்கும்
பாலையையும் தாண்டி

மேடுகளையும்
இடைவெளிப்பள்ளங்களையும்
அதன் பிறகான
மஞ்சள் பூக்கள் மலர்ந்து விரிந்த
அடர்ந்த மஞ்சள் பெருவெளி நோக்கி
நீண்ட நெடும் பயணம்
வம்ச விருத்திக்காய்
மணலின் நடுவே
சிறு சதுர மஞ்சள்

பெருவெளியென நம்பி
மென் சிறகுகள் கொண்ட
வண்ணத்துப் பூச்சி
கீழிறங்கித் துணைதேட-

ஸ்டாண்டு இட்டு
நட்டு நிறுத்திய தட்டில்
பிசுபிசுத்த ஈரவர்ணம்
மென் இறகை அப்பிக்கொள்ள

இறகை அடித்து அடித்து வெளியேற
உடல் கனத்தால்
பின்னும் பின்னும் உள் அமிழும்.

சிலசமயங்களில் இத்தகைய கோடுகள், வரைவுருவங்கள், வளை வடிவங்கள் அவரிடம் கருக்கொண்ட கருப்பொருளுடன் இயைந்து குறியீடாக மாறிவிடும். இங்கும் அப்படித்தான்! ஈரவர்ணத்தில் சிக்கிக்கொண்ட மென்னிறகு வண்னத்துப் பூச்சி! பெருவெளியென நம்பி பிசுபிசுப்பில் சிக்கிக்கொண்ட இறகுகள் மேன்மேலும் அமிழும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட இடத்து விடுதலையை நோக்கிப் பறத்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது ஒரு குறியீடாக உருப்பெறுகிறது.

இவ்வாறு இயல்பான குறியீடுகளாகவும் சட்டகங்களாகவும் மாறி இயங்கிய இவரது சொற்கள் பின்னாளில் வந்த இவருடைய, ’கவிதைகள் கையெழுத்தில்..’ தொகுப்பில் உருண்டு கலைந்து ஓடத்தொடங்கியிருக்கின்றன. வார்த்தைகளைத்தொடுத்திருந்த கயிற்றை உருவிவிட்டது போல உதிர்ந்து சிதறியும், சமூக அக்கறைகளை முன்வைக்கும் அவசரப் பொறுப்பால் உரைநடையாகியும் நடை நயம் தளர்ந்தும் காணப்படுகின்றன. இயற்கையின் மீது அக்கறையும் கவனமும் கொண்ட இக்கவிதைகள் மண்ணோடு பிணைந்து நிற்கும் மரங்களைப் போலன்று, பாக்கெட்டுகளில் வேர் அடைக்கப்பட்ட செடிகளாய் ஒட்டாமல் இருக்கின்றன. என்றாலும் FRONT LOADING MACHINE என்ற கவிதையின் வழி, நவீனத்தை எட்டிப்பிடிக்கும் முயற்சியை அவர் செய்துதான் இருக்கிறார்!

FRONT LOADING MACHINE

அடைத்து உள்செலுத்து – கதவை
அழுத்தி மூடியிட்ட பின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும், உருளும், புரளும்;
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்.
அறைக்குள் சிறைவாசம்.

சிறு துளை வழியே உள்நீர் வெளிவழிய
உச்சக்கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில்
இறங்கிக் கீழே விழும்

பெண்ணுடலை FRONT LOADING MACHINE – ஆகப் பார்க்கும் இப்பார்வையும் அதில் ஆளப்பட்டிருக்கும் பூடகமும், இவரது மற்ற கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

இக்கவிதையைப்பற்றி, ‘எல்லோராலும் எப்போதும் தன் உடல் அடையாளம் சுமந்து கொண்டு திரிய முடியாது. உயிர் சுமந்து திரியலாம். ஆனால் அடையாளம் அவமானப்படும் போதும், உடல் மட்டுமாகவே பார்க்கப்படும் தருணங்களில் என்னால் எழுதப்பட்ட கவிதைகளில் சில. பெரும் கூட்டத்தை சாதகமாக்கிக்கொண்டு, கை வீசி நடப்பது போன்ற பாவனையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணின் பின் புறத்தையும், தட்டிச் செல்லும் மனிதனின் மனத்தில் பெண் எப்படிப் பதிவாகி இருப்பாள்? மறு உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட உடல் இணைப்பு, உல்லாசமாகிப் போனது மனிதர்களுக்கு மட்டும் தான், விலங்குகளுக்குக் கிடையாது. எனவே, மனிதனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றன பெண் உடல்கள். ‘பிரண்ட் லோட்ங் மெஷின்) சிலேடையில் சொல்லப்பட்ட கவிதை; எட்டேகால் லட்சணமே என்ற அவ்வையின் பாணியில். இப்போது நான் பெண்ணாகிறேன்’ என்று குறிப்பிடுகிறார், க்ருஷாங்கினி.

ஒரு கவிஞரின் ஆளுமையை, கவித்துவத்தை நம்முள் உருவேற்றிக்கொள்ள அவரது ஒன்றிரண்டு கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. முழு நூலையும் வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்பிற்குப் பின் தான், அக்கவிஞர் தன்னுள் சாணையேற்றி வைத்திருக்கும் கவித்துவம் நம்முள்ளும் பாய்ந்து சிராய்ப்புகளையேனும் ஏற்படுத்தமுடியும் என்று நம்புகிறேன். ஒற்றையொற்றைக் கவிதைகள் வழியாக, அக்கவிஞரை நூல் பிடித்துப் போகலாம் என்றாலும் ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்பு கொடுக்கும் பெருவெளி அனுபவம் தான் மெய்மையானது.

-----------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: க்ருஷாங்கினியின் முஹ்டல் நூல், ‘கானல் சதுரம்’ கவிதைத்தொகுப்பு 1998 - ல் வெளியானது. ‘கவிதைகள் கையெழுத்தில்…’ என்ற கவிதைத் தொகுப்பு 2007 – ல் வெளியானது. கவிதை தவிர சிறுகதைகளையும் எழுதிவருகிறார். ’பறத்தல் அதன் சுதந்திரம்’ (இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்பெண் கவிதைகள்) என்ற நூலை 2001 –ம் ஆண்டு கவிஞர் மாலதி மைத்ரியுடன் இணைந்து தொகுத்தார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </