வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -4

சுகந்தி சுப்ரமணியன் – தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு

குட்டி ரேவதி  



பெண்கள் ஏன் கவிதை எழுத வருகிறார்கள் ஏன் நாவல், சிறுகதைகளை பெரும்பான்மையும் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை? என்ற கேள்விக்குப் பலமுறைகள் பதிலெழுதியும் நிறைவுறாத இலக்கிய இடைவெளிகள் இன்னும் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. சுகந்தி சுப்ரமணியனிடம் அதற்கான முழுப்பொருளையும் உணர்ந்ததுபோல் தோன்றிற்று. குடும்பம் என்பதை, பெண்கள் தாங்கள் ஒளித்து வைத்திருக்கும் ‘தாலியைப்’போன்று மறைத்து வைத்துக் கொண்டாடும் மனநிலையிலிருந்து வெளிப்பட்டுத் தன் குரலை வெளிப்படுத்துவதற்குச் சரியான மொழியைக் கவிதை தான் தருகிறது. குடும்பத்தின் சிக்கலான தருணங்கள், அசெளகரியங்கள், அவமானங்கள் என்னவாயினும் வெளிப்படுத்த இயலாத, வாய்ப்பிலாத பொழுது கவிதை தான் அவற்றைப் பூடகமாகவும் அதே சமயம் வெளிப்படுத்தும் ஆசுவாசத்துடனும் வழங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது, என்பதை சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் நிரூபிக்கின்றன. ஏற்கெனவே உடல் அரசியலை முன்வைக்கும் நேரடியான கவிதைகளுக்குப் பழக்கமான நம் வாசகர்களுக்கு, சுகந்தியின் கவிதைகளை உயர்த்திக் கூறுவதாகத் தோன்றலாம். ஆனால், என்னளவில் குடும்பம் என்ற பெண்ணின் மீதான நேரான ஒடுக்குமுறை ஆயுதத்தை இவ்வளவு துல்லியமான காட்சியாக எவருமே எடுத்துவைக்கவில்லை என்பதே இவரது கவிதைகளை நான் முன்மொழியும் காரணம். அதுமட்டுமன்றி, நவீன உடலரசியல் மொழிக்கு முன்பாக, இவ்வரசியலுக்கும் மொழியைத் திறந்து கொடுத்த கவிஞர்களில் முக்கியமானவர் சுகந்தி சுப்ரமண்யன். இவரது கவிதைகளை வாசிக்காமல் நவீனப் பெண் கவிதைகளை வாசிக்க நேர்கையில் பெண் கவிதையின் சாதனை ஏதோ தற்காலத்தியது போன்று தோன்றும் அபாயம் இருக்கிறது.

1988 –ல் அன்னம் வெளியீடாக வந்த ‘புதையுண்ட வாழ்க்கை’ எனும் இவரது கவிதைத் தொகுப்பும், 2003-ல் பதிப்பான ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுப்பான ‘மீண்டெழுதலின் ரகசியம்’ எனும் தொகுப்பும் எவ்வளவு எதிரெதிரான அதே சமயம், ‘புதையுண்ட வாழ்க்கையி’லிருந்து ’மீண்டெழுதலின் ரகசியத்தை’க் கண்டறிந்திருப்பதையும் பாருங்கள். இது இத்தொகுப்புகளின் தலைப்பளவில் மட்டுமல்ல, ஒவ்வொரு கவிதையும் தனித்த அளவிலும் அளவிடமுடியாத துயரத்தைச் சித்தரித்தப் பின்னர், ஒரு மீட்சியைப் பாடி முடிகிறது. அது தன்னளவிலேனும் சாத்தியப்படுகிறதா என்ற அக்கறையுடயதாயும் இருக்கிறது.

எழுத்து

ஆயுதம் தாங்கிய வீரன்
தன் படையுடன் செல்கையில்
கவனம் பிசகாது
அடியெடுத்து வைக்கிறான்.
அவன் பாதங்கள்
எலும்பெண்ணிச் செல்கின்றன
கடவுள்களின் நாமங்களினூடாக.

என்ற கவிதையைப் போல வெகுசில கவிதைகள் தாம் தன் சூழலுக்கு, அதாவது குடும்பம் என்னும் நான்கு சுவர்கள் வரையறுக்கப்பட்ட பிரக்ஞையிலிருந்து வெளியே செல்வதுடன், அர்த்தங்கள் அடுக்கிய கவித்துவம் உடைய கவிதைகளாக இருக்கின்றன.

கண்களுக்குள் காட்சிகள் நிறைந்து போனதால்
இமைக்கமுடியாமல்
தத்திப் பறக்கும் சிறுகுருவி போல்
எனதுள்ளம்.

என்றாலும் அவர் ஆளுமை என்பது குடும்பத்தை நிர்வகிக்கும் ஆளுமையாகத்தான் அவருடைய எல்லா கவிதைகளிலும் தொடர்ந்து ஒலிக்கிறது. அவரது உணர்வெழுச்சி குடும்பத்தின் அதிகாரச் சிக்கல்களையும் சமரசங்களையும் தன் வழியே தீராமல் எழுதிக்கொண்டே செல்கிறது. வேறுபட்ட கதாபாத்திரங்கள், மாமியார், கணவன், பாட்டி, தங்கை, இரவல் கேட்டு வரும் பக்கத்து வீட்டுப் பெண்கள், கருத்தில் மாறுபட்டாலும் நெருங்கிய வேற்றுமதத் தோழிகள், வயிற்றில் கருவுண்ட குழந்தை, கட்டிலில் படுத்திருக்கும் குழந்தை, குழாயில் நீரடிக்கச் சிரமப்படும் தான், அவருக்கு உதவி வாளியில் சந்தோசமாய் நீர்வழியச் செய்யும் தெருச் சிறுவன், அவனை

அதட்டி இழுத்துச் செல்லும் அவன் அம்மா என மத்திய தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை நிறைக்கும் கதாபாத்திரங்கள் தொடர்ந்து இவர் கவிதைகளின் உள்ளும் புறமும் இயங்கிக்கொண்டே இருக்கின்றனர். கணவனும் குழந்தையும் வெளியே சென்று விட்ட அன்றாடப் பகல் நேரங்களின் மெளனத்தைச் சிந்தனைகளுடன் கழிக்கும் பெண்ணாக மாறிய இவர், ‘தெரியாதவை, உணராதவை எல்லாவற்றிலும் பாதுகாப்பில்லா பயமும் சந்தோசமும்’ தான் ‘தான்’ எனப் பதிவு செய்கிறார். அதே சமயம், குடும்பம் என்னும் அமைப்பால் புறக்கணிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், குருட்டுப் பெண்களும் இவர் நினைவு வெளியில் உலவுவதைக் கவனிக்கலாம்.

மாதவிடாய், கருவுறுதல், பிரசவ வேதனை போன்ற பெண்ணின் உடலுக்கேயான உடலியங்கியல் நிகழ்வுகளைப் பேசுபொருளாக்கும் ‘உடலரசியல் காலத்திற்கு முன்னமேயே எழுத்தில் கருத்தின் சாரம் குறையாமல், கவனம் குலைக்கும் உத்தி இல்லாமல் முன்வைத்தவர்.

பெண்ணுடல் நிகழ்வுகளிலேயே மிகவும் சமூக இறுக்கம் உடையது பிரசவம் தான். பெண்ணுடலின் இயல்பான நிகழ்வாயும், இயற்கையின் மிக முக்கிய தருணமாயும் உணரப்படவேண்டிய பிரசவம், பிரசவ அறைகளில் பெண்ணுடலின் மீதான சாபமாயும், பெண் மருத்துவர் மற்றும் செவிலியராலேயே அது அருவறுப்பாயும் அதன்வழியாக, பிரசவ இயக்கத்திற்கு உள்ளாகும் பெண் அச்சமுறுவதாயும் இருக்கிறது. இன்று வரை, இதன் சிக்கல்கள் மருத்துவமனை வளாகங்களில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. பல நேரங்களில், பிரசவ அறைகள் மனநோய் விடுதிகளாகத் தான் என் மருத்துவப் பணி அனுபவங்களில் தென்பட்டிருக்கின்றன.

மெல்ல வந்து கொண்டு
இருந்தது வலி.
பக்கத்து தடுப்பின் வழியே
சின்ன முனகலும், அழுகையும்.
பிரசவ அறையை விட்டு
வெளியே மெளனமாய் நடுப்பகல்
அந்தப் பெண்ணுக்கு சிசேரியனாம்
சிஸ்டர்கள் பேச்சு கேட்டதும்
மெல்ல விழித்து அனுதாபமாய்
ஐயோ என்றேன்.
அடுத்தது நீ என்றாள்.
நர்ஸ் ஒருத்தி.
என் வலியைச் சொல்லுகையில்
அனுதாபப்பட பக்கத்து
படுக்கைக்காரி இருப்பாள்
மெல்லச் சரிந்தேன்
பயத்துடன்.

அறை

அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் தான்
வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பி வழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாகவே இருக்கமுடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.


இந்தக் கவிதையில் மெல்ல மெல்ல அறையே உடலாக மாறி, உற்றுநோக்குவதைக் கவனிக்கலாம்.

பெண்ணையே நாம் கண்டதில்லை.
ஆணையே நாம் கண்டதில்லை.
உடல்கள் உடைகளில் மறைந்திருக்க
வயிற்றுக்குள் உணவும் மலமும் கலந்திருக்க
ஒவ்வொரு கடவுளுக்கும்
பண்டிகைக்கு மட்டும் பூஜை செய்ய
சூரியனும் சந்திரனும் கடமையில் இருக்க
அம்மாவுக்காக நான் காத்திருக்க
எனக்காக என் குழந்தைகள் காத்திருக்க…
போதும் ஏக்கம்,
எதுக்கினி இவ்வுடல்?

பெண்களுக்கு ‘நாட்குறிப்பு’ எழுதுவது என்பது மிகவும் பிடித்தமான வேலை. தங்களுக்கென வரலாறும் பதிவுகளும் இல்லாது போனதால், நினைவின்மை என்பதே பெண்களுக்கானதால் நாட்குறிப்பு எழுதுவதை அதிலும் ரகசியமாய் எழுதிவைப்பதை பெண்கள் தமக்கான உத்தியாகக் கொண்டதால் தான் கவிதை எழுதத்தொடங்கினர். பெண்களுக்கே நினைவின்மை என்பதை சுகந்தியின் கவிதை மட்டும் தான் இதுவரையிலான நவீன தமிழ்க் கவிதையில் மிகச்சரியாகப் பதிவு செய்திருக்கிறது. ரகசியங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் ஊடகம் கவிதையே! பெண்களின் உடல் நினைவுகளைச் சேமித்து வைக்கும் கலயமாகவும், நினைவுகளை சேமித்து வைப்பதற்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளே அவர்களுக்கு சாபம் போலவும் இருக்கின்றன. ஆனால், சுகந்தி குறிப்பிடுவதைப் போல் நினைவின்மையைப் பெண்களுக்கு வழங்கும் அரசியலும், மதம், திருமணம், குடும்பம் இவற்றில் நூல் பிறழாமல் நடக்கத் தேவையான ஞாபகங்களும் அதே சமயம் தன்னிடமிருந்து அபகரிக்கப்படும் நினைவுகளும் எனப் பெண்கள் குடும்பத்தின் தூண்டிலில் நிரந்தர இரை.

என் குழந்தையின்
தொப்புள் கொடியை
அறுத்தது யார்?
பாட்டியா? நர்ஸா?
நினைவில்லை.
என் முதல் கர்ப்பம்
பற்றிய முதல் செய்தியை
யாரிடம் சொன்னேன்?
ஞாபகமில்லை.
பள்ளியில் அ.ஆ.இ.ஈ.
கற்றுக்கொடுத்த ஆசிரியர் யார்?
மறந்து போனது.
பள்ளி மைதானத்தில்
விளையாடும்போது ருதுவான கணத்தில்
என் கைபிடித்து சந்தோஷம் கொண்டமுகம்
நினைவில்லை.
சட்டென செத்துப் போன அப்பா
எனக்காய் விட்டுப்போன வார்த்தைகள்
எவை எவை?
நினைவில்லை.
முதல் பிரசவம் குறித்து
பயமுறுத்திச் சொன்னவர் யார்?
மறந்து போனது.
பாஷை புரியாத ஊரில்
புது பாஷையில்
முதலில் கேட்ட பெண்
நீள்கிறது நினைவின்மை
ஏதோ ஒருவகையில்
எல்லாவற்றிற்கும்
முக்கியத்துவம் இருந்தும்.

மத்தியத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகள் அரூபமாகவும் நிரந்தரமாகவும் எழும்பி வருபவை. தோண்டிய பள்ளத்தில் விழுந்த யானையைப் போன்ற அலைக்கழிப்பும் பேதலிப்பும் தருவது. கட்டமைக்கப்படும் குடும்பப்பெருமிதங்கள், வாழையிலையில் விளக்கெண்ணையைத் தடவி நெய்ப்பாயாசம் சாப்பிட்டதாகக் குடும்பத்தை நிமிர்த்தி வைக்கும் சாதுர்யம், காசை எண்ணி எண்ணி காலத்தைக் கழிக்கும் வாழ்க்கை முறை, சிறிய சிறிய நிகழ்வுகளில் தோய்ந்து அலைவுறும் வீட்டின் சூன்யம், வீட்டின் எல்லா பொருட்களும் கருப்பொருள்களாய் உயிர்பெற்று நிழலாடும் சிந்தனை, கணவனை மையமிட்ட குடும்பக் கட்டம், கணவனின் சிந்தனைக்கெட்டாத எதையும் எவரும் சிந்தித்துப் பார்க்கமுடியாத குடும்பத்தினர், இயலாமை, வறுமை, அதை மறைக்கும் பாசாங்கு, கண்ணீரை உள் உறிஞ்சி மறைத்துக் கொள்ளும் போராட்டம் எனக் குடும்பத்தைக் கட்டியெழுப்பவும், அதில் தன் இருப்பை நிழல் தரும் மரமாயும் நிலை நிறுத்திக்கொள்ளவும் போராடிய பெண்கள் தாம் முதல் தலைமுறையாயும், முதல் முறையாயும் குடும்ப அமைப்பை விமர்சித்தவர்கள்.

எனது சூரியன்

பொழுதுகளின் விளையாட்டில்
சிக்கித் தவிக்கும் பொம்மையாய்
அலறுகிறது குழந்தையின் துக்கம்.
ஏதும் நினைத்தபடியற்றுத் தவித்து
வெற்று எண்களைக் காகிதத்தில் எழுதி
வானத்தில் பறக்கவிட்டேன்.
எங்கே தொலைந்தாய் என
உன்னை நானும் என்னை நீயும்
கேட்டுத் தொலைக்க
சிரித்தபடி சிவக்கும் சூரியன்
மேலெழுவான் ஓர் ஓரமாய்.
சிந்தையற்று அமர்ந்திருந்தால்
சுளீரென அடித்து
பிரக்ஞையுடன் பேச வைப்பான்.
இழந்து போன நிமிடங்களை
எண்ணிக் கணக்கிட நிமிர்ந்தால்
நிகழ்காலம் பலியாகிறது.
அடுப்பின் ஓரம் முகம் சிவக்க அமர்ந்தேன்.
செத்துப் போனவர்களின் புகலிடம்
மீளவேண்டும் என்றேன்.
ஓர் இடமும் பாக்கியில்லையென்றான்.
கண்ணீர் வற்றிக் காய்ந்துபோன
கண்களை
மீட்டுத்தர முடியாதா என்றேன்.
கவலையுடன் அவனும் சிரித்தான்.
நீர் கண்டு விரைந்தேன் அது
கானல் நீரெனத் தெளிந்தேன்.
எழுதுகின்ற வேளையும்
நான் மறந்திருந்தால் என்னை
நினைவூட்டும் சூரியன்
எங்கு சென்று தொலைந்தான்.
பாடலின் தெளிவு
ஆரம்பம் ஆகிறது
உன்னை நானும்
என்னை நானும் வென்றெடுக்கலாம்.
எதிர்க்கின்ற வேளையும்
தொலைந்து போக
மீதியிருந்தவன் ரகசியம்
எனக்குள் உதயமாகவில்லை இன்னும்.
சூரியனோ மெல்லச் சிரித்தபடி
மெதுவாய் வருகிறான்.
தீராக்காதல் கொண்டேன்
ஆசை கொண்டேன். அவனுள் செல்ல
அனுமதிக்குமோ காலம்.

வெறுமனே துயரைப் பாடுவது மட்டுமன்று, படைப்பாளுமை. அதிலிருந்து மீண்டு எழுதலையும் பாடி எழுப்ப வேண்டும். சுகந்தி சுப்ரமண்யம் தன் சொந்தத் துயரையெல்லாம் வெறுமனே கோழைத்தனமாகத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல், பொதுத்துயராக்கினார். நெடிய தன் தனிமையான ஒற்றைக் குரலால் தொடர்ந்து எழுதினார். குடும்பம் எனும் தொடர் இயந்திரம் உருவாக்கிய மனப்புழுக்கத்தால் பீறிட்ட தகிப்பையும், கொதிநிலையையும் தன் கவிதைகளில் நிறைப்பதன் வழி, எப்பொழுதும் அவற்றை உதிர்த்து விடுதலையேகும் பயணத்தில் தீவிரமாயிருந்தார். 2009 –ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ம்தேதி மறைந்தார். தன் வாழ்வு முழுதும் தீரா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறுகின்றனர். தன் துயரத்தைத் தானே தின்று மாயாது பதிவு செய்த பெண்களெல்லாம், இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதுதானே அரசியல்!

------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு; சுகந்தி சுப்ரமண்யத்தின் முதல் தொகுப்பு, புதையுண்ட வாழ்க்கை (1988), மொத்தக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு (2003)- ல், மீண்டெழுதலில் ரகசியம் எனும் நூலாய் வெளியானது.

‘தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு’ அவரது கவிதையில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை வரி.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </