வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -2

இளம்பிறை – நீ எழுத மறுக்கும் எனதழகு

குட்டி ரேவதி  

நண்பர்களே, இக்கட்டுரைத்தொடர், தமிழில் நவீனப்பெண் கவிதை மொழியை அறிமுகப்படுத்தும் முயற்சி. கூடு இணையத்தின் நடத்துநர் அருண் இதற்கான ஆலோசனையை என்னிடம் முன்மொழிந்தார். வெறும் விமர்சனமாக இல்லாமல், எழுதவந்த படைப்பாளிகளின் காலமும் பின்னணியும் கருதி அவர்களின் எழுத்தையும் அதன் உட்பொதிந்திருக்கும் அரசியலையும் இன்றைய காலத்துடன் பொருத்தி அறிமுகப்படுத்துவதே என் நோக்கமாக இருக்கிறது. ‘ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்’ என்ற தலைப்பும் அந்தப் பொருளடக்கியே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வொரு பெண்கவிஞரின் பிரதிக்கும் அதனதனளவில் பங்கு இருக்கிறது, என்பதைக் கண்டறிவதே என் பணி. பெண்ணெழுத்து, ‘உடலரசியல்’ பேசும் அரசியல் நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஒரு நீள்பயணம் எடுத்திருக்கிறது என்பதையும் அது வெவ்வேறு காலக்கட்டங்களை எடுத்திருக்கிறது என்பதையும் எடுத்தாள்வதே இக்கட்டுரைத் தொடரின் மிக முக்கியமான நோக்கங்கள். மேலும், இரா.மீனாட்சி போன்றவர்கள் தீவிரமான உடலரசியலை தங்கள் எழுத்தில் முன்வைக்கவில்லை என்பதைக் கட்டுரையின் உள்ளுறையாக வைத்தே விவாதித்திருக்கிறேன். கூர்மையாக வாசிப்பவர்களுக்கு அது பழம் பிதுக்கிய விதையாக ஆங்காங்கே வெளிப்படும். எனது இக்கருத்தையே தம் கருத்துரையாக இட்டிருக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரே ஒரு விடயத்தை மட்டும் இங்குத் தெளிவாக்கிக் கொள்கிறேன். அதாவது, இன்றைய நவீன தமிழ்க்கவிதை சார்ந்த தனிப்பட்ட நமது பயிற்சியும் பார்வையுமே கூட, தமிழில் நிலவிய தொடர்க்கவிதை இயக்கத்தாலும், அதற்கு தனிநபராக நம்மை நாமே உட்படுத்திக்கொண்டதாலும் வந்தது. இல்லையென்றால், இன்றைய வாசகர்கள், இரா.மீனாட்சியின் கவிதையில் ’உடலரசியல்’ சார்ந்த பார்வையில்லை என்ற கருத்தை முன்வைக்கும் திறனையும் பெற்றிருக்க முடியாது தானே! உங்களின் தொடர் ஊக்கத்திற்கும் உரையாடலுக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேல் செல்வோம்!

இளம்பிறையின் கவிதைகளை உதிரிகளாகவும் தனித்தொகுப்பாகவும் வாசித்த அனுபவம் உண்டு. சொற்கட்டான மொழியும் இசைக்கோர்வைக்கான துல்லியமான நடையும் கலந்த நளினத்தைத் தொடக்கத்திலிருந்தே தன் கவிதை மொழியாக்கிக் கொண்டவர். ஒரு தாயின் காதல் எனும் நிலையிலிருத்தி அவர் தன் எழுத்தைப் படைப்பாக்குகிறாரோ என்று என்னும் அளவிற்கு பெண்ணின் இருநிலைகளையும் தனக்குள் வைத்துக் கொண்டு எழுதுகையில் மொழி, இது வரை நீங்கள் தமிழில் எங்கிலுமே வாசிக்காத ஒரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் புகழ்ச்சிக்கில்லை என்பதை உணர, மெல்ல அவர் கவிதைகளுக்குள் ஊடுருவலாம்.

’கிராமிய மணம் மிக்கது’ என்றும் ‘நாட்டுப்புறப் பாடல்கள்’ என்றும் கவனம் பெற்றிருக்கும் நகரத்திற்கு நகர்ந்தவர்கள் தங்கள் பால்யம் சிறகடித்தச் சமூகவெளியை எழுத்தாக்குவதைப் படித்து நாம் ரொம்பவும்தான் சிலாகித்துப் போகிறோம். நகரம், கிராமம் என்ற இரு வெளிகள் தாம் சமூகத்தில் இருக்கமுடியும் என்ற நமது மயக்கத்தில் நிகழ்ந்த பிழையால், மற்றுமொரு வெளியான ‘சேரி’ என்பதை அதுவாக அடையாளப்படுத்தாமலும் காந்தி சொன்னதன் அர்த்தத்திலேயே, ‘கிராமம்’ என்பதன் பெருமிதம் போற்றுவதும் நமக்குப் பழகிப்போய்விட்டது. இதற்கு அடிப்படையான காரணமான, சாதி அழுத்தத்தை வெளிப்படுத்துவதை அநாகரிகம் என்றும் அழுக்கு என்றும் கருதும் போலிமை சூடிய மனோபாவத்தின் எழுத்து தான் கிராமியம் என்பதைத் தன்னடையாளமாக்கிக் குதூகலிக்கும், என்பதை இளம்பிறையின் கவிதை நீரோட்டத்திற்குள் கைகள் விரித்த உடனேயே தெரிந்து விடும். எந்த விதமான போலியான அடையாளங்களையும் கிராமம் எனும் நம் பிரமைகளுக்குத் தராது, இருளடர்ந்த கனவு மரங்களின் வனத்திலிருந்து எழுதுகிறார்.

இளம்பிறையின் எழுத்து முற்றிலும் எதிர்த்திசையிலிருந்து தொடங்குகிறது. நகரத்திற்கு நகர்ந்து வந்த தன் வாழ்க்கையில் நகரத்தின் நடவடிக்கைகள் என்றென்றும் அலுப்பூட்டுவதாகவும் கிராமத்தில் தான் அனுபவிக்க நேர்ந்த ஏழ்மையின் யதார்த்தங்கள் சுவாரசியம் தட்டுவதாகவும் இருக்கின்றன அவருக்கு. ஆனால், இத்துடன் தன்னெழுத்தை அவர் முடித்துக்கொள்வதில்லை. இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் உள்ளார்ந்த அரசியலை வெளிப்படுத்தும் தீவிரத்தைத் தொடும்வரை அவர் கவிதையின் ஒற்றைப் பயணம் முடிவதில்லை. மேலும், அதன் அத்துணை பூடக அழகோடும் முடியும் வரையிலான தெளிந்த பார்வையும் ஊக்கமும்கூட அவருக்கேயானது. பெரும்பாலும், தோல்வியும் தோல்விக்குப் பின்பான எழுச்சியும் வேகமெடுக்க, அதற்கான நடையுடன் சொற்கள் வந்து விழுகின்றன.

பெண்களின் கவிதைகள் சுயபுலம்பல்களாகவும் அழுகையின் குறிப்புகளாகவும் இருக்கின்றன என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணின் அழுகை என்பது உயிரியல் நிகழ்வன்று. அது ஒரு சமூகவெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ’ஒப்பாரி’ என்பது அதன் நீட்சி. தன் திடமான எதிர்ப்பை நீர்மமாக்கும் மொழியைப் பெண்கள் இயன்றவரை பாடல்களாகவும் கவிதைகளாகவும் கொட்டித்தீர்க்கின்றனர். அழுகை அதன் இயல்பில் நெகிழ்வான, ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும், சமூகத்தின் பார்வையில் அது மிகவும் அவலமான, பரிதாபத்திற்குரிய வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகள் ஒட்டி நிகழும் அழுகையின் அர்த்தங்களுக்கு ஓர் அகராதி தயாரிக்கலாம். ’கண்ணீரும் கம்பலையும்’ என அடுக்கடுக்காய் அர்த்தம் பெருகக்கூடியது அந்த அகராதி. கண்ணீர்த்துளிகள், ஆழமான வேர்களிடம் பெண்களைக் கூட்டிச்செல்பவை. தொடர்ந்த மனவேட்கையின் பிரதிபலிப்பாய் எட்டி எட்டிப்பார்த்து கண்களின் உயரத்திலிருந்து கனிந்து வீழ்ந்து கொண்டே இருப்பவை.

‘அழுத நினைவுகள்’, கவிதை, அவர் தன் இளம்பருவத்தில் அவசியமில்லாது வேண்டுமென்றே பெருங்குரலெடுத்தச் சந்தர்ப்பத்தங்களைக் குறிப்பிட்ட பின்,

குடத்தை உடைத்தது
வாத்தியார் அடித்தது
‘சட்னியைக் கொட்டிவிட்டு
நானில்லையென்று
சத்தியம் செய்தழுதது
பதினாலுக்குள்
இப்படி பல அழுகைகள்

ஒரு நாள் செல்லம்மாளுடன்
விறகு வெட்டப்போன போது
பெரியவளானேனென
அழைத்து வரப்பட்ட போது
அம்மா அழுததால்
நானும் அழுதேன்
ஏனென்று தெரியாது.’

பெண்கள் பருவமெய்தும் தருணத்தில் அழும் தாய்மார்களின் அழுகைகள் அவரவர்க்கு அவரவர் வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பையும் அவற்றின் ஏமாற்றத்தையும் ஒருங்கு குவித்துக் காட்டும் கணம். இதுவே அவர் கவிதையின் பிறிதோரிடத்தில் தாயின் குரலாய், ‘கோட்டையில் பெண் பிறந்தாலும்/ போட்டபுள்ளி தப்பாதுன்னு/ எங்கிட்டுப் போயி இழுபடப்போவுதோ’ எனும் வரிகள் அதன் பின்பான பெண்வாழ்வின் நிச்சயமற்ற கோடுகளை நினைவுக்கு இழுத்து வருபவை.

புள்ளிகளும் கோலங்களும்
புள்ளி தடுமாறி
வரிசை வளைந்து
போட நேர்ந்த
கோலங்களின் கோடுகள்
துண்டுபட்டு நிற்கும்
சந்திக்க முடியாமல்

இணைக்கும் முயற்சியில்
அசிங்கப்படும் கோலத்தைப்
பெரும்பாலும்
நானே கலைத்துவிடுவேன்
இல்லையேல்
எவரேனும்
கலைத்துவிட்டுப் போய்விடுவார்கள்

நேரடியான வார்த்தைகளுக்குப் பின்னால் எரியும் பிறிதோரடுக்கு அர்த்தம், தாய் கூறிய புள்ளியையும் இழுபடும் கோட்டையும் குறித்து நிற்பது. தன்னழுகை நிலையிலிருந்து தாயின் அழுகைக்குக் கவிதையின் மொழியை இழுத்துச் செல்லும் விசை தீவிரமானது. அதுமட்டுமன்றி, எந்தப்பிறழ்வையும் சரிசெய்யும் தொடர்மனித யத்தனத்தை மாறிமாறி வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடையே பரிமாறிக்கொண்டே இருக்கிறார். இம்மாதிரியான ‘தன்னிலை’ யிலிருந்து கவிதைகள், கிளர்ச்சியடைந்து ஆண்களுடனும் ஆண் மனங்களுடனும் அயராமல் விவாதிக்கும், வேண்டுகோள் விடுக்கும், கட்டளையிடும், புறக்கணிக்கும், மன்றாடும், மன்னித்து அரவணைக்கும் வேறுபட்ட நிலைக்கும் என ஆண்களை நோக்கிய கிளைச்சாலைகளிலும் விரிந்து கொண்டே இருக்கின்றன. கபடம் என்ற இவர் கவிதையின் ‘உன் கபடங்களோடு சேர்த்தே அணைத்துக் கொள்கிறேன்’ வரியுடன் சல்மாவின், ‘எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி’ வரி சென்று இணைகின்றது. இவ்விதமான சமரசம் கொண்ட பெண்ணின் தொனி, தொடர்ந்து வேறு வேறு திசைகளிலிருந்து பிறர் கவிதைகளிலும் ஒலிக்கக் கேட்கையில், அதை எளிதான அல்லது மலிவான ஓர் உடன்படிக்கையாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. அவலத்திலிருந்து மனிதமீட்சியை முன்னெடுப்பதற்கான ஒட்டுமொத்த உத்வேகத்திற்கான பொறுப்பையும் உறுதியையும் தம் தோள்களில் ஏற்றிக் கொள்வதுடன் அதையே தன் இறக்கையாக்கிப் பறக்கும் திட்டமும் பெண்களிடம் இருப்பதே காரணம். இன்னும் சொல்லப்போனால், இவ்விறக்கைகளால் இன்னொரு வானத்தை நோக்கிப்பறக்கும் திசையை எழுத்திலிருந்து தாம் கண்டடைகின்றனர்.

இதுவரையிலான தன் கவிதைகளுக்கு ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்று தலைப்பிட்டிருக்கும் இவர், அவ்வார்த்தைகளால், உலகெங்கிலும் நிலவும் அழகு குறித்த அரசியலை நொறுக்குகிறார். வெவ்வேறு பெண்கள் அழகெனும் அடையாளம் வழியாகத் தன்னை முன்னிறுத்தியும், உதாசீனப்படுத்தியும் தன் அழகைப் பிரதானப்படுத்தியும், அதையே அரசியல்படுத்தியும் எழுதியிருக்கின்றனர். பெண்ணின் அழகு நுகர்வுப்பண்பாட்டின் முக்கியமான விலைபொருள் என்பது, நுகர்வுப்பொருளாகியிருக்கும் பெண்களின் அடிமனதில் உளைவை ஏற்படுத்தாமல் இல்லை. உலகெங்கும் சித்திரமாய் அலையும் கண்ணாடிக்குள் பிரதிபலிக்கும் அழகு பற்றிய இக்கருத்தலை, ஏழ்மையான சூழலில் உழன்றுழன்று வாழ்க்கையுற்ற இவரது அழகின் முன்னோ மோதிச்சிதறுகிறது. அழகென்ற கோரிக்கையால் ஏற்றத்தாழ்வுக்குள்ளாகும் பெண்ணின் உடலைப் போலவே, அதன் பின்னால் பேசப்படாது விடுபடும் பொருளாதாரச்சூழலும் காட்சி பெறாமல் ஒளிந்துகொள்கிறது. ’என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை உன் கேமராக்கள்’! என்பதும் ஒரு நேரடியான வரியன்று. யதார்த்தத்தின் விளைவு!

நீ எழுத மறுக்கும் எனதழகு

…………………………………………………………………………….

கவர்ச்சிக்கல்ல
இல்லாத காரணத்தால்
சட்டை கிழிந்திருக்கும்.
இழுத்துப் போர்த்த எண்ணி
சேலையும் தோற்றிருக்கும்.

………………………………………………………………………..

எனது அழகுகள் எல்லாம்
இதுவரை தெரிந்ததில்லை
உன் எழுத்து விழிகளுக்கு.
என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை
உனது கேமராக்கள்.

குறைந்த பட்சம்
அழகிப்போட்டிகள் நடத்தி
என்னைப் பழித்துக்காட்டாமல்
இருக்கக்கூட
நினைப்பதில்லை நீங்கள்’

அழகு, பெண்ணுடலின் புறக்கருத்தமைவு. உடலுக்கான அக ஆளுமையையும் பெண்ணுடலுக்குத் திணிக்கப்படும் அக நெருக்கடிகளையும் மொழியும் கவிதை தான் எல்லா வகையிலும் அரசியலை இன்னும் தீவிரப்படுத்துகிறது. புற அழகை, காரணமாக்கி பெண் ஆளுமையைச் சிதைக்கும் இரு வேறுபட்ட நெருக்கடிகளை உடலுக்குத் தரும் சமூக நிகழ்வுகளைச் சுட்டுகிறார் இளம்பிறை. தன் ஒவ்வொரு கவிதையையும் ஒரு கதையின் கருவாய் மாற்றிப்படைக்கும் இவர், சிறுகதைக்கான ஓட்டத்துடன் ஓடிச்சென்று முற்றுப்புள்ளியுடன் ஓய்ந்துவிடுவதில்லை. கடைசிச் சொல்லுக்கு அப்பால் எழும் அதிர்வுகள் சொற்களற்றவை. ஆழக்கிணற்றில் எறிந்த கல், ஆழம் சேரும் போது ஒலித்தல் போல. இவருக்கிணையான சொற்கட்டுடன் கவிதை ஆளும் கவிஞர் வெகுசிலரே.. அழுத்தமான குரலை தன் மனவெளிக்குப் பழக்கிக்கொண்டே இருப்பார் போலும்!

சொல்லாமலே
வெடித்த வயல் வரப்புகள்
புதர் மேடுகளுக்கப்பால்
சிற்றலைகளில் வைரங்களாய்
வெய்யில் மின்னிக்கிடக்கும்
குளத்திலிருந்து….

இரட்டைக் குடமெடுத்து
தண்ணீர் சுமக்கிறார்கள்
தாயும்… மகளும்
பண்ணைய வீட்டுத்
தென்னம்பிள்ளைகளுக்கு.

சற்று கழிந்ததும்
செம்பில் தேநீர் வாங்கிவந்து
சுடச்சுட வாயில் ஊற்றிக் கொள்ளுங்கள் என்று
ஆற்றித் தந்துவிட்டுப் போகிறார் தந்தை.
சும்மாடு நழுவி…கழுத்து குன்னி
தடுமாறிய சுமை இறக்கி
அரைஅரை குடமாய் ஊற்றி
சீக்கிரம் செல்லலாம் என்கிறாள் மகள்.

அப்படி செய்யக்கூடாது
பாவம் தென்னம்பிள்ளைகள்
இரக்கப்பட்டு மகளை
நிழலிலிருந்து இளைப்பாறச்சொல்லி
தான் மட்டும் போய்வரும் தாய் பார்த்து
அடுத்த நடைக்கே…
எழுந்தோடுகிறாள் மகள்
வெய்யிலிலேயே கிடந்தாலும்
கலையாகத்தான் இருக்கிறாய் என்று
கோணலாகச் சிரித்துக் கண்சிமிட்டிக் கூப்பிட்ட
சின்ன முதலாளி முகத்தில்
சாணியள்ளி வீசியதைச்
சொல்லாமலேயே

தொடங்கிய அதே வீச்சிலேயே நடந்து சென்று அகத்தீவிரத்தைத் தன் கடைசி வரியிலும் சொல்லிலும் முழுதாய் வெளிப்படுத்தும் கவனமான, தண்டவாளம் மாறாத நடை! சொற்கள் இறைக்கப்படுவதே இல்லை. உணர்ச்சிகள் மட்டும் பீறிடுகின்றன!

காலங்காலமாக, பெண்ணுடல் ஆண்களால் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அதை ஒரு கவர்ச்சியான படைப்பாக்கி, மேன்மேலும் அதன் கவர்ச்சியை மிகைப்படுத்துவதற்கான மொழியையும் தானே உருவாக்கி, அம்மொழியின் வழியாக உடலைச்சுகிக்கும் வெளியையும் வசதியையும் வாசிக்கும் அனைவருக்கும் வழங்கும் ஒரு பொதுப்பொருளாக்கி, பூவுடலைப் படைத்திருக்கின்றனர், ஆண்கள். இத்தகைய சமூகத்தில் காதலும் உடலை, புணர்ச்சியின் மயிர் உதிர்த்துக் கடந்து போகிறது. இந்நிலையைக் கடந்துவிட்ட பின் அது பெறும் விடுதலைக்கான குறியீடாக இளம்பிறைச்சுட்டுவது மிக முக்கியமானது, முழுமையும் படிமத்தேர்ச்சியானது. ’நம்பிக்கை’ கவிதையில் மிகவும் பூடகமாக ஆளப்பட்ட பருவங்களின் விளையாட்டும் தந்திரமும் நேரடியான வார்த்தைகளால் ஆனால், உள்ளே அதனதன் அரசியல் வார்த்தைகள் பொதியப்பட்டிருக்கின்றன.

பூவுடல்கள் – பொய்மொழிகள்

நெஞ்சில் வளர்ந்த நெகிழ்வுக் கல்லிரண்டின்
மேலோ கீழோ இன்னொன்று வைத்து
சமைத்துவிடலாம் என்பாள்
துரோகத்தில் சிதைந்தவள்

குனிந்து செய்யும் வேலைகளில்
ஆச்சியின் தொங்கிய மார்பகங்கள்
கோலாட்டம் செய்வதாய்
சிரிப்பாள் பெயர்த்தி

நரிக்குறப் பெண்ணின்
இடுப்பில் தொங்கும்
பழைய சுருக்குப்பை
அம்மாவின் வயிறென்பாள்
கடைக்குட்டி.

சடைப்பூரானாய்த் தடித்துக் கிடக்கும்
சிசேரியன் தழும்பு காட்டி
வயிறு பார்ப்பாள் தோழி

எழுத்துக்களில் அடுக்கப்பட்ட
பெண்களின் பூவுடல்கள் பார்த்து
பழக்கப்பட்ட நினைவை
சொல்லாமல் விடுவதும் பொய்’
கடந்து போதல்

பிறகு

எல்லாவற்றையும் கடந்து
வேடர்கள் நுழைய முடியாத
வனங்களில் திரியும்
பறவையானது காதல்.

முன்பு
அதன் பெயரில்
பேசிய எழுதிய புணர்ந்த
மயிர்கள் உதிர்த்து.

நம்பிக்கை

மேய்த்தலுக்கடங்காது
கட்டுத்தறியிலும் நிற்கமுடியாது
அறுத்துக்கொள்ளும் பருவங்களை
இழுத்துச்செல்கின்றனர் காவலாளிகள்.

‘பட்டி’யில் அடைத்து
பட்டினி போட்டபின்
கட்டணம் செலுத்தி
மீட்டுவரும் பருவத்திற்குரியோர்
இறுகக்கட்டி வெளியேறும் வரை
பரிதாப முகமணிந்து
காத்திருக்கும் பருவங்கள்
தறியிலிருந்தே அறுத்து மேய
பழகிக்கொண்ட தந்திரங்கள்
உரியவர்கள் அறியாமலிருப்பதாக
நம்பப்படுவது அவசியமாகிறது
எல்லோர்க்கும்.

வீட்டின் மூலையில் இயங்கும் அறையே சமையலறை என்று சொல்லும் அம்பையிடமிருந்து இளம்பிறையின் சமையலறை வேறுபட்டிருக்கிறது. ஒரு மிருகத்தின் வாயாக சமையலறையை உருவகிக்கிறார், இவர். வீடும் சமையலறையும் எவ்வெவ்விதத்தில் அவருக்கு ஆகியிருக்கின்றன என்பதைத் தன்னளவிலும் சமூக அளவிலும் மீளாய்வைச் செய்திருக்கும் இக்கவிதைகள், நகர யதார்த்தங்களை சொல்தோறும் உடைத்துக்கொண்டே இருக்கின்றன.

ஒளியுமிடம்

நிற்கும் இடந்தோறும்
குறிகள் புணர்ச்சி பற்றி

உரத்துப் பேசி
மனங்கூச வைக்கும்
மதுபானப் பிரியர்களின்
வார்த்தை நாற்றம்.

ஒட்டல்…உரசல்
உடன் வருதலென
போய்ச்சேரும் இடம் வரைக்கும்
தொல்லைதரும் தொடரல்கள்.

கடந்து செல்லும்
எல்லாப்பெண்களுக்கும்
உடல் அளவு கணக்கெடுக்கும்
‘நவீன ஸ்டோர்’ நண்பர்கள்.

சந்தக்கடை, சாக்கடைக்குளம்
மூத்திரச்சந்து தாண்டி
இடை ஆடாது… நெஞ்சு குலுங்காது
கால்தடுக்க நடையில் ஓடி
சென்று சேர்கிறேன் நாளும்
எனக்கொரு வீடிருக்கிறது
ஒளிந்து கொள்வதற்கு.

எரிந்து கொண்டேயிருக்கும்
மிருகத்தின் உதடுகள்
அது ஒரு இடம் அல்லது அறை
என்றே அழைக்கப்படுகிறது
எல்லா வீடுகளிலும்….

எனக்கோ தீராமல் என்னை
மென்று கொண்டிருக்கும் மிருகம்
ஆடவர்களும் அவ்விடத்தை எப்போதாவது
எட்டிப் பார்ப்பதுண்டு.

ஆனாலும் ஒருபோதும்
அதன் வாயில் குதறுபடாத அவர்கள் வாழ்வு
கடமைகள் பல புரிந்த காவிய வாழ்வாகி
வரலாற்றுச் சுவர்களில் வரையப்படுகின்றன
வித விதமான தோரணைகளுடன்…

நறநறவென என் சிந்தனைகளைக்
கடித்துக் குதறும் அதன் கோரப்பற்களுக்குள்
நானாகவே புகுந்து கொள்ளும் நிர்ப்பந்தம் நாளும்..
என் கரங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும்
அம்மிருகத்தின் உதடுகள்
எரிந்து கொண்டே உள்ளன.

என் கால்களை இழுத்து
இறுக்கித் தன்னிடமே நிற்க வைத்துக் கொள்ளும்
அந்த வலிய மிருகத்தின் பற்களையும்
நானே துலக்கித் துலக்கிச் சுத்தம் செய்வதில்
தேய்ந்து கொண்டே இருக்கும்
ஆயுளின் இறுதி நாட்களுக்குச்
சில தினங்கள் முன்பாக என் சமையலறை
மிருகமே என்னை வெளியேற்றி விடும்
அதனிடமிருந்து
அப்போது
நீரும் நிறமும் இழந்த
ஒரு தாழம் பூச்சருகினைக்
காற்று தூக்கிச்சென்று
காணமுடியாது உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெளியெங்கும்…

ஆண்களின் இருப்பை நேரடியான சொற்களின் கோடாரிகளால் சிதைக்கும் இவர், தன் தந்தைக்கு அளிக்கும் பிம்பமும், அவரின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமும் வேறுபட்டது. சாதியத்தின் அழுத்தத்திற்குத் தப்பாத ஆண்களின் வாழ்க்கை அவர் அடையாளங்கள் வழியாக வெளிப்படுகிறது. நினைவு வரை சீழேறியிருக்கும் கொடுங்கனவாய்! அத்தந்தையின் பிம்பம் கவிதைகளில் தென்படும்போதெல்லாம் அதை உடனே கடந்துபோக முடியாத படிக்கு உணர்ச்சிகள் நிமிர்ந்து நிற்கின்றன. வாசித்த வெகுநேரத்திற்குப் பின்பும், ‘இரை’ என்ற அவரது கவிதை என் நெஞ்சுக்குள் ஓர் இறகைப்போல சுழன்று கொண்டே இருந்தது. ஈழப்பெண் கவிஞர் சிவரமணியின், ‘தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாயுள்ளளேன்’ என்ற இரையைத் தூக்கி வந்தது தன் கொடும் நகங்களால்.!

இரை

கனியும் பழங்களுக்குக் காத்திருக்கையில்
முட்களாய் பெருகி விரட்டியது
என் விளைநிலம்

பின்பொரு வனாந்தரத்தில்

மிருகங்களுடன் பழகி
மழையில் நனைந்து
விண்மீண்கள் கொணர
விழிகளைத் தூண்டில் செய்தேன்…

அரிவாள்களோடு வந்தவர்களைக் கண்டு
அஞ்சி முறிந்தன மரங்கள்.
பறவைகள் சிதறி, மிருகங்கள் இறக்க
இரண்டாவதாகவும்
என் நிலை தோற்றது.

துரும்பைப் போல்
இழுத்துச் செல்ல நினைத்த
அலைகளிடமும் என்னால்
செல்ல முடியவில்லை.

இப்பொழுது உன் தீர்மானங்கள்
என்னை நிறைவேற்றுகின்றன
என்றாலும் உண்மையில் நான்
குவிந்து கிடக்கும் வினாக்களின்
இரையாகத்தான் இருக்கிறேன்.

--------------------------------------------------------------------XXXX---------------------------------------------------

சிறு குறிப்பு: கவிஞர் இளம்பிறை, சென்னையில் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இளவேனில் பாடல்கள் (1990), மெளனக்கூடு (1993), நிசப்தம்(1998), முதல் மனுசி (2003), பிறகொரு நாள் (2005), நீ எழுத மறுக்கும் எனதழகு (2007) ஆகிய நூல்களைப் படைத்திருக்கிறார்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</