வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 14

தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி

குட்டி ரேவதி  

தலைப்பின் பொருளை ஒற்றை அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே! அல்லது அதன் பொருளை இயன்றவரை முழுமையும் விளக்க விரும்பும் என்னுடன் பயணிக்க வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! தமிழ்நதி எனும் கவிஞரை முன்வைத்து, அகதியாயும் நாடோடியாயும் வாழப்பணிக்கப்படும் எழுத்துப்பெண்ணைப் புரிந்து கொள்வது தான் இங்கே நமது பணியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.

2007 – ல் முதன் முறையாக ‘இன்றொரு நாள் எனினும்’ என்ற தமிழ்நதியின் கவிதையில் மேற்குறிப்பிட்ட கவிதைப் பத்தியை வாசித்தது முதல் இன்றும் அது, புதியதோர் உணர்ச்சியின் தொனியாய் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வரிகள், வெறுமனே அம்மாவிடம் கேட்கும் அனுமதியாக மட்டுமே இல்லை, பாருங்கள்! பிடிவாதமான, ஆனால் தான் செய்யப்போகும், இதுவரை யாரும் செய்திராத புதியதொரு செயலைத் தான் செய்யப்போவதன் அறிவிப்பாகவும் இவ்வரிகள் இருக்கின்றன. இது ஓர் அபூர்வமான தொனி தான்! இம்மாதிரியான தொனிகள் முழுதும் சுயத்திலிருந்தும், தன் ஆளுமையிலிருந்தும் எழும்புபவை. இன்னொரு கவிதைகளில் இருந்து சுடமுடியாதவை! மேலும், இவ்வரிகளில் குறிப்பிடப்படும், ‘சிலீரென்றெழும் ஓசை’, அவ்வோசை யொத்த பிற ஓசைகளை நினைவுப்படுத்துவதுடன், அவ்வோசையை யுத்தநிலத்தில் கேட்ட ஓசையுடன் இணைத்து, களவுபோன உறக்கத்தையும் குழந்தைமையையும் அவர் நேரடியாகச்சொல்லாமல் சொல்வது இக்கவிதை வரிகளின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. எனக்குப் பிடித்தமான இக்கவிதைத்தொனியைப் பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் என்னுள்ளிருந்து பத்திரமாகக் கண்டெடுக்கமுடிந்தது.

கவிதைகள் சார்ந்து நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது, வேறுபட்ட கருப்பொருள்களுக்கு ஏற்ற, வேறுபட்ட தொனிகளை உள்ளே வைத்திருக்கும் கவிதைகள் தாம் இதயத்தில் நுழையும். நுழைந்த வேகத்தில் வெளியேறாமல் உள்ளேயே கிடந்து, உள்ளத்தின் குகையில் இருட்டிலும் வெளிச்சத்திலும் உழன்று என்னென்னவோ செய்யும். பின், அத்தொனியை, அவரவர் வாழ்வில் கண்டடைவதற்கான வாயில்களை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திறந்து கொண்டே இருக்கும். நல்ல கவிதை என்பதன் செயல்பாடு இதுவாக இருக்கும்!

தமிழ்நதியின் இரண்டு கவிதைத்தொகுப்புகளுமே வேறுபட்ட இரண்டு உலகைச் சித்திரிப்பனவாக இருக்கின்றன. முதல் தொகுப்பு, ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்று மனிதர்களற்ற நிலப்பிரதேசத்தில், அப்பகலைத் தனியே கடக்கவேண்டிய சூரியனின் நிலைக்கு அழுத்தம் கொடுக்கும் தொகுப்பென்றாலும், அகதியாக நாடோடிப் பெண்ணாக, அஞ்ஞாதவாசம் இருக்கும் பெண்ணின் தனி மனித உறவுகளையும் அதுவும் பால்நிலை மையமிட்ட இடத்திலிருந்து நோக்கி, அவதானித்துச் சொல்லும் கவிதைகளாக இருக்கின்றன. எனக்கு இவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்த இடத்து, ‘மொழி’ என்பது ஓர் ஆதிக்கக்குறியின் வடிவில் எழும்பி நிற்பதையும், அதைச் சிதைக்க சொற்களைத் தேடிய சுயப்பயணத்தில் இவரின் எழுத்து வேட்டை இருப்பதையும் உணரமுடிந்தது.

பல சமயங்களில் மொழியென்பது, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறைய பேரரசுகளுக்கு உதவியிருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை, மொழி கொண்டிருந்த நுண்ணரசியலைப் பேச இவ்வெளியும் காலமும் போதாது. என்றாலும், அம்மொழியின் வழியாகத் தான் விடுதலை என்பதை பெண்கள் விளக்கமுடியும் என்பதை தமிழ்நதியின் எழுத்து தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஈரத்தையும், நெகிழ்ச்சியையும், தொடர்ப்பாய்ச்சலையும் கொண்டிருப்பதால், அந்நிலத்தின் தீயை தன் சொற்களால் விளக்குவதாகவும் இருக்கிறது.

ஆண்மை

ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப்பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்
ஓடும் பேருந்தில்
திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர்பிடுங்க
கால்நடுவில் துருத்தியது
பிறிதொரு நாள்
வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது
பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில்
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த
உன் கண்களை நினைத்தபடி
‘குறி’ தவறாது சுடுகிறேன்
இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்
என் சின்னஞ்சிறுமியே!

ஆண்மையின் சுடுமூச்சு தன் உடலைத் தொடர்ந்து வரும் வேறுபட்ட தருணங்களை இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார். இதில், ’குறி’ தவறாது அவ்வாதிக்கக் குறியைச் சுடும் ஒரு தருணத்தை தனக்கானதாகவும் ஆக்கிக்கொள்கிறார். ஆணாதிக்க வேட்கைகள், பெண்கள் மீது திணிக்கப்படுவதினும் அது தொடர்ந்து வழங்கப்படுவதும், கைக்கெட்டுவதாய்க் காட்சிப்படுத்துவதுமென பொதுவெளியில் துருத்திக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த விடுதலையானதொரு வாய்ப்பினையும் பெறமுடியாத நிலையில், தன் இதழ்க்கடையில் முளைக்கும் பற்களால் தனக்குள் இருக்கும் சின்னஞ்சிறுமிக்குத் தனக்குத்தானே துணிவேற்றிக் கொள்கிறார்!

பாலை நிலப்பெண்ணைப் போல வெப்ப மூச்செறியும் தனிமையைத் தன் பல கவிதைகளில் தமிழ்நதி முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். நமது சமூகத்தில், தனிமை என்பது கூட்டத்தின் மத்தியிலும், குடும்பத்தின் மத்தியிலும் இருக்கும் பெண்ணுக்குக் கூட அனுபவிக்கத் திணிக்கப்பட்டது. என்றாலும், பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு, தனிமை என்பது அங்கங்கள் எல்லாம் முறையாக மறைக்கப்பட்டும், அவசியங்கள் குறித்த அங்கங்கள் வெளிக்காட்டப்பட்டும் அவள் எப்பொழுதுமே அணிந்திருக்க வேண்டிய, ஓர் ஆடையாகத் தான் மாறியிருக்கிறது. இத்தனிமையை, எழுத்துப் பெண்கள் சொற்களால் நிரப்ப இயன்றவர்கள். வேறெந்த இரத்த உறவையும் விட சொற்களின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டவர்கள்.

இச்சொற்கள், ஏற்கெனவே அகராதியில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களிலேயே இவர்களிடம் பொருள்பெறுவதில்லை. இவ்விவ்விடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொடூரமான விதிகளைப் பொருட்படுத்துவதில்லை. புதிய சொற்களுக்குக் கண்கள் திறக்கும் வேலையை இப்பெண்கள் தங்கள் தனிமைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். குவிக்கப்பட்ட சொற்களுக்கிடையே, தேடி ஏதும் கிடைக்காத தங்களுக்கான சொற்களை, தன் உடலுடன் கொள்ள வாய்த்த தொடர் உரையாடலில் கண்டடைகின்றனர். பின், அவற்றை அடுக்கியும் கலைத்தும் போட்டு தன் விடுதலையைப் பாடுகின்றனர்.

பெரும்பாலும் தமிழ்நதியின் கவிதைகள், கவித்துவம் நிறைந்த பாடல்களாகத்தான் தோன்றுகின்றன. நவீனக் கவிதையின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொண்ட, ஆனால், தரத்திலும் செறிவிலும் கொஞ்சமும் குன்றாத ஓர் உடல் மொழியின் கூக்குரல்களாகின்றன. தோன்றிய வரியிலிருந்து, பாடலைப் போலவே சீரான வேகத்தில் தொலைவிடம் சேரும் பறவையைப் போலவே சொற்களும் சிறகசைக்கும்.

சொற்களுடனான உறவு

அறைக்கதவைப்பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன

செப்புக்களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்துவருகிறது
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்
கனவும் நினைவுமான
காதல்வரிகள்
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞரின் உளறல்கள்
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்

வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு

வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் தவிக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை

---------------------------------------------------------------------------
உடலின் விழிப்பு

சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
காலம் திரும்பிவருகிறது
கனவின் சுவடுகளில்

முன்னேற்பாடாய்
விலங்கின் கூரியபற்களைப்
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம்
அவரவர் மேன்மைகளைக் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும்
பேசித்தொலைக்கிறோம்

வலித்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன

கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொரு காலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்

சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
காலம் தனதிடம் மீள்கிறது
காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே

பெண்ணுக்கு மட்டும் காதல் என்பது, வரையறைகளால் சுட்டமுடியாத உறவு தான். பாலுறவைத் தன் உடலுக்குத் தந்து விட்டாலே, அதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டாலே அது காதல் என்று ஆகிவிடாது. அது ஒரு மிகுபசி! யோனியின் வாயிலை மூடியும் திறந்தும் செயல்படுத்தும் உறவின் வெளிப்பாடு இல்லவே இல்லை அது! உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும், சொற்களைக் கண்டடையும் தீராத பயணம் தான் அது! யோனி என்பது அதற்கு ஒரு விளைநிலமாக மட்டுமே இருக்கமுடியும்! அல்லது சொற்களை உற்பத்தி செய்யும் ஓர் உலைக்களனாக இருக்கமுடியும்!

உடலை விழிப்புறச் செய்து, அதை ஒரு மிகுபசி கொண்ட உடலாய் ஆக்கிக்கொள்ளும் வேலையை பெண்கள் தமக்குத்தாமே தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம், பெண்கள் உடலைச் சவப்படுத்தி உறைந்துபோகும் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து திணிக்கும் போது, தன் உடலை விழிப்புறச் செய்வதற்குத் தேவையான உந்துதலை, முடக்கப்பட்ட இவ்வுடலிலுருந்து தானே பெறவேண்டும். அத்தகைய மிகுபசி, அவர் கவிதைகளெங்கும் கனன்று சொற்களை இரையாகப் புசிக்கும் உணர்வைத்தான் நாம் அடைகிறோம். ‘நரிக் கவிதை’ என்ற கவிதையில், இந்த உடல் விழிப்பு என்பது பெண்ணுடலை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றும் பரிணாமத்தைச் செய்வதை மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட, ’உடலின் விழிப்பு’ கவிதையும், கீழே தொடரும், ‘நரிக்கவிதையும்’ பெண்ணுடலை, தன்னுடலை அரசியல்படுத்த முயலும் ஒரு நாடோடிப் பெண்ணின் உணர்ச்சி நிலையையும், சொற்தெறிப்பையும் கொண்டிருக்கின்றன!

நரிக் கவிதை

நீங்கள் என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்

எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது.

கடந்தமாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்.
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
ஒப்பாரி பாடியிருப்பேன்
சிலமாதங்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை…
பசித்தழும் குழந்தைகளை..
எமது பெண்களின்
இறைச்சியைப் பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.

களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது

இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?

சமீப காலமாக, நிலத்துடனான பெண்களின் உறவு குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெண்கள், தாம் காலூன்றும் நிலமாகக் கண்டறியும் வெளி எது எதுவென்று துருவித்துருவித் தேடுகின்றேன். பல பெண்களுக்கு, எழுதும் பெண்களுக்கே கூட உடல் ஒரு பிரதேசமாக மாறாமலேயே படபடப்புப் பெறுகின்றது. இன்னும் சிலருக்கு, யோனியின் உழப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு அளிக்காத தீயாய் எரியும் வேட்கை!. சிலருக்கு, தேசம் என்ற தன் குடும்பம், சுற்றம் அவருடனான தன் உறவு, பால்யம், நினைவு வெளி என இதில் இடம்பெற்ற பெளதீக வெளிகளைத் தேடித்தேடித் திரியும் காற்றாடி மனம். இந்நிலையில், வேரறுக்கப்பட்ட தன் நிலத்தை எப்படி தனக்குள் வருவித்துக்கொள்வாள் என்பதற்குத் தான் அற்றைத்திங்கள் கவிதை பதிலளிக்கிறது.

தன் உணர்வைக் கூர்மைப்படுத்தி, செம்மையாக்கி வழங்கும் போதெல்லாம் அதற்கு நேர்மையாக இருக்க அத்தனை சிரமங்களையும் எடுக்கும் போதெல்லாம் உருவாகும் கவிதை என்பது தனிமனிதருக்காகவன்றி, பொதுவான உடைமையாகிறது. இப்படித்தான், தமிழ்நதி தன் நிலத்து மக்களுக்கான பொதுக்குரலாகிறார். இது, ஓர் அசாதாரண நிலையே. தன் நிலத்தில் வாழ அனுமதிக்கப்படாத மக்களுக்காகவெல்லாம் தன் குரல் எழும்பி நிற்க, அவர் என்றுமே தயங்காத படிமங்களும் நிகழ்வுகளும் இவர் கவிதைகளில் சூழ்ந்திருக்கின்றன! ’அடையாளமற்ற நிலை’ என்பது அடையாளங்களைத் தனக்குள் உருவேற்றிக்கொண்டோர் மத்தியில் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையுமற்ற நிலையாக இருக்கிறது என்பதை இக்கவிதையில் உணரமுடியும். காலங்காலமாகப் பெண்கள் நிராதராவாக தன் நிலத்தைப் பார்த்து ஏங்கி நின்று கண்ணீர் கசியும் நிலையையும், ‘அற்றைத் திங்கள்’ எனும் அடைமொழியால் அளிக்கிறார். எந்த ஒரு குடும்பத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமையை நிறைவேற்றாமல், முழுதுமாய் வேரைப்பிடுங்கி, வேறு தொட்டியிலோ, அல்லது வெட்டவெளியிலோ நடுவதால், அவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத தட்பவெப்பநிலையை அனுபவிக்க நேர்கிறது. இதே நிலை தான் தாய்நாட்டைப் பிரியநேர்ந்தவருக்கும்!

அற்றைத் திங்கள்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப்புன்னகையுமற்றுக்
கடந்து போகிற மனிதர்கள் வாழும்
அந்நியத்தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக்குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்த படி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது

தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே

இரவுகளில் பொழியும் துயரப்பனி

துயரப்பனி பொழியும் இரவுகளில்
எழுத்தின் மெழுகுவர்த்தியை
அறைக்குள் ஏற்றி வைக்கிறேன்
நிலையற்ற இருப்பினை நினைவுறுத்தியபடி
அலைகிறது சுடர்

வேரறுதலின் வலி குறித்த
வார்த்தைகள் தோய்ந்தன
பிறகு தீர்ந்தன

ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை

காத்திருக்கிறோம்…

ஒரு வயலினில் குழைந்து பிறந்து
குரல்கள் இணைந்து இழையத் தொடர்ந்து
சற்றைக்கெல்லாம்
முரசினில் முழங்கி
நரம்புகளில் நடந்து செல்லவிருக்கும்
அந்தப்பாடலுக்காக…

காத்திருக்கிறோம்

சிவந்த நிறத்திலான கொடி
தன்செருக்கில் கிறங்கிக் கிறங்கி
காற்றினில் அலைவுற…
விடுவிக்கப்பட்ட தெருக்களில்
மிதந்து செல்ல…

காத்திருக்கிறோம்

அஞ்ஞாதவாசத்தில் எழுதிய கவிதைகளை
உயிரைச் சலவை செய்யும்
பின்னிரா நிலவில்
மெட்டமைத்துப்பாட…

காத்திருக்கிறோம்

இந்த இரவு
அதிசயமாக விடிந்துவிடலாம்
அதற்கிடையில்
துயரப்பனி கவிந்த இவ்வீட்டில்
அநாதையாய் இறக்காதிருப்பேனாக!

இரவு, பகல் குழம்பியதைப் போன்ற ஒரு மனநிலையை அகதியாய் இருக்கும் ஒரு பெண் பெறுவதாக உணர்கிறேன். தமிழ்நதி, ஈழ விடுதலையின் பெண்குரலாய்த் தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டவர். விடுதலை இயக்கங்களின் பெண் குரலாய் அதிலும், தீர்க்கமான அரசியல் தெளிவுடனும், செயல்பாட்டுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகச்சிலரே. அதற்குக் காரணம், எப்பொழுதுமே பெண்கள் தொடர்ந்த களப்பணியிலும் அதற்குண்டான அரசியல் பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்வதுமில்லை. அல்லது, அத்தகையதான தெளிவுமிக்க சொற்களால் தன் அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது இல்லை. தமிழ்நதி, இந்தக் குறைபாடுகளை தமிழ்த்தளத்தில் முழுமையும் நீக்கியவர். தொடர்ந்து மக்கள் விடுதலைக்கான சொற்களை அரசியல் திறனுடன் வழங்குபவர். தேசம் கடந்து தேசம் போகும் அவரது நாடோடி மனம், அவருக்கு அளப்பறியா துணிவையும் அரசியல் கூர்மையையும் உடல் என்ற தேசத்தின் எல்லைகளைக் கடக்கும் சிறகுகளையும் தந்திருப்பதாக உணர்கிறேன்.

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
ஆழ்கடல் புதிது
எனினும்
புதிதாக மெளனம் பழகியிருந்தாள்
குற்றவாளிகளாய் படகேறிய கரையில்
கிளிஞ்சல்களினிடையில் கிடக்கலாம் கேள்விகள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டியிலும்
படகினின்று உயிர் தளம்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
‘கடல் ஒரு நீர்க்கல்லறை’ என்பதன்றி.

கழிப்பறை வரிசை…
கல் அரிசி….
சேலைத்திரை மறைவில்
புரியாத அசைவுகள்…
காவல் அதட்டல்..
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?

என் சின்ன மயில் குஞ்சே!

போரோய்ந்து திரும்புமொருநாளில்
பூர்வீகம் பிரிய மறுத்து
தனியே தங்கிவிட்ட
என் தாய் மடியில் இளகக்கூடும்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்

“அம்மம்மா! அவையவள் ஏன் என்னை
‘அகதிப்பொண்ணு’ எண்டு கூப்பிட்டவை?”

பெருமூச்செறியும் தொனிகளுடன் விரியும் தமிழ்நதியின் கவிதைகள் நேரடியான அரசியல் பார்வைகளை நெகிழ்ச்சியான மொழியால் வனைந்து தருபவை என்பதால் ஈரம் கசியும் வரிகளை எந்த நேரமும் அவர்கவிதைகளில் நீங்கள் தாண்ட வேண்டியிருக்கலாம்! ஆனால், அந்த ஈரத்திற்காகத் துணிவை இழந்த ஒரு கோழை மனநிலையை நீங்கள் அடையாளம் காணவே முடியாது. ஏனென்றால், அது கீழே உள்ள அதே பிரகடனத்தோடு உங்கள் கண்முன் எந்தவொரு கணமும் தோன்றி நிற்கலாம்!

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.

----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சென்ற கட்டுரையில், தம் கருத்துகளைப் பதிவு செய்த கருணாநிதி, செல்வம் இருவரின் கருத்துகளையும் வாசித்தப்பின் உண்மையிலேயே குற்றவுணர்வில் தாக்குற்றேன். இயன்றவரை இனி இந்த இடறல் நேராதபடிக்குப் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களே! மற்ற கருத்துரையாளர்களுக்கும் என் அன்பையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் இக்கட்டுரையின் வழியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. இவர், ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (2007) மற்றும் ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (2009) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசிக்கிறார். கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </