வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 11

மாலதி மைத்ரி – ஒளவை மொழி வெளிச்சம்

குட்டி ரேவதி  

அன்புமிக்க தமிழ்ஸ்டுடியோ வாசக நண்பர்களுக்கு,

வணக்கங்களும் நன்றிகளும்.

ஒவ்வொரு முறை கட்டுரைக்கு இடப்படும் எல்லா கருத்துரைகளுக்கும் பதிலளிக்க விரும்பினாலும் நேரம் அனுமதியாததால் அதைச் செய்ய இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றாலும் ஒவ்வொருவரின் கருத்துரையையும் கருத்தூன்றி வாசித்துவிட்டுத்தான் நகர்கிறேன்.

கடந்த கால என் இலக்கிய வாழ்க்கையில் பெற்றிடாத உரையாடல் வெளியையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளையும் எதிர்வினைகளையும் நான் இங்கு பெற்றதன் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே இக்கடிதம். இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தின் பின்பான எனது மனப்போக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பதையும் நான் உணர்கிறேன்.

அதிலும், கவிதை பற்றிய இக்கட்டுரைத் தொடரை நீங்கள் ஆர்வமுடனும் அக்கறையுடனும் கேட்டுப் பெறுவது என்னை இன்னும் அதிகமாய் ஊக்கப்படுத்துகிறது. நம்பிக்கை கூட்டுகிறது. ஒவ்வொருவரையும் அவர்களின் கருத்தால் நான் நினைவில் வைத்துக் கொள்வேன்.

தொடர்ந்த உரையாடலுக்குத் திசைகள் ஏற்படுத்திக் கொடுக்கும், தமிழ்ஸ்டுடியோவிற்கும் அதன் இயக்குநர்களுக்கும் கூட என் நன்றிகள்!

அன்புடன்,
குட்டி ரேவதி

--------------------------------------------------------------------------------------------------------



ஆணுடல் விதையை உருவாக்குதல் போலே தான் பெண்ணுடலும் கருவை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்றில்லாமல் பெண்ணின் சிறப்புத்தகுதி வெளிச்சம் பெறுவதில்லை. என்றாலும், பெண்ணுடலின் சிறப்புத் தகுதி கருவுறுதலும் அதைப் பேணிக்காத்து இனத்தைப் பெருக்குதலும்.

பெண்ணின் இனப்பெருக்க ஆற்றல், சிறப்பு வெளிப்பாடாய் இருப்பதால் அதைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, பொறாமையுற்று பெண்ணின் இனப்பெருக்கு உறுப்பையும் ஆற்றலையும் நசிக்கும் வேகங்கள் காலம் தோறும் எழுச்சிபெற்று வந்திருக்கின்றன. அப்பொழுது தான், பெண்ணின் உடல் நோக்கங்கள் திரித்துக் கூறப்பட்டன. அதாவது, பெண்ணின் உடல் ஆணுக்கே சொந்தமென்றும், அது குழந்தைகளை உற்பத்திச் செய்வதற்குமேயானது என்றும் தொனி மாற்றி, பொருள்விளக்கம் தரப்பட்டது.

மற்றெந்தப் போரும் ஏற்படுத்திய தாக்கத்தை விட, பாலியல் போர் பெண்ணுடல் மீது ஏற்படுத்திய தாக்கங்களும் ஊனங்களும் அதிகமானவை. நிரந்தரமானவை. இத்தகைய போர் அவளுடலின் தலை முடி முதல் உள்ளங்கால் வரை செயல்படுத்தப்படுகிறது. அவள் தலைமுடியின் அழகு பாலின்ப வேட்கையைத் தூண்டும் ஆற்றல் கூடியது என்பதாலேயே தேவாலயங்களிலும், இதர வெளிகளிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைத்துக்கொள்ளல் அல்லது மழித்துக்கொள்ளல் எனும் பண்பாட்டு நிர்ப்பந்தங்கள் திணிக்கப்பட்டன. ’பொம்பள சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சா போச்சு’ எனும் பழமொழி போல. இம்மாதிரியான திணிப்புகள் வழியாகவெல்லாம், அவளின் உளவியல் வெளி வரை புகுந்து, அவள் மனதில் இலங்கும் அடிப்படையான பெண் சமத்துவ நிலையைக் கூடத் திருகிவிட முடியும் என்ற தந்திரமே.

இத்தகைய போர்த்தந்திரங்களில், முதன்மையானவை, பெண்ணின் கருப்பைமீதும் கருவாய் மீதும் செலுத்தப்பட்ட சமூக அடக்குமுறை உத்திகள். ஏனெனில், ஆணின் உறுப்பு வலுப்பெற்றதும் அவன் பெண்ணின் கருப்பையை உபயோகிப்பதில் ஈடுபடுகிறான். அவன் வேட்கை தீர்ந்ததும் அவன் சோர்ந்து வெளியேறுகிறான். ஒவ்வொரு முறையும் வீழ்த்தும், வெற்றிபெறும் ஆயுதமாகப் பெண்ணின் கருப்பையே இருக்கிறது. அதுமட்டுமன்றி, பெண்ணின் கருப்பை மாதாந்திர இரத்தப்போக்குகளால் உழப்பட்ட புது நிலமாயும், அதே சமயம் ஆணின் உயிர் ஆற்றலை வேட்கையுடன் பெற்றுச் செழித்த விளைநிலமாயும் மாறுகிறது. ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட பெண்ணின் இருப்பும், அவள் தன்னைச் சோர்வுறச் செய்பவள் என்றும் மிரட்சியுறும், ஒரே மனித இனத்தின் பகுதியான ஆண் சமூகம் அவள் மீது கொண்ட மிரட்சியை அழிப்பதற்கு ஏற்ற தந்திரங்களை உருவாக்கியது. அவற்றை, பெண் கருப்பை மற்றும் கருவாய் மீது நிரந்தர ஆட்சி செய்யும் போர் உபாயங்களாக்கி நிரந்தர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது.

இது அடிப்படையாக, எங்கிருந்து தொடங்கியது என்றால், பெண்ணின் இயல்பான உடல் மாறுபாடுகளே கூட தீட்டிற்கு உட்பட்டவை என்றும் இம்மாதிரியான புத்துயிர்ப்பின் வெளிப்பாடுகளுக்கு உள்ளான பெண்ணின் உடலே அபாயங்களை கொண்டு வரக்கூடிய புதிர்ப் பிண்டம் என்றும் நம்பும்படியான சடங்குகளும் வழக்கங்களும் பெண் நம்பிக்கைகளுக்குள் புகுத்தப்பட்டன. இம்மாதிரியானவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட வழக்கங்களாயிருந்தன என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. அதிலும், பெண்ணின் உடலில் தோன்றி ஒழுகும் இரத்தம் சம்பந்தமான கதையாடல்களாகவே பெரும்பாலும் அவை இருந்தன. பெரும்பாலான தேசங்களில், கன்னிப்பெண்ணுடன் கொள்ளும் முதல் உடலுறவு என்பது மிகவும் அவலமான செயலாகவே இருந்தது. இந்தியாவில் உயர்சாதி ஆண்கள் ஓர் இரும்புக்கழியினால் கூட பெண்களின் முதலுறவைத் தொடங்கிவைப்பார்கள் என்பதற்கான ஆதாரத்தை எட்வார்டஸ் என்பவர் தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். சோமாலியாவில் உடலுறவுக்காகப் பெண்ணுறுப்பு கத்தியால் திறக்கப்படுவதுடன் பெண்ணின் இரத்தம் தோய்ந்த கத்தியைக் கணவன் எல்லோருக்கும் பகிரங்கப்படுத்துவதும் வழக்கம். இவை மீறி, பெண்ணின் கருச்செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் கட்டுப்படுத்தவுமான விதிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து முறைப்படுத்துவதே ஆணின் ஆண்மை என்று வியக்கப்பட்டது.

இந்நிலையில், கன்னடக் கவி அக்கம்மா தேவியின் கவிதை வரி ஒன்று என் நினைவிற்கு வருகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் கவிப்பெண் இவர். ‘இன்பத்தையும் துன்பத்தையும் பேராவலுடன் குடிக்கும், ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாக நான் வந்திருக்கிறேன்’. எட்டாயிரத்து நானூறாயிரம் யோனிகள் வழியாகவும், மேற்கண்ட துன்பங்களைத் தின்றவாறே இன்பங்களைப் பருகிவந்திருக்கிறேன் என்பது தான் அவரது வாதம். பெண்கள் தம் யோனிகளுடன், அவற்றின் இனப்பெருக்க வல்லமையுடன் மாறாத் தொடர்பு கொண்டு இயங்கத் தொடங்கினர். பெண்கள் உருவாக்கும் குழந்தைகளுடனும் சமூகத்தின் உடைமை விதிகள் ஆண் சாய்வுடையதாக இருந்த போதிலும், தாய்மை எனும் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டனர்.

தாய்மை என்பது, படைப்பூக்கங்கள் மற்றும் தன்னுடலின் பாலூக்கங்கள் குறித்த சிந்தனையைக் கட்டுப்படுத்தும் ஒடுக்கு முறை என மேலைத்தேயச் சிந்தனை தாய்மை எனும் கருத்தாக்கத்தை மறுத்தாலும், ‘தாய்த்தெய்வம்’, ‘தாய்மொழி’ போன்ற தொல்மரபார்ந்த கருத்தாக்கங்களை, யோனிகளின் தொடர்ச்சியைத் தக்கவைக்கும் போராட்டத்தில் கிழக்குலகப் பெண்கள் வென்று வருவதாகவே உணர்கிறேன். மாலதி மைத்ரியின் கவிதைகள், தாயுடலுக்கும் மகளுடலுக்கும் இடையிலான கருத்தாக்க உறவையும், தொடர்ச்சியையும், நீட்சியையும், நிலைத்தன்மையையும் தன் மொழியில் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறது.

இன்றும் பெண்ணியக்க அலையைத் திசைத் திருப்பும் வேலை, இத்தகைய கருத்தாக்கத்தைச் செழுமையுறச் செய்வதன் வழியாகவே அடைய முடியும் என்பதான சிந்தனைகள் என்னையும் பீடிக்கத் தொடங்கியிருக்கின்றன. உலகமயமாக்கம், நகரமயமாக்கம், தன்னையே தான் வியாபாரமயமாக்கும் வாழ்க்கைக்குள் தன்னை உந்தித்தள்ளிச் செல்லும் மனித வேகத்தில் தாய் எனும் கருத்தமைவு, உடலார்ந்த பொதுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அதை உடலுக்கு வெளியிலும் இயங்கக்கூடிய ஒரு சிந்தனையாக, உயிரெழுச்சியாகவே நான் பார்க்கவிரும்புகிறேன். ஏற்கெனவே, ‘தாய்மை’ என்பதை, இந்த ஆணுக்கு இவள் பெற்றெடுத்த பிள்ளை இவன் என்பதாக அடையாளம் பெறும் உடைமைச் சிந்தனையின் அடிப்படையிலேயே, ஒற்றை யோனியை ஒடுக்கும் இடத்திற்கு இச்சிந்தனையை நாமும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாய்மை என்பது இரத்தம் பாயும் எல்லா உயிர்களிலும் பரவும் உணர்வெழுச்சி!

மேற்கண்ட புரிதலுடன், மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் உடல் பற்றிய மொழியையும், பால்நிலை அரசியலையும் அணுகுவது நம் எல்லோருக்கும் வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இத்தகைய புத்துயிர்ப்பான உடல், முழுவதும் நமது மொழிக்கும் நவீன இலக்கியத்திற்கும் பிரத்யேகமானது என்பதால், உதிரியான நமது உடல்களையும் கூட பாலியல் போரிலிருந்து மீட்டுக் கொள்ள உதவக்கூடும் என்றும் நம்புகிறேன்.

மாலதி மைத்ரியின் கவிதைகள், அத்தகைய உடலின் பல தருணங்களை நமக்குச் சுட்டிக் காட்டினாலும், இக்கட்டுரைத் தொடருக்குப் பொருத்தமான சில கவிதைகளை மட்டுமே இங்கு அளிக்கமுடிகிறது. மானுடத்தின் பதைப்பைக் குருவியின் மீது ஏற்றிச் சொல்லும் குருவி கவிதை, ஒரு தாவரப்பட்சி மாமிசப்பட்சியாக மாறும் இடத்தையும் சுட்டுகிறது. இதன் இடைவழியில் துளிர்க்கும் கண்ணீர் பாலியல் போருக்கான முதல் ஆயுதம். தாய்மை எனும் கருத்தாக்கத்தின் முழுப்பரிமாண புரிதலின் விளைச்சல் இக்கவிதை.

குருவி

முதல் குண்டு விழுந்தபோது அந்தத் தாய்க்குருவி
அவயத்தில் இருந்தது
தனது முட்டைகளில் செயற்கையாக
வீறல்கள் விழுவது கண்டு கலவரப்பட்டது
கட்டடங்கள் சரிந்துவிழும் பேரிரைச்சல்களினூடாக
ஓடுகளைத் திறந்து கொண்டு தமது
குழந்தைகள் வெளிவருவதைக் கண்டு
மேலும் பதற்றம் கூடிய அது
பறந்து சென்று இரை பொறுக்கிவரப் பயந்தது
குழந்தைகளின் ஈர உடம்புகளில்
சிமெண்ட் புழுதிகள் படியத் தொடங்கின
தனது கூடு நிலைத்திருப்பது பற்றிய
நிச்சயமற்றிருந்த தாய்
புழு பூச்சி தானிய மணிகள் தேடி வெளிச்செல்ல
நகரமெங்கும் இடிபாடுகளுக்கிடையில்
ரத்தம் கசிந்து கொண்டிருந்தது
கவச வாகனங்களும் இரும்புத் தொப்பிகளும்
இயந்திரப் பறவைகளும் நகரத்தை
சுற்றி வளைத்திருப்பதைக் கண்ட தாய்ப்பறவை
வெறுங்கையோடு கூட்டுக்குத் திரும்பியது
பசிகொண்ட குழந்தைகள் அம்மாவைக் கொத்தின
அம்மாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது
நீர் கோத்த அதன் கண்களுக்கு எட்டும் தூரத்தில்
ஆயுதத்தைப் பற்றியபடி அறுந்து விழுந்த
ஒரு மாமிச உறுப்பு சில நாட்களாக
அழுகிக் கொண்டிருப்பதை
மீண்டும் பார்த்தது – பசியின் நடுக்கத்தோடு

ஒளவையிலிருந்து ஒளவைவரை

ஒளவையின் மகள் நான்
பல காலங்களையும் வெளிகளையும்
பலவித உடல்களினூடாகக் கடந்து
சென்று கொண்டிருக்கும் ஒளவையின்
மகள் நான்

ஒளவையின் யோனி விரிந்து
இரண்டாயிரமாண்டு கால வெளியையும்
மொழி வெளியையும் உள்வாங்கி
என்னைப் பிதுக்கித் தள்ள
என் நகத்தாலேயே தொப்பூழ்க்கொடியைக்
கிள்ளித் துண்டித்துவிட்டு
குருதியீரம் காயாமல் நடந்து போகிறேன்

நான் மழலை
என்னைத் தூக்கி அமுதூட்ட
என்னெதிரே நின்று தவிக்கிறது
பால் சுரப்பு அடங்காத முலையிரண்டு

நிலவுக்குள்ளிருந்த என் முதல் ஒளவை
இன்றைக்கும் எனக்கு
கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள்

திசையெல்லாம்
ஒளவை மொழி வெளிச்சம்

ஒளவையெனும் நினைவு ஓங்கிய, பெண்ணியச் சிந்தனையின் காலக்கட்டமாய் நவீனப் பெண்ணிய இலக்கியம் இருந்திருக்கிறது. ஒளவை எனும் பெண், உடலற்ற ஆனால் புத்தியின் மண்டை வீங்கிய பெண்ணாக நூல்களின் பக்கங்களிலும், செவிகளின் அருகிலும், நாக்குகளின் மொழிதலிலும் உழன்று கொண்டே இருக்கிறார். என்றாலும், இன்றும் அவர் உடலற்ற பெண்ணாகவே பார்க்கப்பட்டு தமிழ் அறிவுஜீவி, பேராசிரிய, படைப்பு வர்க்கம் ஒளவையின் வெளிக்குள் நுழைய முடியாத தடித்த இரும்புக்கழிகளாகவே இருந்திருக்கின்றனர். இங்கு மாலதி மைத்ரி, ஒளவையின் உடலை தன் தனித்ததொரு, தாய் – மகள் உடல் பிணைப்புக் கருத்தாக்கத்தால் தெள்ளியதாக உருவாக்கியிருக்கிறார். விளக்கம் ஏதும் கோராமலேயே இக்கவிதை அதன் துல்லியமான அலகுகளை முன் வைத்திருக்கிறது.

விஸ்வரூபம்

ஏதோ ஒரு பருவமாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னை விட்டு விலகிச் செல்லத் தொடங்கின

அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும்
பிறகு யாத்திரை போலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத் துவங்கின

நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன

யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைவதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

‘விஸ்வரூபம்’ கவிதையை, ‘ஒளவையின் மகள்’ கவிதையின் தொடர்ச்சியாகவே வாசிக்கலாம். இது இவரது பிரபலமான கவிதை. யோனியின் விட்டு விடுதலையான கட்டற்ற நிலையைக் காட்சியாக்கி இருக்கிறார். உடலை ஒரு வெளியாகவும், காலமாகவும் மாற்றும் முயற்சியில் அவர் கண்டடைந்த காட்சியின் சித்திரம் இக்கவிதை. உடலின் உறுப்புகளைக் குலைத்து மாற்று அடுக்கும் உரிமையும் கற்பனையும் பெண்களுக்கு காலந்தோறும் வாய்த்துக் கொண்டே தான் இருக்கின்றன என்பதற்கு, அக்கம்மா தேவியின் கவிதை வரிகளைப் போலவே இக்கவிதையும் ஒரு சாட்சி. அக்கற்பனையின் காட்சியை நிலைப்படுத்தும் போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனரா என்பது இன்னொரு தொடருக்குக் கருப்பொருளாக இருக்கலாம். கவிதை மொழி வழியாகப் பெற்ற வெற்றிகள், ஆதிக்கச் சக்தியை அபகரித்து அனுபவிக்கும் ஆணாதிக்கத் தந்திரங்களைப் பயிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஒடுக்கப்பட்ட இனப்பெண்களை விடுவிப்பவை.

இக்கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. மாலதி மைத்ரியின் கவிதைகளில் இயங்கும் மீனவச் சமூகத்தின் வழக்காற்று மொழியும் அவர்களின் வாழ்வெளியான கடலும் பற்றிய முழக்கங்கள். இவ்விடத்தில், மீனவசமூகத்தின் அரசியல் ஒடுக்குமுறை சமகால அரசியல் நிகழ்வுகள் வழியாக, எல்லோரும் அறிந்ததே என்பதால், அதைக் கடந்து அச்சமூகத்தின் கருத்தாக்க வெளிக்குள் நாம் நுழையலாம் என்று நினைக்கிறேன். ஆதிக்கச் சமூகப் பெண்ணியம் என்பதும் அதன் கோரிக்கைகளும் பார்ப்பனீயப் பெண்ணியத்தை முன்மொழிவதே. வெறுமனே பார்ப்பன சமூகத்தை மட்டுமே குறிப்பதன்று. கடந்த காலம் தந்த கல்வி, வாழ்க்கை முறை, பட்டறிவு, நுகர்வுப் பண்பாடு வழியாகப் பிற சமூகப் பெண்களும் பார்ப்பனீய அறிவுச்சுமையைப் பெற்றுத் தான் ஒழுகி வருகின்றனர். இவர்களின் ஆதிக்க வினை என்பது தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கப்பணிகளைக் குறைகூறிக் கொண்டே இருக்கும் அதே சமயம், தான் பிறசமூகப் பெண்கள் மீது பிரயோகிக்கும் ஆதிக்கச் செயல்பாடுகளை மறைத்துக் கொள்ளும் தந்திரம். இத்தகையவர்களின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட, மரபார்ந்த இம்மண்ணின் சமூகப்பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களே தக்கவைத்துக் கொண்ட ஊடகச்சிதைவிற்கான காலக்கட்டத்தில், மாலதி மைத்ரியின் கவிதைகள் மீனவ வழக்காற்று வெளியைத் தொடர்ந்து மொழிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

மீன்காரி

காட்டுக் குதிரையென பறப்பாள்
தினமும் முப்பது மைல்களாவது
தலைச் சுமையுடன்
மழை வெயிலில்
சிதறாப்பனை போல
மீன் விற்று திரும்புகையில்
கூடையில் சிரித்துக் கொண்டிருக்கும்
(ரொம்ப சிரிச்சா புளிப்பேறிவிடும்)
ஒரு மொந்தை கள்
ஆனாலும்
சுலகில் மறைந்திருக்கும்
ஒரு கொடுவாக்கத்தி

கடலை அழைத்து வருதல்

கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது

துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப் போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது

அலைகளின் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்து கொண்டிருக்கிறது

கல்யாணமும் கட்டுமரமும்

அவளின் திருமண வயதை
வேலியில் நிற்கும் கல்யாணமுருங்கை சொல்லும்
அந்த மரமும் அவளும்
வேறு வேறு திசையிலிருந்து
வெட்டி நடப்பட்டவர்கள்
இந்த நிலத்தில் ஒரே நாளில்

அவளைப் போலவே அதுவும்
பட்டும் துளிர்த்தும் – இப்போது
பெரிய தாய்மரமாக தனது வாரிசுகள்
தோட்டம் முழுதும் செழிக்க நிற்கிறது – நின்றது

வசந்தம் முழுதும் ஒரு திருவிழாப் போல
பூத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அழகில்
சுற்றிச் சுற்றி வருவாள்
அடிக்கும் காற்றுக் கெல்லாம்
காய்கள் குலுங்க சிரித்துக் கொண்டிருந்த அது
அடிமண்டை பிளந்து காற்றாடக் கிடக்கின்றது

இன்று
எங்கோ ஒரு திசையில்
கடலில் மிதக்கிறது
யாருடைய வாழ்க்கையையோ சுமந்து கொண்டு

(முகூர்த்தக் காலாக மணமகள் வீட்டில் நடப்படும் கல்யாண முருங்கை கிளை வளர்ந்து மரமான பிறகு அது கட்டுமரமாகப் பயன்படுத்தப்படுவது மீனவ சமூகத்தின் நாட்டார் வழக்காகும்)

’கல்யாணமும் கட்டுமரமும்’, ஒரே சமயத்தில் பெண்ணின் வாழ்வும் பொருளும் செயற்பொருளும் பொருளற்ற வாழ்வுமாக மாறும் நிலை பற்றிய கவிதை. ‘வார்த்தைகளின் பேரரசி’ என்ற கவிதையில்,

சினைக்கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்
புன்னை மர நிழலில்
பொரித்த உளுவை மீன்களுடன்
கள்ளுண்ட நாம்
கொக்குகளை விரட்டித் திரிவோம்
வெள்ளிக் கெண்டைகள் பாயும் மதகடையில்
வெள்ளிவீதி
உனது மடியில்
நானும் படர்ந்திருப்பேன்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து யாழிசையைக் கேட்டபடி
சினைக் கெளுத்திகளை விழுங்கும்
வெள்ளைக் கொக்குகள் பாவம்

என்ற பகுதியால் கடலும் கடல் சார்ந்த மொழியும் மாலதி மைத்ரியிடம் தீவிரம் பெற்றிருக்கின்றன. ‘சங்கராபரணி’, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தன் முதல் இரண்டு தொகுப்புகளில் கடல் என்பதை முக்கியமான கருப்பொருளாயும் உடலுக்கான வெளியாகவும் கட்டமைத்து, தன் மொழியை நீர்மைப்படுத்திக் கொண்டிருந்த மாலதி மைத்ரி, தனது மூன்றாவது தொகுப்பான ‘நீலி’யில் உலகப்பொதுப் பிரச்சனைகளை உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார். என்றாலும், உலகப்பிரச்சனைகள் தொடர்ந்து அடையாளம் பெறுவதற்கான அமைப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உலகெங்கும் எப்பொழுதுமே இருக்கும்பட்சத்தில் மீனவச் சமூகக்கருப்பொருட்கள் மீதான விருப்பீர்ப்பை இன்னும் அவர் தனக்குள் தக்கவைத்திருக்கலாமோ என்ற ஏக்கம் மேலிடுகிறது. அச்சமூக வாழ்வின் நுணுக்கங்களையும் இயல்பான உரிமைகளையும் மொழிப்படுத்தும் அவசியம் உக்கிரம் பெற்றிருக்கும் ஆண்டைத்தானே நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்! பிராந்திய, அந்தரங்க அரசியலை உலகப்பொது அரசியலின் அக்கறைக்குக் கவனப்படுத்துவது தான் இன்றைய படைப்பிலக்கியவாதிகளின் சவால்!

அதே போல், தமிழ் நவீனக் கவிதையை சிறுகதையின் குறுக்கப்பட்ட வடிவம் என்று கருதியோர் அதன் பரப்பில் கைவைத்த போதெல்லாம், அது தன் வளர்ச்சி வேகத்தைக் குறைத்துக் கொண்டது. அதே போல, கவிதை மொழியை உரைநடையாக்கி, நடை வண்டியில் பழக்கியபோதும் தன் முதுகெலும்பை ரப்பர் சுருளைப் போல தொய்வுப்படுத்திக் கொண்டது. கவிதை மொழி, கருப்பொருளின் முக்கியத்துவத்தை, கவிஞன் சிந்திப்பதற்கு ஒத்த சொற்களிலேயே படைத்து எல்லோருக்கும் கடத்துவது என்பது என் நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட, இரண்டு சிக்கலையும் அணுகுவதற்கான கவித்துவ விசாரணையை எழுப்பாத, விமர்சன உரையாடலை நிகழ்த்தாத வெளியில் ஒரு வாசகன், அது கவிதையா அல்லவா என்பதைக் கண்டடையும் பயிற்சியை அடைவதற்கான வாசிப்பைத் தானே தான் நிகழ்த்தவேண்டியிருக்கிறது. மாலதி மைத்ரி, தன் தொடர் கவிதை இயக்கத்தால் பெண்ணியச் சிந்தனை வெளியை விரித்துக் கொண்டே இருக்கும் அவர், கருத்தாக்கத்தின் வெப்பத்தைப்பதிவு செய்யும் அவசரத்தில், மொழி தன் நடையை மாற்றிக் கொண்டதையும் மொத்தத் தொகுப்பையும் வாசிக்கையில் உணரமுடிகிறது.

மாலதி மைத்ரியின் உச்சபட்ச பெண்ணிய, பாலிய மொழி வெளிப்பாட்டின் நேர்மையான பதிவை அவரது பெரும்பான்மையான் கவிதைகளில் காண முடிந்தாலும், அதன் எல்லைகளைக் கடந்து பறக்க அவர் விரிக்கும் சிறகுகள், தன்னுடலை ஒடுக்குதலை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே தன்னுடல் விரிக்க உதவக்கூடியவை.

ஒரு கோப்பை தேனீர்

கண்ணாடியில் வெட்டுப்பட்ட இறக்கைகளுடன்
சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி

என் ஆன்மாவைப் போன்ற
கறுத்த கசந்த தேனீரைக் குடித்துக்
கொண்டிருக்கிறேன்

உனது சிமிழுக்குள் அடைப்பட்ட
கிளியல்ல உயிர் – அது
விசையற்ற கோளம் போல்
அலைந்து கொண்டிருக்கிறது

உன்னால் ஏழுகடல் மட்டுமே தாண்டமுடியும்
கோப்பைக்குள் நீ- அதன்
விளிம்புக்கு வெளியே
எல்லையற்ற என்னுடல்.

அருட்பெருஞ்சோதி

நெருப்பைத் தொடும் ஆவல்
எல்லா உயிரினத்திற்குமுண்டு
நெருப்பைத் தொட்டு வளர்த்தவள் நீ

நெருப்பு.
அணைந்த பூமியில் உருவாக்கப்பட்ட
முதல் நெருப்பு
இன்று வரையிலும் உன் உடலின்
வெம்மையோடே நீடிக்கிறது.

ஒவ்வொரு துளி நெருப்பிலும் நீ

தீ பெண்ணிலிருந்து பிறந்ததென்பாள்
என் தாய்

எனக்குள் தீயைத் தொட்டறியச் சோதித்தேன்
யோனி தகித்தது

’அருட்பெருஞ்சோதி’ கவிதை, இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திற்கும், ஒளவை மொழி வெளிச்சத்தைக் கவிதை மொழியால் பரப்புவதைத் தன் தொழிலாகக் கொண்ட ஒரு கவிஞருக்கும் ஏன், என் சுய விருப்பத்திற்குமே கூட நியாயம் பாராட்டும் கவிதை!

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மாலதி மைத்ரி, சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர, கட்டுரை எழுதுவதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். ‘அணங்கு’ என்ற இலக்கிய இதழையும் நடத்தி வரும் இவர் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </