வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக்கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!

 

 
     
     
     
   
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.

இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     



வாயில் TS  தொடர்கள் TS ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் தொடர்கள் வாயில்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -1

இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை

குட்டி ரேவதி  

சுவரையே முட்டிக்கொண்டிராமல் சுவர்களுக்கு வெளியேயான இயல்பான சூழலுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் குரலாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் சிலரே. இயற்கையின் கருப்பொருள் எதுவும் இவர்கள் கவிதையில் கவித்துவம் பெற்று, வரிகளுக்கு இடையே அர்த்தம் பெறும். அம்மாதிரியான மொழியுறவை இவர்கள் தக்கவைத்துக் கொள்வதுடன், ஏனைய உறவு போன்றே இவ்வுறவையும் பேணி சிறப்பு அம்சங்களுடையதாக வளர்க்கின்றனர். அவ்வகையில், கவிதையைத் தன் அகக்குரலாக மாற்றிக்கொண்ட பெண்ணின் மொழி இரா.மீனாட்சியினுடையது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் தன் முதல் தொகுப்பைப் பதிவு செய்திருக்கும் இரா.மீனாட்சியின் எழுத்தைப் பற்றி விவாதிப்பதில் இரு முக்கியமான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது சமகாலத்தில் உத்வேகமெடுத்திருந்த, ‘எழுத்து’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர், முதலாவது! எழுபதில் எழுதத்தொடங்கி தனியாக இயங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இயங்கும் காலத்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பது, இரண்டாமவது! அவர் எழுத்தில் இன்றைய பேசுபொருளாக்கியிருக்கும் உடல், பாலியல், பாலிமை போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கான வாய்ப்பை நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். எம்மாதிரியான பெண்ணுடலை அவர் வரித்திருந்தார் என்பதைக் கண்டறியும் போது அக்காலமொட்டிய சில தெறிப்புகளும் நமக்கு வாய்க்கக்கூடும்.

முதலில் பெண்ணெழுத்து இப்படித்தான் உருவாகிறது. பெண்மையை தனது ஒரு பலமாக மாற்றிக்கொள்வது, அதனை உடலுக்குள் திடமான ஒரு பண்பாகக் கட்டமைத்துக் கொள்வது, பெண்மை என்று தான் நம்பும் சில குணநலன்களின் அதாவது, நளினம், மென்மை, அடக்கம், அச்சம், மடமை, பயிர்ப்பு போன்ற சில குணத்தொகுதிகளையேனும் உடலுக்குள் தொகுத்து வைத்துக்கொள்வது! அரவாணிகள் தம் உடல்களை அப்படித்தானே திருத்தியெழுதிக்கொள்கிறார்கள்! இதன் வழியாக உடலுக்கு ஒரு புதிய பாலியல் வெளியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவ்வெளிக்குள் பயணிக்க விரும்புகிறார்கள். இப்படித்தான், ஆரம்பக்கட்ட பெண்நிலை வாதம் நமது புவியியல் சூழலில் தொடங்கியது. இதை சட்டை உரிக்கும் நிகழ்வாக, புற வளர்ச்சிக்கான ஓர் அடையாள நிகழ்வாகப்பார்க்கலாம்.

ஆனால், இது வெளிப்படையான பாலிமையை எங்குமே பேசத்துணியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கியத்துறையில் காலூன்றும் தனது முயற்சியில் சக ஆண் படைப்பாளிகளுக்கு இணையாகத் தானும் வெல்லவேண்டும் என்பதாய் இருக்கலாம். குடும்பம் பின்புலமாக எழுத்தை முன்வைக்கும்போது பாலிமை என்பதை ஒரு பேசு பொருளாக்கினால், அது முதலில் குலைப்பது அவரவர் குடும்பத்தையும் மண உறவையும் தாம். இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, சுய தணிக்கை செய்து கொண்டே இருப்பதும், மொழி வழியாக ஊக்கம் பெறும் போதெல்லாம் முளை விடும் இறக்கைகளைக் கத்தரித்து விடும் அவலமாகவும் இருக்கலாம். ஆனால், இலை மறை காய் மறையாக உடலின் வேட்கையை வார்த்தைகளில் ஒளித்து வைத்துப் பேச அவர்கள் தயங்கவே இல்லை. மேலும், ஒரு பொருளில் பெண் பயன்படுத்தும் சொல்லை அதே பொருளில் உள்வாங்கிக்கொள்ளும் உணர்வுக் கொம்புகளை இன்னும் ஆண்கள் வளர்த்துக்கொள்ளவில்லை தானே?

இவ்வாறு தான் முதன்முதலாக எழுத வந்த பெண் கவிஞர்களும் பெண்மை என்ற வரையறைக்குள்ளிருந்து முதலில் மொழியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பின்பு தான், மொழியின் உடைப்பும் உடலின் தகர்ப்பும் நிகழ்ந்தன என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில், இரா.மீனாட்சியின் கவிதை செய்ததை விவாதிப்பது பொருத்தமான கருவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயற்கையுடனான தன் கலப்பையும், மானுட உறவையும் ஓயாது பேசிவரும் மீனாட்சியின் கவிதைகள், பெண்மையின் வீறு கொண்ட கவிதைகளாக உருவாகியிருக்கின்றன.

‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தினுடனும், ‘சி.சு.செல்லப்பா’ போன்ற நவீன இலக்கிய முன்னணியினருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இரா.மீனாட்சி, நவீன இலக்கியப் பெண்ணெழுத்தின் தொடக்கமாகிறார். அப்பொழுது உருவாகியிருந்த நவீன கவிதையின் உத்வேகத்தைத் தானும் பயன்படுத்திக் கொள்கிறார். இன்று வரை ஓயாது கவிதையை தன் அகக்குரலுக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

2002 –ம் ஆண்டு கவிஞர்கள் க்ருஷாங்கினியுடனும் மாலதி மைத்ரியுடனும் சென்று கவிஞர் இரா.மீனாட்சியைச் சந்தித்தேன். அவரது கவிதைகளை ஒரு மருங்கிலிருந்து மறு மறுங்கு வரை வாசிக்கும் அனுபவம் அதற்குப் பிறகு இக்கட்டுரை எழுதுவதற்காகவும் கிடைத்திருக்கிறது. தனது மொழியின் உள்ளீடாக இவருக்கேயான அழகியலும் நடைலயமும் உக்கிரம் நோக்கி நகரும் வாக்கிய மடிப்புகளும் கொண்டு எழுத்தில் இயங்குகிறார். கடந்த நான்காயிரம் வருட உலகக்கவிதை இயங்குதலைத் தொகுக்கும் முகமாக, அமெரிக்காவிலிருந்து வெளி வந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதை இவருடையது.

உலகச்சந்தையில் விற்பனைக்குப் போகும் பிற மலர்களுடன் அத்தகுதியைப் பெறாத நெருஞ்சி மலரைத் தன் முதல் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இரா. மீனாட்சியின் கவிதைகள் பகிரங்கமாக வெளிவந்தன. நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இரா.மீனாட்சிக்கு இருக்கும் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதாவது, அவர் வழியாகத் தான் தமிழ்ப்பெண் கவிதையின் தடம் உயிர்ப்பெறுகிறது. அதுவரை, தமிழ்ப் பேராசிரியர்களின் கைகளில் மண்டிக்கிடந்த மரபுக்கவிதைகளிலிருந்து நவீனத்தை நோக்கி ஒட்டுமொத்தமுமாக பெண்கவிதைக்குத் திசை திருப்பித்தந்த பங்கு இவருக்கு உண்டு. என்றாலும், மரபுக்கவிதையின் நடை, சந்தம், சொல்லாட்சிகளிலிருந்து விடுபடாத தொகுப்பாகவே நெருஞ்சி உருவாகியிருக்கிறது. என்றாலும், கருப்பொருள் அளவில் மரபார்ந்த சிந்தனை அடுக்குகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் இரா. மீனாட்சி எடுத்துக்கொண்டார்.

சுடுபூக்கள் கவிதைத்தொகுப்பில், இப்படியான வரிகளுடைய காற்றோ காற்று எனும் கவிதை

’ஒவ்வோர் இறகும்
ஒவ்வோர் பறவை’

சங்கொலிப் பாதையில்
நான் ஒரு அற்பப் புழு
ஆகாசக்கைகள் என்னைத் தொட்டன.
நீவிய கையின் மந்திரமோ?
எனக்கும் சிறகுகள் முளைத்தன.
அலகால் அரிசியைக் கொத்தி
பாலையும் குடித்தேன்.
பம் பம் பம்பம்…
சங்கொலிப்பாதையில்
சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்
நானும் பறக்கிறேன்

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)

சங்கொலிப்பாதியில் கவிதை தன் உடலுக்குள்ளிருந்து சிறகு விரிக்கும் அனுபவத்தை, உட்பொருளாக்கியிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து தீவிரமாக வெளியேறும் முனைப்பும் விட்டு விடுதலையாதலும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தன் முனைப்பை கூர்மையான மொழியாக்கவும் அனுபவமாக்கவும் முடியாமல் தவிக்கும் குரலையும் அவரே பதிவு செய்கிறார்.

எழினி

அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)

‘அக விடுதலை’யைத் தீவிரமாக முன் வைக்கும் கவிதை இயக்கம் சந்தித்த பிரச்சனைகளில் முதன்மையானது பற்றுக்கோடின்றி அலையும் அதன் கவித்துவ வேகம். அதாவது, சிந்தனைச் செழுமையுறாது என்ன தான், தீவிரமான இயக்கத்திற்குள் நம்மை உட்படுத்திக்கொண்டாலும் அது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி வடிவம் பெறாது துவண்டு விழுந்திருக்கின்றது. இதை ஆண் எழுத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அகவிடுதலைத் தத்துவத்தை இன்று வரை தம் எழுத்துகளில் சீரியதாக முன்வைத்துக்கொண்டிருக்கும் ஆண் படைப்பாளிகள், ‘இயற்கை’, ‘தத்துவம்’, ‘ஆன்மீகம்’, ‘அகவிடுதலை’ போன்றவை அடிப்படையான எந்தச் சிந்தனையையும் உட்வாங்கிக்கொண்டவையாக இல்லை. சித்தாந்தம் எதையும் தனக்குள் தக்க வைத்துக்கொள்ளாத இத்தகைய எழுச்சிகள் வெறுமனே உணர்வெழுச்சிகளாக ஓய்ந்துப் போகின்றன. உடலை வெறுங்கூடு என்று நோக்கும் அடிப்படையான மனோபாவம் தான் இயற்கையின் மூலமாகவும் தீரமான அடையாளமாகவும் உடலைப் பார்க்க இயலாத பலவீனமும் எந்த விடுதலையையும் சாத்தியப்படுத்தாமல் போகின்றன. குப்பையைக் கிளறுவதை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் கோழி, இறக்கைகள் தேவைப்படும் வானத்தை வேட்கையுடன் பார்ப்பது போலத்தான்!

ஆனால், மீனாட்சி இதற்கான சுவடுகளை, சங்கொலிப்பாதையில் கவிதையிலேயே, தனது முந்தைய கவிதையிலேயே வைத்திருப்பதையும் பாருங்கள்!. நீவிய கையின் மந்திரமோ? என்ற வரியே உள்ளீடற்ற அர்த்தத்துடன் ஏற்கெனவே பதிவாகி இருப்பதை இங்கு மீண்டும் இணைத்துப் புரிந்து கொள்வோம்.

எங்கும் வெளி
பெரிய வெளியில்
சிறிய வெளி என் வீடு
வீட்டிற்குள் என் உடம்பு
அங்கும் வெளிதான்.
வெளியில்
பரவச ஒளியின்
எல்லையில்லாத நாட்டியம்

(மறு பயணம் கவிதைத்தொகுப்பு, 1998)

இக்கவிதையிலும் விடுதலை என்பதை உடலுக்குள் வைத்துப் பேசும் சுயம் தொனிக்கிறது. வெட்டவெளி என்பதைத் தனக்கான ஆன்மீக வெளி என்று நோக்கினாலும், அதை அடைவதற்கான சிந்தனைத்தடமற்று கவிதைகள் தொடர்கின்றன. ஆனால், இவையெல்லாமே ஆண்களின் பேசுபொருளாக மட்டுமே இருந்திருக்கின்றன என்னும் கட்டத்தில் மீனாட்சிக்கும் இவ்வெளிக்குள் நுழைந்து பார்க்கும் தன் விழைவை முயன்றுபார்க்கும் மொழியாகத் தான் இக்கவிதையைப் பார்க்கிறேன்.

இராமர், கண்ணன், சீதை, இராவணன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களைத் தன் நிலையிலிருந்து தகர்த்துக்கொண்டே வருகிறார். புராணக்கதை மாந்தர்களை விமர்சிப்பதை ஆதிக்கப் பின்னணிப் பெண்கள், தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கவிதையில் மட்டுமன்றி, இந்தியாவின் எத்திசையில் படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம், அவர்களின் உடலும் விடுதலையும் எழுச்சியும் இக்கதை மாந்தர்கள் தம் கதாபாத்திரங்களுக்கு உள்ளிருந்து பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தான்! இவர்கள் தாம் இப்பெண்களை, தந்தையராகவும், கணவராகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும் தொடர்ந்து வதைக்கின்றனர். இவ்வதையிலிருந்து வெளியேற இக்கதைமாந்தர்களாக மெய்மையில் தங்களை உருமாற்றிக்கொண்ட ஆண்களின் சிறைகளிலிருந்து வெளியேற விரும்பினர். தங்கள் நினைவுகளுக்குப் புகட்டப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கத் தொடங்கினர். ஆகவே, தம் சிந்தனையைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் இக்கதைகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் உடலை விடுவிக்க வேண்டியிருக்கிறது. பின், இம்மாதிரியான ஆண் பிம்பங்களையும், அவர்களுக்கு உடன்பட்ட பெண் பிம்பங்களையும் இவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது, இந்த அளவிற்கேனும் விடுதலையைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

பிற ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளில் இத்தகைய ஒடுக்குமுறைக்கான பிம்பங்கள் பதிவாவதில்லை. அவர்களின் பிம்பங்கள் ஆதிக்க மனிதர்களால் உருவானவை என்பதால், சீதை, இராமன், கண்ணன் போன்றவை எல்லாம் ஆதிக்க சாதி, இனப் பெண்களால் தாம் தகர்க்கப்படவேண்டும். நினைவை மொய்க்கும் இப்பிம்பங்களால் அவர்கள் உடல், கட்டுப்படுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதை அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும் இல்லையா?

மேற்கொண்ட பொருளில் உளைவுக்குள்ளாகும் மனநிலையைச் சொல்லும், மிகவும் புகழ்பெற்ற மீனாட்சியின் கவிதை,

மதுரை நாயகியே!

மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?

(சுடு பூக்கள் கவிதைத்தொகுப்பு, 1978) இல் வெளியான இக்கவிதையும், அதே தொகுப்பில் இடம்பெற்ற ‘நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப்பெண்கள்’ எனும் சமூக யதார்த்தம் தொனிக்கும் கவிதையும் ஒரே மனநிலையில் இயங்குகின்றன. பெண்ணுடல் மீது இயங்கும் புற தாக்குதல்களை மையமிட்ட கவிதைகள் இவை.
………………………………………………………………………

உள்ளே பார்த்தோம்.

எங்கள் மேலாடைகளைக் கிழித்து
தோல் பூச்சைத் துளைக்கின்ற
பூனைப் பார்வைகளை

பார்வைகளையே கைகளாக்கிக்
கைகளையே கொடுக்குகளாய்ச்
சக பிரயாணிகள் சுமந்திருப்பதைக்
காலங் கடந்தே
நாங்கள் பார்த்தோம்.

தொடக்கத்தில், பெண்கள் எழுத வந்த போது நேரடியான அவர்களின் வெளிப்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாயின. நாட்குறிப்புகள் தாம் பதிவு பெறுகின்றன என்றும் படைப்பூக்கம் இல்லா எழுத்துகள் என்றும் விமர்சனத்திற்குள்ளாயின. இவை ஆண், பெண் என இரு தரப்பினரிடமும் தாம் காணப்பட்டன என்றாலும், இதைச் சொல்லும் அதிகாரம் ஆண் படைப்பாளிகளிடம் தான் இருந்தன. இரா. மீனாட்சி, இந்த அரசியலையும் கையாளவேண்டியிருந்திருக்கும். இடது சாரி அரசியலுடன் வந்த படைப்பாளிகளையும், வானம்பாடி போன்ற இயக்கங்களையும் எதிர்கொள்வதற்கான அரசியல் பார்வையை அவர் முன்வைக்கவோ விவாதமாக்கவோ இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் வெளிப்பாட்டை தன் கவிதைகளில் அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் கூர்மைப்படாத ஒன்றாகவே இருந்தது.

……………………………………………………
இவர்களுக்காக

நீங்கள் தேன் வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுர விதைகளுக்கு மடி தந்தீர்கள்

புலிப் பொருளியலில்
போகப் பொருளானவர்களே!
உணர்ச்சி ஊர்களின்
மடைத் திறப்புகளே!
என்றைக்கு உடைத்தெறியப் போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?

பெண்களே
இவர்களுக்காக இன்னொரு முறை
அழாதீர்கள்

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)
………………………………………………………………………………………..


இக்கவிதையில் அசுர விதைகளுக்கு மடிதந்தீர்கள் என்று மறைபொருளாகச்சாடுகிறார் மீனாட்சி. இம்மாதிரியான நேரடியான பிரச்சாரக்கவிதைகளில் இருக்கும் பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பொழுதும் பிரச்சனை எனப்படுவதன் ஆழத்திற்குக் கூட்டிச்செல்வதில்லை. ஆற்றின் மீதான பாலத்தில் நடக்கும் வசதியுடனும் கவனத்துடனும் இம்மாதிரியான கவிதைகளை எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அரசியல் அடையாளம் பெறுவதை, ஓர் அங்கீகாரமாக எண்ணிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால், இம்மாதிரியான கவிதைகளால், எந்தப்பிரச்சனையும் மேலெழுந்த வாரியாகப் பேசப்படுகிறதே அன்றி அக எழுச்சியை ஏற்படுத்துவதில்லை. சமூக அழுத்தம் பெற்ற விஷயங்களைப் புரட்டிப் போடுவதே இல்லை. இதற்கு ஓர் உதாரணமாய் ஒரு கவிதை:

நிழலாய் இருக்க விடு

உச்சி வெயில் போதில்
நிழல் பொருளுள் ஒடுக்கம்
நீ அந்த வெயில்
நிழல் நான்

வாழ்க்கைக் காலையில்
என்னை முன் நடத்து
சாயும் வேளையில்
பின் நிற்கிறேன்.

ஒளிக்காலத்தில்
நிழல் நிகழும்
இருட்டெனில் கருகும்.

உன் வழியில்
பகலைப் பார்க்க
எனக்கோர் ஆசை!

சுடுபூக்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையில், மேற்சொல்லியிருக்கும் அதே மாதிரியான ஆன்மீக, தத்துவத் தேய்மானங்களைக் காணலாம். அதாவது, இக்கவிதையில் முன்னிலை பெறும் நீ என்பது பேசப்பட்டிருக்கும் பொருள் சார்ந்து ஓர் ஆணாகவோ, கடவுளாகவோ இருக்கலாம். அதற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தீவிர இச்சையைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது, இக்கவிதை. ஆனால், அத்தகைய ஆன்மீக, தத்துவச் சிந்தனையே எவ்வளவு போலியானதும் வெறுமையானதும் என்பது உண்மையான தத்துவப் பின்புலங்களிலிருந்தும் நெடிய ஆய்வுகளிலிருந்தும் வருபவர்களுக்குப் புரியும். இந்தப் பயணம் படைப்பவரையும் வாசகரையும் எங்குமே கொண்டு சேர்க்காத ஒரு வண்டியில் ஏற்றியது போன்றது இல்லையா? இது வைதீக சிந்தனையின் வேர்கள் நம் அடி மன ஆழங்களில் மண்டிக்கிடக்கும் விழிப்பு அற்று இருப்பதன் பிரதிபலிப்பு தான்!

ஆனால், எனக்குப் பிடித்த தொனியில் அணுகப்பட்ட சில கவிதைகளையும் மீனாட்சியின் கவிதைத்திசைகளில் கண்டெடுத்தேன். இவை பெண் மனவெளியில் சிக்கல் உள்ள பகுதிக்குத் துல்லியமாகச்சென்று, அதன் இழைகளை மொழிக்கு இழுத்து வருகிறது. பொதுவாக, நவீனப் பெண்மனம் இந்த அணுகுமுறைக்கு எளிதானது இல்லை. பல சமரசங்களையும் மீறித் தன் சுயத்தையும் கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவள் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, அதில் ஏற்படும் சங்கடங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கவிதைக்கான நுண்ணிய மொழியில் கொண்டு வருவது என்பது சாத்தியம் தான் என இக்கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகமானேன். மீனாட்சியின் சில கவிதைகளில் மட்டுமே வாய்க்கும் நவீன உணர்வுகளை, அவரே தக்கவைத்துக் கொள்ளாமல் போய்விட்டாரே என்று என்னும் அளவில் அதற்குப் பின்பான கவிதைகள் வசனங்களாகி இருக்கின்றன. அதனாலேயே ஆழமான கருக்களங்களுக்குள் நுழைய முடியாத மனப்பிரமையும் அப்பிக்கொள்கிறது

பார்பரா என் தோழியே!

நீலக் கண்களில் நீளக்குறும்பு
கூரிய மூக்கில் கேலிப்புன்னகை
செம்பொன் முடியோ காற்றில் அலையும்
விரல்களில் அவசரம்
நடைதனில் கம்பீரம்
உன் பேச்சில் லாஸர் கற்றை.

நீ எப்போது தவித்தாய் தெரியுமா
பெண்ணே!
ஒரே ஒரு முறை
உன் முதல் காதல் அனுபவத்தை
முற்றிய நாளில் சொல்ல முயன்று
அளக்க நினைத்துத்
தோற்றாயே முன்னுரையில்!
பார்பாரா என் தோழியே!
தவிப்புமா தொற்று வியாதி?

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)


...................................................

இதோ இன்னுமொரு கவிதையின் குறும்பகுதி:

அந்தரங்கவெளி

நீர் குடிக்கத் தவிக்கின்ற சிறுபடகும்
கறையான் அரித்த துடுப்புகளும்
உப்புக்கரைசலில் எரியுண்ணும்
காயங்களும் தான் இங்கே துணை.
இவற்றோடு பயணப்படுகின்றேன்.
துக்கச் சுமைகளைத் தூக்கிவர
கூலி யாருமில்லை.

......................................................

மாலை மலர் விரிவது போல்
மெல்ல நடந்தாலும்...
கனவுகளுக்குள் இறங்கும்போது
கதவிடுக்கில் எட்டிப்பார்த்தாலும்....

பல்லாயிரர் கூடும் தேர்த்திருநாள் நெரிசலில்
ஒரு கணமேனும் ஊடுருவும்
பார்வை பட்டாலும்...
என்னை அறிந்து கொள்ளும் அந்த நீயா...

வயிற்றுக்கிரை இல்லாத
வீதி நாளில்
கதை சொல்லி வீரமுட்டி
விழிவியர்வை மாற்றினாயே


.................................................................

எல்லாம் போனபின்
உள்ளீடற்ற பின்னம்
நிழல் சின்னம்
மீதி நான்.

சோப்புக் குமிழிகளை ஊதுகிறேன்
வால் சேர்ந்த வஜ்ரப் பட்டங்களைப்
பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்ணாடித் தொட்டியில்
ஓயாது அலைகின்ற
உறங்காத
இளஞ்சிவப்பு மீன்களைப்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வாசல் வேப்பமரம் உதிர்க்கின்ற
பொன்பூக்களின்
சின்ன மழையில் நனைந்து கிடக்கின்றேன்.

கான்கிரீட் சுவர் குழைக்க
குவித்திருக்கும் மணல் முகட்டில்
வீடு கட்டக் கரண்டி பிடிக்கின்றேன்.

என்னைக் கடக்கின்ற நரைமேகங்களின்
விசித்திரச் தோற்றங்களை
மாற்றிச் சிவப்பாக்கித்
தூரிகையை கங்கையில் அலசுகின்றேன்.
மாடி மீது ஏறினாலும்
என்னைக் குனிந்து பார்த்துக் கெக்கலிக்கும்
தென்னங் கீற்றுகளைக் கிழிப்பதற்கு
கத்தியைச் சாணைப் பிடிக்கின்றேன்.

இப்போது
புதிதாக முன்னால் நட்டிருக்கும்
இரும்பு வேலிகளை வளைப்பதற்குப்
பழகிக்கொண்டிருக்கிறேன்.

இடது கண்ணில் வலது கண்ணை
அப்பி விட்டேன்.
இதயத்தைத் தனியே கயிற்றில்
கோர்த்துவிட்டேன்.

நம்பு
இன்னும் நான் சாகவில்லை
இருக்கின்றேன் உயிரோடு!

மற்றுமொரு கவிதையும்:

வித்யா

குளத்து நீரில் மீன்பிடிப்பவர்களே
ஆற்றங்கரைக் கொக்குகளே
நான் வித்தியாசமானவள்.

கணந்தொறும் கணந்தொறும்
கடலின் பாய்ச்சல்
மரத்தொட்டிலை
அலைக்கழிக்கும் வேகத்தில்
வலை போடவே விரும்புகிறேன்
நீங்கள் காத்திருத்தலையே
விரும்புகிறீர்கள்.

நான் புயலுக்குள் புயலாய்ப் போய்
மையத்தைத் தொட்டுப்பார்க்கிறேன்
நானொரு வித்யா.



இரா.மீனாட்சியின் உள்நோக்கமும் அவர் கொள்ள விரும்பும் நெடும்பயணத்தையும் சொல்லும், ‘உன்னை எதிர்கொள்ளும் முன்’ கவிதை அவரை வாசிக்கும் எவரையும் ஊக்கப்படுத்துவது. எதிரே வரும் அனுபவங்களுக்குத் தன்னைத் திறந்து கொடுப்பது. குறிப்பாக, ஒரு மனிதருக்கு தன் சமுத்திரத்தைத் திறந்து கொடுக்கும் அனுபவம் ஆணுக்கான ஒன்றாக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும் சமூகச்சூழலில், ஒரு பெண் இதை முன்மொழிவதும், அம்மாதிரியான பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தன்னைத் தயார்செய்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. உடல் வழியாக மட்டுமே அனுபவங்கள் சாத்தியம்!

உன்னை எதிர்கொள்ளும் முன்

வேற்றூரின் புன்னகைக்கு
மறுமொழி தந்து
சிப்பியும், மீன்முள்ளும்
காலிக்குப்பிகளும்
இடறிவிட்ட வீதிகளில்
‘மாப்சா’ சந்தைகளின்
அபூர்வ சேகரிப்பில்
திளைத்ததைப் போல்
உன்னை எதிர்கொள்ளுமுன்…
அன்பே!
பயணத்தில் இருக்கின்றேன்.
நீயே அனுபவமாய்
எதிர்கொள்ள வருகின்றேன்.

---------------------------------------------------XXXXXXXXXX------------------------------------------------------

இரா.மீனாட்சி பற்றிய சிறுகுறிப்பு: 1970 –ல் எழுதத் தொடங்கிய இவர், நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். கிராம முன்னேற்றம், ஆசிரியப்பணி ஆகியவை இவரது பிற ஆளுமைகள்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.