வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நூல்வெளி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

தமிழில் அச்சேறிய முதல் நூல்

லிஸ்பன் நகரில் 1554இல்
அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல்
தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள்
கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில்
கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும்,
செபங்களும் அடங்கியுள்ளன.


http://www.tamilvu.org/courses/
diploma/p203/p2034/html/
p2034661.htm
-----------------------------------------


ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்


தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.

--பிரபஞ்சன்

http://www.uyirmmai.com/
Uyirosai/ContentDetails.aspx?
cid=1627


-----------------------------------------

சித்திரப்பாவை

அகிலன் சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார்.

-----------------------------------------

 

 

 
     
     
     
   
நூல்வெளி
1
 
ஆசிரியர் பற்றி
 
   
 


தமிழ்மகன்


தமிழ்மகன் சென்னையில் 1964- ல் பிறந்தவர். தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் ஆண்டையொட்டி, 1984- ல் டி.வி.எஸ்.நிறுவனமும் இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் இவரது "வெள்ளை நிறத்தில் ஒரு காதல்" நாவல் முதல் பரிசு பெற்றது. 1996- ல் "மானுடப் பண்ணை" என்ற நாவல் தமிழக அரசின் விருது பெற்றது.

சுஜாதா அறிவியல் புனைகதை போட்டியில் இவருடைய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'சொல்லித் தந்த பூமி' (1997), "ஏவி.எம். ஸ்டூடியோ ஏழாவது தளம" (2007), வெட்டுப்புலி (2010) ஆகிய நாவல்களும் "எட்டாயிரம் தலைமுறை" (2008), "சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்" (2006), மீன்மலர் (2008), ஆகிய சிறுகதை தொகுப்புகளும், செல்லுலாய்ட் சித்திரங்கள் - சினிமா பிரபலங்கள் பற்றிய நினைவுக்குறிப்புகள் (2010) ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.

 

 
  -------------------------------  
 

பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ் ‘ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விவரசனகள், நல்லு ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை, சுயசரிதை போல, கூறுகிறது.

1879ல் பிரசுரமாயிற்று.

 
  --------------------------------  
  சிறந்த தமிழ் நாவல்கள்.  
 

http://www.jeyamohan.in/?p=84

 
  --------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  நூல்வெளி TS நூல் அறிமுகம் / திறனாய்வு TS சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ்


சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ்

தமிழ்மகன் , tamilmagan2000@gmail.com  


மறைந்தபோன ஒரு மேதையின் வாழ்க்கை வரலாறை எழுதும்போது உணர்ச்சிவசப்பட்டு மிகைப்படுத்திவிடாமல் எழுத வேண்டிய கட்டாயம் உண்டு. அதே நேரத்தில் அந்த மேதையை இன்னொருமுறை சாகடிக்கும் விபரீதமும் நடந்துவிடக்கூடாது. செய்ய வேண்டியதெல்லாம் உண்மையை எழுத வேண்டும், அது எளிமையாக இருக்க வேண்டும், சுருக்கமாக இருக்க வேண்டும். காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து தமிழில் நான்கு நூல்களைப் படித்திருக்கிறேன்.


மார்க்ஸ் பிறந்தார், காரல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறு, இவை இரண்டும் சோவியத் நாட்டின் வெளியீடுகள். இது தவிர பிரேமா பிரசுரம் வெளியிட்ட சிந்தனையாளர் வரிசை நூலில் இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றும் வெளியானது.


இவையாவற்றிலும் அவருடைய வாழ்க்கையையும் தத்துவங்களையும் சற்றே எளிமையான நடையில் விளக்க முற்பட்டிருப்பதன் மூலம் வெ. சாமிநாத சர்மாவின் "காரல் மார்க்ஸ்" முதலிடத்தைப் பிடித்துவிடுகிறது.

நூல் எழுதப்பட்டதற்கான நோக்கம், அவருடைய வாழ்க்கையையும் அவர் பெற்ற தத்துவார்த்த வளர்ச்சியையும் சொல்வது என்பதில் தெளிவாக இருப்பது இந் நூலின் தனிச் சிறப்பு. மார்க்ஸ் அவரைப் பற்றிச் சொல்லியிருப்பது போல் இரண்டு மனிதரின் வாழ்க்கையை வாழ்ந்த அவரை இத்தனைச் சுருக்கமாக விவரிக்க முடிந்திருப்பது மிகப் பெரிய சாதனையாக இருக்கிறது. மார்க்ஸையும் அவருடைய தத்துவங்களையும் பற்றி பல நூல்களைப் படித்து அதில் இருந்து சாறு பிழிந்த நூலாக இது இருக்கிறது. ஒரு தனி நூலை மொழி பெயர்த்த நூல் இல்லை இது என்பதாலேயே இந்தச் சுருக்கம் சாத்தியமாகியிருக்கிறது.

மார்க்ஸைப் பற்றி அவருடைய பெற்றோர்களின் கனவு எப்படி இருந்தது, மார்க்ஸ் எப்படி மாறுகிறார், ஏன் மாறுகிறார், எதற்காக நாடு கடத்தப்படுகிறார் என்பதைப் படிப்படியாகச் சொல்கிறார் சாமிநாத சர்மா. ஜென்னிக்கும் மார்க்ஸுக்குமான அன்பு எத்தகையது, அவர்களின் காதல் வாழ்க்கை எவ்வளவு பிரிவு நிறைந்ததாக இருந்தது, திருமண வாழ்க்கை எவ்வளவு துயரங்களுக்கிடையே பாசத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது என விவரிக்கிறார். அடுத்து மார்க்ஸஸுக்கும் ஏங்கெல்ஸுக்குமான நட்பு. இவை நூலின் பிரதான அத்தியாங்கள். இவற்றைப் படிக்க... இப்படியான ஒரு வாழ்க்கையை உணர யாரும் கம்யூனிஸ்டாகவோ அல்லது அதைப் பற்றி முன்னே பின்னே தெரிந்தவராகவோ கூட இருக்க வேண்டியதில்லை. படிக்கத் தெரிந்த எந்த மனிதரும் மனதைப் பறிகொடுத்துப் படிக்க இயலும். ஒரு அசல் மனிதனின் சரித்திரம் என்ற அளவிலேயே அது ஒரு சாகா இலக்கியத்தின் அத்தனை பெருமைகளுடனும் இருக்கிறது.

மார்க்ஸின் சமரசமற்ற போக்கு அவருக்கு ஏற்படுத்தும் பல்வேறு இடர்பாடுகள் அவருடைய வாழ்க்கையின் பிரதானமான பின்னணியாக அமைந்துவிடுகிறது. உற்ற தோழராக இருக்கும் ஏங்கெல்ஸிடமேகூட ஆரம்பத்தில் "புரிதல்' பிணக்குகள் ஏற்படுகின்றன. மார்க்ஸின் மேதமைதான் அந்தப் பிணக்குகள் நீங்குவதற்கும் காரணமாகிறது. ஜென்னியிடமோ அந்த மாதிரி "அபுரிதலு'ம் இல்லை. இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரெஸ்ஸல்ஸிலிருந்து துரத்தும் போதும் விபச்சாரிகளோடு அடைத்து வைத்து துன்புறுத்தும்போதும் மூன்று குழந்தைகள் பசியாலும் நோயாலும் இறக்கும்போதும் குழந்தையின் காலணிகளை அடகு வைத்து சாப்பிட நேரும்போதும் அவர் மார்க்ஸின் நிலைப்பாடுகளில் அதிருப்தி அடைந்தவராகத் தெரியவில்லை. இந்த ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர் யாருக்காவது எழுதிய கடிதங்களில் இந்தச் சோகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். கூடவே மார்க்ஸ் இந்த உலகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும் அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருப்பதன் மூலம் அந்த பெருமை மிகு பெண்மணிமீது மார்க்ஸுக்கு நிகரான மரியாதை கூடுகிறது.

ஏங்கெல்ஸின் மனைவி இறந்த செய்தி கேட்டு மார்க்ஸ் ஒரு இரங்கல் கடிதம் எழுதுகிறார். இரங்கல் என்பது பெயருக்குத்தான். அதில் தான்படும் அவஸ்தைகளும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகமாக எழுதிவிடுகிறார். ஏங்கெல்ஸுக்கு இது பெரிய வருத்தமாகிவிடுகிறது. நண்பன் தன் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறானே என்று. ஆனால் ஏங்கெல்ஸின் மனைவி இறந்துவிட்டதை விடவும் மார்க்ஸ் லண்டனில் குழந்தைகளோடு பட்டினியோடு போராடிக் கொண்டிருந்தது பெருந்துயரமானது என்பது தெரிய வருகிறது. மார்க்ஸ் மன்னிப்பு கேட்கிறார். ஏங்கெல்ஸும் தான் வருத்தப்பட்டதைத் தவறு என்று உணர்கிறார். உணர்ச்சிகரமான நட்பை உணர முடிகிறது.

புத்தகத்தில் ஒரு இடம் வருகிறது. ஹெகல் சாகும் தறுவாயில் தன் சிஷ்யர்களிடம்: ""என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை. மிஷெலே ஒருவன்தான் அறிந்து கொண்டான். ஆனால் அவனும் என்னைத் தவறாக அறிந்து கொண்டிருக்கிறான்'' "ஒரு தத்துவவாதிக்கு இதைவிட வேறென்ன சோகம் இருக்க முடியும்? ஆனால் மார்க்ஸுக்கு அப்படியொரு வருத்தம் இருக்க வாய்ப்பில்லை எனென்றால் அவனுக்கு ஏங்கெல்ஸ் இருந்தான்' என்று எழுதுகிறார் நூலாசிரியர். அந்த இடத்தில் ஜென்னியை சேர்த்துக் கொள்ளலாம். 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் ஆகிய நூல்கள் பற்றிய விளக்கங்கள் மிகவும் எளிமையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இது சற்று மார்க்ஸ் பற்றி தெரிந்தவர்களுக்கான பகுதிதான்.

முக்கியமாக ஹெகலிடமிருந்து மார்க்ஸ் எந்தவிதத்தில் வேறுபடுகிறார் என்ற மகத்தான விஷயத்தைச் சொல்லி "ஹெகலை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார் மார்க்ஸ்' என்கிறார். அதாவது கருத்து முதல் வாதம் பொருள் முதல் வாதம் என்று அடிக்கடி பிரயோகிக்கும் கம்யூனிஸ சித்தாந்தத்தை கீழ்கண்டவாறு ஒரு உதாரணம் கொடுத்து விளக்கியிருக்கிறார்.

""செடி, கொடிகள் எப்படி வளர்கின்றன என்பதைப் பற்றி நம் மனத்தில் சில கருத்துகள் படிகின்றன. இந்தக் கருத்துகளின் தொகுப்பைத் தாவர சாஸ்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறோம். சரி; இந்தத் தாவர சாஸ்திரம் முந்தையதா, செடி கொடிகள் முந்தையவையா? தாவர சாஸ்திரம் படித்துவிட்டு செடி கொடிகளை வளர்க்கிறோமா அல்லது செடி கொடிகளைப் பயிரிட்டு வளர்த்துக் கொண்டு பிறகு அதைப் பற்றிய சாஸ்திரத்தை எழுதுகிறோமா? அதாவது பொருள் முந்தையதா அல்லது அந்தப் பொருளைப் பற்றிய கருத்து முந்தையதா?''

ஹெகல் பொருள் தோன்றுவதற்கு முன்பிருந்தே கருத்து இருக்கிறது என்கிறார். மார்க்ஸ் பொருள் தோன்றிய பின்புதான் கருத்து தோன்றியது என்கிறார்.

நூலின் கடைசி சில அத்தியாயங்கள் மார்க்ஸிய இலக்கிய கோட்பாடுகள், மார்க்ஸியத்தின் தவறான புரிதல்கள் போன்றவற்றையும் கூட எடுத்துச் சொல்கின்றன. ""மார்க்ஸும், ஏங்கெல்ஸ் குறிப்பிட்ட ஒரு சமுதாய அமைப்பானது, அந்தச் சமுதாயத்தின் பொருளாதார அம்சம் ஒன்றையே கொண்டு இயங்குகிறது என்று சொல்லவில்லை'' என்கிறார் உறுதியாக.

உற்பத்தி உறவு முறை எப்படி மானுட சமுதாயத்தின் எல்லா தர்ம நியாயத்துக்கும் ஒழுக்கத்துக்குமான அடிப்படையாக இருக்கிறது என்பது போன்ற மார்க்ஸியத்தின் அடிப்படைகள் அவருடைய வரலாற்றினூடே விளக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
மார்க்ஸின் தத்துவங்களாவன, பொன்மொழிகளாவன என பிரித்துக் கூறாமல் அவருடைய வாழ்வின் பயணமாகச் சொல்லியிருக்கிறார் சர்மா.

மார்க்ஸ் கல்லூரியில் சேர்ந்தான். அங்கிருந்து பாரிஸுக்குப் போனான். மூலதனத்தை எழுதினான் என்று "ன்' விகுதியில் சொல்லியிருப்பது நெருடலாக இருக்கிறது. "ர்' என்றே போட்டிருக்கலாம். மார்க்ஸினுடைய அப்பாவாக இருந்தாலும் ஜென்னியாக இருந்தாலும் ஏங்கெல்சாக இருந்தாலும் இந்த நிலைமைதான் (அவன், அவள்). இப்படி எழுதியிருப்பதால் குறிப்பாக ஒரு நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஜென்னி இறந்ததும் மூரும் (மூர் மார்க்ஸுக்கு செல்லப் பெயர்) இறந்துவிட்டார். அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தார்; ஆனால் வாழ்ந்தார் என்று சொல்ல இயலவில்லை. ஜென்னி மீது அவர் அவ்வளவு காதலாக இருந்தார் என்பது அவருடைய வார்த்தையால் அன்றி, வாழ்க்கையாலேதான் உணர்த்தப்பட்டிருக்கிறது, பிற சமூக உணர்வுகளைப் போலவே. அதாவது அவர் எதை விரும்பினாரோ அதைப் படித்தார். அவருடைய கால சூழலில் ஒரு தத்துவ ஞானி எப்படி இருக்க முடியுமோ அப்படி வாழ்ந்தார். காரல் மார்க்ஸ் ஒரு மூர்க்கராக இருந்திருக்கிறார். அவருடைய காதல் விஷயத்திலும் கூட அவரிடம் ஒரு பித்து இருந்ததற்கான தடயம் குறைவாகவே இருக்கிறது. அவர் முன்கோபியாகவோ, எப்போதும் கோபியாகவோ இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் அவருடைய கோபம் எல்லாம் அளவுக்கு அதிகமான அன்பில் இருந்து உதித்தவையாக இருக்கிறது என்று நூலாசிரியர் கூறியிருப்பது நூறு சதவீதம் நிஜமென்று யூகிக்க முடிகிறது.

வெளியீடு

பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை- 18.
விலை 50


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</