வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

ஜீ. முருகன்

சிறுகதை, புதினம் , கவிதை, இதழியல், கணினிமென்பொருள் எனப் பலதளங்களில் இயங்கும் ஜீ. முருகன் 1967இல் திருவண்ணாமலை மாவட்டம் கொட்டாவூரில் பிறந்த வர். இவர் செங்கத்தில் பள்ளிக்கல்வியையும் திருக்கழுகுன்றத்தில் கல்லூரிக்கல்வியையும் பயின்றவர்.

இவரது பெற்றோர் கோவிந்தசாமி - கமலா . தொண்ணூறுகளில் எழுத்தொடங்கிய இவர் பல சிற்றிதழ்களில் இன்றும் தொடர்ந்து எழுதிவருகிறார். தனது இலக்கிய ஈடுபாடு குறித்து வனம் இதழில் கீழ்க்கண்டவாறுஎழுதியுள்ளார்.

“1986, அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் வசிய எழுத்துக்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த காலமது. திருக்கழுக்குன்றத்தில் டிப்ளமோ படிப்பின் மூன்றாவது வருஷத்தை நிறைவு செய்து கொண்டிருந்தேன். முன்பே ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், லா.சா.ரா. என்று வாசித்திருக்கிறேன் என்றாலும் முதலில் சொன்ன மூவர்களைப் போல இவர்கள் அவ்வளவுக் கவர்ச்சியானவர்களாக எனக்குத் தோன்றவில்லை. அப்துல் ரகுமானைப் பின்பற்றி கவிதை எழுதவும் கட்டுரைகள் எழுதவும் முயன்று கொண்டிருந்தேன். படிப்பு முடித்து கோவைக்கு வேலைக்குச் சென்றபோது‘விஜயா பதிப்பகம்’ வாயிலாக இலக்கியநூல்கள் அறிமுகம் கிடைத்த்து. கோவை நகருக்கு அது ஒரு பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்குதான் நிகழ், கனவு,கிரணம் போன்ற சிறுபத்திரிகைகளைப் பார்த்தேன்.

‘நிகழ்’ விலாசம் நான் தங்கியிருந்த பகுதியிலேயே இருந்ததால் அவ்விலாசத்தைத் தேடிப்போனேன் கி.பழனிச்சாமி’ என்கிற மனிதரை அங்குதான் சந்தித்தேன். அப்போது அவர் முற்றாகப் பார்வையை இழந்திருந்தார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகுதான் ‘கோவை ஞானி’ என்பவர் அவர்தான் என்று எனக்குத் தெரிந்தது. கோவை ஞானி என்ற அந்தக் கதவுதான் பல கதவுகள் திறக்கக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், பிரசாதம், நடுநிசி நாய்கள், பள்ளம், புளியமரத்தின் கதை போன்ற புத்தகங்களை அப்போதுதான் நான் வாசித்தேன்”.

ஒரு தரமான வாசகராக இலக்கிய உலகில் நுழைந்து சிறந்த படைப்பாளியக பரிணமித்திருக்கும் இவர் இரண்டு புதினங்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்களை வெளியிட்டுளார்.

வனம் என்கிற இதழை ஸ்ரீநேசனுடன் இனைந்து நடத்தி வருகிறார்.

http://vanam.wordpress.com




-------------------------------------------------

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - ஜீ. முருகன்

 

 

லிவி

 


மலை உச்சியின் மீதேறி நின்றோ மிக உயர்ந்த கட்டிடங்களின் மீதேறி நின்றோ அகன்ற பள்ளத்தாக்குகளையும் தூர நிற்கும் நிலபரப்புகளையும் காண்கிற போது, மனதால் பலமுறை கீழே விழுந்திருப்போம். கைகள் இரண்டையும் விரித்து கீழே குதித்திடும் கணங்களை கண்களை மூடியேனும் கற்பனை செய்திருப்போம். விட்டு விலகி நிற்கும் வெளியை குதிக்கும் கணத்தில் உணர்ந்து நிர‌ப்பும் போது சூன்யத்தை ஒரு வித உணர்வால் கடந்திருப்போம். மீண்டும் மீண்டும் குதித்து ஒரு வித அரூப உணர்வை மனம் பழக்கப் படுத்திக் கொள்ளும். அதிலிருக்கும் ஒரு தவிப்பு, பயம், மிரட்சி, லயிப்பு, அனுபவம் உணர்வால் அன்றி விளக்குவது கடினம். ஒவ்வொரு எழுத்தாளனையும் சந்திக்கச் செல்வதான அனுபவம் மிகச் சாதாரணமான தல்ல. எழுத்தில் மட்டுமே பார்த்தவனை நேரடியாக சதையும் நகமுமாக சந்திக்கின்ற தருணங்கள் அவை. ஜீ.முருகனைப் போல் மிக இயல்பாக இருக்கும் மனிதனை பார்ப்பது கடினம். தன் தலையின் மேல் ஒளி வட்டங்களைச் சூழ விடாத மனிதர் ஜீ.முருகன்.

"கதைகளை பருண்மையாக சொல்வதில் என‌க்கு உடன் பாடில்லை. மிகச் சாதாரண துன்பங்களைத் தாண்டிய மிகப் பெரிய துயரங்களை படைப்பு முன் வைக்க வேண்டும். இதைத் தான் லியோ டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி போன்றவர்களின் படைப்புகளில் பார்க்கலாம்" என்றார் தன் கதைகள் பற்றிய பேச்சொன்றில். ஒரு நாளில் சில மணி நேரங்கள் கதைப் பதிவு என்பதைத் தாண்டி இரண்டு நாட்கள் ஜீ.முருகனுடனே தங்கி கதைப் பதிவு நடந்தது. வேலூருக்குச் செல்கின்ற வழியில் தென்படும் பாறைகள் நிறைந்த மொட்டை மலைகளை பார்க்கிற போது தமிழ் நிலப்பரப்பின் பாலை நிலம் இதுவாகத் தான் இருக்குமென எண்ணிக் கொண்டேன். மீசை தாடி முழுதாக மழிக்கப்பட்ட முகம். இள நரை கண்டு ஜீ.முருகனுக்கு தலை மயிர்கள் எல்லாம் நரைத்திருந்தன. எந்த நேரத்திலும் சிரிக்க சிரிக்க பேசும் குரலும், புன்னகை முகமும். ஒரு நிமிடத்திற்கு எழுபது நொடிகள் அவர் முகத்தில் சிரிப்பிருக்கும். தான் என்கிற தன்னிலை ஆணவம் அற்றவர்கள் மட்டும் தான் அவ்வாறிருக்க இயலும் போலும். புதிதாகச் சந்திக்கும் ஒரு மனிதனிடம் இருக்கும் இடைவெளியை எளிதாக அகற்றி விடும் குணம் கொண்டவை அந்தச் சிரிப்பு. கதைப் பதிவின் போது சிரிப்பு உதிர்ந்து அவர் கண்கள் கலங்கும் சில கணங்களும் காணக் கிடைத்தது என‌க்கு. எத்தகைய எளிதாக கிழிபட்டு விடும் மெலிதான‌வொரு காகிதத்தை போன்ற மனம் கொண்டவரென உணர முடிந்த‌து.

ஜீ.முருகனுடைய வாழ்க்கை மிக சுவாரசியமானது. தொழிற்கல்வி பயிற்சி முடித்து சில வருடங்கள் சர்வீஸ் இன்ஜினியராக சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். பின்னர் ஐந்து வருடங்கள் விவசாயம் செய்திருக்கிறார். அடுத்த கட்டமாக DTP, நகல்கள் எடுக்கும் சென்டர் நடத்தியிருகிறார். அதே கால‌த்தில் ஜீவா என்னும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறார். இறுதியாக இப்போது தினமணி பத்திரிக்கையில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

கதை பதிவின் போது ஏற்படும் இறுக்கங்களுடன் அவரால் கதைகளைச் சொல்ல இயலவில்லை. தன் இயல்பினால், முனைப்பினால் மட்டுமே அவரால் கதைகளைச் சொல்ல முடிந்தது. கதை பதிவிற்கு முன்னர் அவர் தயாரிப்புகளுக்காக அவர் கணினியில் குறிப்புகளை எடுத்துக் கொண்டார். பல வருடங்களுக்கு முன் அவருடைய நேர்காணல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதின் பதிவை காண நேர்ந்தது. ஒல்லியான உருவம், தலை முழுதும் நரைக்காமல் மெலிதான நீண்ட மீசையென அடையாளம் முற்றும் மாறிவராகத் தெரிந்தார். பல கேள்விகளுக்கு நடுவில் தொகுப்பாளினி 'உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு தமிழ‌கத்தில் ப‌ரவலான அலையை ஏற்படுத்தியது....'. ஜீ.முருகன் சிரித்துக்கொண்டே ஒரு அலையையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

முதல் கதையை மட்டும் பதிவு செய்து முடித்திருந்தோம். 'மலைக்குச் செல்லலாமா?' என்றார். அவருடைய பழைய யமாக லிபெராவில்(YAMAHA LIBERO) எங்கள் பயணம் தொடங்கியது. என்னால் 'த மோட்டார் சைக்கிள் டியரிஸ் (THE MOTORCYCLE DIARIES) எழுத இயலாவிட்டாலும், கதை சொல்லிக்கான கட்டுரை கிட்டும் என்றது ஏழாம் அறிவு.

வழியெங்கும் அங்கங்கே கொன்றை மரங்கள் பூத்து சிலிர்த்து நிலத்திலும் வானத்திலும் அதன் இதழ்களால் சிவப்பு நிறத்தை தெளித்திருந்த‌து. இன்னும் விரியாத கொன்றை பூக்களின் மொட்டுகள் பச்சை நிறத்தால் மூடிய இதழ்களுடன் நிலத்தில் கிடந்த‌து. அதன் பச்சை மொக்குகளை விரித்தால் உள்ளே தலையில் மகர‌ந்தத்துடன் கொக்கி போன்ற சிறிய மென்னையான நரம்பிருக்கும். சிறுவயதில் இருவர் அதை எடுத்துக் கொண்டு இரு கொக்கிகளையும் கோர்த்து விட்டு இழுப்போம். யார் கொக்கியில் உள்ள மகரந்தம் விழுந்ததோ அவர் தோற்றவர். மற்றவர் வென்றவர். இப்படி தொடர்ந்து கொண்டே செல்லும் எங்கள் விளையாட்டு. வழியில் இருந்த ஆரக் கொன்றை மரம் ஒன்று மஞ்சள் நிறத்தால் புடை சூழ நின்றது. கண்ணை பறித்து நிற்கும் அந்த மஞ்சள் நிறம் வண்ணப் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள் பென்சிலைப் போலிருந்த‌து.

மொட்டை மலைகள் என்ற நினைப்பு மலையின் அருகே செல்லச் செல்ல விலகியது. மலை முழுவதும் மஞ்சள் புற்களால் நிரம்பியிருந்தது. மஞ்சள் புற்களால் வீடுகளின் கூரைகளை வேய்வார்களாம். கோடையிலும் வெப்பத்தை உள்விடாமல் தடுத்துக் கொள்ளும்.மஞ்சள் புற்கள் பார்ப்பதற்கு கொத்து கொத்தாக இடைவெளி விட்டு நாத்து நடுவது போல யாரோ மலையெங்கும் விதைத்தது போலிருக்கும். கல் குவாரிகளாக முன்பிருந் த‌து பிளவுபட்டு பள்ளமாகிய இடங்களில் நீர் தேங்கியிருந்தது. இன்று கல் குவாரிகளைக் காண இயலவில்லை. கிட்டத்திலும் தூரத்திலுமாக தென்படும் நம் தமிழ் தேசிய மரங்களான பனை மரங்கள். மிக செங்குத்தான வழிப்பாதைகளும் ஊசிமுனை வளைவுகளும் இல்லாமலும் பாதை சீராக வளைவுகளுடன் மேலேறிச் சென்றது. சிறிது நேர பயணத்திற்குப் பிறகு அடை காக்கும் பூதத்தின் புதையல் தெரிந்தது. ஒரு கோப்பையை போல் இரு கைகளயும் சேர்த்து பிடித்தால் உள்ளங்கைகளால் மறைத்து வைக்கப் பட்டிருப்பது போல் மலைகள் கைகளாகி மறைத்து பொத்தி பாதுகாத்து வரும் இடம் செங்காநந்தம் என்னும் அழகிய ஊர். செங்காநந்தம் மிக பசுமையாக இருந்த‌து.

இரு பெரிய‌ ஆல‌ம‌ர‌ங்க‌ளுட‌ன் கோயில் போல் தென்ப‌டும் இடத்தில் வ‌ண்டியை நிறுத்தினோம். கோவிலே தான். மூல‌வ‌ராக‌ பிள்ளையார் இருந்தார். அவ‌ருக்கு பாதுகாவ‌ல‌ர்க‌ள் போல் ஒரு ப‌க்க‌ம் புல்லாங்குழ‌ல் தாங்கிய‌ க‌ண்ண‌ன் ம‌றுப‌க்க‌ம் ஆஞ்சிநேயர். எதிரில் ச‌ற்று த‌ள்ளி சிறிய‌ அம்ம‌ன் போன்ற‌ சிறு தெய்வ‌ கோவில் ஒன்று இருந்த‌து. அவ‌ருக்கு ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌ குவாட்ட‌ர் பாட்டிலை யாரோ காலி செய்து விட்டிருந்தார்க‌ள். ஆல‌ம‌ர‌க் கோவிலை ஒட்டியொரு ஆசிர‌ம‌ம் இருந்த‌து. சாமியார்க‌ளுக்கான‌ சடைமுடிக் கொண்டை, வெற்று மேலுட‌ம்பு, கையிலொரு செல்போனுடன் நவீன சாமியாரகவே இருந்தார். ஆசிரமத்தின் வழியாக செல்பவர்களெல்லாம் சாமியாருக்கு வணக்கம் வைத்துச் சென்றனர்.

அவரும் ஒவ்வொருவருக்காகவும் புன்னகை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் நம்மைப் பார்த்து சிறு புன்னகை செய்வார். ஜீ.முருகன் அவரை சட்டை செய்யவில்லை. கோயிலைச் சுற்றி சிமெண்ட் தரையும் உட்காருவதற்கு ஏற்றதாக திண்டைப் போலவும் அமைத்திருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டு மற்ற கதைகளின் பதிவைத் தொடங்கினோம்.

மான் கதையும் காண்டாமிருகம் கதையும் பதிவு செய்யத் தொடங்கினோம். அதில் 'அவர் விவரிக்கும் கதையின் வெளி, உள்ளீடாக செயல்படும் உணர்வுத் தளங்கள், மறைபொருளாக இருக்கும் இன்னோர் உலகம், கதைகளின் தன்மைகளால் சூழப்பட்ட மயான அமைதி'என‌ காலம் கடந்த நிலத்திற்குள் பயணப்படும் வசியத்திற்குள்ளானேன்.

மான் கதையை அவரிடம் கேட்டபின் தான் வாசித்தேன். கேட்கப்படும் போது உண்டாகும் கிளர்ச்சி வாசிப்பதையும் தாண்டியது என்று புரிந்த‌து. உங்கள் எதிரே கதாசிரியன் தன் கதையின் நிலப்பர‌ப்பையும் கதாப்பாத்திரங்களையும் விவரிக்கத் தொடங்கும் போதே அவனுடன் சேர்ந்து கொள்வீர்கள். உங்களை குழந்தையாக்கிவிட்டு உங்களுக்கு கதை சொல்லும்படி நிர்பந்திக்கப்படுகிறான். தன் மனதால் மட்டுமே அந்த கதையைக் கூற இயலும். தான் சொல்கிற‌ பொழுது தன் அறிவுசார் நுட்பத்தை தொலைத்தாக வேண்டும். எழுதும்போது கையாளப்படும் உத்திகள் அங்கு சாத்தியமில்லை. வாசிப்பது ஒரு புலனென்றால் கேட்பது மற்றொரு புலனாக உருமாறுவதாலான உணர்வாகவும் இருக்கலாம்.

முதலில் கதைகளும் அதன் பின் அவர் கதைகளில் வெளிப்படும் குறியீடுகளையும் கதைகளை முடித்துவிட்டுச் சொல்கிற தன்மையால், கதைகளின் தளம் வேறோர் களத்தின் முன் நிறுத்தியது. சினிமா குறித்த விமர்சனங்களும் ஜீ.முருகன் எழுதி வருகிறார். தர்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் ஒன்றான ஆந்த்ரோ ரூப்ளேவின் கதையை பதிவில் இல்லாமல் சொல்லத் தொடங்கினார்.

ஆந்த்ரோ ரூப்ளே மடத்தில் தங்கி இருக்கும் பாதிரியார்.அவர் நன்றாக ஓவியம் வரைபவர். இவர் ஓவியம் வரைவதற்காக வெள்ளை அடிக்கப் பட்டு தேவாலயமொன்று தயார் நிலையில் இருக்கிறது. இவர் பயணப்பட்டு போகிற வழியில் சந்திக்கும் நிகழ்வுகளால் ஒவியம் வரையாமல் திரும்புகிறார். மிகுந்த மனச் சோர்வுக்கு உள்ளாகிறார்.இவர் மடலாயத்தில் இருக்கும் மணி பழுதடைந்து விடுகிறது. மணி என்றால் ஆளுயர இருப்பது போன்ற மிகப் பெரிய மணி. புது மணி கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் வழக்கமாக மணி செய்யும் ஆசாரி இறந்து விடவே வேறொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமென முடிவு செய்கிறார்கள். ஆசாரியின் மகனான சிறுவன் தன்னால் மணி செய்ய முடியுமென சொல்லிறான். தான் மணி செய்வதாகச் சொல்லி எல்லோரையும் சம்மதிக்க வைக்கிறான்.அதற்காக வேண்டி மணியின் செய்முறைக்கான அத்தனை வேலைகளையும் செய்யத் தொடங்குகிறான். இதையெல்லாம் ஆந்த்ரோ ரூப்ளே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பல கடின உழைப்புக்குப் பிறகு மணியை செய்து முடிக்கிறான் சிறுவன். இறுதியாக கோயில் மணியை ஏற்றி அடிக்கத் தொடங்குகிறார்கள். தான் எதிர்ப்பார்த்த மணி சத்தம் இதுவல்ல என்று சிறுவன் கவலையுறத் தொடங்குகிறான். இதைப் பார்த்த ரூப்ளேவுக்கு விளங்குகிறது கலைஞனின் பணி தன் படைப்பை வழங்குவது மட்டுமே. ஆலமரக் காற்றும் அற்புத கதைகளுமாக மாலை
வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.

கதைகளை நிகழ்ந்த சம்பவங்களை வைத்து எழுதுவதொரு முறையென்றால், நிகழ்ந்த சம்பவங்களிடன் ஊடே புனைவாக கதாப்பாத்திரங்களை உருவாக்கி கதைகளை எழுதுவது மற்றொரு முறை. ஜீ.முருகனுடைய‌ கதை '' வரும் தந்தை புனைவாகத் தாமாக உருவாக்கி கதையாக எழுதியவை. கதையை சொல்லி முடித்தவுடன் அவர் கண்களில் நீர் தழுப்பிக் கொண்டிருந்தது. வேறெதும் அவரால் சொல்ல இயலவில்லை. அமைதியான கணங்களாக சில நிமிடங்கள் சென்றது. இடையிடையே தலையே திருப்பி வேறெங்கும் பார்க்கும் போது சாமியாரிடம் பார்வை எதேச்சையாக நிலை பெற்றுவிடும். அப்பொழுதும் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

ஜீ.முருகனின் மனைவி வீட்டில் இல்லாததால். சமையல் எல்லாம் அவருடைய பாடு. மதியம் சாம்பார் வைத்தார் .இரவு கோழி சமைத்தார்.அவர் சமையல் செய்வதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். சில மணி நேரங்களில் இன்ன பிற பான‌ங்களுடன் இரவு இனிதே கழிந்தது. காலை எழுந்து பிறகு மற்ற கதைகளை பதிவு செய்யத் தொடங்கினோம். "பியானோ" கதையை கேட்டுக் கொண்டே காலை கொஞ்சம் கொஞ்சமாக புலர்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர் எழுதிய குழந்தைக் கதையான 'சர்க்கஸ்' பதிவு செய்து கொண்டோம்.அனைத்து கதைகளயும் பதிவு செய்து முடிக்க சரியாக மதியத்தை தாண்டியது. விடைபெற்றுக் கிளம்பினேன். இரண்டு நாட்களில் அனுபவங்கள் நிரம்பித் தழும்பிய நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டுக் கொண்டிருந்தேன். இரக்கமில்லாமல் பேருந்து வேலூரிலிருந்து சென்னைக்கு முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------

சில முக்கியக் குறிப்புகள்:

* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.

* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.

* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.

* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.

* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள்.  thamizhstudio@gmail.com
------------------------------------------------------------------------------------------------

 

ஜீ. முருகன் கதைகள் - 1

 

நிமிடம்: 07 --  நொடி: 15

 



ஜீ. முருகன் கதைகள் - 2
நிமிடம்: 12 --  நொடி: 04

 
ஜீ. முருகன் கதைகள் - 3
நிமிடம்: 10 --  நொடி: 40
 
ஜீ. முருகன் கதைகள் - 4
நிமிடம்: 06 --  நொடி: 40
 
ஜீ. முருகன் கதைகள் - 5
நிமிடம்: 14 --  நொடி: 43
 
ஜீ. முருகன் கதைகள் - 6
நிமிடம்: 20 --  நொடி: 54
 
 
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </