வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

அய்யப்ப மாதவன்

சகமனிதர்களுக்கிடையே பரிமாறப்படவேண்டிய அன்பையும் அது தொடர்பான சந்தோஷங்கள், பிரச்சனைகள் மற்றும் இன்ன பிறவற்றையும் கவிதைகளாக மாற்றி விடுபவர் அய்யப்ப மாதவன்.

1988ல் வெளிவந்த 'தீயின் பிணம்' (ஹைக்கூ கவிதைத் தொகுப்பு) தான் அய்யப்ப மாதவனின் முதல் தொகுப்பு (அப்போது இதய கீதா என்ற புனைப்பெயர் வைத்திருந்தார்) தொடர்ச்சியாக அய்யப்ப மாதவனது 'மழைக்கு பிறகு மழை', நான் என்பது வேறு ஒருவன்' , 'நீர் வெளி', 'பிறகு ஒரு நாள் கோடை' எஸ். புல்லெட், நிசி அகவல் ஆகிய கவிதை தொகுப்புகள் வெளிவந்திருகிறது.

இந்த வருடம் (2010 டிசம்பர்) வெளிவரும் கவிதை நூல்கள்

சொல்லில் விழுந்த கணம் (கவிதை) ஆழி வெளியீடு

மெதுவாய் நகர்கிறது காற்று (ஹைக்கூ) தமிழ் வனம் வெளியீடு

பரிசோதனை முயற்சியாக' இன்று' என்ற காட்சியியல் கவிதையை (ஐந்து நிமிடத்திற்கு ஓடக்கூடிய வீடியோ கவிதை படைத்துள்ளார்.

சாலிட்டரி என்கிற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இக்குறும்படதிற்கு திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-------------------------------------------------

அய்யப்ப மாதவன் கவிதை

என் மீது இந்த நாளில்
அவளின் ஒரு துளி இரக்கம்கூட கசியவில்லை
ஒரு சொல் ஒன்றைக்கூட எழுதவில்லை
மருகிய கண்களுள் அவளில்லாமல்
விழிக்கும் அவளுள் எரியும் காடாகிறேன்
வெறிச்சோடிய தெருக்களின் கானலில்
அவள் வெள்ளை ஒளியில் அலைவுறுகிறேன்
பாறைப் பிளவு இடுக்குகளில் கசியும்
அருவியின் கீழ்
நீரே அவளாய் விழ
உடலே விரல்களாய் பிடித்து
நழுவவிடுகிறேன்
மின்னல் தாக்கும் ஒளிக் கண்களால்
ஊடுருவும் அவளின் ஆற்றலில்
சிக்குண்டு சாம்பல் மேடாகிறேன்
இதயம் சோர்ந்து மெலிய
நினைவுகள் அரவங்களாய் தீண்ட
நகர வழியற்று மரத்து சரிகிறேன்
அதோ என் கண் மீது ஊர்ந்து அவள்
இமைமூடி வளைவில் புகுந்து
குருதியாய் விரைகிறாள்
திடீரென சிறுமியாய்
பச்சைகிளியின் குரலை
என் வெளியெங்கும் வரைகிறாள்
எங்கிருந்தாள் இவ்வளவு நாளாக
இவ்வளவு தாமதமாக
என் திசை உதிக்கும் ஞாயிறென
மஞ்சள் பூத்து வந்திருக்கிறாள்
அவளும் காலமும் நெய்கிற
விநோத வலையில்
என் உயிர் சிக்கிவிட்டது
உணர்வுகளில் மந்திரத்தவனின் பச்சைஇலை
வாசனையின் கிறக்கம்
கண் தீண்டா கன்னியின் கலவியில்
உயிர்த்தெழும் பள்ளியறையின்
என் தனிமையில்
அவளைக் கற்பனைத்திருக்கிறேன்
அவள் வார்த்தைகளில்
என் மீதான ஞாபகத்தை
அவள் பூட்டியிருப்பதில்
திறந்து சுரக்கும்
என் காதல் முலைகள்
கற்களாகிக்கொண்டிருக்கின்றன.

(சிந்துவிற்கு)

-------------------------------------------------

பிறகொருநாள் கோடை கவிதைதொகுப்பிலிருந்து கவிஞர் அய்யப்ப மாதவனின் என்னுரையிலிருந்து ஒரு பகுதி

இங்கு கவிதைகள் குறித்தான எண்ணங்கள் பொய்த்து கிடக்கின்றன. கவிதை பற்றிய உரையாடல்கள் கவிதையை மேல் எடுத்துச்செல்லும் எண்ணங்கள் ஆகியவை அறவே இல்லாமல் போய்விட்டன. அவர் அவருக்கென்று சிறுபத்திரிக்கைகள் அதில் அவர்களின் கவிதைகள், அவர்களுக்கு வேண்டியவர்களின் கவிதைகள் இதைத்தவிரவும் திராவையான மொழி பெயர்ப்புக் கவிதைகள் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வளவாக யாரும் அதை வாங்கிப் படித்து மெய்சிலிர்த்ப்பதாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் நாங்கள் மிகத்திறமையாக கவிதைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று போலியாய் தம்பட்டம் அடித்து காசு வேறு பெரிய அளவில் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல இலக்கியம் பற்றியோ நல்ல கவிதைகள் பற்றியோ எந்தவித அக்கறையும் அவர்களுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

கவிதையை தீர்மானிக்கும் கவி மகுடம் சூடிய ராஜாளிகள் இங்கு இருந்துகொண்டு எதையாவது சொல்லி கூரிய பேனாக்களால் பூப்போன்ற நல்ல கவிஞர்களையும் காயப்படுத்துகிறார்கள். மேதாவிலாசங்கள் பூக்களைப் பறிப்பதை விட்டுவிட்டு பூக்களின் வண்ணங்கள் பற்றி ஆராய்ந்து நிறைகுறைகளைத் தெளிவாகச் சொல்லலாம். அது அந்த வகைப்பூ இந்த வகைப்பூ என்றுக் கூறி பூக்களை இனம் பிரிப்பதில் என்ன அர்த்தம் என்ன கௌரவம் இருக்கிறதென்று தெரியவில்லை பூக்கள் மேலும் பூத்துக் கொண்டிருந்தால் தான் அர்த்தம் தொனிப்பதாக இருக்கும்.

-------------------------------------------------

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - அய்யப்ப மாதவன் (Aiyappa Madhavan)

 

 

லிவி

 


மழையைப் பற்றி எழுதாமல் இந்த கட்டுரைகளை தொடங்க இயல்வதில்லை. சென்னையில் இது போன்ற அழகான மழைக்காலம் இருந்ததா எனத் தெரியவில்லை. அடுத்து வரும் பருவ காலங்களும் இதைப் போன்றே இருக்குமாவென சொல்லத் தெரியவில்லை. நமது மன நிலைக்கும் காலத்திற்கும் ஏதேனும் சங்கேதக் குறிகள் இருக்க வேண்டும். சோகம் அல்லது மரணம் படர்ந்த நாட்களில் கவனிக்கையில் சூரியன் அன்று மந்தமானதாகவும் வானம் வெறும் வெறுமையை கக்கிக் கொண்டிருக்கும். வாசகன் ஒரு எழுத்தாளனை சந்திக்கப் போகும் மன நிலையும் மிக நுண்மையானது. அவனை எழுத்தாளன் எப்படி எதிர்கொள்வான் என்ற நினைப்பு சாகசம் செய்யத் துணிந்து அடிவயிற்றில் உருவாரும் ஒரு அரூப கணங்கள் போலவே இருக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் உலகம் சட்டென கருமேகங்களால் புகைக் கண்ணாடி வழியே பார்ப்பது போல் சாம்பல் நிறம் கொள்ளத் தொடங்கிவிடும். அன்றும் கவிஞர் அய்யப்ப மாதவனை சந்திக்கச் செல்லும் போதும் வானம் அவ்வாறே இருந்தது.

அய்யப்ப மாதவன் தமிழில் ஆகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இன்றுள்ள கவிஞர்களின் கவிதை மொழி கவித்துவம் இழந்து, உரைநடைகளை உடைத்துப் போட்டலே கவிதை என்றாகிவிட்டது. ஒரு பரிசோதனை முயற்சிக்கு அவர்களின் கவிதை வரிகளை உடைக்காமல் தொடர்ந்து ஒரு வரியிலே எழுதிப் பாருங்கள் அது உரை நடை தவிர்த்து வேறொன்றுமில்லை என்பது புரியும். அய்யப்ப மாதவன் வரிகள் கவித்துவம் இழக்காதவை. அய்யப்ப மாதவன் பெயரை யார் உச்சரித்தாலும் தவறாமல் இந்த கவிதை எனக்குள் ஞாபகம் வரும்.

" ஒரு மழை நாளில்
சிறுமியின் இதயத்தில் ஓட்டை
உதவுங்கள் எனச் செய்தி வருகிறது.
அவன் என்ன செய்வான்
அவனிடம் ஒரு செல்போன்
ஒரு வாகனம்
ஒரு மனைவி
ஒரு வாடகைவீடு
சொற்ப பணம்
இருக்கிறது.
துயறுற்றவன்
எவ்வித யோசனைகளுமற்று
அமர்ந்திருக்கிறான்.
கடவுளைப் பிராத்திக்கக்
கடவுளை நம்பவில்லை
அந்த குழந்தை
பிழைத்துக் கொள்ளட்டும்
என்று மட்டும் நினைத்துக் கொள்கிறான்.
பிறகு மனித இயந்திரம் போல
சிகரெட் புகைகிறான்
மூத்திரம் போவது பற்றி
யோசித்துக் கொண்டிருக்கிறான்.
மழை எப்பொழுதும் போல்
எவ்வித அக்கறையுமின்றி
இன்னும் பெய்து கொண்டிருக்கிறது. "


அய்யப்ப மாதவனை ராயப்பேட்டையில் உள்ள மீசன்பேட் மார்கெட் அருகில் உள்ள அவர் வாடகை வீட்டில் கதை சொல்லிக்காக‌ சந்தித்தோம். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். தேனீர் கடையில் தேத்தண்ணியோடு கதைக்கத் தொடங்கினோம். முகரம் பண்டிகையாதலால் அரபிப் பாடலோடு கருஞ்சட்டை அணிந்தவர்கள் பாடிக்கொண்டு ஊர்வலம் கடந்து சென்றது. அதில் சிலருக்கு தங்களை வருத்தியதால் காயாத பச்சை ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியாக ஒரு குதிரை அதன் வயிற்றுப் பகுதியில் கேடயம் என நாங்கள் பார்த்துக் கொண்டிருக்குப் போது ஊர்வலம் மறைந்தது.

அய்யப்ப மாதவனின் வீடு பழைய அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள இரு சிறு அறைகளைக் கொண்ட வீடு. கவிதை எழுதிவிட்டு மாட மாளிகைகளையா கட்டிவிட முடியும். சங்க காலம் தொட்டு இன்றுவரை புலவனும் வறுமையும் சேர்ந்தே இருக்க வேண்டுமென மருவாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பெருமையை உடையது தமிழ்ச் சமூகம். புரவலர் துதி மற்றும் மன்னர் பெருமை பாடும் சினிமா சில்லரை சிங்குச்சாக்களை தவிர்த்து இங்கு தன்னம்பிக்கை புத்தகம், எண்கணித கைரேகை ஜாதகப் புத்தகம், வார மாத பாக்கெட் நாவல், சமையல் புத்தகம், கோலப் புத்தகம் எழுதும் எழுத்தாளர்களே பிழைத்துக் கொள்ள இயலும். மேற் சொன்னவர்கள் எல்லாம் எழுத்தாளர்களாவென என்னை தயவு செய்து கேட்காதீர்கள். இங்கு சுய கழிவிரக்கம் மிகக் கொடுமையானவற்றில் ஒன்று.

அய்யப்ப மாதவன் பேசிக் கொண்டிருக்கையில் 'சொல்லு நண்பா' , ஆமா நண்பா' , 'இல்லை நண்பா' என இத்யாதி நண்பாக்களோடு நம்மை அவருடன் நெருக்கமாக உணரச் செய்து விடுகிறார். கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது வாகன இரைச்சல் மின்வசிறிச் சத்தம் எதுவும் வரக் கூடாதென்பதற்காக கதவை தாழிட்டுக் கொண்டு மின் விசிறியை நிறுத்திக் கொண்டு கதை தொடங்கியது. சரியாக கதை ஆரம்பித்ததும் அருகில் இருக்கும் ஆட்டோ ஷெட் ஒன்றில் தகரத்தை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'நாள் முழுதும் இவ்வாறே இரைச்சலுடன் தான் இருக்கும்' என்றார். அதனால் மறுநாள் கோடம்பாக்கத்தில் உள்ள ஆழிப் பதிப்பகத்தில் கதை சொல்லிக் கொள்ளலாம் என முடிவானது. கவிதைகள பற்றி பேசிக் கொண்டிருக்கத் தொடங்கினோம்.

கவிஞனின் தேடல் எல்லாம் ஒரு முழுமையான கவிதையை எழுதிவிடுவதிலேயே இருக்கிறது." நான் என்றும் முழுமையானதொரு கவிதையை எழுதிவிட்டேன் என நினைக்கவில்லை. எத்தனை கவிதைகள் எழுதப்பட்டுவிட்டது எத்தனை கவிதைகள் திரும்பத் திரும்ப நில்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். யாராலும் அந்த முழுமையை அடைய முடியாது.இன்னும் எழுதிக் கொண்டே தான் இருப்பார்கள். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்றார் அய்யப்ப மாதவன். "ஒரு பறைவையின் குரல் நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போது அதை மிக இனிமையானதென எண்ணுவோம் ஆனால் இன்னுமொரு பறவையின் குரலை கேட்க நேரும்போது அதுவே மிகச் சிறந்தாக இருக்கிறது. இசையையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்" என்று கவிதை நேர்த்தியுடன் முடித்தார் அய்யப்.

எது கவிதை? என்ற கேள்வி இன்றைய சமகாலத்தில் மிக முக்கியமானது. இதை கவிதை வாசகனும் கவிதை எழுதத் தெரிந்தவனும் கவிதை விமர்சகனும் தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருக்கிறான். நேர் நேர் தேமா நிரை நேர் புளிமா முதலிய மாக்களையும் வெண்பா ஆசிரியப்பா போன்ற பாக்களையும் உடைய மரபு வழி கவிதைகளை உடைத்து புதுக்கவிதைகளின் வழி இன்று பின் நவீனத்துவ கோட்பாட்டினை அடைந்துள்ளோம். மரபை பழமைச் சிந்தனையாக மறுத்த நாம் ஜப்பானிய கவிதை நடைமொழியான "ஹைக்கூ" இங்கே தூக்கிப்பிடிப்பது சரியான ஒன்றாக ஆகுமா என்கிற ஐயம் எழுகிறது. அய்யப்ப மாதவனின் "ஹைக்கூ" கவிதைத் தொகுதியும் இந்த முறை புத்தக கண்காட்சியில் வெளியாகிறது. "ஹைக்கூ" பற்றிய விவாதங்கள் மாதவனுடன் நடந்தது ஒரு கவி மனதின் நிலையை அருகில் சென்று காட்டியது.

"ஒரு கவிஞனின் கவிதைத் தொகுப்பு அக்காலத்தில் அம்மனிதனின் மன நிலைகளால் உருவாவது. குறிப்பிட்ட அந்த கால கட்டத்தில் அவன் கவிதை மொழியும் ஒரே வித பாணியில் இருக்கும். சமூக கருத்துக்களைச் சொல்வது 'ஹைக்கூ' ஆகாது. மேலும் 'ஹைக்கூ' வுக்கு இருக்கும் இலக்கணத்தை இங்கு யாரும் கடைபிடிப்பதில்லை. அது 'ஹைக்கூ' இல்லை 'பொய்கூ'" என்றார் அய்யப்.
'ஹைக்கூ' கவிதையில் முதல் வரியில் ஐந்து அசைகளும், இரண்டாவது வரியில் ஏழு அசைகளும் மூன்றாவது வரியில் ஐந்து வரிகளும் இருக்கும் என 'ஹைக்கூ' இலக்கணத்தைச் சொன்னார்.

கவிதை என்பதை திட்டமிடுதலின் நிகழ்வாக ஒப்புக் கொள்ள மனம் மறுத்தது. இதற்கான பதிலையும் அவரே சொன்னார்."'ஹைக்கூ"விற்கான பயிற்சி எனக்கு இருக்கிறது. கவிதை வரிகள் எனக்குள்ளாக உருவாகுப்போது மிகப் பொருத்தாமான சொற்களை அசைகளாடு என்னால் கொண்டு வர முடிகிறது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு வரி குறிப்பிட்டார் 'ஒரு கல் சாதாரணமாக கீழே கிடைக்கும் போது ஒன்றுமேயில்லை அது தண்ணீரில் விழும்போது அதற்கு அசைவு வருகிறது. அழகாகிறது' . இந்த வரிக்கான 'ஹைக்கூ' ஒன்றையும் சொன்னார்.

"கையில் எடுத்திருந்த
அசையாக் க‌ல் நீரில் எறிய‌
அசையும் பெரிய‌குள‌ம்"

அய்ய‌ப்ப‌ மாத‌வ‌னின் ம‌ற்றுமொரு 'ஹைக்கூ' வாசிக்க‌த் த‌ந்தார்,

"ச‌ருகிலையில் ச‌ருக்கும்
பெய்திருந்த‌ ம‌ழையின் துளிக‌ள்
இலையுதிர்க்கும் ப‌ருவ‌ம்"

ஒரு கவிஞனிடம் தன் மொழியிம் சமகாலக் கவிதைகள் பற்றிய எண்ணம் எதுவாக இருக்கும்?. அய்யப்ப மாதவன் தனக்குப் பிடித்த கவிஞர்களில் வரிசைப் படி மூவரை மட்டும் தேர்வு செய்யக் கேட்டபோது, அவர் தேர்ந்தெடுத்த கவிஞர்கள் ஆத்மநாம் , கலாப்பிரியா மற்றும் தேவதச்சன். மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி அவருக்கு மிகப் பெரிய அனுமானங்கள் எதுவும் இல்லை. "அவர் முதல் இரண்டு தொகுப்புகள் பிடித்திருந்தது. ஆனால் அவர் இன்று எழுதுபவைகள் கவிதைகள் இல்லை" என்றார். "ஓவரா அடிச்சா இப்பிடித்தான் எழுத வரும்" என்று பகடியாய்ச் சொன்னார்.

மறுநாள் கதைசொல்லிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள ஆழி பதிப்பகத்தில் சந்தித்தோம். அய்யப்ப மாதவனின் குரல் மிக மென்மையானது. அவர் வாழ்வில் யாரையும் வெருட்டி மிரட்டி இருக்க மாட்டார் போல. அய்யப்ப மாதவன் "தானாய் நிரம்பும் கிணற்றடி" என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். அந்த தொகுப்பில் இருந்தே கதைகளைச் சொன்னார். இரண்டாவது மூன்றாவது சிறுகதைகள் தன் வாழ்வில் நிகழ்ந்ததொரு சம்பவம் ஆகையால் கதை சொல்லிக் கொண்டிருக்கையில் அவரின் சிரிப்பு கதைகளுக்கு மேலும் அழகூட்டின. அய்யப்ப மாதவனின் புகைப்படங்கள் கலை நேர்த்தியுடன் இருந்தது. அதைப் பற்றி கேட்கும் போது தான் சொன்னார் அந்த புகைப்படங்கள் ஒளிப்பதிவாளர் செழியன் எடுத்தவை. அவ‌ரிட‌ம் விடை பெற்றுக் கொண்டு கிள‌ம்பினாலும் நெருக்கமாய் உண‌ரும் ம‌னிதர்களில் அவ‌ரும் ஒருவ‌ர்.

இதோ அய்யப்ப மாதவன் கதைகளைக் கேட்க கீழே உள்ள ப்ளேயரில் ப்ளே ஐக்கானைத் தட்டுங்கள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அய்யப்ப மாதவன் கதைகள் - தானாய் நிரம்பும் கிணற்றடி

 

நிமிடம்: 06 --  நொடி: 27

 



அய்யப்ப மாதவன் கதைகள் - தொந்தி கணபதியின் வாகனம்
நிமிடம்: 06 --  நொடி: 38

 
அய்யப்ப மாதவன் கதைகள் - பூட்டு
நிமிடம்: 05 --  நொடி: 19
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </