வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

பவா செல்லதுரை

பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவர் தீட்டிக்காட்டும் பல பாத்திரங்கள் முதல் வாசிப்பிலேயே நமக்கும் நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறார்கள்

-------------------------------------------------

மிக நெருக்கடியான பணிச்சூழலில்தான் என் விடுமுறையைத் தீர்மானித்தேன். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இந்தியா வரவேண்டிய சூழல்கள் அமைவதால் விடுப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த நேசமற்ற சூழலும், இயந்திர முகங்களையும் பார்த்து சலித்து வெறுத்த தனிமை குறைந்த பட்சம் முப்பது நாட்கள் விடுப்பைக் கோரியது. எல்லாம் உதறி செப்டம்பர் மாதத்தின் ஒரு அதிகாலையில் ஓசியில் கிடைத்த ஒயினை மூக்கு முட்டக் குடித்த கிறக்கத்தோடு சென்னை வந்திறங்கினேன். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறையாய் இந்த அயல்தேசத்திலிருந்து ஊருக்குக் திரும்பிய நாளின் பரவசமெல்லாம் எங்கே போயின எனத் தெரியவில்லை. என்னுடைய எல்லா உணர்வுகளையும், பரவசங்களையும், அறியாமைகளையும் இந்த நகரும் காலம் தின்றுக் கொழுத்துவிட்டுத்தான் செத்து மடிகிறது. காலத்தின் மாறுதல்களின் எந்த நச்சும் தீண்டியிராத மனிதர்களைப் பார்க்கும்போது பொறாமையும் இணக்கமும் ஒருமித்து, ஒரு வித ஸ்நேகம் உள்ளுக்குள் துளிர்விடுகிறது. அப்படி ஒரு மனிதர்தான் பவா.செல்லதுரை.

என் வாழ்வில் அபூர்வமாய் வந்துவிட்டுப் போன தேவதைகள் வாழ்வின் மீதான என் நம்பகத்தன்மைகள் குறித்து பெரிதும் கவலை கொள்வர். நான் மிகுந்த வறட்டுத் தனமாய் இருக்கிறேன், வெறும் அவநம்பிக்கைகளை மட்டுமே சுமந்தலைகிறேன் என்றெல்லாம் அவர்கள் பதறி மாய்ந்து, மாய்ந்து என் நிலைப்பாட்டை மாற்றப் பெரிதும் மெனக்கெடுவர். திமிர்,அலட்சியம், அசட்டை என என் பிரத்யேகமான வெவ்வேறு குணாதிசயங்களின் மூலம் எல்லாவற்றையும் சிதறடித்துவிட்டு அவர்கள் கடந்து போன பின்னர் கழிவிரக்கத்திலாழ்வதுதான் இதுவரைக்குமான என் வாழ்வாய் இருந்து வருகிறது. முதன் முறையாய் வாழ்வென்பது நெகிழ்ச்சியானது, அன்பாலானது, சக மனிதன் ஒருவனை எவ்வித முகாந்திரமுமில்லாது நேசிக்க முடியும் என்பன போன்ற நம்பிக்கைகளை, மனிதர்கள் அத்தனை போலித்தனமானவர்கள் அல்ல என்கிற இணக்கத்தை பவா வின் மூலமாய் கண்டறிய முடிந்தது.

பவா வின் வரவேற்பில் ஒரு குழந்தையின் குதூகலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதே குதூகலம் நிரம்பி வழியும். அன்பை, நேசிப்பை சரியான நேரத்தில், சரியான மனிதர்களிடத்தில், மிகச் சரியாய் சொல்ல முடிவது / வெளிப்படுத்த முடிவது என்னைப் பொறுத்தவரை மிக அபூர்வமான குணமாகத்தான் இருக்க முடியும். (என்னால் ஒருபோதும் வெளிப்படுத்த முடிந்ததில்லை) பவா வின் இயல்பே நெருக்கமும் இணக்கமுமான ஒரு குழைவு நிலைதான். ஒருவரை இதனால்தான் பிடிக்க வேண்டும் அல்லது ஒருவருடன் இதனால்தான் பழக வேண்டுமென்கிற துய்ப்பு சூழல் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களையெல்லாம் பவா காற்றில் பறக்கவிட்டார். என்னிடம் சொல்வதற்கு அவரின் இத்தனை வருட வாழ்வு இருந்தது. எனக்குத்தான் அவரிடம் சொல்ல புத்தகங்களையும் அந்நிய வாழ்வையும் தவிர வேறொன்றுமில்லாமல் போனது.

பவாவின் வீட்டில், நிலத்தில், கடையில், பயணிக்கையில், ஏரிக்கரையில், விடுதிப் பூங்காவில், விடுதி அறையில், என நாங்கள் சந்தித்துக் கொண்ட எல்லா இடங்களிலும் விடாது பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய தொடர்ந்த பேச்சில் நான் மெல்ல இளகத் துவங்கினேன். ஒரு கட்டத்தில் தினம் இரண்டு வார்த்தையாவது அவருடன் பேசாவிடின் அந்த நாளே முழுமையாகாத உணர்வும் வரத் துவங்கியது. என் வாழ்வின் மிக இலேசான நாட்களாக, நம்பிக்கையும் அன்புமான நாட்களாக இந்த விடுமுறை தினங்கள் இருந்தமைக்கு பவாதான் காரணமாக இருந்தார்.

பவா வை அவரின் குழந்தமை சிதையாது பார்த்துக் கொள்வதின் மிக முக்கியப் பங்கு தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளரான, மலையாளத்திலிருந்து பல காத்திரமான படைப்புகளை தமிழில் அதன் ஆன்மாவோடு கொண்டுவந்த ஷைலஜா மற்றும் அவரின் குடும்பத்தாரினுடையது. உலகின் எங்கோ ஒரு மூலையில் பிளாக்கில் பினாத்துகிறேன் என்கிற அறிமுகம் கூட எனக்கான அன்பைத் தருவதற்கு இவர்களுக்கு தேவையில்லாத ஒன்றுதான். நான் ஒரு சக மனிதன் என்பது மட்டுமே போதுமானதாகவும் வாசிப்பவன் என்பது அதிகப்படியான குணமாகவுமாய் இவர்களுக்கு இருக்கிறது.

ஒரு மின்சாரம் போன மதியத்தில் ஷைலஜா தன் கைகளினால் உருண்டையாக்கித் தந்த சோற்றுக் கட்டிதான் இதுவரை நான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு. வீட்டில் சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தப் பின் மதிய அமைதியில் எங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் அன்பைச் சேர்த்துப் பிசைந்த அந்தச் சோற்றுக் கட்டி அமிர்தமாய் இருந்தது. வம்சி மற்றும் மானஸியோடு நாங்களும் ஷைலஜாவின் பிள்ளைகளானோம்.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய உலகம் இதுவரை நான் அறிந்திராத ஒன்றாகத்தான் இருந்தது. பேச்சினூடாய் பகிர்ந்து கொண்ட மனிதர்கள், நிகழ்வுகள், சம்பவங்கள் யாவும் இயல்பு வாழ்வு குறித்தான என் முன் முடிவுகளை தகர்ப்பதாய் இருந்தது. எனக்குப் பிடித்தமான ஆளுமைகளில் தொடங்கி அடுத்த வீட்டு மனிதர் வரைக்குமாய் விரிந்திருந்த பவாவின் நட்புலகில் விரோதிகளோ பிடிக்காதவர்களோ இல்லை.

பவா எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவரின் வாழ்வு முறையும் புதிதாக இருந்தது. புகழ்,பணம், பிரபல வெறி என எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒதுங்கி கலையை வாழ்வாகவும், வாழ்வைக் கலையாகவும் நேசித்து வாழும் மனிதர்களையும் அவர்களின் படைப்புகளையும் நான் காண நேர்ந்தபோது நெகிழ்ந்து போனேன். நான் உழன்று கொண்டிருக்கும் இயங்கிக் கொண்டிருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் உலகத்தையும் அதில் கடக்க நேரிடும் சக மனிதர்களையும் அந்தச் சூழலில் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எத்தனை மோசமான வாழ்வை நானும் என் சக உலகத்தவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நினைத்து சிரித்துக் கொண்டேன். இப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்தது திருவண்ணாமலையில் வாழும் ஸ்பெயின் ஓவியர்காயத்ரி காமுசும் அவரது கணவரான ஆனந்தும் தான். இருவரைப் பற்றியும் விரிவாக பிறகொருமுறைப் பதிகிறேன்.

நான் எதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்? என்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்தும் மனிதர்களிடத்துமிருந்தும் ஏன் விலகி வந்துவிட்டேன்? என்றெல்லாம் எனக்குள் யோசனைகள் மிக ஆரம்பித்தன. வாழ்வை வறட்சியாக அணுக எனக்கு சில தோல்விகளும், பல புத்தகங்களும், சில துரோகங்களும் கற்றுக் கொடுத்திருக்கின்றன. கண்கள் விரியாதுச் சிரிக்க, அழுத்தமில்லாது கைக் குலுக்க இந்த அந்நிய வாழ்வும் சிநேகமற்ற மனிதர்களும் பழகிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வாழ்வை நேசிக்க, மனிதர்களை முன்முடிவில்லாமல் அணுக, எதிர்பார்ப்பில்லாத அன்பு சாத்தியம் என்கிற நம்பிக்கைகளையெல்லாம் எவரிடமிருந்தும் இதுவரை நான் பெற்றிருக்கவில்லை. இந்நம்பிக்கைகளை என்னில் துளிர்விட பவாவும் ஷைலஜாவும் அவரின் குடும்பமும் அவரின் நண்பர்களும் காரணமாய் இருந்திருக்கிறார்கள்.

விடைபெறும் நாளின் கடைசி சில மணிநேரங்களுக்கு முன்பு கூட பவா அவரின் கல் வீட்டில் அமர்ந்தபடி அவரின் நெகிழ்ச்சியான சத்தமான குரலில் பாவண்ணனின் கதையொன்றினை சொல்லிக் கொண்டிருந்தார். நானும் என் சகோதரனும் ஷைலஜாவும் அவரது குரல் வழி உலகில் பயணித்துக் கொண்டிருந்தோம். பக்கத்திலிருக்கும் சிறு நகரத்தினுக்கு சைக்கிளில் பயணிக்கும் ஆசைகள் மிகுந்த குமாஸ்தா ஒருவன் மிகப் பாடுபட்டு கடனுக்கு காத்திருந்து சைக்கிளொன்றை வாங்குகிறான். பயணத்தில் அவனோடு சிறுவன் ஒருவனும் சேர்ந்து கொள்ள இருவரின் பயணமும் சுகமாய் தொடர்கிறது. குமாஸ்தாவினுக்கு சைக்கிள் மீதிருந்த காதலை விட அச்சிறுவனுக்கு அதிகமான காதலிருப்பதை உணர்ந்து கொள்ளும் குமாஸ்தா சைக்கிளை அச்சிறுவனிடம் கொடுத்துவிட்டு பஸ் ஏறுவதாய் கதை முடியும். இந்தக் கதையை எழுதியவரின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி தன் குரலில் அவ் உலகை படைக்கும் பவாவின் வார்த்தை வண்ணங்களில் முழுவதுமாய் கரைந்து போனோம்.

விமானத்தைப் பிடிக்கச் சென்னைக்கு விரைந்த அவ்விரவில் தொலைபேசியில் பவா வின் குரல் கேட்க என்னால் முடியவில்லை. வாழ்வில் எப்போதாவது அடைக்கும் தொண்டை அப்போது அடைத்துக் கொண்டது. என்னால் எப்போதும் அழமுடிவதில்லை என்பது உண்மைதாம் நண்பர்களே!

http://www.ayyanaarv.com
/2009/11/blog-post_05.html

 

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - பவா செல்லதுரை (Bava Chelladurai)

 

 

லிவி

 

 

கதை சொல்லிக்காக பவாசெல்லதுரையை சந்திக்கச் செல்ல இருந்த அன்றைய பொழுது சென்னையை புயல் தாக்குவதான அறிகுறிகளோடு சிறு தூறலையும் சேர்த்துக் கொண்டது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கான நான்கரை மணி நேரப் பயணமும் மழை நேரக் கிளர்ச்சியை தந்து கொண்டிருந்தது. மிகச் சிலரே தன் இருப்பை எந்தவொரு சுயநலமின்றி மொழிக்காக இலக்கியத்திற்காக தம் வாழ்க்கை முழுமையும் கலைச் செயல்பாடுகளோடு அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். ப‌வா செல்லதுரையும் அவர் குடும்பமுமே அதற்குச் சான்று.

பவாசெல்லதுரையை சந்திக்க வேண்டும் என்றவுடன் எனக்கு ஞாபகத்தில் வந்தவர் அவர் மனைவி எழுத்தாளர் கே.பி.ஷைலஜா. பதின்பருவ வயதில் என் மன‌க்கட்டமைப்பை மாற்றி அமைத்த புத்தகங்களில் ஒன்று "சிதம்பர நினைவுகள்". அதில் மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஷைலஜா. வாழ்வின் கீழ் மனிதர்கள் மீதான புதிய தரிசனம், கலைஞனுக்கே உரிய பித்த மன நிலை, இருத்தலில் ஏற்படும் போராட்டங்கள் என வாழ்வின் மீதான‌ தீர்மானங்களை மாற்றி அமைத்த புத்தகம் அது. அவரைச் சந்திக்கப் போகிறாம் என்ற உற்சாக மன நிலையுடன் இருந்தேன்.

திருவண்ணாமலை வந்து சேர்ந்ததும் பவாவை செல்போனில் அழைத்து, வந்திருப்பதைச் சொல்லியவுடன் "ஆட்டோ ஒன்றை பிடித்து ஓட்டுனரிடம் செல்போனைக் கொடுங்கள் நான் முகவரி சொல்கிறேன்" என்றார்.அவ்வாறே செய்ததும் பவா முகவரியை சொல்லத் தொடங்கினார். ஆட்டோகாரர் தான் பேசுவது பவா என்பது தெரியாமல் "எதுங்க? பவா சார் வீடுங்களா ?" என்றார்.ஆட்டோக்காரர் திருப்பி சவாரி முறைப்படி நிற்கும் ஆட்டோகாரரிடம் "பவா சார் வீடு" என்று மட்டும் சொன்னார்.திருவண்ணாமலையில் நன்கு தெரிந்தவராக‌ பவா செல்லத்துரை இருக்கிறார். தமிழ் எழுத்தாளனுக்கு மிக ஆச்சரியமாகவே கிடைக்கும் பாக்கியம்.மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டை அவர் ஊரில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்று வாசித்த ஞாபகம் வந்தது.

ப‌வா பார்ப்ப‌த‌ற்கு ஒரு கிராம‌த்து ம‌னித‌ரைப் போல‌. அவ‌ர் பேசுகையில் இருக்கும் ந‌ட்பும் அன்பும் எளிதில் யாரையும் வ‌சீக‌ரித்துவிடும். பவா வீட்டிற்கு செல்பவர்களுக்கு இரு தோழர்கள் எப்பொழுதும் காத்திருக்கிறார்கள். நம்முடன் விளையாட, கதை பேச விவாதிக்க அவ்வீட்டில் உங்களையும் நெருக்கமானவர்களாக உணரவைக்க அவர்கள் எந் நேரமும் அன்பையும் உரையாடலையும் வைத்திருக்கிறார்கள். பவாவிற்கு இரு பூரணத்துவ கவிதைகள் குழந்தைகள். மூத்த மகன் வம்சி. மிகப் பெரிய ஓவியர். நன்றாக பாடவும் செய்வார், இருந்தும் இவருக்கு ஓவியத்தில் இருக்கும் காதலால் பிற துறைகளில் கவனம் செலுத்துவதில்லை.இளைய மகள் மானசி. கருணையே உருவான ஆசிரியர். எந்த மாணவரையும் அடிக்க மாட்டார். எவரையும் வேறுபடுத்தாமல் எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி சமமாக நடத்துபவர். நிறைய பேசுவார்.இவரும் நன்றாகப் பாடுவார். வம்சிக்கு வயது பன்னிரெண்டு. மானசிக்கு வயது எட்டு. அவர்கள் கனவுகளும் அவர்களைப் போல அழகானது.

வம்சிக்கும் மானசிக்குமான ரசனை முதிர்ச்சிகள் அதிகம். அவர்கள் வீட்டின் மாடியில் இருவரும் சேர்ந்து உலகத் திரைப்படங்களை திரையிடுகிறார்கள். நந்தலாலா படத்தினை என்னோடு சேர்ந்து விவாதிக்கிறார்கள்.அவர்கள் மேதமைகள் ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. கதை சொல்லிக்காக அன்றிரவு இருவரும் தயாரான போது வம்சி பவாவிடம் "அப்பா, நான் கீ.ரா தாத்தாவோட கதை சொல்றேன்பா" என்றான். மானசி "நான் அந்த தோசைக் கதை(அம்பையின்) சொல்றேன்பா" என்றாள். இருவரும் கொஞ்ச நேரத்தில் தயாராகிவிட்டு கதை சொல்லத் தொடங்கினார்கள். வம்சியும் மானசியும் எந்தவொரு தடங்களும் இல்லாமல் கதைகளை சரளமாக சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஷைலஜா தான் ஒருமுறை குறிப்பிட்டார் "தினமும் அவர்கள் தூங்க போவதற்கு முன்பு ஒரு கதை சொல்வேன். கதைகள் கேட்டு வளராத குழந்தைகளுக்கு கற்பனை இராது". இரவு உணவை எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பவா "வம்சி, இலட்சுமணப்பெருமாள் பெரியப்பா இருக்கார்லடா, அவர் கொட்டகை அனுபவத்த எழுதியிருக்கிறார்...ரொம்ப சிரிச்சு படிச்சேன்டா...கொட்டாகைனா..." என்று சொல்லிக் கொண்டு போனார். அவர்களுக்கு இலக்கியம் வாழ்வில் வெகு சாதாரண ஒரு நிகழ்வைப் போல் இருக்கிறது.

மான‌சியிட‌ம் சீக்கிர‌ம் ஒரு ந‌ண்ப‌ன் ஆனேன். ச‌ரியாக‌ச் சொன்னால் அவ‌ள் என்னை தோழ‌ன் ஆக்கிக் கொண்டாள். அவ‌ளிட‌ம் ந‌ம‌க்குச் சொல்ல‌ விச‌ய‌ங்க‌ள் இருந்து கொண்டே இருக்கின்ற‌ன. தன் பள்ளிக்கூடம் தன் தோழி தன‌க்குப் பிடித்தது பிடிக்காதது தன் சுவையான நினைவுகள் அவள் அடுக்கிக் கொண்டே போகையில் ஒருபோதும் அலுக்காது. உங்க‌ள் த‌னிமையை ச‌ற்றேயும் தீண்ட‌ அனும‌திக்காத‌ குட்டி தேவ‌தை. மானசி சொன்னாள் "நீங்க இல்லேன்னா எப்பயும் முருகண்ணே இருப்பாரு.யாரச்சும் வந்துட்டே இருப்பாங்க, யாரும் இல்லாட்டி போர் அடிக்கும்". பவா வீட்டில் எப்போதும் க‌ல்யாண‌ச் ச‌மைய‌ல் தான்.

மானசி வம்சியை விட பவாவுக்குத்தான் கதை சொல்லத் தயாரிப்புக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.

பிற எழுத்தாளர்களை கதை சொல்லிக்காக சந்திக்கும் பொழுது கதை சொல்கையில் கண்களை பார்ப்பதை தவிர்த்து கதை உலகில் சஞ்சரித்து கதை சொல்வார்கள். பவா சற்று வித்தியாசமாக "கற்றது தமிழ்" இயக்குநர் ராம், ஃப்ரண்ட்லைன் (Frontline) இதழின் ஆசிரியரும் அவர் நண்பரும் ஷைலஜாவும் என‌ அனைவரையும் தன் புடைசூழ வைத்துக் கொண்டார். அவர் கதை சொல்கையில் எல்லோரையும் பார்த்து, அவர் அவர் தலை அசைப்பை உணர்ந்தவர் போல் கதைகளை கதை சொல்லியின் உடல் மொழியுடன் கதைகளைச் சொன்னார். பவாவின் கம்பீரத் தோற்றமும் கணீரென்ற குரலும் கதைக்கேற்ப குரலை தாழ்த்தி பிறகு கூட்டுதலுமென கதை கேட்கும் கணங்களை அற்புதமாக மாற்றும். ப‌வா இருக‌தைக‌ளை ப‌திவு செய்தார்.

வம்சி பதிப்பகம் இந்த முறை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு 25 புத்தகங்களை வெளியிடுவதென திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான பரப்பரப்புடனே அவர்களின் ஞாயிற்றுக்கிழமை இருந்தது. ஷைலஜா அவர்களுக்கு அதனால் கதை கூற நேரம் இல்லாமல் போனது. மறுபடியும் நிச்சயம் சந்தர்ப்பங்கள் கிடைக்கையில் கதைகளை பதிவு செய்து தருவாதாகச் சொன்னார். சென்னை திருப்புவதற்கு ஆயுத்தமான‌ தருணங்களில் மானசி சொன்னாள் "அண்னா, சென்னை ஏன் கிளம்புறீங்க‌ இங்கேயே இருந்து விடுங்கள்". 'சென்னை சென்றால் தான் நான் ஆஃபிஸ் செல்ல இயலும்' என்றேன். " ஆஃபிஸ் போய் என்ன செய்ய போகிறீங்க" திருப்பிக் கேட்டாள். "நான் வேலைக்குப் போய் தான் சம்பாதிக்கணும், சம்பாதிச்சாதான் சாப்பிட முடியும்" என்றேன். அதுக்கு " எங்க வீட்லயே சாப்பிடுங்க" என்றாள். அன்பை மட்டுமே தரத் தெரிந்தவளுக்கு என்னிடம் பதில் இல்லை. போய் வருகிறனென கையசைத்த‌தும் வம்சியும் மான‌சியும் மௌனத்தால் தண்டித்தார்கள். எனக்கு சொல்வத‌ற்கு வார்த்தைகள் இல்லை. கொஞ்ச தூரம் வீட்டை விட்டு கடந்த பிறகு கத்தி அழைத்து கையசைத்தார்கள் இருவரும்.

அன்பைக் கண்டு பயந்து நண்பர்கள் இன்றி தனிமையில் உழன்றவனுக்கு அவர்கள் பிரிவு எத்தகைய வலியை தந்திருக்கும் என் அவர்கள் அறிய நியாயம் இல்லை.

பவா,மானசி, வம்சியின் கதைகளை கேட்பதற்கு ப்ளே ஐகானை தட்டுங்கள்.

"குட்டி தேவன்" வம்சி
 


"குட்டி தேவதை" மானசி
 

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------


பவா செல்லதுரை கதைகள் - ‘கொமலா’ ( சந்தோஷ் ஏச்சிக்கானத்)

 

நிமிடம்: 14 --  நொடி: 32

 



பவா செல்லதுரை கதைகள் - வேட்டை
நிமிடம்: 12 --  நொடி: 32

 
மானசி கதை - (அம்பை)
நிமிடம்: 03 --  நொடி: 04

 
வம்சி கதை (கி.ராஜநாராயணன்)
நிமிடம்: 04 --  நொடி: 20

 
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </